வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களைப் பற்றிதான் வண்ணதாசன் இப்புத்தகத்தில் கூறியுள்ளார். ஆனாலும் அவ்வளவு சின்னதென்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இந்த சின்ன விஷயங்கள் அத்தனையும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. மனிதன் வாழ்வில் கடந்து செல்லும் அனைத்து அழகான, யதார்த்தமான, முக்கியமான (இல்லாமலும் இருக்கலாம், சிலருக்கு) விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். பெரும்பாலான மனிதர்கள் இவற்றையெல்லாம் யோசிக்கவோ உணரவோகூட மாட்டார்கள். எதையோ பிடிக்க வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் சற்றே நின்று நிதானமாக இவை அனைத்தையும் கவனித்தால் வாழ்வின் அழகியல் புரியும். ஓர் மலை உச்சியில் நிற்கும்போது, ஒரு அருவியின் அடியில் நனைகிறபோது, சில்லென்ற தென்றல் தீண்டிடும்போது, மேஸ்ட்ரோவின் இசையில் மூழ்கிடும்போது நாம் அடைகிற உணர்வை, வண்ணதாசனின் எண்ணங்களிலும் உணரலாம். மனதிற்கு இதமான புத்தகம்.♥️
01/24
கதையாக மட்டும் அல்ல, காற்றாகவும் உங்களை நான் தொடலாம் அல்லவா? சொல்லபோனால், கதை என்பது கூட ஒரு விதை தானே?
பெரிதனும் பெரிதை எல்லாம் நான் எழுதிவிடவில்லை.
சிறிதினும் சிறிதையே எழுதினேன். அந்த சிறிதினும் சிறிதில் பெரிதினும் பெரிதை உணர்கிறவனாக நான் இறுக்கிறேன்.எனக்கு சின்ன விஷயங்களே பெரிய விஷயங்கள்.
சின்ன விஷயங்களின் மனிதன் - வண்ணதாசன்
கடைசியா எப்போ ஒரு மரத்தையோ இல்ல அதில் இருந்து விழுகிற இலையையோ, வானத்தையே வளைத்து கட்டுகிற வானவில்லையோ, இல்ல கொட்டித் தீர்க்கிற மழையையோ எந்தவித புலம்பலும் இல்லாம மெய் மறந்து ரசிச்சு பார்த்தீங்க.
நம்ம வாழ்க்கையில ஏதோ ஒரு தருணத்தில் இது எல்லாத்தையுமே வியப்பாகவும், ஆச்சரியமாகவும், அடக்க முடியாத எவ்வளவோ கேள்விகளுடனும் கடந்து வந்து இருப்போம், அப்போ நாம எதை தொலைச்சுட்டோம் இவைகளின் மீது நமக்கு இருந்த ஆச்சரியங்களையா இல்ல இந்த பரந்துபட்ட உலகத்தையும் அதன் அழகியலையும் ரசிக்கிற, கொண்டாடுற மனநிலையையா?
பெரிதினும் பெரியதை தேடி இயந்திரத்தனமாக ஓடிட்டு இருக்குற இந்த காலத்துல நமக்கு பெரிய மனநிறைவையும், சந்தோஷங்களையும் குடுத்துட்டு இருந்த சின்ன சின்ன விஷயங்களை நாம எவ்வளவு எளிதா உணராமலோ, மறந்தோ, இல்ல கடந்தோ போறோம்னு பெரும்பாலான சமயங்கள்ல நமக்கே தெரியறது இல்ல.
அப்படி சின்ன சின்ன விஷயங்கள் என்னத்த தான் கொடுக்கும் என்கிற கேள்விக்கு, என்னதான் கடல்ல முழுசா மணிக்கணக்குல நனைந்தாலும் முதல் அலை காலை உரசும் போது குடுக்கிற மகிழ்ச்சி இருக்குல, என்னதான் மனமும், சுவையும் இருக்குற காப்பியை முழுசா குடிச்சதும் திருப்திகரமாக இருந்தாலும் முதல் துளி பருகும் போது ஏற்படுகிற பரவசம் இருக்குல, என்னதான் வாய் அகல சிரிக்கிற குழந்தையின் சிரிப்பு நம்மையும் சிரிக்க வைத்தாலும் தூங்கிட்ட இருக்குற குழந்தையின் வாய் மூடிய புன்சிரிப்பு நமக்கு குடுக்கிற பேரானந்தம் இருக்குல. இப்படியான அந்த அந்த நேரத்துல நிகழ்கிற ஆச்சரியங்களும், மனநிறைவும் தான் சின்ன சின்ன விசயங்கள் கொடுக்கும்னு நினைக்கிறேன்.
இப்படி சின்ன விஷயங்களின் மனிதனான வண்ணதாசன் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், மரங்கள், காய்கறி, பழங்கள், பூக்கள், அருவிகள், ஆறுகள், பறவைகள், வெயில், மழை, புகைப்படம், மனித கரங்களின் கதகதப்பு, மனித உணர்வுகள் என ஒவ்வொரு சின்ன விஷயங்களின் அழகையும் கவிதைகள் மாதிரி கொண்டாடி தீர்த்து எழுதி இருக்காரு.
புத்தகத்தை படிச்சு முடிச்சதும் எனக்கு ஏற்பட்ட ஒரே கேள்வி வண்ணதாசன் இப்ப என்ன செஞ்சுட்ட இருப்பாரு என்பது தான். ஒரு வேலை அவர், உடைகளின் கட்டுப்பாடு ஏதும் இன்றி கை கால்களை ஆட்டி சிரிக்கிற குழந்தையாகவோ, தேர்ந்தெடுத்து தண்ணீர் ஊற்றப்படும் செடியாகவோ, கையில் அடிபட்டுருச்சான கடைக்காரரை விசாரிக்கும் சிறுமியாகவோ, வருடலின் ஏக்கத்திற்காக வால் உயர்த்தி ஓடி வரும் நாயாகவோ, பூனைகளுக்கு மிகவும் பிடித்த மீன்காரர் ஆகவோ, மரத்தில் இருந்து கீழே விழும் பழுப்பு இலையாகவோ, காற்றின் அலைக்கழிப்பால் சாலை முழுவதையும் இளம் சிவப்பு ஆக்குகிற தாள் பூ ஆகவோ , நிழலை நகர்த்துகிற வெயிலாகவோ, எல்லாவற்றையும் புதுப்பிக்கும் மழையாகவோ, இப்படி இவற்றில் ஏதேனும் ஒன்றாகவோ இல்லை எல்லாமாகவோ மாறிவிட முயற்சி செய்து கொண்டிருக்க கூடும்.
பெரிதினும் பெரிதை எல்லாம் நான் எழுதவில்லை. சிறிதினும் சிறிதையே எழுதினேன். அந்த சிறிதினும் சிறிதில் பெரிதை உணர்கிறவனாக நான் இருக்கிறேன். எனக்குச் சின்ன விஷயங்களே பெரிய விஷயங்கள்னு, அவர் சொன்ன மாதிரியே சின்ன விஷயங்களின் அழகியலை காட்சியா வடித்து இருக்காரு புத்தகம் முழுவதும்.
சின்ன விஷயங்களின் மனிதனை படித்து நானும் சின்ன சின்ன விஷயங்களின் ரசிகனாகவும், சின்ன விஷயங்களின் மனிதனாகவும் மாறிப்போனேன். வண்ணதாசனை போல மீண்டும் ஒரு முறை சொல்லி பார்க்கிறேன், "சின்ன விஷயங்களின் மனிதன்", அழகாகவும், நன்றாகவும் தான் இருக்கிறது.
வண்ணதாசனின் மொழி வசீகரத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த நூல். புதியதோர் இலக்கியத்தின் இனிய உதயம்.
நம்மைச் சுற்றியுள்ள சின்ன சின்ன விசயங்களுக்கு ஒளிந்துள்ள உயிரோட்டத்தை நமக்காய் நம் முன் இசைத்துக் கொண்டேயிருக்கிறது.
#171
Book 12 of 2023-சின்ன விஷயங்களின் மனிதன்
Author- வண்ணதாசன்
“பெரிதினும் பெரிதை எல்லாம் நான் எழுதிவிடவில்லை.சிறிதினும் சிறிதையே எழுதினேன்.அந்த சிறிதினும் சிறிதில் பெரிதை உணர்கிறவனாக நான் இருக்கிறேன்.எனக்குச் சின்ன விஷயங்களே பெரிய விஷயங்கள்.”
“என்னவென்று சொல்வதம்மா” என்ற SPB பாடல் தான் நினைவுக்கு வருகிறது.இந்த புத்தகமும் அப்படித் தான்!இதைப் பற்றி நான் என்ன எழுதினாலும் அவை இந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு Justice செய்யுமா என தெரியவில்லை.ஆனால்,எல்லோரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.வண்ணதாசன் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றி,மரங்களைப் பற்றி,காய்கறி பழங்களைப் பற்றி,வெயில்,மழை,பருவமாற்றத்தைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு இது.
வண்ணதாசனிடம் எனக்கு பிடித்ததே அந்த எதார்த்தம் தான்.உள்ளதை உள்ளபடியே எழுதி,அதை எல்லாரும் ரசிக்கும்படியாகவும் படைத்திருக்கிறார்.”உங்களுக்குத் தான் தெரியுமே,நான் கவிதையை எழுதுகிறதை விட காட்சியை எழுதுகிறவன் என்று”-இந்த வரிக்கேற்ப அவர் காட்சியையே இதில் வடித்திருக்கிறார்.
தலைப்புக்கேற்ப சின்ன விஷயங்களின் அழகை இதில் கொண்டாடி தீர்த்திருக்கிறார்.நெல்லிக்காய்,நாவல்பழம்,பனங்கிழங்கு,பழைய தொலைக்காட்சி தொடர்கள்,அருவிகள்,பேருந்தில் பலகாரம் விற்பவர்கள்,ஆச்சி,டீ master,காக்கா,குருவி பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்.
“தேசாந்திரி” படித்து எப்படி ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றியதோ இதை படித்தப் பின் வாழ்க்கையை இன்னும் ரசிக்க வேண்டும் என தோன்றுகிறது.இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் எல்லா மனிதர்களையும் நாமும் சந்திருப்போம்-ஆனால் வெவ்வேறு பெயரில்.இயற்கை மீது அவருக்கிருக்கும் அக்கறை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இந்த புத்தகம் என்னைப் பற்றி,உங்களைப் பற்றி,நாம் பார்த்தது,பார்க்காதது,ரசித்தது,ரசிக்காதது,ரசிக்கத் தவறியது என எல்லாவற்றை பற்றியும் எழுதியிருக்கிறார்.நான் இதுவரை வேறு எவராகவும் இருக்க விரும்பியதில்லை.இக்கணம்,நான் வண்ணதாசனாக இருக்கவே விரும்புகிறேன்.அவருக்கு ஒரு கடிதம் எழுதி நிறைய நன்றி சொல்ல வேண்டும்.இத்தனை நிறைவான புத்தகம் படித்து வெகு நாட்கள் ஆனது. வாழ்வென்னும் பெரும் பூவின் வாசத்தை உணரச் செய்தது இந்த புத்தகம்.