Reviews for வானத்து மனிதர்கள்

18 reviews total

user_21658

★ 5/5 Feb 02, 2026

கதையை வாசிக்கும்போது நாமும் ஒரு கதாபாத்திரமாக அதனுள் பயணிப்பது போன்ற அற்புதமான அனுபவம். இந்திரா சௌந்தர்ராஜன் பல அருமையான புதினங்கள் எழுதியிருக்கிறார் என்பது தெரியும்.

இந்தப் புதினத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட "எதுவும் நடக்கும்" தொலைக்காட்சி தொடர் ஒரு அத்தியாயத்தோடு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.

user_21657

★ 3/5 Feb 02, 2026

இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் மனித இனத்தின் பேராசையை எப்பவும் போல சித்தர்களை வைத்து சொல்லியிருக்கிறார். இவரின் பல கதைகளில் வரும் அதே கதாபாத்திரங்கள் — விஞ்ஞானத்துக்கு கொடிப் பிடிப்பவர்கள், பல வருடங்களாக குழந்தையின்மை.

அந்த காட்டைப் பற்றி படம் எடுக்க வரும் இரண்டு கதாபாத்திரங்கள் வீண்.

"பயப்படாதே. இந்த ஆவி, பேய் எல்லாம் பெரிய கற்பனைகள். அதெல்லாம் உண்மையா இருந்தா இந்த நிமிடம் இலங்கையில் அநியாயமா கொல்லப்பட்ட ஒண்ணரை லட்சம் பேரும் ஆவியா வந்து அந்த நாட்டையே ஆட்டிப் படைச்சிருக்கணும்" — இப்படி நிகழ்காலத்தையும் தொட்டுச் செல்கிறார்.

user_21656

★ 4/5 Feb 02, 2026

இந்திரா சௌந்தர்ராஜனின் வழக்கமான பாணி. நம்பிக்கை என்றால் அறிவியல், ஆன்மிகம் என்றால் ஆன்மிகம் — உங்கள் பார்வையைப் பொறுத்தது.

நீண்ட புத்தகம் என்றாலும் ஒரு பக்கத்திலும் சலிப்பூட்டாத அருமையான பேஜ் டர்னர். எல்லா மர்மங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை, நல்ல விஷயங்களுக்கான மர்மத்தை அப்படியே விட்டுவிடுங்கள் என்பதே இந்தப் புத்தகத்தின் மையக் கருத்து.

மனிதர்கள் எப்போதும் எதையாவது தோண்டி கடைசியில் கெடுத்துக் கொள்வார்கள் — இன்றைய இயற்கைக்கு நடப்பதும் அதுதான். இதை தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

user_21655

★ 4/5 Feb 02, 2026

தொலைக்காட்சி தொடர் திடீரென நிறுத்தப்பட்டதால் புத்தகத்தை வாசிக்க விரும்பினேன். மரங்களின் இயல்பு, அவற்றின் தெய்வீகத் தன்மை, பழங்குடிகளிடையே அவை எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பதை நன்றாக விளக்குகிறது.

இரகசியம், விட்டு விடு கருப்பா, சிவ ரகசியம் போன்ற புத்தகங்களுடன் ஒத்த கதைக்களம் கொண்டது. ஆரம்பத்தில் ஒவ்வொரு விபத்தும் மூடநம்பிக்கையின் விளைவாகக் காட்டப்படுகிறது, ஆனால் இறுதியில் அனைத்தும் மனிதப் பிழையால் நடந்ததாக முடிகிறது.

இந்திரா சௌந்தர்ராஜனின் சிறந்த படைப்புகளில் ஒன்று. கதை பரபரப்பாக அடுத்த அத்தியாயத்தை வாசிக்கத் தூண்டுகிறது.

user_21654

★ 4/5 Feb 02, 2026

இந்திரா சௌந்தர்ராஜனின் மற்றுமொரு சிறந்த அமானுஷ்ய த்ரில்லர். தாணுமாலயவனம் என்ற மர்மமான காட்டை மையமாக வைத்து கதை நகர்கிறது. காட்டுப் பழங்குடிகள் தங்கள் இயற்கை வழிபாட்டுடன் வாழ்கின்றனர். 18 மர்ம மனிதர்கள் காட்டில் வசிப்பவர்களுக்கு நெருக்கடி நேரங்களில் உதவுகின்றனர்.

புதிய வன அதிகாரி பொறுப்பேற்ற பின்னர் பல மர்மமான மற்றும் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. மரங்கள், அவற்றின் இயல்பு, அவற்றின் தெய்வீகத் தன்மை, பழங்குடிகளிடையே அவை எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பதை அழகாக சித்தரித்திருக்கிறார்.

ஆனால் மின்-புத்தக பதிப்பில் ஏராளமான எழுத்துப் பிழைகளும் பத்திகள் குழம்பிக் கிடப்பதும் வாசிப்பை சற்று கடினமாக்குகிறது. சரிபார்ப்பு எதுவும் செய்யப்படாதது போல் தெரிகிறது.

user_21653

★ 3/5 Feb 02, 2026

கதையின் முடிவு எதிர்பார்த்தபடி இல்லை. ஆனாலும் ஒட்டுமொத்தமாக நல்ல வாசிப்பு அனுபவம் தான்.

user_21652

★ 4/5 Feb 02, 2026

எப்போதும் எனது எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றாத எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இந்த புதினத்தில் கூட அப்படித்தான். ஆன்மிகம், சித்தர்கள், நம்பிக்கை என்ற ஒரு புறமும் மூடநம்பிக்கை, போலி ஆன்மிகம் என்ற மற்றொரு புறமும் அழகாக சித்தரித்திருக்கிறார்.

வானத்து மனிதர்கள் எனும் கூட்டத்தினர் புத்தகம் முழுக்க ஒரு புதிராகவே வலம் வந்து செல்கின்றனர். காட்டில் வசிக்கும் மக்களும் அவர்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களும் வியப்பாக இருந்தது. தாவரங்களின் மேலும் விலங்குகளின் மேலும் அவர்கள் கொண்டுள்ள அன்பும் பாசமும் மரியாதையும் நல்ல எடுத்துக்காட்டு.

நமது நம்பிக்கைக்கு அப்பால் உள்ள விஷயங்களை அவநம்பிக்கை என்ற கோணத்தில் பாராமல் அதையும் அறிய நினைப்பது எவ்வளவு முக்கியம் என்று எழுத்தாளர் சொல்லியிருக்கிறார். புத்தகம் முழுக்க வலம் வரும் பாத்திரங்கள் அனைவருக்கும் தங்களுக்குண்டான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கதையின் முடிவு சற்று வித்தியாசமாக உள்ளது. எதிர்பார்த்த திருப்தியை கதையின் முடிவு அளிக்கவில்லை. 400 பக்கங்கள் கொண்ட இந்த புதினம் சற்று பெரிய வாசிப்பு தான். இருந்தாலும் எவ்விதத்திலும் சலிப்பூட்டவில்லை. இந்திரா சௌந்தர்ராஜனுக்கே உண்டான கதைக்களமும் பாணியும் ரசிப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_21651

★ 5/5 Feb 02, 2026

இரகசியங்கள் காக்கப்படும் வரையில் தான் அதற்கு மதிப்பு உண்டு. அனைவருக்கும் தெரிந்தவையாக மாறும் போது எந்த உயர்வும் இல்லாமல் சராசரிக்கு கீழே சென்றுவிடும்.

பேராசையால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறும் போது அவர்களை மட்டும் அழிக்காமல் தன்னைத் தானே அழித்துப் புதிய வடிவத்தைப் பெறும் இயற்கை.

தாணுமாலயக்குடி — பல அமானுஷ்யங்களை உள்ளடக்கிய இந்த மலைக்காட்டுக்கு வன அதிகாரியாக சிவக்குமார் வருகிறார். ஏற்கனவே அங்கே இருந்த காளிமுத்து டிரான்ஸ்பர் வாங்கி வெளியேறுகிறார். சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்று கடவுள்களும் ஒரே மரத்தில் இருப்பதாக நம்பி அங்கு வசிப்பவர்கள் காலம் காலமாக வழிபடுகின்றனர்.

சிவகுமாருக்கு பத்து ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால் நீலி என்பவளின் சொல்பேச்சு கேட்டு அவரின் மனைவி வள்ளியம்மை அம்மரத்தை வேண்டிக்கொள்ளச் சில நாட்களில் கர்ப்பம் தரிக்கிறாள். டிரான்ஸ்பர் வாங்கிச் சென்ற காளிமுத்துவின் சடலம் அந்தக் காட்டிலே கிடக்க பல கெட்ட செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது.

வானத்து மனிதர்கள் என்று சொல்லப்படும் பதினெட்டுப் பேர் பல நல்ல காரியங்களைச் செய்து காட்டைக் காப்பாற்றுவதால் அவர்களைச் சித்தர் என்று போற்றுகின்றனர். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பு பல நாட்டு விஞ்ஞானிகள் சென்ற விமானம் அந்தக் காட்டில் விபத்தில் சிக்கியதால் அவர்கள் தான் தப்பித்து வானத்து மனிதர்களாக வலம் வருகின்றனர் என்று சிவக்குமாரும் அவரின் தம்பியும் நம்புகின்றனர்.

தங்க சுரங்கம் இருப்பதை அறிந்து அதைக் கைப்பற்ற பல கெடுதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. அனைவருக்கும் தங்கம் இருப்பது தெரிந்ததும் இயற்கை சூறாவளியை உருவாக்கி அந்த மலையையே புரட்டிப் போட்டு அனைத்தையும் மாற்றிவிடுகிறது. ஒரு காட்டையே கண் முன் நிறுத்தும் எழுத்து. நம்புகிறவனுக்கு எல்லாம் அவன் செயல், நம்பாதவனுக்கு யாரோ செய்த செயல்.