மெளனியின் நடை, கவிதை நடை. இவர் கணிதத்தில் பட்டதாரி. தத்துவங்களையும் படித்தவர். இவர் எழுத்தில் ஒரு Metaphysical கேள்வி ஆங்காங்கே வெளிப்படும். மறுவாசிப்பு அவசியமென்று சில சிறுகதைகள் படிக்கும் போது உணருகிறேன்.
மௌனியின் சிறுகதைகள் அவரது எழுத்துத் திறனைப் பற்றியதையும் மனித நிலையின் உள்மன உளைச்சல்களைப் பற்றியதையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகின்றன. தமிழ் நவீன சிறுகதையின் வரலாற்றில் மௌனி எனும் பெயர் தனியாகத் திகழ்வதற்கான முக்கியமான காரணம் அவரது படைப்பளவு அல்ல, படைப்பின் அடர்த்தியும் அசாதாரண உள்வாழ்வியலும் ஆகும். அவர் வாழ்நாளில் வெறும் இருபத்து நான்கு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தாலும், அவற்றின் தாக்கம் தமிழ்ச் சிறுகதையின் சுவடுகளில் நீளமாகப் பதிந்திருக்கிறது. இலக்கிய உற்பத்தியில் எழுத்தாளரின் குரல் பெரும்பாலும் அவரது எழுத்தின் பருமனைப் பொறுத்து மதிப்பிடப்படுவது வழக்கமாயிருந்த போதிலும், மௌனியின் நிகழ்வு அந்த அளவுகோலை முற்றிலும் மாற்றிப் பார்ப்பதாகும். மிகக் குறைந்த எழுத்துப் பொருளிலேயே மனித மனத்தின் இருண்ட நெருக்கடிகள், அடங்காத தனிமையின் நரம்புகள், வெளிக்காட்டப்படாத உள்ளார்ந்த அசைவுகள் போன்றவற்றை மிக நுட்பமாகப் பதிவு செய்ய அவர் முடிந்தது. இதனால் அவர் படைப்புகள் வாசகனை வெளிப்புற உலகின் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, உள்மன தத்துவத்துக்குள் இழுத்துச் செல்கின்றன.
மௌனியின் சிறுகதைகளில் கதையின் அமைப்பைவிட மனப்பதிவுகளே முன்னிலையாகத் தோன்றுகின்றன. இது அவரது எழுத்து ஒரு வகையான உளவியல்–உள்ளார்ந்த நிஜவாதத்தின் (psychological-internal realism) பாணியை காண்பிக்கும். அவருடைய பாத்திரங்கள் பெரும்பாலும் தனிமையில், உரையாடல் குறைவாக, உள்ளார்ந்த எதிர்மறை–நேர்மறை மோதல்களுக்குள் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக, வெளிப்புறச் சம்பவங்கள் மிகக் குறைவு என்பதால், மௌனியின் கதைகள் வாசகனைப் பக்கவாட்டில் நிற்கச் செய்யாமல், கதாபாத்திரங்களின் நரம்பணுக்குள் நேரடியாக இணைத்துவிடுகின்றன. இந்த வகையான கட்டமைப்பு அவர் எழுத்தை ஒரு “உள்ளார்ந்த ஓவியம்” போல மாற்றுகிறது. ஆயினும் இதே தன்மையே மௌனியின் எழுத்தின் குறையாகவும் பார்க்கப்படுகிறது. வெளிச்சமில்லாத அறைக்குள் நடந்துகொண்டிருக்கும் மிகவும் தனிப்பட்ட போராட்டங்களைப் போன்ற அவரது கதைகள், சில வாசகர்களுக்கு விரிவான சமூகப் பரப்புகளைப் பற்றிய பிரதிபலிப்புகளை வழங்காததன் காரணமாக, ஒரு வகையான சுருங்கிய உலகக் கண்ணோட்டமாகத் தோன்றலாம்.
தமிழால் முடியும்
தமிழால் இப்படி எல்லாம் எழுத முடியும், தமிழனால் இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் என்று முப்பது களிலேயே நின்று நிரூபித்த படைப்புகள். இது தமிழுக்கு கிடைத்திருக்கும் மிக பெரிய அரிய நிதியே ஆகும்.
இந்நூல் 24 சிறுகதைகளும் 2 கட்டுரைகளும் கொண்ட முழுத்தொகுப்பாகும்.
மௌனியின் கதைகளை ஒரு சூன்ய மனநிலையில் மட்டுமே வாசிக்கத் தோன்றும் அல்லது வாசிக்க முடியும் என்றே தோன்றுகிறது. மௌனி காட்டும் (அக)உலகம் வித்தியாசமானது.
பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை ஒட்டியும் அதன்பால் தனக்குண்டான மனப்போக்கும் தத்துவ விசாரமுமே இவர்தம் கதைகள்.
இவருடைய கட்டுரைகளுள் ஒன்று "மணிக்கொடி திரு.ராமையா'' வை பற்றியும், மற்றொன்று தனது சொந்த ஊரான செம்மங்குடி யைப் பற்றியுமானது.
நூலின் இறுதியில் வருகின்ற லக்ஷ்மி ஹோம்ஹ்ரோம் அவர்களுடைய மௌனி படைப்புகள் பற்றிய முன்னுரை சிறப்பானது.
True classic
பிராவகத்தில், பல ஜாம்பவான்களை விட ஒரு துளி குறைவு தான். சிறிது கலவையான ஒரு அடையாளம். அசோகமித்ரனின் சாயலையும் ஒரு சில இடங்களில் காண முடிகிறது. சமகால அறிவுஜீவிகளின் தன்மை உள்ள எழுத்துக்கள். சிந்தனைகள்.
" மௌனி படைப்புகள்"
திரு மௌனி அவர்கள், 1930 கள் முதல் 1970களின் தொடக்கம் வரை எழுதிய 24 சிறுகதைகளையும், 2 கட்டுரைகளையும், டிசம்பர் 2010 வாக்கில், திரு சுகுமாரன் அவர்களால் தொகுக்கப்பட்டு, முதற்பதிப்பு கண்டது இந்நூல்.
தமிழின் முன்னோடி சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்தில் இருந்து வெளி உலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார் எனவும், மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தான் மௌனியின் பெரும்பான்மையான கதைகள் எனவும் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை பெறலாம். காரணம் சமகால வாசிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தினி தரும் எழுத்து நடையல்லாது, போன நூற்றாண்டின் வாசம் அப்பட்டமாகவும், முற்போக்கும் கொண்டதாயும் திரு மௌனி அவர்களின் எழுத்துநடை அமைந்துள்ளது.
கதைமாந்தர்களின் பெயர்களை சொல்லாது, "அவன் இவன்" என வர்ணித்தே கதையாடல் புரிந்திருக்கிறார். போலவே, கதையின் காலத்தை உணர்த்தாது எழுதப்பட்டுளாதால், எல்லா காலத்துக்கும் பொருந்தும் படியான கதைச்சூழல், நாம் எழுபது-எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதையை வாசிக்கிறோம் என்பதையே மறக்கடிக்கிறது.
புத்தகத்திலிருந்து...
\
எப்போதும் மனிதன் அஞ்சுவது அஃறிணைகளைக் கண்டல்ல. சில நேரங்களில் இயற்கை நிகழ்த்தும் ஊழிக் கூத்துக்களை பார்த்துகூட அல்ல. அவன் பயப்படுவது மற்றொரு மனிதனைக் கண்டுதான். பெறும் வியப்பல்லவா இது? தான் கூடிவாழத் தொடங்கிய ஆதிநாள் முதல் அனுதினமும் உறவாடி களிக்கும் ஒருவனைப் பற்றி, அவன் அறிந்திருப்பது, வெளியே நின்று நதியை காண்பது போலத்தான். இருப்பினும் கூட அவன் அதில் இறங்கி நீராடலாம், குதூகலிக்கலாம், அந்தரங்கமாக கண்ணீரும் உகுக்கலாம். ஆனால் அதன் ஆழத்தை மட்டும் அவன் ஒருநாளும் காணப்போவதில்லை. துணிந்து மூழ்கி சென்று திரும்பி வரும் சிலரும் காண்பது அதன் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியையே. அதுபோல கணக்கற்ற ஆழங்களை தன்னுள்ளாக கொண்டு அது ஓடிக்கொண்டிருக்கும் இங்குதான் படைப்பாளியின் பிரசன்னம் நிகழ்கிறது.
/
\
பிறர் கூறியதை திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் அல்ல அவர்கள். முன்செல்வதின் நிழலைத் தலைகுனிந்து தொடரும் செம்மறியாட்டுக் குணத்தை தேர்ச்சி மிக்க படைப்பாளியும், நுட்பமான வாசகனும் தன்னிடம் அண்ட விடுவதில்லை.
/
\
மேல் காற்று நாளே ஆயினும், அன்றையதினம் உலகத்தின் வேண்டா விருந்தினர்போன்று காற்று, அலுப்புற்றுச் சலித்து, ரகசியமாக புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஒடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.
/
\
ஆமாம்; அதுதான்; ஆகாயத்தில் இல்லாத பொருளை கண்மூடி, கைவிரித்து தேடி துளாவுவதை பார்த்தாயா? ஆடி அசந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை ... மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகத்த மேகங்கள், கனத்து, மிதந்துவந்து அதன்மேல் தங்கும்... தாங்காது தளர்ந்து ஆடும்... விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது..? அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது..? எதற்காக..?
/
\
காலை ஒளியில் கடைசி நக்ஷத்திரம் மறையும் முன்பே ...
/
\
அவனை மறந்து விட முடியும் என்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டியிருப்பதால், மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப் பற்றி யோசிப்பதில் யாரெனத் தெரியவில்லை, எனக்கொள்வது தனது முக்கிய காரியம் என, எல்லாவற்றையும் யோசிக்கலானான்.
/
\
ரயிலடியே ஒரு அலாதி அனாதைப் பார்வை கொடுப்பது. அதன் வெறிச்சோட்டத்திலும் கும்பலிலும் மனிதர்கள் ரயில் வண்டியில் வந்து போவதற்கு சிறிது அது ஒரு தங்குமிடம். ஆனால் இந்தப் பெரிய புகைவண்டி நிலையம், வண்டிகளில் பிராயணம் செய்பவர்களுக்கு ஒரு ஆரம்ப முடிவு ஸ்தலம் - டெர்மினஸ். இங்கிருந்து ஆரம்பிக்கும் பிரயாண தொடர்கள் எங்கேயோ எப்போதோ எட்டு திக்குகளுக்கும் சென்று அடைந்து, சிறிது தாமதித்து நின்று திரும்பவும் இங்கு வந்தடையும். நாலா பக்கத்து ஜனங்களும் இங்கிருந்து கிளம்பவும், ஆங்காங்கிருந்து வந்தடைய கூட்டுறவு கொள்ளுதலும் இங்கேதான். அநேக குண விசேஷங்கள் விட்டுப் பிரிந்து தவறுதலில் அநேகரை மாற்றடைவது நேருமிடம்... ஆக இந்த ஆரம்ப முடிவிடம் எவ்வளவு கும்பல் கூச்சலையும் சமாளித்து சலனமற்ற ஒரு உன்னத மௌன புதிர் ஷேத்திரம்.
/
\
எஞ்ஜின் கோர்க்கப்பட்டு பூதாகரத்தில் புகையைக் கக்கி நின்றது, செல்ல ஆயத்தம் கொண்டு நகர முடியாது முக்கித் திணறி பெருமூச்சில் உறுமியது. அந்த வண்டித் தொடர், ஒரு ஜனக்கதம்பத் தொடுப்பு வடமென தோன்றியது.
/
\
'தறிதலை' என குதிக்கும் சேவல், இருளில் முண்டம் காணாது, கண்ட கண்டவைகளில் சார்ந்து பொழுது புலர கூவியது, வினோதமாக கேட்டது. கொஞ்சம் வெளிச்சம் காணும் முன்பிருந்து பனை, தென்னை, ஆடு, மாடு, நாயெனவும் ஏன், மனிதனாகக் கூட இச்சேவலின் விடிவை கூற முடியாது? ஆதாரம் தெரிந்தும் தவறை(மரபை) தவிர்ப்பது எப்படி... தவறென உலகை காண்பதில் தான் போலும்.
/
மௌனி அவர்களின் சிறுகதைகள் பற்றிய பதிவு:
இந்தப் பதிவில் இடம்பெறும் சிறுகதைகள்,
1. அழியாச்சுடர்
2. பிரபஞ்சகானம்
3. எங்கிருந்தோ வந்தான்
நன்றி!
மௌனியின் கதை மாந்தர்கள் உறவுகளின் மேல் தீராக் காதல் கொண்டவர்கள். காதல், பரிவு, பிரிவு, துக்கம், இழப்பு, வலி, ஆனந்தம் பெருங்கனவுகள் என்பவைகளில் உருக் கொண்டு விரிவடையும் கதைமாந்தர்கள். தத்துவார்த்த விவரிப்புகளோடு வார்த்தைகளை விரயமாக்காத மொழிநடை. தேர்ந்த வாசகனைக் கட்டிப் போடும்.
கதைகளில் நிகழ்வுகள் கதை சொல்லியாலோ, நண்பர்களாலோ, அவர்களின் கனவிலோ, எதிர்ப்பார்ப்பில் மூச்சு முட்டிடும் சாமானியனின் தவிப்பில் பின்னோக்கிய காலத்திலொ, தீராத வழியின் நடையிலோ, விடியாத நீண்ட இரவில் பிணத்தினோடோ, ஏதோ ஒரு இரவில் பெரு மழையிலோ அழகியப் பெண்ணின் கூடோ, புலர்காலைப் பொழுதின் திடுமென்ற விழிப்பிலோ, மாலை நேர கடலலைகளின் சாட்சிகளோடோ, சிதறி தெளிக்கப்பட்ட விண்மீன் குவியல்களிடையையோ, முழுநிலவின் நேரத்திலோ, தவழ்ந்து திரியும் மேகக் கூட்டங்களோடோ, நாய்களின் குறைப்பின் முன்னோ, பறவைகளின் சப்தங்களிக்கிடையிலோ, நகரும் மாட்டுவண்டிகளோடோவோ, தெருக்காட்சிகளூடாகவோ, எதிர்பாராத சந்திப்புகளாகவோ, இரயில் பயணத்திலோ நகர்கிறது.
கதைகளின் காலக்கட்டம் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் அதற்கும் பின்னுமானது. மௌனியின் புனைவு வெளி சமூகம், சாதீயம், அரசியல், வரலாற்றுப் பிண்ணனி போன்றவைகளை சார்ந்தவையல்ல. அதை எதிர்நோக்கி வருபவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே.
எழுத்தில் துக்கங்களை விரித்த அளவிற்கு ஆனந்தத்தையும் கொடுக்க முடியவில்லை. அது எருக்கம் பூவின் வெடிப்பில், காற்றில் மிதந்து வரும் மலரின் மனத்தில், கணவரின் வருகைக்கான காத்திருப்பில் என வற்றிப் போக இருக்கும் ஆற்றின் சிறு வழித்தடமாய் மட்டுமே.
மௌனியின் பெண்கள் வீட்டுக்குள்ளே கட்டுப்பெட்டியாக கிடப்பவர்களல்லர். அவர்கள் சுதந்திரமானவர்கள். அக்காலத்திலேயே நாகரீகத்தின் உச்சத்தையடைந்த அசாதாரணமனவர்கள், சமூக ஒழுக்கத்தின் வரைமுறையை கடக்கத் துடிப்பவர்கள், பெண்மையை நேசிக்கும் ஆண்மையை போற்றுபவர்கள், ஆணில் பெண்மையை அடையாளம் தெரிந்து நட்பு பாராட்டுபவர்களென மிளிர்கிறார்கள்.
கதைகளை வாசிக்கும்போது என் மனதில் பட்டது மாயப் புனைவுலகு எழுத்தாளர்களான பா.வெங்கடேசன், யுவன் சந்திரசேகரனின் எழுத்துகளின் மௌனியின் தாக்கம் இருப்பது போல. எல்லாரும் சொல்வது இவர்கள் மிலன் குந்த்ரோ தாக்கத்தில் எழுதுகிறார்கள்.
மிக மெதுவாக வாசிக்க வேண்டிய புத்தகம். அனைத்து கதைகளும் நம்மை ஏதோ ஒரு வகையில் ஏதோவொரு உணர்வுக்குள் நம்மையும் கொண்டு செலுத்தி விடும் வன்மை கொண்டது. பொதுவாக விமர்சனங்களுக்குள் கதைகளை கொண்டுவரத் தேவையில்லை காரணம் கதைகள் அவரவர், அவரவர் ரசனைகளில் படித்துணர வேண்டியது.
கதைகளிலிருந்து
” மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப்போல் கட்டிதட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப்பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்துவிட்டேன். ஆனால் என் தலையை உதறிக்கொண்டால், பரிதாபம்!
காலத்தை கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும், அது நகர்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும்.
ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடித் துளாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை . . . மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து, மிதந்துவந்து அதன்மேல் தங்கும் . . . தாங்காது தளர்ந்து ஆடும் . . . விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது . . ? அல்லது துளிர்க்க அது மழைத் துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது . . ? எதற்காக .
அதோ மரத்தைப்பார், அதன் விரிக்கப்பட்ட சிப்பிக் கோடுகள், அதன் ஒவ்வொரு ஜீவஅணுவும், வான நிறத்தில் கலப்பது காணாது தெரியவில்லையா? மெல்லென ஆடும்போது அது வான வெளியில் தேடுகிறது. குருட்டுத்தனமாகத் தானே அங்கே தேடுகிறது . . ?
வீதியில் வந்ததும் உயர உற்று நோக்கினேன். இரவின் வளைந்த வானக் கற்பலகையில், குழந்தைகள் புள்ளியிட்டது போல எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவுதான் கொட்டிடினும், அவைகளுக்கு உருகி மடிந்துபட, அழிவே கிடையாதுபோல, ஜொலித்தன.
எவ்வகை நிகழ்ச்சியும் விநோதமாகத் தோன்றாமல் போவதில்லை. எதுவானாலும் மனோகற்பிதமான அனுபவத்திற்கு அகப்பட்டாலும், அனுபவப்பூர்வமாக நிகழ்ச்சிகளை உணருவது வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது
யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில், ஜ்வலிக்கும், விலைகொள்ளா வைரங்களைக் கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் வீசி இறைத்தான்போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவன் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன
வருத்தத்தில் சந்திரன் எட்டிப் பார்க்கிறான். துரத்தப்பட்ட சிறு மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பயம் நீங்கி ஊர்ந்து வருகின்றன. நகரத்தில் தூக்கம் உலாவுகிறது. எங்கும் நிசப்தம். துல்லிய வெண்ணிலா, வானத்தின் சிறு ஒளிச் சரிகைகளை மெழுகி மறைத்து வெறிச்சென்று காய்ந்தது. களைப்படைந்த சந்திரன் சலிப்புற்று இருக்க, மேகங்கள் குவிந்தன. உயரமாக வளர்ந்த வீதி வீடுகள் பாழ்பட்டு, உயிரற்று வெளிக் கோட்டுருவங்கொள்ளுகின்றன.
உயிர் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது. விடை கண்டால் புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது.
தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு. பெண்ணோ எனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள்தான்.
முன் நடந்தவன் சுவட்டை அழித்து நடப்பவரும், நடக்கும் போதே சின்னத்தைக் களைந்து நடப்பவரும் உண்டு. யார் எப்படி நடந்தால் என்ன, மணல் பரப்பிற்கு நடப்பவர் யாரென்று உணர்வு உண்டா?
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவுகொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவதுபோலும், அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு - வஸ்துக்கள் வாஸ்தவமெனப்படுவதற்கு - மாயைப் பூச்சு கொள்ளுமிடம் அதுதான்போலும். தூக்கத்தில் மறையவும், விழிப்பில் மறக்கவும். “