Reviews for ஒரு சிறு இசை

30 reviews total

user_8814

★ 4/5 Feb 02, 2026

2016-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல் இது. வண்ணதாசனின் கவிதைகளின் ரசிகன் நான். இது சிறுகதைகளின் தொகுப்பு. பல கதைகளுடன் என்னால் பெரிதாக இணைந்து கொள்ள முடியவில்லை, ஆனாலும் ஒவ்வொரு கதையிலும் சிறு சிறு அழகான தருணங்கள் இருந்தன. பல்வேறு சூழ்நிலைகளில் மனித இயல்பின் நுண்ணிய அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை இக்கதைகள். அவரது கதை சொல்லும் முறைக்குப் பழக வாசகர்களுக்கு சிறிது நேரம் பிடிக்கும். ஆனால் ஏமாற்றத்தை ஈடுகட்ட, கடைசி இரண்டு கதைகள் மிகவும் அருமையாக இருந்தன — குறிப்பாக புத்தகத்தின் தலைப்பைத் தாங்கிய கடைசிக் கதை.

user_8813

★ 5/5 Feb 02, 2026

சப்டைட்டில் உடன் உலகத்தரப் பிரெஞ்சுப் படங்கள் பார்த்தது போல இருந்தது ஒரு சிறு இசையின் கதைகள். தமிழ் தான் என்றாலும், இக்கதைகளில் உள்ள கவிதைத் தன்மையும், பாத்திரங்களின் அகமொழியும் பழக மூன்று கதைகள் பிடித்தன. ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திய தாக்கத்தைக் கடந்து அடுத்தது வாசிக்கவும் நாட்கள் ஆகின. ஆனால் அதையெல்லாம் தாண்டி, பொதுவாக ஒரு சிறுகதைத் தொகுப்பில் 40 சதவிகிதக் கதைகள் பிடித்திருக்கும் எனக்கு, இத்தொகுப்பில் இரண்டு கதைகள் தவிர மற்ற அனைத்துமே பிடித்துப்போனது!

"ஒரு தாமரைப் பூ ஒரு குளம்" என்ற சிறுகதையில், மையப் பாத்திரத்தின் ஒரே செயல் சாயங்காலம் நடை செல்வது தான். ஆனால் கதை அந்த வினையைத் தொடாமல், பாத்திரத்தின் நினைவைத் தொடரும்போது, அது நம்மை வேறொரு தளத்துக்கு இட்டுச்செல்கிறது!

நம்மையே அறியாமல் நாம் கடந்து போகும் சிறு உணர்வுகள் தான் இத்தொகுப்பின் பல கதைகளில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஒருவர் இறந்தபின் அவரது செல்பேசி எண்ணை நாம் அழிப்போமா, நினைவுக்காக வைத்திருப்போமா? ஜான்சி, சோமு இறந்தபின் தான் அவரது எண்ணைச் செல்பேசியில் ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறாள்!

நமக்கு நாமே போட்டுக்கொண்டிருக்கும் யதார்த்த வேலிகளைத் தாண்டி அவரவர் கனவுகளும் நினைவுகளும் குழம்பி நிற்கும் விசித்திர உலகுக்குப் பயணம் கொள்கிறது கதைகள்! சில இடங்களில் இதே surreal கதையாடல் தான் தொய்வையும் தருகிறது. ஆனால் ஒரே கதை வெவ்வேறு கலைஞர்களிடம் இருந்து புறப்படும்போது அது தரும் அனுபவம் வெவ்வேறாகிறது. ஒரு சிறு இசையைப் பொறுத்தவரை, அது நமக்குள் கடத்தும் உணர்வும், தரும் நினைவுகளும் புதுமையானவை. அன்பும், மன்னிப்பும், பரிவையும் கொண்ட இக்கதைகள் முடிந்துவிடக் கூடாது என்று எண்ணவைப்பவை!

user_8812

★ 4/5 Feb 02, 2026

இசையில் சிறிதென்ன, பெரிதென்ன? இசை அவ்வளவு தான்.

ஒரு சிறு இசை போதும் பெரும் அறையின் நிசப்தத்தைக் கலைக்க, சிறு இசை போதும் மெல்லத் ததும்பிக் கடக்கும் இளந்தென்றலை ரசிக்க, சிறு இசை போதும் அசைய மறுக்கும் மனதை லேசாக அசைக்க, ஒரு முணுமுணுப்பைத் துவக்க, ஒரு சிறு இசை போதும் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் நினைவுகளை அள்ளி எடுக்க.

மனதின் ஆழத்தில் சிறு இசையாக எப்போதும், எந்த ஆரவாரமும் இல்லாமல் ஒளிந்து கிடக்கும் மனிதர்களும், உணர்வுகளும், நினைவுகளும், சொல்லப்படாத கதைகளும், திறக்கப்படாத ரகசியங்களும், அன்றாட வாழ்வில் இயல்பாய் கடக்கும் தருணங்களும், மரங்களும், செடிகளும், பறவைகளும் — கதையாய், கவிதையாய் வடித்த 15 சிறுகதைகளின் தொகுப்பு தான் ஒரு சிறு இசை.

ஒரு சிறிய இசையாக மட்டுமே தொடங்கி, அன்றாட நிகழ்வுகளாக விரிந்து, ரசித்து, கதாபாத்திரங்களின் அகத்திற்குள் பயணித்து மெல்ல மெல்ல ஒரு மலர் மலர்வதைப் போல ரகசியங்கள் மலர்ந்து கதையின் இறுதியில் வேறொன்றாகக் கனிந்து, நினைவுகளின் வழியாக வேறொன்றை எக்கிப் பிடிக்கிறது ஒவ்வொரு கதையும்.

இத்தனை கவித்துவமாய் ஒரு கதையை நகர்த்தி, முடிவில் ஒரு சிறு வரிக்குள் அத்தனை ஆழத்தைக் கடத்தி, அதே கதையை வேறொன்றாய் நிகழ்த்திக் காட்டுவது வண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியம் போலும்.

கனியான பின்னும் நுனியில் பூவைப் பார்க்கிற, உடைந்த கண்ணாடி துண்டில் வெயிலின் வாசத்தை நுகர வைக்கிற, வெயிலுக்கு மினுக்கும் இலையின் பளபளப்பை ரசிக்க வைக்கிற, எங்கோ சுவரின் ஓரத்தில் தொங்கும் நூலாம்படையின் நிழலில் அரூப சித்திரங்களை வரைந்து பார்க்க வைக்கிற — அதே சமயத்தில் மனிதர்களின் கைப்பிடித்தும், தோள் சாய்ந்தும் அவர்களின் அகத்திற்குள்ளும், உணர்வுகளுக்கும் சேர்த்தே பயணப்பட வைக்கிறது வண்ணதாசனின் எழுத்து.

மொத்தமாக தொடுதலும், அன்பும், பிரிவும், நினைவுகளும், ரகசியமும், நேசமுமாய் ஒரு சிறு இசையாகத் தொடங்கி பெரும் இசையாக மாறி இன்னும் மனதின் ஆழத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரு தொகுப்பு.

user_8811

★ 5/5 Feb 02, 2026

கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்! வண்ணதாசனின் கவித்துவமான எழுத்து நடையும், அன்றாட வாழ்வின் நுண்ணிய உணர்வுகளைப் பிடிக்கும் திறனும் இந்தத் தொகுப்பை மறக்க முடியாத வாசிப்பு அனுபவமாக மாற்றுகின்றன.

user_8810

★ 4/5 Feb 02, 2026

இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். மெல்லிய தென்றல் போல வந்து மனதைத் தொட்டுச் செல்லும் எழுத்து நடை — படிக்கும்போதே ஒரு அமைதியான இனிமை பரவும்.

user_8809

★ 5/5 Feb 02, 2026

ஒவ்வொரு கதையும் மிகவும் காதல் நிறைந்தது, அன்பால் நிரம்பியது. கடைசியில் வரும் பாட்டியின் கதை ஒரு மகிழ்ச்சியான பயணம்... இது ஒரு அசாதாரணமான இலக்கியப் படைப்பு.

user_8808

★ 4/5 Feb 02, 2026

வண்ணங்கள் போலத்தான் வண்ணதாசன். எழுத்தெல்லாம் முத்துப் போல் கோர்த்தவை. அழகு, அன்பு என்றும் தத்தும்!

user_8807

★ 5/5 Feb 02, 2026

நான் படிக்கும் இரண்டாவது வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு இது. "இசையில் சிறிதென்ன, பெரிதென்ன? இசை. அவ்வளவு தான்" என்ற முன்னுரை ஆகட்டும், ஜெயமோகன், எஸ்.ரா எழுதியிருப்பவை ஆகட்டும், எல்லாவற்றின் ஆழமும் புத்தகம் முழுக்க உணர முடிகிறது.

இது மிக வித்தியாசமான தொகுப்பு! சட்டென ஆரம்பித்து, அப்படியே முடிகிற கதை ஒன்று கூட இல்லை. கதை தொடங்குகிறது, நம்மை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கிறார், எல்லாவற்றையும் சொல்கிறார்.. இறுதியில் அது முடியும் போது மனதை என்னமோ செய்கிறது. ஒவ்வொரு கதையும் நிச்சயம் ஆழ்ந்த தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும்.

எதார்த்த நிகழ்வுகளைக் கொண்டு இப்படி அசாதாரணமாகக் கதையைப் படைக்கும் கலையை இவர் எங்கு கற்றுக்கொண்டாரோ! வண்ணதாசன் என்னும் மனிதன் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். நிறைய என்னை அழச் செய்தது இந்தப் புத்தகம்! இதை உங்களுக்குப் பரிந்துரைக்க ஒரு குறிப்பிட்ட காரணம் என்னால் சொல்லவே முடியாது — இதை அவ்வளவு ரசித்தேன்! உணர்ச்சிப் பெருங்கடலில் சங்கமித்தேன்!

வண்ணதாசன் என்ற பெயரைத் தவிர வேறென்ன பெரிய காரணம் வேண்டும் உங்களுக்கு இதைப் படிக்க?

user_8806

★ 5/5 Feb 02, 2026

நம்பமுடியாத அளவுக்கு எளிமையான வாசிப்பு அனுபவம். சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு புன்னகையையோ, ஒரு சிறு தலையசைப்பையோ, ஒரு ஆழ்ந்த மூச்சையோ, சில சமயம் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துபவை. வண்ணதாசன் எல்லாக் கதைகளையும் சம உற்சாகத்துடன் உரைநடைக்கும் கவிதைக்கும் இடையிலான நுண்ணிய எல்லையில் நின்று சொல்கிறார். இதன் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு ரசிக்க சிறிது நேரம் பிடித்தது. தமிழ் இலக்கியத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.

user_8805

★ 4/5 Feb 02, 2026

வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுதோ அல்லது தனிமையின் பொழுதோ நீங்கள் வண்ணதாசனின் கதைகளைப் படிக்க நேர்ந்தால்... நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பூவரச மரத்தடியிலோ அல்லது நாகலிங்க மரத்தடியிலோ கிடக்கிற ஒரு பழுப்பேறிய மரபெஞ்சில் சென்று அமரக்கூடும். பூக்களைப் பொறுக்கியெடுத்துக் கைகளிலேந்தியபடி சிறு புன்னகையோடு வண்ணதாசன் உங்களருகே வந்தமர்ந்து பேசக்கூடும். எங்கோ தேடியது அங்கே கிடைக்கலாம். எங்கோ கிடைத்தது அங்கே தொலையலாம். கதை பேசித் தீர்கையில் நீங்களறியாமல் அற்புதங்கள் நிகழ்ந்துவிட்டிருக்கக்கூடும்.