Reviews for ஆன்டன் செக்காவ்: ஆகச் சிறந்த கதைகள்

15 reviews total

user_16391

★ 5/5 Feb 02, 2026

பொதுவாக புதினங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் போல சிறுகதைகள் எனக்குள் அவ்வளவு சீக்கிரம் நுழைந்து விடுவதில்லை. சில சிறுகதைகள் புரியாமலோ, பிடிக்காமலோ, பொருத்திப் பார்க்க முடியாமலோ போய் விடுகின்றன. சில சிறுகதைகள், சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த நபரைப் போன்றவை. அவற்றைப் பற்றி யோசிக்க எதுவுமே இருப்பதில்லை.

தனிமனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட சிறுகதைகள் எனக்கு இன்னும் நெருக்கமானவை. இதுவரை படித்ததில் சுந்தர ராமசாமி அவர்களின் மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள அதே தலைப்பிலான சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

ஆன்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைகள் யோசிக்கவும் வைத்து, ஏதோ ஒரு உணர்வையும் தந்து சென்று, சிரிக்கவும் வைத்து விடுகின்றன.

பயம் ஒரு மனிதனை எவ்விதமாக பேசவும், செயல்படவும் வைக்கிறது - அதிருப்தியும், பொறாமையும் கொண்ட மனிதன் எப்படிப் பேசுவான் - உலகம் தெரியாத, எதிர்த்துப் பேசாத பெண்ணின் நிலை என்ன - இரண்டு வெவ்வேறு பதவிகள் கொண்ட நண்பர்களின் நட்பு எவ்விதமாய் இருக்கும் - இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க நினைப்பவன் என்னவெல்லாம் செய்வான் - இப்படி ஒரு மனிதனின் பல்வேறு உணர்வுகளை அவரது சிறுகதைகள் பதிவு செய்கின்றன.

சிகரெட் பிடிக்கும் தனது சிறு வயது மகனை அவனது தந்தை எப்படித் திருத்துகிறார் என்பதைப் பற்றிய வீட்டில் என்ற சிறுகதை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு எளிமையாக, சிறப்பாக இருந்தது. ஆங்காங்கே எழுத்துப் பிழைகளும், சந்திப் பிழைகளும் இருந்தன.

user_16390

★ 5/5 Feb 02, 2026
சிறப்பான கதைகள். மெல்லிய பகடி கலந்த கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருகின்றன. செக்காவ் எனும் தேர்ந்த சிறுகதை எழுத்தாளரின் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல்.

user_16389

★ 4/5 Feb 02, 2026
சிறியதாய், நேர்த்தியாய், ஆனால் ஆழமானது. ஒரு பக்கத்தில் படித்து முடிக்கும் கதைகள் உங்கள் மனதில் நீண்ட நேரம் நிற்கும்.

user_16388

★ 4/5 Feb 02, 2026

ஆன்டன் செகாவ் இந்தக் கதைகளை எழுதி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்றும் சில கதைகள் உயிர்ப்புடனே இருக்கின்றன.

முழுமையான அறிதல்கள் இல்லாமல் சூழலுக்கேற்ப வாழ்வாதாரத்தை முன்னிட்டு மட்டுமே தன்னை உருமாற்றிக் கொள்ளும் மனித மனம் தான் இந்தக் கதைகளை இன்னும் இளமையாக வைத்திருக்கின்றது… என்றும் வைத்திருக்கும்.

இத்தொகுப்பைப் படித்து முடித்ததும் அதிலிருக்கும் கதைகளை விட, தேய்மானம் இல்லாமல் அது கடந்து வந்த காலத்தையே மனம் அசை போடுகிறது.

user_16387

★ 4/5 Feb 02, 2026
மொழிபெயர்ப்பு அருமை. முதன் முதலாக செக்காவ் புத்தகம் படித்தேன். கதைகள் எளிய நடையில் ஆழமான உட்கருத்துடன் இருக்கின்றன. செக்காவை தொடர்ந்து படிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. 1800களிலேயே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருப்பது இக்கதைகளின் மூலம் உணர முடிகிறது.