இராமாயணம்
இராமன் இவ்வுலகில் மாந்த உருவெடுத்துப் பிறந்த திருநாளான இன்று அவன் கதையை எளிய மக்களும் அறியும் வகையில் திரு.Rajaji அவர்கள் எழுதிச் "சக்கரவர்த்தித் திருமகன்" என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தை நான் சில நாள் முன்பு படிக்க நேர்ந்ததைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இராமாயணம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதும் பெரும்பாலும் அனைவர் மனத்திலும் சில கேள்வி எழும்.
இது சிறு வயது முதலே தெரிந்த கதை தானே, அதை ஏன் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்?
ஒரே திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தால் அதில் என்ன சுவை இருக்கப்போகிறது? அதே போல் சிறுவயதில் தெரிந்த கதையை மீண்டும் மீண்டும் படிப்பதில் என்ன பயன்?
முதலில் இதற்கு விடை கூறுகிறேன்.
இராமாயணம்,
1. சிறு பிள்ளையாய்க் கதை கேட்கும்பொழுது அது ஒரு cartoon போல நம் மனத்தில் உருவெடுக்கும்.
2. சிறிது வளர்ந்த பின் படிக்கும்பொழுது அது ஒரு அரச பரம்பரைக் கதையாகத் தோன்றும்.
3. பதின் பருவத்தில் படிக்க நேர்ந்தால், தன் மனைவியை மீட்க இராவணனைக் கொன்ற இராமனின் காதல் கதையாகத் தோன்றும்.
4. பதின் பருவத்தைத் தாண்டியபின் படிக்க நேரும் பொழுது தான் மேற்கூறியவற்றைத் தாண்டி, இக்கதையில் பொதிந்துள்ள பல கூறுகள் நம் மனக்கண்ணிற்குப் புல்ப்படும்.
அப்படியா? அப்படி என்ன இருக்கிறது இராமாயணத்தில் என்று கேட்கிறீர்களா? இதோ என் கண்ணில் பட்ட சிலவற்றைக் காண்போம்.
இந்நூலில் என்னைக் கவர்ந்தவை:
1. இராமன் காட்டிற்குச் சென்று திரும்பியதும் பரதனிடம் நாட்டை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டான் என்று கூற விரும்பிய கோசலை பின் வருமாறு அதற்கு உவமை கூறுகிறாள் - "வேறு விலங்கு வேட்டையாடி உண்ட மிகுதியைக் காட்டுப்புலி தீண்டாது".
2. மதி இழந்தவன் நஞ்சு கலந்த தேனை உண்பதை இராவணன் அழகிய சீதையின் பால் காமுற்றதற்கு உவமையாகக் கூறுகிறார் நூலின் ஆசிரியர்.
3. இராமனை மீறிச் சீதையை அடைய முயல்வது - சும்மா இருக்கும் பாம்பின் வாயில் கைவிட்டு அதன் நச்சுப்பல்லைப் பிடுங்கப் போய்ச் சாகும் யோசனை - என்று அறிவுறுத்தப்படுகிறான் இராவாணன்.
4. அனுமனின் பணிவு:
யாராலும் செய்ய இயலாத காரியத்தை, அலைகடலைத் தாண்டி அசோகவனத்தில் அடைபட்டிருந்த சீதையைக் கண்ட அனுமன், நாடு திரும்பிய பின், தான் கொண்டு வந்த நற்செய்தியை அமைதியுடன் மிகப்பணிவாகக் கூறுகிறான். அவனிடம் எவ்வித தற்பெருமையும் தோன்றவில்லை. சொல்லின் செல்வன் என்பர் அனுமனை. ஆனால் எனக்கு அவன் அறிவின் செல்வனாகவே தெரிகின்றான்.
5. கைகேயியின் செயல் பின்வருமாறு ஆசிரியரால் கூறப்படுகிறது - "அற்ப சந்தோசங்களுக்காகப் பெருந்தீமை விளைவிக்கக்கூடிய காரியத்தை அறியாமையால் மக்கள் செய்துவிடுகிறார்கள். பிறகு பயனை அனுபவிக்கும்போது வருந்துகிறார்கள்".
எவ்வளவு உண்மையான செய்தி இது. இதைத் தானே நம்மில் பெரும்பாலோர் செய்கிறோம். இளமையின் ஆற்றலால், மனம் கொண்ட பற்றால், வேண்டிய ஒன்று கிடைக்கவேண்டுமென்று என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம். நல்லவர்களின் மனத்தை, வலுவில்லாதோரின் உள்ளத்தை எப்படியெல்லாம் புண்படுத்தி நாம் நினைத்ததை அடைய முயல்கிறோம். அன்பால் அடைய வேண்டியதை அடக்குமுறையால் அடைந்து என்ன பயன் என்று நாம் சிந்தித்தோமானால் இவ்வாறு செய்வோமா? இவ்வாறு செய்வோர்களெல்லாம் கைகேயியின் செயலையும், நிலையையும் எண்ணித் திருந்த வேண்டும். தன்பால் அன்பு கொண்ட கணவனை, தனக்காக எதையும் செய்ய நினைக்கும் காதலனை, தன்முன் வலிமை இல்லாத தசரதனை, இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாக் கொடியவளாக உருவெடுத்துக் கைகேயி துன்புறுத்தி அவன் இறப்பிற்கு வழிவகுத்தாள்.
அவள் நினைத்தபடி அவள் மகன் பரதன் அரசனானானா? இல்லையே.
சரி, தன் மகனுக்காகத் தானே இவ்வளவும் செய்தாள் அவனாவது இவளை மன்னித்தானா? அதுவும் இல்லையே. கொடிய அரக்கியைப் போலல்லவா தன் மகன் பரதனால் பார்க்கப்பட்டாள் கைகேயி.
ஆம், விளைவுகளை எண்ணாமல், தன்னால் எதுவும் செய்ய இயலும் என்ற செருக்கில் செய்யும் செயல்கள் இவ்வாறே முடியும். சிந்தித்துச் செயலாற்றுங்கள்!
6. இது வரை இராமாயணம் என்று கேட்டவுடன் அதில் மிக உயர்ந்த குணம் ��ொண்ட கதை மாந்தனாக என் மனத்தில் தோன்றுபவன் இராமனாகவே இருந்தான். ஆனால் இம்முறை இராமாயணத்தைப் படித்துக் கொண்டிருந்த பொழுதே அந்த எண்ணம் ம���றியது.
ஆம். இராமாயணத்தில் இராமனை விட மேம்பட்ட ஒருவன் உள்ளான்.
*பரதன்*
பரதாழ்வான் என்று இராமனின் அடியவர்களால் சிறப்பித்து அழைக்கப்படும், இராமனின் இளவல் பரதன்.
அண்ணனுக்குக் கிட்ட இருந்த அரசு, தனக்காகப் பறிக்கப்பட்ட அரசு, தனக்குக் கிட்டும் நிலையில் இருந்த பொழுதும், நாடே வந்து வற்புறுத்தி அரசனாக முடிசூடிக்கொள்ளச் சொன்ன பொழுதும், கற்றோர்கள் அனைவரும் இதில் தவறொன்றும் இல்லை என்று விளக்கிய பொழுதும், அண்ணன் இராமனே அது தான் சரி என்று உரைத்த பொழுதும், தூய்மை என்பதைத் தானாக முயன்று வளர்த்துக் கொள்ளத் தேவையில்லாதவனாக, இயல்பாகவே தன்ன்னுடைய மனம், தூய்மையின் இருப்பிடமாக வாய்க்கப்பெற்ற அன்பின் முழுவடிவாய் நின்று அந்த அரசு எனக்கு வேண்டாமென்று மறுத்த, என் மனக்கண் முன் வானளாவத் தோன்றிய பரதன், இராமனை விடப் பன்மடங்கு சாலச் சிறந்தவன்.
இதோ ஆசிரியரின் வரிகள்:
*பரிசுத்தத்தில் பரதாழ்வானுக்கு ஒப்பாகார் பெருமாள்; யோக்யதையில் பரதாழ்வானுக்கு ஒப்பாகார் பெருமாள்*
இராமனை விட மேம்பட்டவனாய்க் காட்டப்படுகின்றான் பரதன்.
இதே கதையில், பரதனுக்கு நேர் எதிரான குணம் கொண்ட ஒரு கதை மாந்தனும் காட்டப்படுகிறான். அவனே சுக்ரீவன். பரதனுக்கும் சுக்ரீவனுக்கும் அவர்கள் வாழ்வில் ஒரே நிலை ஏற்படுகிறது. அண்ணனுக்கு உரித்தான அரச பதவி தனக்குக் கிட்டும் நிலையே அது. இருவரும் தத்தம் அறிவிற்கும், அன்பிற்கும், உள்ளத்தூய்மைக்கும் ஏற்றவாறு முடிவெடுக்கிறார்கள். அம்முடிவே நாம் இவ்விருவரில் ஒருவரைப் போற்றவும் மற்றவனைத் தூற்றவும் வழி செய்கிறது.
அரக்கனோடு போர் செய்யச் சென்ற தன் அண்ணன் வாலியை அரக்கன் கொன்றுவிட்டான் என்று எண்ணி, அந்த அரக்கன் தன்னையும் கொல்வானோ என்று அஞ்சி, மதியிழந்து அண்ணன் சென்ற குகையின் வாயிலை மூடிவிட்டு ஊர் திரும்பி, நாட்டிலுள்ளோர் கூறியபடி அரசைக் கைப்பற்றினான் சுக்ரீவன். அதன் விளைவாக அண்ணன் வாலியின் பகையைப் பெற்றான். அவனால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டான். இறுதியில் இராமனின் துணை கொண்டு வாலியை வீழ்த்தி மீண்டும் அரசைப் பெற்றானாயினும், பரதன் அடைந்த பெருமையைக் காட்டிலும் சுக்ரீவனுடைய அரச பதவி பரதனின் கால் தூசுக்கு ஈடாகுமா?
அண்ணன் தம்பி என்றிருந்தால் இராம இலக்குவனரைப் போல் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் தம்பி என்றிருந்தால் பரதனைப் போல் இருக்கவேண்டும்.
பரதன் என் உள்ளத்தில் பெற்ற இடம் இராமனினும் மேலான ஓரிடம். வாழ்க பரதன் புகழ். வாழ்க பரதாழ்வான் திருவுள்ளம்.
இராமனின் பிறந்தநாளன்று அவன் கதையைப் பற்றி எழுதப் புகுந்து அவன் இளவல் பரதனைப் போற்றி முடிக்கிறேன் என்பதில் இராமனுக்கு மிகுந்த உவப்பே தோன்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நான் எழுதிய பரதனைப் பராவும்(தொழும்) ஒரு வெண்பாவுடன் இப்பதிவை முடிக்கிறேன்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இராமன் பிறந்தநாள் இன்றவன் தம்பி
பராவுநெஞ்சே வாழ்க பரதன் இராவணனைக்
கொன்ற இராமனினும் கொற்றம் விலக்கிய
பொன்னெறி சால்பரதன் போற்று
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
பெரும்பாலும் இதிகாசங்கள் நம் தாத்தா பாட்டியிடம் வாய்மொழியாக கேட்டு அறிந்தவை. எனக்கு அப்படி அமைந்ததில்லை. திராவிட அரசியல் வாசிப்பின் மூலம் எதிர்வாதம் என்ற அடிப்படையில் மட்டுமே ராமாயணமும், மகாபாரதமும் எனக்கு அறிமுகமானதே தவிர, முழுக்கதையாக படித்ததில்லை.
2016ல் நான் வாங்கிய ராஜாஜியின் "சக்ரவர்த்தி திருமகன்" ஆன ராமாயணத்தை 9 வருடங்களுக்கு பின் படித்தேன். எளிமையான நடையில் எழுதியுள்ளார் ராஜாஜி. கதைமாந்தர்கள், துணை அத்தியாயங்கள் , கதைக்குள் கதைகள் என்று பிரம்மிப்பிற்கு அளவில்லை. ஒரு பக்கம் ராமாயணம் அரசியல் ரீதியில் விமர்சனம் இருந்தாலும், உளவியல் ரீதியிலும் அணுக வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
கார்ல் யூங் (Carl Jung) தனது மனவியல் கோட்பாடுகளில் சில முக்கியமான கருத்துகளை முன்வைத்தார் - அதாவது கூட்டு மறைசிந்தனை (Collective Unconscious), மூலவடிவங்கள் (Archetypes), தனித்தன்மை அடைவு (Individuation)
இராமாயணம் ஒரு புராணக் கதை மட்டுமல்ல; அது மனித மனத்தின் வளர்ச்சியை குறிக்கும் சின்னங்களின் பயணம். அந்த வகையில் இதிகாசங்கள் நிச்சியம் ஒரு குறுகிய மனநிலையில் அணுகாமல், மனவியல் கருத்துக்களுக்கும் உட்படுத்தவேண்டும்.
சில நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்து சலிப்பு ஏற்படுத்தினாலும் , ராமாயணத்தை நீங்கள் முதன் முதலாக படிக்க போகிறீர்கள் என்றால் இது ஒரு நல்ல புத்தகம்.
கவிதை மற்றும் செய்யுள் வடிவ இலக்கியங்கள் படிக்கும் அளவுக்கு அறிவோ ஞானமோ இல்லாததாலும் , அதன் மேல் உள்ள பயத்தால் இந்த உரைநடை வடிவ நூலை தேர்வுசெய்தேன் . இது குழந்தைகள் படிக்கவேண்டிய நூல் என்று ராஜாஜியே இந்நூலில் சொன்னாலும் இதன் மொழிநடை மிகவும் archaic ஆகவும் ,இதுவரை நான் கேட்டேயிராத வார்தைபிரயோகங்கள் நிறைந்ததாகவும் இருந்தது .
கதை சொல்லப்பட்டவிதமுமே அத்தியாயத்துக்கு அத்தியாயம் ஒரு நிலைத்தன்மை இல்லாமல் இருந்ததாக உணர்ந்தேன் . எந்த அத்தியாயம் ,அல்லது கதாபாத்திர அறிமுகம் முக்கியம் என்று நான் நினைத்தேனோ அங்கெல்லாம் ஒரு வரி விளக்கத்துடன் கடந்துபோய் விடுகிறார் ராஜாஜி . ஆனால் உணர்ச்சிகளை வலியுறுத்தும் இடங்களில் பக்கம் பக்கமாக விளக்கம் தருவது கொஞ்சம் ட்ராமாட்டிக்க்காக இருந்தது.இராமாயணத்தின் தார்மீக குறைகளை நியாயப்படுத்த நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் . அதுபோக ராஜாஜியின் சுய கருத்துக்களுக்கும், அனுமானங்களுக்கும் பஞ்சமே இல்லை. நல்ல விஷயங்களை Cherry Pick செய்த பின் ,பழமைவாத கருத்து வலியுறுத்தல் , காலாவதியான கொள்கைகள் ,இக்காலகட்டத்துக்கு பொருந்தாத நீதிகள், 599 பக்கங்கள் போன்றவற்றை சகித்துக்கொண்டால் இந்நூலில் ராமாயணத்தின் ஒரு மேலோட்ட கண்ணோட்டம் கிடைக்கும்.