Reviews for ஒரு சிறு இசை

30 reviews total

user_8824

Feb 02, 2026

நல்ல புத்தகம். வண்ணதாசனின் எளிமையான எழுத்து நடையில் அன்றாட வாழ்வின் அழகை ரசிக்க வைக்கும் சிறுகதைகள்.

user_8823

★ 5/5 Feb 02, 2026

பல சிறுகதைகளின் தொகுப்பான இந்தப் புத்தகம், எழுதப்பட்டிருக்கும் விதம் மிகவும் அருமை. வண்ணதாசனின் எழுத்து நடை தனித்துவமானது — ஒவ்வொரு கதையும் ஒரு புதிய அனுபவம்.

user_8822

★ 5/5 Feb 02, 2026

மனதை வருடும் மெல்லிசை போன்ற நடை. கண்ணீர் வரவழைக்கும் பாத்திரங்கள் நிறைந்த சாமானியர்களின் கதைகள். எளிமையான மனிதர்களின் வாழ்வை இத்தனை கவித்துவமாகச் சொல்வது வண்ணதாசனுக்கே உரிய தனிச்சிறப்பு.

user_8821

★ 4/5 Feb 02, 2026

வேகமாக நகரும் அன்றாட வாழ்க்கையை ஒரு பொறுமையோடு, மனிதர்களைச் சுற்றி இருக்கும் நண்பர்களாலோ உறவுகளாலோ ஏற்படுகின்ற மெல்லிய அனுபவங்களை எழுத்தோவியமாகத் தீட்டுகிறார் வண்ணதாசன். நினைக்கிற, நிறைவேறாத பல செயல்களின் நினைவாடல் தான் "ஒரு சிறு இசை".

user_8820

★ 5/5 Feb 02, 2026

மிகவும் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு. ஆசிரியர் தனது சொந்த தமிழ் வட்டார மொழியில் கதைகளை விவரிக்கிறார். சில கதைகள் ஒரு சிறு சிரிப்பையும், சில குழப்பத்தையும், பல்வேறு உணர்வுகளையும் ஏற்படுத்துகின்றன. இவை நிஜமா அல்லது கற்பனையா என்று தெரிந்துகொள்வது கடினம்.

user_8819

★ 5/5 Feb 02, 2026

ஒரு சிறு இசை நமக்குள் உள்ள பெரும் இசையை மீட்டக் கூடியது. அன்பு தான் இந்தச் சிறுகதைகளின் கரு. அடிமை ஆண்டானிடம் கொள்ளும் அன்பு, தோழர்களுக்கிடையே உள்ள அன்பு என அன்பின் பல பரிமாணங்கள் இந்தச் சிறுகதைகளின் பேசும் பொருளாக உள்ளன.

இந்தப் புத்தகம் எதிர்மறையான இந்த உலகத்திலிருந்து நம்மை விலக்கி வைத்து, நம்மை ஆசுவாசப்படுத்தி, நம்முடைய பார்வையை நேர்மறையாக மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

user_8818

★ 4/5 Feb 02, 2026

ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு கவிதை — "கனியான பின்னும் நுனியில் பூ", "ஒரு தாமரை ஒரு குளம்", "எண்கள் தேவையற்ற உரையாடல்கள்". கதைகளும் அப்படியே.

"எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி" — "அப்படி இல்லையா அத்தை போகணும்? எப்படி போனாலும் வீடு வந்திரும்"

user_8817

★ 4/5 Feb 02, 2026

15 சிறுகதைகளின் தொகுப்பு. 2012-13 வாக்கில் "உயிர் எழுத்து", "கல்கி", "விகடன்" போன்ற இதழ்களில் வெளி வந்தவை.

புகை போன்ற படிமத்தினுள்ளே பயணப்படும்படியான கதைப்போக்கு, நாஞ்சில் நாட்டு மொழி வாடையில், வாசித்துக்கொண்டிருக்கும்போதே நம்மை நமது வாழ்வின் பல நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு, அதனுள் இழுத்துச் சென்றுவிடும். பல்வேறு மனித மனங்களை ஊடுருவிப் படித்து, அவரவர் பார்வையின் வழிநின்று வடித்த கதைகளாக இத்தொகுப்பைச் சொல்லலாம்.

கதைச் சம்பவங்கள் நடக்கும் இடத்தைச் சுற்றி இருக்கும் ஊர்வன, நடப்பன, பறப்பன உயிரினங்கள் பற்றியும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. கதைமாந்தர்களின் குணநலன்கள் கட்டமைக்கப்பட்ட விதம் ஒருவிதம் என்றால், கதையின் முடிவில் அப்படியே அதைப் புரட்டிப் போடும்படியான வரி ஒன்று இடம்பெற்று, கதையின் கருவையே மாற்றிவிடுகிறது.

ஆழ ஊன்றிப் படிக்கும்படியான, சில இடங்களில் ஒருமுறைக்கு மறுமுறை படிக்கும்படியான எழுத்துநடை கொண்டது இத்தொகுப்பு. இக்கதைகளில் மனதில் நின்ற கதை என்றால், "தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள்" என்று சொல்லலாம்.

user_8816

★ 2/5 Feb 02, 2026

சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்நூல் 15 சிறுகதைகளை உள்ளடக்கியது.

மொழி நடை சிறப்பாக இருந்தது. மூளைக்குள் காட்சிகள் படம் போல ஓடின. வட்டாரச் சொல்லாடல்கள் சொந்த ஊரை நினைவுபடுத்தின. எனது கிராமத்தில் இருந்தது போன்ற ஓர் உணர்வு.

"ஒரு தாமரைப் பூ ஒரு குளம்", "ஒரு பறவையின் வாழ்வு", "ஒரு சிறு இசை" ஆகிய சிறுகதைகள் பிடித்திருந்தன. அவ்வளவாக உணர முடியாத சிறுகதைகளிலும் கூட பிடித்தமான சில வரிகள் இருந்தன.

முறை தவறிய உறவுகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றைப் படிப்பதற்கு மிகவும் நெருடலாக இருந்தது. பெண் கதாபாத்திரங்கள் இவற்றைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதது போல காட்டப்பட்டிருந்தன. அதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை.

அன்பு வெறுப்பை விட அதிகம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆயினும் அந்தச் சிறு வெறுப்பையும் கோபத்தையும் காட்டாமல் கதை நகர்வது எதார்த்தமான மனித உணர்வுகளைப் புறந்தள்ளுவது போன்று இருந்தது. எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களும், கசப்பான சம்பவங்களால் அன்பின் மீது நம்பிக்கை இழந்தவர்களும் இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

user_8815

★ 4/5 Feb 02, 2026

அன்றாட வாழ்வில் சில கணங்கள் மெல்லிய உணர்வுகளை ஒரு தென்றலைப் போல் வீசிச் செல்வதுண்டு. நமது நினைவுப்பேழை அந்த உணர்வுகளின் ஊடாகவே நம் கடந்த கால தடங்களை வழியமைத்துக்கொள்கிறது. அக்கணங்களுக்கு எந்த வரையறையும் விளக்கங்களும் சிக்குவதில்லை. அக்கணங்களைக் கவிதைகளாக்கும் வண்ணதாசன், இங்கே அவற்றுக்கு ஒரு அறிமுகம் தந்திருக்கிறார்.