ஊரடங்கு சற்று தளர்வு செய்த சமயம். புத்தகக் கடைக்குச் சென்று ஏதேனும் நல்ல வரலாற்று புதினம் வாங்கலாம் என்று எண்ணி, சற்று தயக்கத்துடன் இப்புத்தகங்களை வாங்கினேன். ஏன் அந்த தயக்கம்? பெரும்பாலும் சோழர் என்றவுடனே நினைவுக்கு வருபவர்கள் இராசராசரும் கரிகால சோழனும் தான் நாம் இராசேந்திரனைப் பற்றி அறிந்தது மிகச்சொற்பமே. நான்கு பாகங்களை 2312 பக்கங்களை உள்ளடக்கிய இப்புதினத்தை முழுமையாக வாசித்து முடித்த பொழுது, மாமன்னர் இராசேந்திரன் எந்தவகையிலும் சளைத்தவர் அல்ல என்னும் எண்ணமே மேலோங்குகிறது. சிலசமயம் இராசராசரை விடவும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளாரோ என்ற ஐயப்பாடு எழுகிறது. இராசராசரின் மகனான இராசேந்திர சோழர் ,அவர் தந்தையின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றி அதோடுநில்லாது எவரும் யூகிக்க இயலாத வண்ணம் பல வியக்கத்தக்க படையெடுப்புகள் மூலம் தன் தந்தையையே விஞ்சுகிறார் மகன்.
எழுத்துச்சித்தர் #பாலகுமாரன் இப்புதினத்தை இயற்றிய நிலையும், தான் அடைந்த சிரமங்களுக்கும் பிரதிபலன் உண்டு.அதுவே இப்புதினம் எனலாம். ஆசிரியர் வாசகர்களை மாமன்னர் இராசேந்திரனோடு ஒன்பது இலட்சம் படைவீரர்களோடு ஒருவராக நம்மையும் தஞ்சையில் தொடங்கி, கங்கைக்கரை தொட்டு கடற்பயணம் மேற்கொண்டு கடாரம் வரை அழைத்துச் சென்றுள்ளார். இப்புதினத்தின் வியப்பு யாதெனில் யுத்தத்திற்கு ஆயத்தமாவதில் தொடங்கி யுத்தம் முடியும் வரை என்னென்ன நிகழும், யாரெல்லாம் பங்கு பெற்றிருப்பார்கள் , யுத்தத்தின் முடிவு எத்தகையது அதன் தாக்கம் எத்தகையது யுத்தத்திற்கு பின்பு மக்களின் நிலையாது என்பதையும், நாம் சோழ மக்களுள் ஒருவராக வாழ்ந்து, நடப்பதை வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும் அதே அனுபவத்தைத் தான் பாலகுமாரன் அளித்துள்ளார்.
மாமன்னர் கலையில் மிக ஆர்வம் கொண்டவர் என்பதற்கு #கங்கைகொண்டசோழபுரமே சாட்சி.
இராசராசர் பல நேரத்தில் சமூகநீதி காவலனாகவே காட்சியளிக்கிறார், எவரையும் வேற்றுமை பாராட்டாது மக்களின் அரசனாக திகழ்ந்து தன் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்.
அக்காலத்தில் பெண்களின் நிலை மிகவும் கொடுமையாகவும் இழிவானதாகவும் துன்பம் தருவதாகவும் வெளியில் சொல்லமுடியாத வகையில் இருந்தது, நிச்சயமாக வாசிப்பவர்கள் மத்தியில் மிக வேதனையை அளித்திருக்கும். ஆசிரியர் மாமன்னருக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார் முக்கியமாக #அருண்மொழி #அரையன் #வீரமாமதேவி இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.
மாமன்னர்களின் வாழ்வு, திருமணங்கள்,போர்கள், அரசியல், ஒற்றர்படைகள் தந்திரங்கள்,வணிகம், படையெடுப்பு, சமய ஈடுபாடு,தெய்வ வழிபாடு பல்வேறு காலகட்டத்தில் மக்களின் நிலை என பல்வேறு விடயங்களை படம்போட்டு காட்டியுள்ளார்.
இப்புதித்தின் மூலம் அறிந்து கொண்ட முக்கியமான விடயம் போர் என்பது இரு அரசர்களுக்கு இடையில் மட்டும் நடப்பதன்று, அது இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது. சேரர்கள் பாண்டியர்கள் ஒடுக்கி சாளுக்கியர்கள் ஒட்டர்களை அடக்கி கங்கம் வங்கத்தை நொறுக்கி ஶ்ரீவிஜயம், ரோஹணம்,கடாரம் கம்போஜத்தை அழித்து வெற்றிவாகை சூடிய மாமன்னர்.
தமிழன் கடற்படையில் சிறந்து விளங்கியவன் என்பதற்கு இராசேந்திரே உதாரணம். எவரும் அடைய இயலாத வலுவான கடற்படை அமைத்து கடல்கடந்து பல நாடுகளை கைப்பற்றி வணிகம் செய்து அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய இராசேந்திர சோழன் போற்றப்பட வேண்டியவனே. வாழ்த்தப்பட வேண்டியவனே கொண்டாடப்பட வேண்டியவனே. இராசேந்திரரின் இறுதிக்காலம் இராசராசரை ஒற்று உள்ளதாக வாசகர்கள் உணர்வார்கள்.
தமிழருக்கு தமிழரே எதிரி, இராசேந்திரர் மறைவுக்கு சுமார 250 ஆண்டுகளுக்கு பிறகு சோழதேசம், #பாண்டிய மன்னர்களால் கைப்பற்றப்பட்டது. தமிழர்கள் ஒற்றுமையாய் இருந்திருந்தால் இந்தியநாட்டை மட்டுமின்றி நம் அண்டை நாடுகளையும் ஆண்டிருப்பார்களோ ????? ஒருமாத காலமாக நீண்ட நெடுதூரம் பல்வேறு இடர்களை கலைந்து இடைவிடாது சோழர்களோடே கூடிய பயணம் முற்றியது.
#கங்கை கொண்ட சோழன்
1முதல் நான்கு தொகுதிகள்
ஆசிரியர் : பாலகுமாரன்
கதாபாத்திரங்கள்: இராஜேந்திர சோழர், அருண்மொழி பட்டன், அரையன் இராஜராஜன், கங்கே யாதவ், இராஜ நரேந்திரன்,வீரமாதேவி, பரவை நாச்சியார், குந்தவை ((இராஜேந்திர சோழரின் தங்கை)), அம்மங்கா தேவி, சீராளன், ஜெயசிம்மன்...
கதையின் வரலாற்று களங்கள்: தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், வேங்கி-கீழைச்சாளுக்கியம், மான்யகேடம், முயங்கி, கல்யாணி-மேலைச்சாளுக்கியர், ஒட்டர் தேசம் ((ஒடிசா)), உத்திரலாடம், தட்சிணலாடம், தண்டபுத்தி, கோசலம், வங்கம்-தற்போதைய மேற்கு வங்கத்தின் பகுதிகள். மற்றும்..
ஸ்ரீவிஜயம், கடாரம், காம்போஜம், பகுதிகள்.
பக்கங்கள்: சுமார் 2300 பக்கங்கள் ((நான்கு தொகுதிகள் சேர்த்து))
"கங்கை கொண்டான்"
------------------------------------------
1 முதல் 3 தொகுதிகள்.
-------------------------------------------
இராஜேந்திர சோழரின் ஆட்சிக்காலம்..பாண்டியர்கள், ஈழத்து அரசர்கள் அடக்கப்பட்டு அடங்கிக்கிடக்கிறார்கள். சேர இளவரசான வீரகேரளன் என்பான், சோழர்களின் அன்புக்குரியவனும் இராஜேந்திர சோழரின் மகனுமான "சோழ கேரளனின்"அன்பான ஆட்சியில் அமைதியாக சோழநாட்டுக்கு கப்பம் கட்டும் அரசாக உள்ளது. அதனால் சோழநாட்டின் தென்பகுதி சோழர்களுக்கு அடங்கிய பகுதியாக உள்ளது.
இப்போது இராஜேந்திர சோழருக்கு பிரச்சினை வடக்கே மேலைச்சாளுக்கியத்திலிருந்து வருகிறது..
கீழைச்சாளுக்கிய மன்னன் விமாலாதித்தன் இராஜேந்திர சோழரின் தங்கை குந்தவையை காதலித்து மணம் புரிந்து கொள்கிறான். அவர்களுக்கு இராஜராஜ நரேந்திரன் என்ற மகன் பிறக்கிறான். இதை பொறுத்துக்கொள்ள முடியாத மேலைச்சாளுக்கிய மன்னரான ஜெயசிம்மனும் அவன தளபதி கங்கே யாதவும் இன்னொரு மேலைச்சாளுக்கிய பெண்ணை விமாலாதித்தனுக்கு மணம்முடித்து, அவர்களுக்கு பிறந்த விஷ்ணுவர்தன விஜயாதித்தனை கீழைச்சாளுக்கிய இளவரசனாக்கி, கீழைச்சாளுக்கியமும், மேலைச்சாளுக்கியமும் இந்த உறவினால் ஒன்றானதும், சோழநாட்டை, தொண்டை நாடு, நடுநாடு வழியாக தாக்கி கைப்பற்றலாம் என மேலைச்சாளுக்கியத்து ஜெயசிம்மன் திட்டமிடுகிறான்.
விமாலாதித்தனின் இந்த இரண்டாவது திருமணத்திற்கும், விஷ்ணுவர்தன விஜயாதித்தனை இளவரசனாக்குவதற்கும், குந்தவையின் அடாத செயல்களும் ஒரு காரணமாக அமைகிறது. இதன் விளைவாக குந்தவையும் அவள் மகன் இராஜராஜ நரேந்திரனும் கீழைச்சாளுக்கியத்திலிருந்து இராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியால் தந்திரமாக அழைத்து வரப்பட்டு இராஜேந்திரரிடம் தஞ்சமடைகிறார்கள்.
அவர்கள் வருகைக்கு பிறகு இராஜேந்திர சோழர் தன் மருமகனான இராஜராஜ நரேந்திரனை மேலைச்சாளுக்கியத்தின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றவும்,,மேலைச்சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன்,,விமலாதித்தன் இரண்டாவது திருமணத்தில் பிறந்த விஷ்ணுவர்தன விஜயாதித்தன்,தளபதி கங்கே யாதவ் ஆகியோர்களை கீழைச்சாளுக்கியத்திலிருந்து விரட்டி தன் மருமகனை அங்கே இளவரசனாக்கவும் வேண்டி, காலாட்படை,,குதிரைப்படை, யானைப்படை, இடங்கை, வலங்கைப்படை, ஆகியன அடங்கிய சுமார் ஒன்பது இலட்சம் வீரர்களோடு தஞ்சையிலிருந்து புறப்பட்டு மேலைச்சாளுக்கியம் நோக்கி படையெடுக்கிறார்.
இந்தப்பெரும் படையில் சோணாட்டு அருண்மொழிபட்டன்,அரையன் ராஜராஜன் மற்றும் இரேஜேந்திர சோழரின் மகன்களான இராஜராஜாதித்தன், வீர ராஜேந்திரன் மற்றும் சோழ கேரளன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இந்தப்பெரும்படை வந்துகொண்டிருக்கும்போதே விமலாதித்தன் நோயுற்று இறந்துவிடுகிறான். சோணாட்டுப்படைகளால் மேலைச்சாளுக்கிய கிராமங்கள் தீக்கிறையாக்கப்படுகின்றனர்.இந்தப்பெரும் போரில் இராஜராஜ பிரம்மராயர், மிலாடுடையார், மற்றும் உத்தமசோழர் கோன் என்ற மூன்று சோணாட்டு தளபதிகளும் இராஜேந்திரரின் மகன் சோழகேரளனும் வீரமரணம் அடைகிறார்கள். ஜெயசிம்மன், விஷ்ணுவர்தன விஜயாதித்தன், மற்றும் கங்கே யாதவ் மேலைச்சாளுக்கியத்திலிருந்து தோல்வியுற்று பின்வாங்கி வடக்கே தஞ்சமடைகிறார்கள்.
பின்னர் இராஜேந்திர சோழர் மேலைச்சாளுக்கியத்தை வெற்றி கொண்டால் மட்டும் போதாது, அவர்களுக்கு துணை நிற்கிற, கங்கே யாதவ் படை திரட்ட அடைக்கலம் கேட்டுள்ள ஒட்ட தேசத்து இந்திர தத்தன், உத்திரலாடம்,தட்சிணலாடம், கோசலம், தண்டபுக்தி மற்றும் வங்கதேசங்களை வெற்றி கொள்கிறார்.
ஒரு பரிசோதனை முயற்சியாக வங்கதேசத்து மகிபாலனின் ஒருங்கிணைந்த படைகளைஅருண்மொழி பட்டனின் சிறிய கடற்படை மூலம் கங்கையின் முகத்துவாரத்திலிருந்து பின்பக்கமாகவும் , அரையன் இராஜராஜனின் தரைப்படைமூலம் முன்பக்கமாகவும் கிடுக்கிப்பிடியாக தாக்கி அழிக்கிறார்.
கங்கையிலிருந்து குடம் குடமாக தண்ணீரை கடற்படைமூலமும், உத்திரலாடத்து மகிபாலன், தண்டபுக்தி தனபாலன், தட்சிணலாடத்து ரணசூரன் ஆகிய அரசர்கள் தலையில் வைத்து எடுத்துவரச்செய்து சோழநாட்டு சிவன் கோயில்கள் அனைத்திற்கும், தான் எழுப்பிக்கொண்டிருக்கும் கங்கை கொண்ட சோழபுர பெருவுடையாருக்கும் அபிஷேகம் செய்கிறார். கங்கை கொண்ட சோழபுரத்திலேயே கங்கை நீரால் "சோழ கங்கம்" எனும் ஏரியை அமைத்து தன் சோணாட்டுமக்களை குளிர்விக்கிறார்.
கீழைச்சாளுக்கியத்தில் தன் மருமகன் இராஜராஜ நரேந்திரனுக்கு தன் மகள் அம்மங்காதேவியை திருமணம் செய்து கொடுத்து அவனை அங்கே அரசனாக்கி, மீண்டும் மேலைச்சாளுக்கியம் வாலாட்டாதாபடி அரையன் இராஜராஜன் தலைமையில் சோழர்படைப்பிரிவை அங்கே நிறுவுகிறார்.
இச்செயல்களால் உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழர், "கங்கை கொண்ட சோழராக" வரலாற்றில் அழியாப்புகழ் பெறுகிறார்.
2."கடாரம் கொண்டான்"
-------------------------------------------
நான்காவது தொகுதி..
_________________________
சீன தேசத்திற்கும், சோணாட்டிற்கும் இடையில் உள்ளது ஸ்ரீ விஜயம் எனும் தீவு. சாவகத்தீவு வரை நீண்டிருக்கும் இப்பகுதியை ஆண்டுவருபவன் சங்கரராம விஜயோத்துங்கன் எனும் ஒரு கொடுங்கோலன். சோணாட்டு வணிக மரக்கலன்களும், சீன தேசத்து மரக்கலன்களும் ஸ்ரீ விஜயத்தை பொது இடமாக கொண்டு பண்ட மாற்றி வணிகம் செய்வது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் ஒன்றாகும். இதன்காரணமாக இரு நாட்டின் பொருளாதாரமும் மேம்பட்டதோடு, கலாசார பரிமாற்றமும் நடைபெற்று சிறப்படைந்தது.
இது ஸ்ரீ விஜயத்து புத்த பிட்சுகளுக்கு பிடிக்கவில்லை. சோழ தேச சைவ வணிகர்கள் ஸ்ரீ விஜயத்தில் வியாபாரம் செய்து கொழிப்பதா? என்ற தீய நோக்கினால் ஸ்ரீ விஜயத்து மன்னனை தூண்டி விடுகிறார்கள். இதனால் அங்குள்ளவர்கள் ஸ்ரீவிஜயத்தின் மன்னன் சங்கரராம விஜயோத்துங்கனின் ஆணையின்படி, சோழ வணிகர்களின் மரக்கலன்களை கொள்ளையடிப்பது, தீயிட்டு அழிப்பது, இது மட்டுமல்லாது சோழ வணிகர்களின் உள்ளங்கையை சீவி, ஒட்டவைத்து கட்டிப்போட்டு 'போ..சிவலிங்கத்தை கும்பிட்டுக்கொண்டே இரு. ஸ்ரீ விஜயம் வராதே' என கொடூரமாக நடத்துகிறார்கள். சோழநாட்டு வணிகர்கள் படுகாயத்துடன் இராஜேந்திர சோழரிடம் முறையிட்டு கதறி அழுகிறார்கள்.
கொந்தளித்து எழுகிறார் இராஜேந்திரசோழர். 'சோழன் எங்கே கடல் கடந்து வரப்போகிறான் ' என்று இறுமாப்புடன் இருக்கும் ஸ்ரீ விஜயத்து அரசன் சங்கரராம விஜயோத்துங்கனை, வங்கதேசம்,,இலங்கையின் முல்லைத்தீவு, சேர தேசத்து நாவாய்கள், மற்றும் நாகைப்பட்டிணத்தில் உருவாக்கப்பட்டவை என 160 நாவாய்களோடும், காம்போஜ மன்னன் சூரிய வர்மன் மற்றும் சாவகத்தீவின் மன்னன் ஏரலங்கன் ஆகியோரின் உதவியோடும் ஸ்ரீ விஜயத்துக்கு படையெடுத்துச்செல்கிறார்.
ஸ்ரீ விஜயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடாரம் தீபகற்ப்ப பகுதியை சேர்ந்த தக்கோலம், மாடமாலிங்கம், மாயிருடிலிங்கம், இலங்கா சோகம் ஆகிய தீபகற்பப் பகுதிகளை தாக்கி அழிக்கிறார். இறுதியில் ஸ்ரீ விஜயத்தையும் வெற்றி கொள்கிறார்.போரில் தோற்றுப்போன ஸ்ரீவிஜயத்தின் அரசன் சங்கரராம விஜயோத்துங்கன் ஜலசமாதி அடைகிறான்.
வருங்காலங்களில் ஸ்ரீ விஜயத்தில் சோழ வணிகர்கள் கொடுமைபடுத்தப்படாமல் இருக்கவும், சீன-சோழ வணிகம் மேம்படவும், சோணாட்டின் புவனராஜன் தலைமையில் நான்காயிரம் வீரர்கள் அடங்கிய சோழப்படை ஸ்ரீ விஜயத்தில் நிறுவப்படுகிறது.
மாமன்னர் இராஜேந்திர சோழர் பாரத கண்டத்தை விட்டு, கடற்படை அமைத்து விஜயத்தையும்-கடாரத்தையும் வெற்றிகொண்டதால், அவர் சரித்திராத்தில் "கடாரம் கொண்டான்" என்ற அழியா கீர்த்தியை பெறுகிறார்.
3.பின்னாளில்.
--------------------------
*"கங்கை கொண்டான்-கடாரம் கொண்டான்" என்ற கீர்த்திப்பெயர் பெற்ற இராஜேந்திர சோழர், இந்த இரு பெரும் போர்களுக்குப்பின் உடல் தளர்ச்சி அடைந்து நோய்வாய்படுகிறார். தன் மகன் இராஜாதிராஜ சோழனிடம் அரசுரிமையை ஒப்படைத்து விட்டு,காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள "பிரம்மதேயம்" என்ற இடத்தில் தனது 82-ஆம் வயதில் மரணமடைகிறார்.அவரது மனைவி வீரமாதேவி அவரோடு உடன்கட்டை ஏறுகிறார்.
* இராஜேந்திர சோழர் ஆட்சிக்காலத்திலேயே சோழர் தலைநகரம், நிர்வாக வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் "கங்கை கொண்ட சோழபுரத்திற்கு"மாற்றப்படுகிறது. சோழர்களின் முன்னாள் தலைநகர் பழையாறையைப்போன்றே, தஞ்சையும் ஒரு புறக்கணிக்கப்பட்ட நகராகிறது.
*இராஜேந்திர சோழருக்குப்பின் அரசரான அவரது மூத்த மகன் இராஜாதிராஜனுக்கும் , அவரது இளவல்களான வீரராஜேந்திரன், மற்றும் இளவல் இராஜேந்திரனுக்கும் நேரடி ஆண்வாரிசு இல்லாததால், கீழைச்சாளுக்கிய மன்னரான இராஜராஜ நரேந்திரன்-அம்மங்காதேவிக்கும் பிறக்கும் மகன் "குலோத்துங்க சோழன்" என்ற பெயரோடு அரியணை எறுகிறான்.
#முடிவாக:
ஜெட் விமானங்கள், அதிவேக இரயில்கள், விரைவுப் பேருந்துகள் -என்றவிதத்தில் பயணங்கள் மிகவும் எளிதாகி விட்ட இக்காலகட்டத்திலேயே நமக்கு ஊர் விட்டு ஊர் செல்வது என்பது சற்று சிரமமாக,மலைப்பாக தெரிகிறது.
இவைஏதுமில்லாத 10-11 ஆம் நூற்றாண்டில் ... தஞ்சையிலிருந்து, ((மேலைச்சாளூக்கியம், ஒட்டதேசம் வழியாக)) கங்கை நதிதீரம் வரையிலும் , பின்னர் 160 மிகப்பெரிய நாவாய்கள் மூலமாக கடாரம், ஸ்ரீவிஜயம், சாவகம் போன்ற கடல்கடந்த தேசங்களுக்கு, குதிரைப்படை, காலாட்படை,,ஆனைப்படை, தேர்ப்படை,கடற்படை என சுமார் ஒன்பது லட்சம் பேர்கள் கொண்ட படையினை இராஜேந்திரசோழர் வழிநடத்திச்சென்றுள்ளார் என்பதை நினைக்கும்போது,அவர் ஒரு மன்னராக மட்டுமல்லாது ஒரு "சூப்பர் ஹீரோவாக"வும் இருந்துள்ளார் என்பது நமக்கு பிரமிக்கவைக்கிறது.
இதை வெற்றிகரமாக முடிப்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பட்ட வலிகள் இன்னும் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.
இந்த புதினத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் தவறாமல் ஒரு கருத்தை சொல்கிறார்கள் "சரித்திரத்தின் மிகச்சிறப்பான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று. இராஜேந்திர சோழரின் ஆட்சிக்காலம் அதை உறுதிப்படுத்துகிறது..!!!
இராஜேந்திர சோழர் போரில் மட்டுமல்ல, சிறந்த நிர்வாக கட்டமைப்பிலும் சிறந்தவர் என்பதும் இந்தபுதினத்தில் விளக்கப்பட்டுள்ளது. உடையார் புதினத்தை போலவே, அரச குடும்பத்தவர் மட்டுமல்லாது, பொதுமக்களான விவசாயிகள்,வணிகர்கள் ஆகியோர் பார்வையிலும் சோணாடு எவ்வளவு செல்வச்சிறப்போடு அன்றைய காலகட்டங்களில் விளங்கியது என்பதும் புதினத்தின் பலபகுதிகளில் பொதுமக்கள் பேசிக்கொள்வது போன்று, விளக்கப்பட்டுள்ளது
#என் கருத்து:
--------------------------
#நிறைகள்..
-----------------------
ஒரு புதினத்தை, அதை படிப்பவர்களை கவனம் சிதறாமல் படிக்கவைப்பது ஒரு சிறந்த விஷயம். ஆனால் படிப்பவர்களை அந்தப்புதினத்தோடும்-புதினம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் அந்தக்கதாபாத்திரங்களுடனே பயணிக்கவைப்பதென்பது லேசுப்பட்ட ஒன்றல்ல. இதை சிறப்பாக செய்தவர்கள்,என் வரையில் அமரர் கல்கியும் எழுத்துச்சித்தர் பாலகுமாரனும்தான்.
ஆசிரியரது முந்தைய படைப்பான,"உடையார்" புதினத்தில் மாமன்னர் உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவர் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பட்ட பாடுகளை, வலிகளை எழுத்தால் செதுக்கினார். இந்த புதினத்தில் அவரது மகன் இராஜேந்திர சோழனின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய இரண்டு படையெடுப்புகளை அற்புதமாக வரலாற்றுப்புனைவாக விவரித்துள்ளார்.
பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் போர்க்களங்களை விவரிக்கும்போது இறுதி யுத்தக்காட்சிகளையே விவரித்து எழுதுவார்கள். "படைகள் மோதின..ஆனைகள் சிதறி ஓடின..இரத்த ஆறு ஓடியது" என்ற வகையில் அவர்களது போர்க்களக்காட்சிகள் இருக்கும்.
ஆனால்...ஆசிரியர் போர் நடத்துவதற்கு முந்தைய அதாவது Pre war zone பற்றி அற்புதமாக விளக்கி தந்துள்ளார். ..போர் வீரர்களுக்கு தேவையான ஆயுத தயாரிப்பு,எத்தனை ஆயுதங்கள், தேவைப்படும் என்பது பற்றிய விபரங்கள், தேர்களை செப்பனிட தச்சர்கள், படைகளோடு செல்லும் மருத்துவக்குழு,காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து மூலிகைகள், படைகளுக்கு முன்னேசென்று பாதையை சமன்படுத்தும் காடுவெட்டிகள், பறை அறிவிப்பவர்கள், ஒட்டு மொத்த படை வீரர்களுக்கு தேவையான அரிசி, மாமிச, பிற உணவு வகைகள், படைகள் எங்கெங்கு இரவு தங்குவது, எப்போது தாக்குவது போன்றவைகள், எதிரிப்படை நடமாட்டத்தை ஒற்றரிவது,போரில் வீரன் வீரமரணம் அடைந்துவிட்டால், அவன் குடும்பத்திற்கு வழங்கப்படும் அரசாங்க சலுகைகள், கருணைத்தொகைகள் ...!!!
இதைத்தவிர போரில் வெற்றிபெற்ற தேசங்களில் கைப்பற்றப்பட்ட தங்கச்சிலைகளை உருக்கி பொற்காசாக்குவது, போரில் கொள்ளையிட்ட பொருள்களை அனைத்துத்தரப்பினருக்கும் பங்குவைப்பது...!!!
ஆகியவற்றையெல்லாம் ஆசிரியர் விளக்குகிறவிதம் இருக்கிறதே.....அடடா...பாராட்ட வார்த்தைகளே இல்லை. புதினத்தை படிக்கும் நம்மை சோழநாட்டின் போர்ப்படைகளோடு அழைத்துச்சென்றுவிடுகிறார்.
#சில குறைகள்
------------------------------
*நிறைய கதாபாத்திரங்கள், போர்க்களத்திலோ,அரண்மணையிலோ, கோவிலிலோ பேசிக்கொள்ளும்போது, யாரோடு யார் பேசுகிறார் என்பதே தெரியவில்லை..."இராஜேந்திர சோழர் கேட்டார்.." "..என அரையன் இராஜராஜன் தெரிவித்தார்" என சற்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்.இது பொதுவான குறையாக உள்ளது.
* நமக்கு வாரலாறு தெரிவிப்பது.."இராஜேந்திர சோழரே கங்கை வரை சென்று, அங்கிருந்த மன்னர்களையெல்லாம் வென்று, கங்கை நீரை அவர்கள் தலையில் சுமக்கச்செய்து சோணாட்டிற்கு கொண்டு வந்தார்" என்றும் இதனாலேயே இராஜேந்திர சோழர் "கங்கை கொண்ட சோழர்" என அழைக்கப்பட்டார் என்பதாகும். ஆனால் இப்புதினத்தில் இராஜேந்திர சோழர் கீழைச்சாளுக்கியத்தில் தங்கி, அவருக்குப்பதிலாக அரையன் இராஜராஜன் மற்றும் அருண்மொழி பட்டன் இருவரும்தான் கங்கை வரை சென்று வெல்கிறார்கள் " என குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா? கல்வெட்டு, வரலாற்று ஆதாரங்களுண்டா? அப்படியானால் இராஜேந்திர சோழர் கங்கைக்கே செல்லாமல் தன் சேனாபதிகள் மூலமாக மறைமுக வெற்றியைத்தான் பெற்றார். என்பது போல் இந்த புதினம் எழுதப்பட்டுள்ளது.
*இராஜேந்திர சோழரின் இறுதி நாட்களில் அதாவது அவரது 80-ஆவது அகவையில், ஒரு கன்னிப்பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தால், அவர் இன்னும் பத்து வருடங்கள் உயிரோடு இருப்பார் என்று ஒரு ஜோசியர் கூறியதை ஏற்று, இராஜேந்திரரின் மனைவி வீரமாதேவி ஒரு இளம்பெண்ணை அழைத்துவந்து விடுவதாக புதினத்தின் கடைசி பகுதியில் உள்ளது. இது கதைக்கு தேவைப்படாத ஒன்றாக இருப்பதோடு, மன்னர் இராஜேந்திரரின் புகழை களங்கப்படுத்துவது போலுள்ளது.இதை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத��தில்...
கங்கை கொண்ட சோழன் ...
நம் உள்ளத்தை கொள்ளை கொண்ட சோழன்..!!! இந்த புதினத்தை 'படித்தீர்களா?'என்று கேட்பதைவிட "எத்தனை முறை படித்தீர்கள்' என்று கேட்பது சரியானது...சாலச்சிறந்தது..!!!