புதுமை பித்தனின் பகடி இலக்கியமிது. ராமனின் முடிசூட்டிற்கு பிறகு, அவனுக்கும் அவனது வம்சத்திற்கும் நிகழும் நிகழ்வுகளை அடுக்கும் ஒரு படைப்பாக இது தான் வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இது சமகால அல்லது சுதந்திரப் போராட்ட கால அரசியலைச் சாடையாடுகிறது. புதுமைப்பித்தன் இதை ஒரு மொழிபெயர்ப்பு நூலாக இட்டுக்கட்டி கதையை நகர்த்துகிறார். புத்தகம் அதன் இறுதிக் கட்டத்திற்கு ஆயத்தமாகும் பொழுது, நாம் வெள்ளையர்களையும் அவர்களது செயல்களையும், காந்தியையும் அடையாளம் கண்டு கொள்கிறோம். அதுவரை இது ஒரு வரலாற்று நூல் போலத்தான் காட்சியளித்தது எனக்கு (முன்னுரையைப் படிக்காமல் முன்னேறியதன்விளைவு)
"நாரத ராமாயணம்" - புதுமைப்பித்தன்
====================================
1955-ல் முதற்பதிப்பு கண்ட இப்புத்தகம், 2020ல் Kindle பதிப்பாக வெளியாகியிருக்கிறது.
திரு. புதுமைப்பித்தன் அவர்கள், மொழிபெயர்ப்பாளர் அத்தியாயத்தில், தம்மை உருவகப்படுத்திக்கொண்டு, தாம் சீனதேசம் பயணித்ததாகவும், அங்கு கிடைத்த செப்பேட்டில் கிரந்த எழுத்துக்களை கண்டதாகவும்., அதில் "நாரத உவாச" என கூறியிருந்த படியால், இது நாரதர் அருளிய ராமாயணம் என அறிவதாக கூறுகிறார்.
பின்னர், 13 சருக்கங்களில்(அத்தியாயங்கள்) ராமனுக்கு பின்னான வம்சத்தை பற்றி புனைவாக, அதுவும் அக்கால நகைச்சுவை ரசத்திற்கேற்ப எழுதியிருக்கிறார். ராமன், சீதை, அனுமன் போன்றோரை பற்றியும், ராமனின் மகனான லவ மகராஜனை பற்றியும், அவனது பிள்ளைகள், அதன் மூலம் கிடைத்த பகைவர்கள் பற்றியும், முற்றிலும் ஹாஸ்யமும் கற்பனையும் கலந்து இப்புனைவு இயற்றப்பட்டிருக்கிறது.
ராமன்-சீதைக்குள்ளான குடும்ப பிரச்சனைகளும், குழந்தையை பார்த்து கொள்வதில் ஸ்ரீராமபிரானையே சீதாபிராட்டி புரட்டி எடுப்பதையும் மிகு நகைச்சுவை உணர்வுடன் புனைந்திருக்கிறார். இதே போல் சில முக்கிய பாத்திரங்களான அனுமன், சுமந்திரன், சுக்ரீவன், குகன், விபீஷணன், பரதன் போன்றோர்களையும் இந்த களேபரத்தில்(!) இழுத்துவிட்டுள்ளார்.
தற்கால நகைச்சுவை எதிர்பார்ப்புக்கு ஈடு செய்யவில்லை என்றாலும், புதுமையான கோணத்தில், வித்தியாசமான சிந்தனையை ராமாயணத்தில் புகுத்தியது, அதுவும் 1955களிலேயே எனும்போது, ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகிறது இப்படைப்பு.
புத்தகத்திலிருந்து ....
\\
(9) அரக்கர்களும் கண்டு நடுநடுங்கும் ஒருவருக்கு, குழந்தையைக்கூட எடுக்கத் தெரியாதோ என்று, சீதைக்குப் பெரிய அவமானமாக இருந்தது.
(10) இம்மாதிரியான சிறு சங்கடங்கள், ஸ்ரீ ராமரின் நெஞ்சில் வேல் போல் குத்தின.
(11) சீதையின் ஹ்ருதய கமலத்திலிருந்து பராக்ரமசாலியான ராவணேசுவரனாலும், பெயர்த்து எடுக்க முடியாத தன்னை, இந்த வலிமையற்று, எப்பொழுதும் அழுதுகொண்டேயிருக்கும் குழந்தை தனது சிறு கால்களால் உதைத்துத் தள்ளிவிட்டது என்பதை அறிந்தார்.
//
\\
ஸ்ரீ ராமபிரானுக்கே இப்படி என்றால், ஹனுமாரைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை. ‘இம்மாதிரி உடம்பிலிருக்கும் பேனைக் குத்திக்கொண்டிருக்கும் தொழிலாக இருக்குமென்று தெரிந்திருந்தால், அங்கு சுக்ரீவனுடன் குடித்துவிட்டாவது சோம்பலை மறக்கலாமே’ என்று நினைத்த காலங்களும் உண்டு. ஆனால் ஹனுமார் ராமபக்தி மிகுந்த வீரனாகையால் வெளிக்காட்டுவதில்லை.
(19) மேலும், சீதாபிராட்டியின் மீது ஒரு தனிக் கோபம் இருந்தது. அசோகவனத்திலிருக்கும் பொழுது, என்ன சொல்கிறோம் என்றுகூட கவனிக்காமல் அவள் அவசரப்பட்டுக் கொடுத்த வரத்தினால், தனக்குச் செத்துப் போகவும் வழி இல்லாமல் செய்துவிட்டதை, அவரால் மன்னிக்க முடியவே இல்லை.
(20) பிரம்மசரிய வாழ்க்கையின் மகிமையை எடுத்துரைக்கும் பொழுது, பெண்களால் வரம் கொடுக்கக்கூடத் தெரியாது என்பதற்கு உதாரணமாக இதை இவர் பிற்காலங்களில் கூறுவதும் உண்டு.
(21-25) ஹனுமாரின் கஷ்டத்தை ஒருவாறு அறிந்த ராமருக்கும் ஒரு யோஜனை தோன்றியது. தமது குமாரனுக்குப் பட்டத்தைக் கட்டிவிட்டால், இந்தச் சிங்காதனக் குத்தலும் ஒருவாறு ஒழியும். சுமந்திரனோ மிகுந்த நம்பிக்கையானவன், தனது பால மகாராஜாவைப் பார்த்துக்கொள்ள. நாம் ஏன் ஹனுமாருடனும் சீதையுடனும் கானகம் சென்று, அங்கிருக்கும் அரக்கர்களையாவது கொன்று தோள் தினவு தீர்க்கலாகாது என்று எண்ணி, ஹனுமனிடம் சொல்ல, மிகுந்த சந்தோஷம் உண்டாகி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து பின்வருமாறு சொல்லலானான்.
(26) ஹனுமான் கூறுகிறான்: “என்னை அடிமை பூண்ட அண்ணலே! இன்றுதான் நான் கிருதார்த்தனானேன்...” (27) தென் திசையிலுள்ள அரக்கர்களை நாம் அப்பொழுதே துவம்சம் செய்துவிட்டோம். அங்கு ஒருவரும் கிடையாது. வடதிசையில் இமயமலைச் சாரலில் ஒருவேளை இருக்கலாம். அங்கு போவது நலம்” என்றான்.
(28) ஸ்ரீ ராமரும் அவரது புத்தியை மெச்சி, “அப்படியே ஆகுக” என்றார்.
//
\\
இந்திரன் சொல்லுகிறான்: (2-7) “இத்தனை நாள் வரை தங்கள் வரவை எதிர்பார்த்திருந்தோம். தங்கள் கருணை அயோத்தி நகரிலே தங்கிவிட்டது. அங்கு பாற்கடலோ பாசி பிடிக்க ஆரம்பித்துவிட்டது. வெகு நாட்களாக வராததினால் தங்கள் சேஷசயனத்தில் காளான்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. தாங்கள் அங்கு வந்து தூங்குவதற்குத் திருவுளம் எப்படியோ” என்று தனது ஆயிரம் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து அழுது, ஸ்ரீ ராமபிரானையும் சீதாபிராட்டியாரை���ும் புஷ்பக விமானத்தில் வைத்துக் கூட்டிக்கொண்டு போய்விட்டான். முன்பு தன்னை இலங்கையில் கண்டவுடன், ஊளையிட்டுக்கொண்டு ராவணனின் முன்பு ஓடி முறையிட்ட, இந்தத் தேவர்களின் செய்கையைக் கண்டு, ஹனுமாருக்கு கோபாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. ஆயினும் என்ன செய்யலாம்? இப்பொழுது வாலைத் தூக்கிப் பயமுறுத்தவும் முடியவில்லையே.
//
\\
பரதனைப் பார்த்து, “எங்கள் சண்டை தீர்ந்த பிறகு உமது வார்த்தைகளைக் கேட்கிறோம், அதுவரை நீர் எங்கள் சிறைச்சாலையில் தயவு செய்து எழுந்தருளல் வேண்டும்” என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
//