விழி மூடி சோபாவில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தவனின் செவிகளில் மெலிதாக கொலுசொலி. நொடிகள் கடக்கக் கடக்க அந்த கொலுசொலியின் சத்தம் கூடிக்கொண்டே சென்றது. அந்த ஒலியினை வைத்து தன்னை நோக்கி யாரோ வருவதை ஊகித்தவனுக்கு, அவனது உடல் விரைத்தது, ‘யார் தந்த தைரியம் இது?’ என்று.
“சாரே…” என்றோர் மெல்லிய குரல்.
எரிச்சலாக வந்தது ஆதீஸ்வரனுக்கு. விழிகளை வேண்டுமென்றே திறக்கவில்லை.
“என்னே திட்டிதறுக்கறது சார். குறைச்சு சம்சாரிக்கணும் பிளீஸ்” என்று ‘என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களிடம் பேச வேண்டும்’ என கெஞ்சலாகக் கேட்ட தாராவின் குரலில் நடுக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
பட்டென்று விழிகளைத் திறந்தான். விழிகளில் செவ்வரி ஓடிட, முகம் இறுகி, அவளை உறுத்து விழித்தவனின் பார்வையில் அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஓடியது.
பயத்தில் முகம் வெளிறி, எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு அவன் பார்வையை எதிர்கொண்டவளுக்கு வியர்க்கத் தொடங்கி விட்டது. இதயம் தம் தம் என அடிக்க, கால்கள் லேசாகத் தள்ளாடுவதைப் போல உணர்ந்தவள் கையை பிடிமானத்திற்காக அருகில் இருந்த சோபாவில் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“எந்தா சம்சாரிக்கணும்?” என்று கேட்டு கோபமாக எழுந்தவன், “முதல்ல யாரை கேட்டு மேலே வந்த நீ? என் ரூமில் நீ தங்குனதுல முழுக்க முழுக்க தப்பு எல்லாம் என் தம்பி மேலே தான். அதுனால உன்னை ஒன்னும் சொல்லாம விட்டா… அப்படியே ஓடி போறதை விட்டுட்டு எவ்வளவு தைரியமா என் பர்மிஷன் இல்லாம என்கிட்ட பேச வருவ?” என்று அவளருகே சென்று அதட்ட,
அவ்வளவு தான்! தாராவுக்கு படபடப்பு கூடி, தள்ளாடி மயங்கிச் சரியலானாள்.
ஆதி சற்று தள்ளி நின்றிருந்தால் கீழேயே விழுந்திருப்பாளோ என்னவோ! இவன் அருகில் சென்று மிரட்ட சோபாவை பிடிமானத்திற்காகப் பிடித்திருந்த காரணத்தினால் மயங்கி முன்னோக்கி இவன் மீதே சரிந்து விட, ஆதியின் தேகம் அவள் பூவுடலைத் தாங்கியதும் இறுகியது.
தள்ளி விட்டுவிட்டுச் செல்லக் கூடியவன் தான். ஆனாலும் இன்று என்னவோ அவனைத் தடுக்க, அவளை விலக்கித் தள்ளாத தன் செயல் மீதும் எரிச்சல் தான் வந்தது.
அவளின் ஒரு பகுதி உடல் முழுவதும் தன்மீது படர்ந்திருக்கும்படி சாய்ந்திருக்க, வேறு வழியின்றி அவளை மெதுவாக நகர்த்தி சோபாவில் கீழே விட்டவன், எதிர்பாராமல் அவனும் சோபாவில் அவளருகே சரிந்து விட்டான். தன் தோளில் சாய்ந்தபடி தொய்ந்து போயிருந்த தாராவை மெல்ல நகர்த்தி சோபாவில் சாய்த்து விட்டு, அவளை விட்டு விலகி எழுந்து நின்றான்.
வாடி, வதங்கி தொய்ந்து போய் படுத்திருந்த பெண்ணவளை ஆராய்ச்சியாக சில நொடிகள் பார்த்திருப்பான். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு அங்கிருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் வேகமாக அடித்தான்.
புருவங்களை சுருக்கி, முகத்தை மட்டும் லேசாக அசைத்தவளுக்கு இன்னமும் விழிப்பு வரவில்லை. சலிப்புடன், இன்னுமொருமுறை கை நிறைய நீரை ஊற்றி வேகமாக அடிக்க, முகத்தை வெகு நேரம் சுருக்கி விட்டு, கஷ்டப்பட்டு விழிகளைத் திறந்து பார்த்தாள்.
எதிரில் ஒற்றைக் கையை இடுப்பில் தாங்கியபடி அவளை உறுத்து விழித்தபடி ஆதீஸ்வரன்.
அவளுக்கு உடல் எல்லாம் வெடவெடுத்தது. தெளிந்த மயக்கம் மீண்டும் வரும் போல ஆகிவிட்டது.
அவளின் நடுக்கத்தைப் புரிந்து கொண்டவன் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றிவிட்டு, “என்ன சொல்ல வந்த?” என்றான் பொறுமையைக் கையில் எடுத்தவனாய். அவள் தோற்றத்தைப் பார்த்து அவன் மனம் இரக்கம் கொண்டிருக்க வேண்டும்.
திருதிருவென சில நொடிகள் விழித்தவள், அவன் பார்வை தன்னிலே இருப்பது புரிந்து, “அது… சாரே… அது…” என்க, அவளின் திக்கலில் அவனுக்கு வந்த பொறுமையும் பறந்து விடும் போலானது.
ஆதியின் முகம் சலிப்பையும் அதிருப்தியையும் அப்பட்டமாகக் காட்ட, வேகமாக, “சாரே ஒ... ஒரு சகாயம்... நான் இன்னு... மாத்... மாத்திரம் இவ்விட நிக்கிட்டே…” என்று தாரா அவசரமாகத் திக்கித்திணறிக் கெஞ்சல் குரலில் கேட்கவும், ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்திருந்தான்.
அப்பொழுதே மலையாளத்தில் பேசிக்கொண்டிருக்கிறோமே என்று சுதாரித்து, “எ... எனக்கு வேற போக்கிடம் இல்லை சார். வெளிய எனக்கு ஆபத்து வரலாம்…” என்றாள் கண்ணீர் குரலில் எதையோ நினைத்து நடுங்கியவளாக. அவளிடம் பொய்மை இருப்பது போன்று ஆதிக்கு தோன்றவில்லை.
அவன் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு, “இன்னைக்கு ஒருநாள் மட்டும் சார். நாளைக்கு விடிய காலையில எனக்கு பிளைட். அப்ப நான் கிளம்பிடுவேன்” என்றவள் அவனை நம்ப வைக்க, தன் கைப்பேசியில் இருக்கும் பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்து அவனிடம் காட்டினாள். அவளால் எழுந்து நிற்கவே முடியவில்லை. அத்தனை சோர்வோடு இருக்கிறாள் என்று அவளின் முகத்தைப் பார்த்தே தெரிந்தது.