“நான் பார்த்த அரசியல்” - கவிஞர் கண்ணதாசன்
கவிஞர் திரு கண்ணதாசன் அவர்கள் 1978ல் அரசியல் கட்டுரைகளாக வாரப் பத்திரிக்கைகளில் எழுதி வந்ததை, கட்டுரைத் தொகுப்பாக கொண்டு 2007 ல் முதற்பதிப்பு வெளிவந்திருக்கிறது.
தாம் அரசியலைப் புரிந்து கொண்ட காலம் முதல், அதை தொடர்ந்து அதில் பயணம் செய்து, பிறகு 1978ல் அரசியலைவிட்டு முற்றிலும் ஒதுங்கி, ஒரு பார்வையளானாக அரசியலை கவனித்து வந்ததாக இப்புத்தகத்தின் முன்னுரையில் தெரிவித்துள்ளார்.
அதாவது உலக அரசியலில் சர்ச்சில், நிக்சன், ஐசனோவர், குருசேவ்…போன்றவர்கள் பற்றியும்,
ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங், நீதிக் கட்சி, திக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பற்றியும் இக்கட்டுரைகளில் தனது அனுபவங்களை எழுதியுள்ளார்.
மேலும் தான் ஈ.வெ.கி சம்பத்துடன்(EVKS இளங்கோவனின் தந்தை) திமுகவிலிருந்து பிரிந்து 'தமிழ் தேசியக் கட்சி' தொடங்கியது, பிறகு அதை காங்கிரசில் இணைத்தது, எமெர்ஜென்சி, ஆட்சி கலைப்பு விளையாட்டுகள், பொது தேர்தல்கள், திமுகவின் ஆட்சி அவலங்கள்(1969-75), எனப் பல அரசியல் நிகழ்வுகளையும்.,
நேரு, மொரார்ஜி தேசாய், ராஜாஜி காமராஜர், இந்திரா, ஜே.பி, வாஜ்பாய், ஈ.வே.ரா, சி.சுப்ரமணியம், அண்ணாதுரை, நெடுஞ்செழியன், சம்பத், தோழர் பாலதண்டாயுதம், மூப்பனார், அச்சுத மேனன், எம்ஜிஆர், கருணாநிதி, சோ போன்ற தலைவர்களை பற்றியும் அவர்களுடனான தமது பழக்கங்கள் அவரது குணங்கள் பற்றியும் சிலாகித்தும் கண்டித்தும் தனது பார்வையை முன்வைத்திருக்கிறார்.
அப்போதைய காங்கிரசின் நிலைமை இப்போதுள்ள காங்கிரஸிற்கும் பொருந்தி போகிறது என்பதுதான் பேரவலம்.
திமுகவையும் அதன் தலைமையையும் , "வனவாசம்" புத்தகத்தின் மூலம் தோலுரித்துக் காட்டியது போல., இப்புத்தகத்திலும் அதனை தொடர்ந்துள்ளார்.
ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது, இந்த கட்டுரைகள் 46 ஆண்டுகளுக்கு முன் நடந்த அரசியல் காட்சிகளை பிரதிபலிக்கிறது., காலங்கள் மாறிவிட்டது, அரசியல் காட்சிகள் மட்டும் மாறவேயில்லை.
கட்டுரைத் தலைப்புகள்:
* இந்திய விடுதலை
* அரசியல் நிர்ணய சபை
* தமிழகம்
* நான் அரசியல்வாதி ஆனேன்
* கழகம் உடைந்தது
* கட்சி பிறந்தது
* காங்கிரஸ் பிரிவு
* பொது தேர்தல்
* மோகன் குமாரமங்கலம்
* மீண்டும் கழகத்தில் பிளவு
* எம்.ஜி.ஆர் தலைவராகிறார்
* ஜே.பி இயக்கம்
* அவசர நிலையும் காமராஜர் மறைவும்
* காங்கிரஸ் இணைப்பும் திமுக அரசு நீக்கமும்
* இந்தியாவில் ஆட்சி மாற்றம்
* தமிழகத்தின் எதிர்கால தேசிய தலைமை
* நான் பார்த்த தலைவர்கள்
* என் பிரார்த்தனை
புத்தகத்திலிருந்து
\
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்றிய வருணனையே இந்த நூல்.
/
\
இந்த ஜஸ்டிஸ் கட்சிதான் வெள்ளைக்காரனுக்கு மிகவும் உதவி செய்த கட்சியாகும். விடுதலை கிடைக்காமல் இருப்பதற்கு வெள்ளைக் காரன் செய்த சாகசங்களைவிட, இந்தக்கட்சி(நீதி கட்சி) செய்த சாகசங்கள் மிக அதிகம்.
'அப்படி என்றால் அந்தத் தற்குறிகளிலே நீயும் ஒருவனா?' என்று நண்பர்கள் கேட்கக்கூடும். அப்படித் தான் அன்றைய நிலைமை இருந்தது. அவர்களுடைய(திமுக) பேச்சுகளைக் கேட்டு மயங்கினேனே தவிர, கட்சிகளில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு அப்போது இல்லை.
/
\
'எதையும் அழகாகவும், ஆணித்தரமாகவும் சொல்லத் தெரிந்துவிட்டால் அது உண்மையோ, பொய்யோ அவனைச் சுற்றிலும் ஒரு பெரும் கூட்டம் கூடிவிடும்' என்ற உண்மையை அண்ணா நியாயப்படுத்தித் தமிழகத்திலே காட்டினார்.
/
\
ஆட்சி பீடத்தில் ஒன்றரை ஆண்டு காலமே இருந்த நிலையில் அறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப் பட்டார்கள். இந்த இடைக்காலத்தில் அவர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று திரு. மன்னை நாராயணசாமியையும், திருவண்ணாமலை தர்மலிங்கத்தையும் இரண்டு முறை என்னிடம் அனுப்பியிருந்தார்கள்.
/
\
ஒரு கட்சியிலே இருந்து, இன்னொரு கட்சி பிரியும் போது, பிரிந்து வந்தவர்கள், முன்னாலே இருந்த கட்சியை ஏசாமல், அதைப் புகழ்ந்து அழிப்பது என்கின்ற கெட்டிக்காரத் தனத்தை அண்ணாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
/
\
எப்பொழுதுமே வெள்ளைக்காரனுடைய ஆதரவோடு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களாக தமிழகத்தைப் பொறுத்த வரையிலே இருந்தவர்கள்.
/
\
கருணாநிதி, திராவிடக் கழகத்திலேயும் பத்துப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தாரே தவிர, 'டார்ப்பிடோ'ஜனார்த்தனத்திற்கு அடுத்தபடியாகத்தான் அவர் காட்சியளித்தார்; ஒரு முக்கியமான பிரமுகராக இல்லை.
/
\
படிக்காதவர்களாக அவர்கள் அமைந்த காரணத்தி னாலேயே அந்த வெறி அதிகமாயிற்று. 'சிந்திக்கத் தெரியாதவனே எனக்குத் தேவை' என்று பகிரங்கமாகப் பெரியார் சொன்னார்.
/
\
பிரிந்து போனதை அழித்துவிட வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படுவது இந்திய அரசியலில் சர்வ சகஜமாகும்.
/
\
இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மூலகாரணம் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். அவர் உருவாக்கிக் கொடுத்த வெளிநாட்டுக் கொள்கைதான் இந்தியாவினுடைய கெளரவத்தையே உயர்த்தியிருந்தது.
/
\
1971- க்குப் பிறகு கருணாநிதினுடைய போக்கு வேறு விதமாக மாறத் தொடங்கிற்று. தமிழகத்தில் தான் என்ன செய்தாலும் கேட்க முடியாது என்று ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாக, அவர் கருதத் தொடங்கினார்.
/
\
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவோ எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
/
\
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயமுத்தூர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, "என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் 'பென்ஷன்' கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே" என்று பேசியதாகச் செய்தி வந்தது.
/
\
மோகன்தாரியா, கிருஷ்ணகாந்த், ரகுநாத ரெட்டி, ஆர்.கே. சின்ஹா, அர்ஜுன் அரோரா, சந்திரஜித் யாதவ் போன்றவர்களெல்லாம் அங்கே என்னை மிகவும் மதித்தார்கள் என்னிடம் மிகவும் அன்பு காட்டினார்கள். அவர்களோடு பழகுவதே சுகமாக இருந்தது.
/
\
புகழ்! ஒரு மனிதன் அதை சிந்திக்கும்போதே போதை அவன்தலைக்கேறுகிறது. அதை அவன்காதிலேயும் கேட்டால் இன்னும் அதிகமாகிறது. எனக்கு அதுவே தோன்றிவிட்டது. புகழ் எந்த வழியாக வருகிறது, எந்த முறையிலே வருகிறது என்பதை யாரும் சிந்திப்பதில்லை.
/
\
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதில் எனக்கு சந்தேகம் தோன்றவே இல்லை. 'அது வராது, வராது' என்று என்னை நானே தேற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை.
/
\
பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, 'பிராமணர்களை எதிர்க்கிறேன்' என்கின்ற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.
/
\
பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது, திராவிடஸ்தான் பிரிவினையையு��் அவர் ஆரம்பித்தார்.
/
\
நேரு கொடுத்த உரிமைகளில் மிகப் பெரிய உரிமை இந்தப் பேச்சுரிமைதான்.
/
\
ஆனால் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை, அவசர நிலையில் சிலர் செய்த அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல காரணங்களால் அவஸ்தைப்பட்டிருந்த பொது மக்கள், ஒரு தடவை வோட்டை(ஜனதா-ஜே.பி) மாற்றிப் போட்டுப் பார்க்கலாம் என்று கருதினார்கள்.
/
\
இப்படி எல்லாக் கட்சியிலேயும் ஒரு கட்டம் வரையில் யோக்கியர்களாகக் காட்சியளித்து மறு கட்டத்தில் அயோக்கியர்களாக மாறினவர்கள், மிக அதிகமானவர்கள்.
/
\
சுதந்திரம் வந்த பிற்பாடு, காங்கிரசுக்குள்ளே புகுந்து கொண்ட அயோக்கியர்களையும் பார்த்திருக்கிறேன்.
/
\
அது கொடுத்த வாக்குரிமையை வைத்துக் கொண்டே அதைத் தோற்கடிக்க பலர் முயன்றார்கள். ஆனாலும் கூட நேரு மனம் தளரவில்லை. "நான் கொடுத்திருக்கின்ற உரிமைகளை அவர்கள் எப்படி வேண்டு மானாலும் பயன்படுத்தட்டும், அந்த உரிமை என்னைத் தாக்கும் அல்லது என்னை அழிக்கும்; காங்கிரஸையும் அழிக்கும் என்றால், அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்," என்று பெருந்தன்மையோடு கூறிவிட்டார்.
/
\
இந்த தேசிய வெள்ளத்தை ஒரு முகப்படுத்தி ஒரு தலைவரைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினால், இந்த வெள்ளத்திற்கு சம்மதித்து வர வேண்டியவர் இன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்று கருதுகிறேன்.
/
\
கருணாநிதியைப் பொறுத்தவரை 'பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு' என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்றுவரை அவர் இருந்து வந்திருக்கிறார்.
/
\
யோசித்துத் தள்ளிப் போட்டு ஒன்று பாழாவதைவிட, ஒரு காரியத்தை அரசாங்கத்திலிருப்பவன் செய்து, தவறு செய்து விடுவது தவறல்ல.
/
\
1949. நான் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த காலம். அந்த நாளில்தான் அங்கே அருமை நண்பர்கருணாநிதி அவர்கள் பணிசெய்ய வந்து சேர்ந்தார்.
/
\
ராஜாஜி ஒருவரைக் கண்டுதான் நேரு பயந்தார். ராஜாஜியினுடைய சுதந்திரா கட்சி பலவீனமாக இருந்தாலும் கூட அதுவும் ஜனதாவில் ஐக்கியமாயிற்று. ஒரு நாலைந்து கட்சிகள் ஒன்றாக ஐக்கியமாகி காங்கிரஸை எதிர்ப்பது என்று முடிவு கட்டின.
/
\
திறமையுள்ளவனாகவும், யோக்கியனாகவும் ஒருவனைத் தேடிப் பிடிப்பதற்குப் பல ஆண்டுகள் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இதுதான் இந்தியாவினுடைய இன்றைய அரசியல் நிலவரமாகும்.
/
\
ஆறடிக் கரும்பை அப்படியே கொடுக் காமல் அரைப்படி சாறாகக் கொடுத்திருக் கிறேன்.
/
\
'இந்தியா என்பது ஒரு நாடல்ல, அது பல நாடுகளாக இருந்தது. ஐம்பத்தி ஆறு தேசங்களாக இருந்தது. அதிலே ஒரு நாடுதான் தமிழ்நாடு. இன்னொரு நாடு அங்கநாடு. மற்றொரு நாடு வங்க நாடு' என்றெல்லாம் வரலாற்றைப் போட்டுக் குழப்பி, அந்த இளைஞனை இவர்கள் திணற அடித்திருந்த காரணத்தால், அவன்
/
\
பெரியாருடைய தலைமையின் கீழ் யாரும் முன்னேற முடியாது என்கிற உள்மனக் குமுறல் ஒவ்வொரு தலை வருக்கும் இருந்தது.
பெரியாரின் திருமணம் என்பது ஒரு சாக்காக சொல்லப்பட்டதே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பத்திற்கு அதுவே நியாயமான காரணமல்ல.
/
\
'கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்து, ஒன்றுபல அயின’ என்கின்ற 'மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளையினுடைய வார்த்தைகளையும், 'திராவிட நாடு' என்று அவர் சொன்ன வார்த்தையையும் கையிலே வைத்துக் கொண்டு 'இதுதான் திராவிட நாடு’ என்று வாதாட பல பேராலே முடிந்தது.
/
\
பெரியார் கன்னடக்காரர் என்ற வாதத்தைச் சமாளிப் பதற்காகவும், தவிர்ப்பதற்காகவும் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பெயரும், அன்றைக்குக் கொண்டு வரப்பட்டன. கொண்டு வந்த பின்னாலே தான் திராவிட நாடு என்பதற்கு விளக்கம் தேடப்பட்டது.
/
\
அந்தக் கூட்டத்திலே 'பெரியாரே எங்களுடைய தலைவர்' என்று ஆரம்பித்து, பெரியாரைப் புகழ்ந்து, புகழ்ந்து, புகழ்ந்து, 'நான் வெறும் பொதுச்செயலாளர் தான்' என்று சொன்னபடியே அண்ணா அவர்கள் அமர்ந்தார்கள்.
/
\
உலகத்திலுள்ள நாடுகளெல்லாம் ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு காலனியாக இருந்த காலம். அந்த ஐந்து நாடுகளின் கையில் தொண்ணுாறுக்கும் மேற்பட்ட நாடுகள் அடங்கி அடிமைப்பட்டுக் கிடந்த காலம்.
/
\
கீழ்ஜாதி, மேல்ஜாதி என்ற கொடுமை இந்த நாட்டிலே மிக அதிகம். 'அவனது வீட்டுப் பக்கம் போவதே பாவம், குற்றம்' என்றெல்லாம் கருதிக் கொண்டிருந்தார்கள், அவன் கையிலேயும் நான் ஒரு ஒட்டுச் சீட்டைக் கொடுத்து விட்டால், இனிமேல் ராஜாக்கள் கிடையாது; ஜமீன், மிட்டா, மிராசு கிடையாது; எம்.எல்.ஏ., எம்.பி., ஆக வேண்டுமென்று விரும்புகிற எவனும் ஏழை வீட்டுக் குடிசைப் பக்கம் நுழைந்து, சரியோ, தப்போ, அவன் காலைக் கையைப் பிடித்து, அவன் வீட்டிலேயும் மோர் வாங்கிச் சாப்பிட்டு, 'உன்னுடைய ஒட்டு எனக்கு வேண்டும்’ என்று கெஞ்சுவான்.
/
\
இதை நான் எழுதும் போது எந்தக் கட்சியிலும் இல்லை. விருப்பு வெறுப்பில் லாமலேயே விமர்சித்திருக்கிறேன்.
/
\
காங்கிரஸ் பேரியக்கத்தைப் பற்றிக் கூறும் போது கவிஞரது குரலில் ஓர் ஆதங்கம் தொனிக்கிறது. அது நல்ல தலைமையும் வழிகாட்டுதலும் தமிழக காங்கிரசுக்குக் கிட்டவில்லை என்பதே!
/
\
அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, "நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன்: 'என்னய்யா யோக்கியதை இது? நீ பாகிஸ்தான் கொடுத்தது போல, திராவிடஸ்தான் கொடுத்து விட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும்' என்றேன். ஆனால் வெள்ளைக் காரனுடைய யோக்கியதையைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக் கொள்ளவே இல்லை," என்று அவரே பேசியிருக்கிறார்.
/
\
முதன் முதலிலே, Multi-Party Democracy என்கிற பல கட்சி ஜனநாயகத்துக்கு அனுமதியளித்த ஒரே நாடு இந்தியாவாகும்.
/
\
அப்போது காரைக்குடியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ராம.சுப்பையா, கருப்புசாமி நாடார் என்ற இரண்டே பேர்தான் இருந்தார்கள்.
/
\
இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், "இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது" என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும்தான் இருந்தார்கள்.
/
\
எத்தனை திராவிட முன்னேற்றக் கழகங்கள் தலைதூக்கி எழுந்தாலும், நாடு பிரியும் என்ற பயம் யாருக்கும் தேவையில்லை. பிரிவினை என்பதற்கு இனி எதிர்காலமில்லை.
/