“சிவ ரகசியம்” - இந்திரா சௌந்திரராஜன்
சித்தர்களின் சித்து விளையாட்டு சம்பவங்களை கதைநெடுகிலும் பயன்படுத்தி புனையப்பட்ட கதைக்களத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல். 536 பக்கங்களை கொண்ட இப்புத்தகம் ஜூன் 2013-ல் முதற்பதிப்பு கண்டது. ஆனால் 2010 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம்.
சிவரகசியம் என தலைப்பை ஒட்டி, முழுவதும் இந்து சமய கோட்பாடுகளால் கொண்டதாக இல்லாமல், சித்தர்கள் குறித்த தகவல்கள், ஆன்மீக தத்துவங்கள், ஆன்மீக இலக்கியங்களிலிருந்து பாடல் குறிப்புகள் என நாவல் நெடுகிலும் அறிய வேண்டிய விடயங்களை கூறிச் செல்கிறது.
மேலும் சுவாரசியங்கள் கூட்டும் விதமான கதைமாந்தர்களின் விவாதங்கள், அமானுஷ்யங்கள் மூலமாக ஜனரஞ்சகமாகவும் செல்கிறது.
ஆனால் சித்தர்கள் என்பவர்கள் அமானுஷ்யமானவர்கள் என்பதாலோ என்னவோ, அவர்களின் ஆற்றலையும் சித்து விளையாட்டுகளையும் ஆழ்ந்து ஆராய்ச்சி கட்டுரைகளாக இல்லாது, மிகவும் மேலோட்டமாக அவர்களைப் பற்றிய ஆற்றல்களை சொல்லி (சில இடங்களில் தட்டையாகவும்) செல்கிறது இந்நாவல். பெருவாரியான இடங்களில் தத்துவார்த்த விளக்கங்களும் இடம்பெற்று, அதைப் படித்த இடத்திலேயே நிலைகுத்தி நிறுத்தி, நம்மை சிந்தனையில் ஆழ்த்திவிடுகிறது.
சித்தர்களையும் கதைமாந்தர்களாக கொண்டு, அவர்கள் குறித்து சிறிதளவு அறிமுகம் ஏற்படும் வகையில் எழுதப்பட்ட சுவாரசியமான புனைவு கதையாக இந்நாவலைப் புரிந்துகொள்ளலாம்.
அதே நேரம், சித்தர்கள் நாம் வாழும் இக்காலத்திலும் நம் கண்களுக்கு புலப்படாமல் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் ஆணித்தரமாக இந்நாவல் ஆசிரியர் கூறுகிறார். மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்த கதைபோக்கு கொண்ட சுவாரசியமான நாவல். மதபேதங்கள் பார்க்காமல் வாசிக்கலாம். மர்ம நாடக சீரியல் பார்த்த உணர்வை கூடப் பெற வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் ஆன்மிகத் தகவல்/தத்துவங்களும், அத்தியாய முடிவில் வாசகர்களின் கேள்வியும் ஆசிரியரின் பதிலும் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்திலிருந்து… (அதிக குறிப்புகள் உள்ளது)
/
‘சிவம் என்றால் மங்களம்’ என்பது பொதுவான பொருள். ஆனால், உண்மையில் சிவன் என்றால் ‘உயிர்’ என்பதே சூட்சுமப் பொருள். சிவன் கோவிலுக்குப் போகிறேன், சிவனை வழிபடப்போகிறேன் என்றால், உயிரின் மூலத்தை தேடிப்போகிறேன், உயிரை உணரப் போகிறேன் என்பதே பொருளாகும்.
/
/
உயிர் மூலத்தை உணர முடிந்தவரை சித்தன் என்கிறோம். அதனால் தான் ஒரு சித்தனுக்கு நீரில் நடப்பதும் காற்றில் மிதப்பதும், கூடுவிட்டு கூடு பாய்வதும் சாதாரண ஒரு சாகசமாகிறது.
/
/
பாரத தேசத்தையே தாங்கி நிற்கிற நாடு தமிழ்நாடு. அதாவது இதை திருவடி தேசம் என்று சொல்வார்கள்.
/
/
ரகசியம் என்கிற வார்த்தைக்கு ‘ஒருவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை’ என்பதே பொருளாகும். ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு விஷயம் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அது கூட ரகசியமாகாது. அதே போல ஒளிந்து கிடக்கும் உண்மைகள் எல்லாமும் கூட ரகசியங்கள் தான். அதை நாம் உணர முடிவதில் தான் சூட்சுமம் இருக்கிறது…
/
/
“சுலபமா நம்ப முடிஞ்சா அது விஞ்ஞானம். நம்ப முடியாம நம்பிக்கை அடிப்படையில் ஏத்துக்கறது தானே மெய்ஞானம்.”
/
/
அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராகாமியம், வசித்வம், பிராப்தி, ஈசத்வம் என்கிற எட்டு சித்திகளைத் தான் அஷ்டமா சித்தி என்பார்கள். அதாவது கடுகு போலச் சிறுத்துப் போவது, விஸ்வரூபம் எடுத்து நிற்பது, மலைபோல கனப்பது, பஞ்சு போல மிதப்பது, கூடு விட்டு கூடு பாய்வது, வசியப்படுத்துவது, வேண்டியதை அடைவது, கடவுளாகவே ஆகிவிடுவது என்பவைதான் அவைகள்.
பிறந்த நேரப்புள்ளிக்கு தகுந்த மாதிரி கோள்களால் வழி நடத்தப்படுபவன்தான் மனிதன். இங்கு வரவும் கோள்கள் வழிவிட்டால்தான் உண்டு. அதெல்லாமே ஒரு கணக்கு.
/
/
உணர்வு மணக்கணும்னா புத்தி தெளியணும். உடம்பு மணக்கணும்னா வயிறு தெளியணும். வயிறு உன் வரைல குப்பைத் தொட்டியா இருந்தா வேர்வை, மூத்திரம், மலம்னு எல்லாமே நாறும். அதே வயிறு பால் பாத்திரமா மாறிட்டா எல்லாமே மணக்கும்!
/
/
பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பிச்சை என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வது என்பதாகும். ஆனால் அரிசியை மட்டும்தான் பிட்சையின் போது அளிக்க முடியும். பிச்சை கேட்பவருக்கு நாம் பிச்சையளிப்பது என்பது கருணையாகும். அதே சமயம் பிட்சை கேட்பவருக்கு நாம் பிட்சை போடுவது கடமையாகும். பிச்சை கேட்பவருக்கு இல்லையென்று சொல்வதால், நமக்கு குறையொன்றும் நேராது. பிச்சையிட்ட புண்ணியம் வேண்டுமானால் சேராமல் போகும். ஆனால் பிட்சை கேட்டு வருபவருக்கு மறுப்பது என்பது பாவச் செயலாகும். ஏனென்றால் பிட்சை கேட்டு வருபவர் நம்மிடம் அரிசியை மட்டும் பெறுவதில்லை. நம் தீவினைகளையும் அவர் சேர்த்தே பெற்ற��ச் செல்கிறார் என்பார்கள்.
/
/
பூஜ்ஜியம் மட்டும் மாறவே மாறாது. இதனால் தான் மிகுந்த பக்குவமும் நன்மை, தீமை இரண்டையும் சமமாக கருதும் மனப்பாங்கும், எந்த நிலைப்பாட்டின் போதும் தன்னிலையில் துளியும் மாறாமல் உறுதியாயிருப்பவர்களை பூஜ்ய ஸ்ரீ என்று கூறுவார்கள்!
/
/
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட லக்னத்தில் இந்த பூமியில் பிறக்கிறான். அதன் பின் அவனுக்கான கால நதியின் ஓட்டம் நட்சத்திரம், திசை, திசைக்குள் புக்தி, புக்திக்குள் அந்தரம், அந்தரத்துக்குள் சூட்சுமம் என்கிற வரிசையில் இயங்க ஆரம்பித்துவிடுகிறது.
இதனுள் ஒன்பது கோள்களும் ஏதோ ஒரு விதத்தில் இருந்து பங்காற்றும். ஒவ்வொரு நொடியும் நம் வாழ்நாளில் ஒன்பது கோள்களின் ஆதிக்கத்தில் தான் செயலாற்றுகிறோம். அப்படி செயலாற்றும் போது தான் பாவங்களையும் செய்கிறோம். புண்ணியங்களையும் செய்கிறோம். அந்த பாவச் செயல்களின் பின்னே ஒரு குறிப்பிட்ட கோள் இருக்கும்.
உதாரணமாக கேட்டை நட்சத்திரம் நடக்கும் நாளில் ராகு திசை நடக்கும் ஜாதகரின் போக்கில் குரு புக்தியில் கேது அந்தரத்தில் சூட்சுமத்தில் சந்திரன் ஒரு நொடி இருக்கும் போது, நாம் ஒரு பாம்பையோ தேளையோ கல்லால் அடித்துக் கொன்றுவிடுகிறோம். அதே போல ஒரு நொடி வரும்போது அதற்காக வருந்தி விரதம் இருப்பது ஒரு பரிகாரமாகும்.
அதே போல ஒரு நொடி ஒரு நட்சத்திர சுற்றில் அதாவது 27 நட்சத்திரங்களுக்கான 27 நாட்களில் வராமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் 48 தினம் என்னும் ஒரு மண்டலம் அது ஒரு முறை திரும்ப வர வாய்ப்பு மிகுதி.
அது எப்போது என்று கணக்கு போட்டு கண்டுபிடித்து விரதம் இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. 48 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருக்கும் போது நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் அந்தப் பாவம் பதிலான அதே கோள்களின் வரிசை 90% திரும்ப வரும். இதனாலேயே 48 நாட்கள் என்னும் ஒரு மண்டல காலத்தை விரத காலமாக நம் சான்றோர்கள் குறிப்பிட்டார்கள்.
/
/
நம்முள் திங்கள் தான் மனமாகத் திகழ்கிறது. செவ்வாய் தான் வீரம், கோபம் எனும் உணர்வு, புதன் தான் புத்தி, வியாழன் தான் அதன் ஞானம், வெள்ளி தான் உடம்பின் மொத்த உணர்வு, சனி தான் உடம்பின் ஆயுள், சூரியன் தான் உடம்பின் ஆன்மா…
/
/
“அறியார் சமணர், அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பின் வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே ஆதலால் இன்று” என்கிறார்.
இந்த திருமழிசையாழ்வாரும் பல சித்துக்கள் புரிந்தவர்தான். ஆனால் தன்னை நாராயணனின் அடிமை என்று கூறிக்கொள்வதில்தான் இவருக்குப் பெருமை.
ஆனால் சித்தர் பெருமக்கள் பெரும்பாலும் தங்களையே கடவுளாகவும் எல்லோருக்குள்ளும் இறைவன் இருப்பதாகவும் அதை உணரத் தெரியாமல் உலக மாயையில் நாம் சிக்கிக் கிடக்கிறோம் என்னும் கருத்தை உடையவர்கள்.
வைணவம் ஒரு ஜீவாத்மாவானது தன்னை கடவுளாகக் கருதுவதை ஏற்கவில்லை. அதனால் தான் சித்தர்கள் பெருமளவில் வைணவத்தில் இருந்து தோன்றவில்லை. இருப்பினும் இடைக்காடரை வைணவ சார்பு உடையவராகக் கூறலாம். இவர் தன் பாடலில் ராமனை, கண்ணனை, நரசிம்மத்தைப் போற்றியுள்ளார்.
/
/
ஒருவர் பிறந்த நிலையில் அவர் பிறந்த தினத்தில் இருந்து வரும் மூன்றாம் பிறைதான் முதல்பிறை…! அது ஆயிரத்தை அடையும்போது அவருக்கு எண்பத்தி நான்கு வயது நடந்தபடி இருக்கும்.
இந்த வயதில் ஆயிரமாவது பிறையை அவர் பார்ப்பது என்பது ஒரு பரிபூரண வாழ்க்கையை அவர் வாழ்ந்துவிட்டதை குறிக்கும்.
இப்படி ஆயிரமாவது பிறையைப் பார்க்க கொடுத்து வைத்த ஒருவர், ஆயிரம் முறை ஆலயம் சென்று வந்தவராகவும், ஆயிரம் முறை ஓடும் நதியில் அல்லது திருக்குளத்தில் நீராடியவராகவும் இருக்கும் பட்சத்தில் ஜாதக ரீதியாக இவர் பெரிய தோஷங்கள் இல்லாமலும், வீடு வாசல் மனைவி பிள்ளைகள் பேரன்கள் என்று எல்லா பேற்றினையும் பெற்றவராகவும் இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்டவர்களை இவர்கள் ஆயிரமாவது பிறை காணும் நாளில் வணங்கி உளமாற இவர்களிடம் ஆசிகளை ஒருவர் பெற்றுக்கொள்வது என்பது மிகச் சிறப்பான வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய செயலாக அமையும்.
/
/
ஒருவர் கீழே விழுந்தால் ‘தொபுகடீர்’ என்று விழுந்தார் என்கிறோம்… இவை எல்லாம் உதாரணங்கள். இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. எழுத்துக்கு வசப்படும் சப்தம் - எழுத்துக்கு வசப்படாத சப்தம் என்று இரண்டு இருக்கிறது.
…
இந்த சப்தத்தில் இருந்து வந்ததே உலகில் உள்ள அத்தனை மொழிகளும், பின் அதனில் இருந்து தோன்றிய எழுத்துக்களும் ஆகும்.
ஒரு சப்தத்தை தன் வசம் உறைய வைத்துக் கொண்டு இருப்பதுதான் எழுத்து. ஒரு எழுத்தை எங்கே பார்க்க நேரிட்டாலும் மனது அதை உடனே தன்னுள் சப்தமாய் எதிரொலித்துவிட்ட பிறகே அடங்குகிறது.
/
/
உச்சி வெயில்படும் போது இந்த லிங்கத்தை தரிசிக்க விதியிருக்கணும். ஆயிரம் பேருக்காவது அன்னதானமும், நூறு பேருக்காவது வஸ்திரதானமும், பத்துப் பேருக்காவது கோதானமும் (பசு), ஒருத்தருக்காவது மாங்கல்ய தானமும் பண்ணியிருந்தா மட்டும் இந்த தரிசனம் சித்திக்கும்…
/
/
ராமாவில் உள்ள ரா, நாராயணா என்பதில் உள்ள ரா என்னும் ஆன்ம சக்தி! ராமாவில் உள்ள மா, நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தில் உள்ள ‘ம’ வாகிய ஜீவசக்தி. ஆக மொத்தத்தில் ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டாக்ஷரத்தில் இருந்தும், ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சரத்தில் இருந்தும் உள்ள இரு எழுத்துக்களின் சேர்க்கை தான் ராமா!
இதனாலேயே மந்திரங்களில் தலைசிறந்தது எது என்று பார்வதி தேவி அந்த பரமனிடம் கேட்டபோது ராம நாமமே தலைசிறந்தது என்று அந்த பரமன் கூறுகிறான். இதை விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் வரிகளில் உணரலாம்.
‘ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே… சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!’ என்னும் வரிகள் இதை வழிமொழிகின்றன.
/
/
தானா புரிவதுதான் தங்கும்.
/
/
சித்தர்களின் சமாதிக்குள் அவர்களின் ஜீவ ஆற்றல் ஒளிர்ந்தபடி இருப்பதால் அது ஜீவ சமாதி எனப்படுகிறது.
அங்கே சென்று நம்புலன்களை ஒடுக்கி நாம் தவம் புரிவதாலும் அதை வணங்கி வழிபடுவதாலும் அது அப்படியே பேணப்படுகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் பூ உலகில் வணக்கத்திற்குரிய கருவறைகள், ஜீவசமாதிகள் எல்லாமே மனிதக்கூட்டத்தின் எண்ண அலைகளால் மூழ்காமல் பேணிப் பாதுகாக்கப்படுபவை.
அங்கே கண்கள் வழியாக நாம் தரிசனம் என்று ஊடுருவி அங்குள்ள பேராற்றலை தீண்டுகிறோம். அதற்கே நமக்குள் பெரும் மாறுதல்களும் ஆறுதல்களும் ஏற்படுகின்றன. தீண்டுவதற்கே இத்தனை நன்மை என்றால் அவைகளை எடுத்துக் கொள்ளவும் நாமும் அது போல ஆகவும் முற்பட்டால் எவ்வளவு நன்மை ஏற்படும்.
/
/
சிவ விஷ்ணு பக்தர்களுக்கு மிக பொதுவான ஒரு மந்திரச் சொல் ராம நாமம் என்கிறார் ஆதிசங்கரர். அது மட்டுமல்ல.
முருகபக்தர்களும் ராமநாமத்தை சொல்லலாம். கேட்டால் முருகனே மகிழ்வான் என்பது தான் ஆச்சரியமான உள்ளடக்கம்.
முருகனுக்கு இன்னொரு பெயர் குமரன். ‘குமரா’ தான் முருகனுக்கு உகந்த பீஜாக்ஷர மந்திரமாகும். இதில் ‘கு’ என்றால் இருள் நீக்குதல் என்று பொருள். ‘ரு’ என்றால் ஒளி ஏற்றுதல். இருள் நீக்கி ஒளி ஏற்றுபவர் என்ற காரணத்தாலேயே குருவுக்கும் பெருமை வந்தது.
/
/
இறைவனுக்கு எவ்வளவோ நாமங்கள். அவைகளின் பெயராலே ஜெயம் என்று நாம் எழுதுவதில்லை அதாவது கிர���ஷ்ண ஜெயம், சிவ ஜெயம், நரசிம்ம ஜெயம் என்று… ஆனால் ‘ராம ஜெயம்’ என்று மட்டும் எழுதுகிறோம்.
இங்கே தான் சூட்சுமம் உள்ளது. ராமஜெயம் எனும் போதும் மறைமுகமாக தர்மம் ஜெயிக்கட்டும் என்று நாம் கூறுவதாக உட்பொருள். அதாவது ஒவ்வொரு முறை ராமஜெயம் எனும் போதும் தர்மம் ஜெயிக்கட்டும் தர்மம் புறக்கட்டும் என்று நாம் கூறுகிறோமாம். ஏனென்றால் ராமனால் தான் தர்மம் நிலைபெற்றது. ராமனுக்கு தான் தர்மத்தின் தலைவன் என்று பெயர்.
/
/
வலியும், வேதனையும் தான் அவர்களில் யாராவது ஒருவர் வந்து காப்பாற்றி கரை சேர்க்க மாட்டாரா என்று எண்ண வைக்கிறது. பகவான் ரமணர் இருந்த வரையில் அவரை தரிசிப்பவரின் கர்மங்களை எல்லாம் பார்வையாலேயே கரைத்தார்.
/
/
மிச்சம் மீதியைத் தான் எடுத்துக்கொண்டு அவர் களையும் பாவச் சிறையில் இருந்து விடுவித்தார்! பின் அவரையும் புற்றுநோய் தாக்கிய போது தான் அவர் பிறர் கர்மாக்களை எந்த அளவுக்கு வாங்கிக்கொண்டிருந்தார் என்பது வெளி உலகிற்கும் தெரிய வந்தது.
/
/
ஒரு இரும்பு ஆயுதத்தை செப்பனிட அதற்கு சமமான இரும்பு உபகரணங்களால் தான் முடியும். கல்லாலோ, மரத்தாலோ வேறு ஒன்றாலோ அந்த ஆயுதத்தை எதுவுமே செய்ய முடியாது. அதே போல அலைபாயும் எண்ணமாகிய சப்தங்களை இன்னொரு வலிமையான சப்தத்தால்தான் அமைதிப்படுத்த முடியும். அப்படி ஒரு மகத்தான சப்தமாக கண்டறிந்து சொல்லப்பட்டதே ராம நாமம்!
/
/
‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்று சொன்ன வரையில் ஒரு குருவின் சீடனாக ஆகிட முடியாத ராமானுஜர், ‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்று சொன்ன மாத்திரத்தில் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சீடனாக அவர் சேர்ந்ததை விட அதன் பின் அவர் நடந்துகொண்டது தான் இந்த உலகம் இன்றளவும் ஆச்சரியத்தோடு கூறிடும் விஷயமாகும்.
/
/
உலக உயிரினங்களில் மனித இனத்துக்கு மேலான ஒன்று இருந்திட வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். வேதங்களின் கருத்துப்படி புல்லாகி, பூண்டாகி, மரமாகி பின் புழு பூச்சியாகி, பாம்பாகி, பறவையாகி அதற்கும் பின் விலங்காகி இறுதியாய் மனிதனாகி என்று வருகின்றது. இந்த மனிதப் பிறப்பின் அடுத்த கட்டமே தேவனாதல்!
/
/
மனித சமுதாயத்தை அழிப்பதற்கு அணுகுண்டுகளோ இல்லை பிற ஆயுதங்களோ தேவையில்லை. அனைவரும் நிர்வாணமாக வாழ வேண்டும் என்று அறிவித்தாலே போதும். மிக அதிகபட்சம் 200 கோடி பேர் கொண்ட இன்றைய ஜனத்தொகை நூறு ஆண்டுகளில் இருபது முப்பது கோடிக்கு சுருங்கிவிடும்.
அதன் பின் மனித சமுதாயம் தான் உலகின் மிகக் குறைந்த அளவிலான உயிரினமாக இருக்கும். நிர்வாணத்துக்கு அந்த அளவுக்கு மனதை அழிக்கும் சக்தி உண்டு.
/
/
தெய்வ உருவங்கள் ஐந்து விதமானவை. ஐம்பொன், கருங்கல், மரம், சுதை, நவபாஷாணம் என்பவை தான் அவை. இதில் மரத்தால் ஆன உருவங்கள் சில கோவில்களில் மட்டுமே உள்ளன.
திருநெல்வேலி கருங்குளம், சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் போன்ற ஊர்களில் மரரூபங்களே வழிபாட்டிலுள்ளன.
‘சுதை ரூபங்கள்’, அழகர் கோவில், கூடலழகர் கோவில், ஸ்ரீரங்கம், சுருட்டப்பள்ளி என்று ஏராளமான ஆலயங்களில் உள்ளது. சுதை என்பது சுண்ணாம்புடன் சேர்ந்த ஒரு வித மண் கலவை.
கருங்கல் ரூபங்களுக்கும் பஞ்சமில்லை.
நவபாஷாணத்தால் ஆன ரூபமானது பழனியிலும், சின்ன தாராபுரத்திலும், வெள்ளலூர் (கோவை), சேலம் கந்தாஸ்ரமம் ஆகிய நான்கு இடங்களிலும் உள்ளது. இதில் 100 சதம் நவபாஷாணத்தால் ஆனது பழனி முருகன் சிலை மட்டுமே.
நவபாஷாண சிலைகள் அபிஷேகத்தக்குரியவை. இதனால் அபிஷேகப் பொருட்கள் மருத்துவ குணம் கொண்டு வியாதியைத் தீர்க்கின்றன. அடுத்து கோளாதிக்கங்களை பெருமளவு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளன. இதனால் பிரளயம், பூகம்பம் போன்றவை தடுக்கப்படுகிறது.
/
/
சித்தனாக மாறிவிட்டால் பிறவித்தளை தீர்ந்துவிடும். எனவே நீங்கள் ஒரு சித்தரை எங்காவது பார்க்கிறீர்கள் என்றால் பெரும் பாவங்கள் செய்திடாத ஏழு தலைமுறை கொண்ட ஒரு வரை பார்க்கிறீர்கள் என்று பொருள்.
இப்படி சித்தனாகி விட்டவர்கள் தங்கள் தவ சக்தியாலே நம் பாவங்களையும் களைகின்றவர்களாக இருப்பார்கள். தங்கள் பார்வையாலேயே ‘நேத்ர தீட்சை’ என்னும் பார்வை வருடலாலேயே நம் உடம்பைச் சூழ்ந்திருக்கும் தீவினைகளை தங்கள் வசம் இழுத்துக்கொண்டு விடுவார்கள்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த பகவான் ரமணர் முதல் சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகி ராம்சரத்குமார் போன்றவர்கள் தங்கள் பக்தர்களை இப்படித்தான் ரட்சித்தனர்.
/
/
ஆள் செய்யாததை நாள் செய்யும், நாள் செய்யாததையும் கோள் செய்யும், கோள் செய்யாததையும் வேள் செய்யும் அதாவது கந்தவேள்ங்கற முருகன்.
/
/
அமிர்தமான ‘சுக்கில சுரோணிதம்’ கடல் முத்து போல உதித்து உருவமாகிறது. வாயு அதை மதில் போல் வந்து மூடிக்கொள்கிறது. பின் பிராண வாயு எனும் உயிர் உள் புகுகிறது. அதைத் தொடர்ந்து உதான வாயு உள் புகுந்து உருவமாகிய பிண்டத்துக்கு உணவு தருகிறது. இவ்வேளையில் தான் வினைப் பயன்களும் வந்து பதிவாகின்றன.
முதல் மாதம் உயிர் பிண்டம்
இரண்டாம் மாதம் தலை, முதுகு
மூன்றாம் மாதம் இடுப்பு, கை கால்கள்
நான்காம் மாதம் மூக்கு
ஐந்தாம் மாதம் வாய், நாக்கு, காது, கண்
ஆறாம் மாதம் நகங்கள்
ஏழில் தலை முடி, எலும்பு, நரம்பு
எட்டாம் மாதம் தாய்ச்சத்து உடலில் சேரும்
ஒன்பதாம் மாதம் மன அமைப்பு புள்ளி போல உருவாகி கரம் கூப்பிக்கொள்ளும்.
பத்தாம் மாதம் அபான வாயு கருப்பைக்குள் மிகுந்து அது உந்தித்தள்ள யோனியின் வாயை பிளந்துகொண்டு வெளியே வரும். வெளிக்காற்றை அது சுவாசிக்கத் தொடங்கும் நொடியே அதன் பிறந்த நேரமாகும்.
இந்த நொடி முதல் உலக மாயை அதைப் பிடித்துக்கொண்டுவிடும். இந்த கருத்தை ஊர்வசி பஞ்சரத்னம் எனும் நூலில் மிக விரிவாகப் பார்க்க முடிகிறது. விஞ்ஞானம் கருவிகளின் துணை கொண்டு வெகு கால ஆராய்ச்சியில் கண்டறிந்ததை ஒரு சிறு தவத்தின் மூலம் மட்டுமே கண்டறிந்த நம் ஞானிகள் எத்தனை மேலானவர்கள்!
/
/
சித்தம் பரம் என்பதே சிதம்பரம் என்று ஆனது. இது பஞ்ச பூத தலங்களிலேயே ஆகாயத்துக்கான தலமாகும்.
/
/
திருவானைக்காவல் நீருக்கான தலம், காளஹஸ்தி காற்றுக்கான தலம், திருவண்ணாமலை நெருப்புக்கான தலம், காஞ்சிபுரம் நிலத்துக்கான தலம். அந்த வகையில் சிதம்பரம் ஆகாயத்துக்கான தலமாகும். சன்னதியிலேயே ஒரு திரையை விலக்கி இது தான் சிதம்பர ரகசியம் என்று ஆகாயத்தை காட்டுவார்கள்.
/
/
காற்றும் நெருப்பும் ஒண்ணு சேர்ந்துட்டா நீர் உண்டாகி மழை வந்துடுது. இந்த மழை பெய்யவும் ஆகாயம் வேணும். ஆக மத்த நாலு பூதத்துக்குமே பிரதானம் ஆகாயம் தான்.
ஒரு ஆச்சரியம் என்னன்னா இந்த நாலு பூதமும் இல்லேன்னா ஆகாயம்னு ஒண்ணு இருக்கறதையே நாம உணர முடியாது. ஆக நிதர்சனமான நான்கு பூதங்களும் தான் வடிவமில்லாத ஆகாயத்தை உணர காரணமா இருக்கு. இது தான் ரகசியம்!
/
/
தமிழ்நாட்டில் சென்னை வடபழனியில் உள்ள தாமரை நூலகம் பெரும்பாலான சித்தர் நூல்களை வெளியிட்டுள்ளது.
/
/
இந்த கிரியா யோகத்தில் ஒரு உச்ச நிலையை அடையும்போது நம் உடம்பில் உள்ள ஆறு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் ஆகியவை இயங்கும்.
இது இயங்கும்போது விண்ணில் உள்ள 12 ராசிகளுடன் தொடர்பு ஏற்படும்.
/
/
இந்த பூமி ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் உள்ள பூஜையறையைப் போன்றது பாரததேசம்.