Reviews for கானகன்

29 reviews total

user_12461

★ 4/5 Feb 02, 2026

எழுத்தாளர் சரவணகுமார் எளிமையான நடையில் விறுவிறுப்பான சொற்தொடர்களால் எழுதுபவர். அவரது கொமோரா போன்று இந்த நாவலும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. காடுகளும் அவற்றை சார்ந்த அரசியலும் வெட்டவெளிச்சமாகக் கூறப்பட்டுள்ளது. இறுதியில் கொஞ்சம் சினிமா நடையில் முடிந்துவிட்டதோ என்று தோன்றியது. கண்டிப்பாக வாசிக்கலாம்.

user_12460

★ 5/5 Feb 02, 2026

அற்புதமாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல். இயற்கை, மனிதர்கள், வன விலங்குகள் ஆகியவற்றின் சந்திப்பில் நன்கு வரையறுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் நிறைந்த கதைக்களம், நிறைவான மற்றும் செறிவான வாசிப்பனுபவம் தருகிறது.

நாவலில் பல கவித்துவமான காட்சிகள் நிறைந்துள்ளன, நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணியிலுள்ள அரசியல் மற்றும் தத்துவத்தை ஆழமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முடிவு அழகாகவும், நெகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது.

user_12459

★ 3/5 Feb 02, 2026

கானகன் நல்ல நாவல், படிக்கலாம். ஆனால் எல்லோரும் சொல்லிய அளவிற்கு எனக்குப் பிடிக்கவில்லை. காடுகளைப் பற்றிய ஆழமான புரிதலை இது தரவில்லை. உறவு நிலை சிக்கல்கள் இருக்கும் அளவு காடுகளைப் பற்றியும் வேட்டைகளின் பாதிப்பு பற்றியும் அதிகம் உணர முடியவில்லை.

பெண் கதாபாத்திரங்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் உடலுறவுக்குப் பின்னர் உதவுவார்கள் என்ற விதமாகப் படைக்கப்பட்டுள்ளனர், வாசியின் முதல் மனைவியைத் தவிர. உங்கள் நேரம் அனுமதிப்பின் படிக்கவும்.

user_12458

★ 4/5 Feb 02, 2026

இந்தியாவில் சூழலியல், கானுயிர் பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படும் போது அந்தந்த நிலத்தை நம்பி வாழ்கிற பழங்குடிகளின் நலன் புறக்கணிக்கப்படுவதே பொதுவான அணுகுமுறையாக இருக்கிறது. வனங்கள் அழிக்கப்பட்டு, பழங்குடிகள் துரத்தப்படும் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையை புனைவின் வழியே வாசகனிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் லட்சுமி சரவணகுமார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் பளியர்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறையைக் கொண்ட அவர்களை காட்டிலிருந்து அகற்றுவதன் பின்னுள்ள நுட்பமான அரசியலை தெளிவாக முன்வைத்திருக்கிறார்.

தங்கப்பன், வாசி என இரு பிரதான கதாபாத்திரங்கள். ஒருவருக்கு வேட்டை ஈவிரக்கமின்றி கொன்றழிப்பது, இன்னொருவருக்கு தேவை சார்ந்த ஒன்று மட்டுமே. சில இடங்களில் எழுத்து நடையை மேலும் செழுமைப்படுத்தி, பளியர்களின் வாழ்வியலைப் பற்றி கூடுதல் தகவல்கள் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

user_12457

★ 5/5 Feb 02, 2026

உப்பு நாய்கள் வாசித்த பின் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கானகனை வாசிக்கத் தொடங்கினேன். முதல் இரண்டு பக்கங்கள் தாண்டும் முன்னர் இந்த புத்தகம் என்னை வாசிக்க வைக்கப் போகிறது என்பது புரிந்துவிட்டது.

தங்கப்பன் என்ற ஆளுமையின் வேட்டைக்களமும், அன்சாரி அமைத்த பரணும், தங்கப்பனின் தோளில் கிடந்த துப்பாக்கியும் போதும் இந்த புத்தகம் எப்படியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள.

விடுமுறை என்பதால் ஒரே நாளில் படித்துத் தீர்த்தேன். காட்டின் ஆன்மாவை விரும்பி, அனைத்து உயிர்களையும் பேருயிராய் மதித்து, காட்டைப் பாதுகாக்க நினைக்கும் பளிச்சியம்மாவின் பிள்ளையாய் திரிகிறான் கானகன். புனைவு என்பதைத் தாண்டி, காட்டின் நீதி, அநீதி, பளியர் குடி மக்களின் வழக்கங்கள் அனைத்தும் காட்டின் மிகப்பெரும் அம்சங்களாகவே தோன்றுகிறது.

காட்டை ஆக்கிரமித்தும் கஞ்சா தோட்டங்கள் அமைத்தும் கொழுத்த முதலாளிமார்களிடம் பளியர் குடி மக்களே வேலைக்கு செல்லத் தொடங்கினர். விலங்குகளின் தடங்களிலும் தண்ணீர் சுனைகளிலும் ஆக்கிரமிப்பு தொடங்கியது.

தங்கப்பன் எப்போதும் இரண்டு பேராகவே இருந்தான் - வேட்டையின்போது இரத்த வெறி கொண்டவன், வேட்டையாடாமல் இருக்கும்போது காதல் பெருகி வழிபவன். வாசி வளர வளர சடையனை நோக்கிப் பயணப்படத் தொடங்கினான், காட்டை முழுவதுமாய் நேசிக்கவும் தொடங்கினான்.

வேகமாகவும் பேராசையுடனும் காடுகள் அழிக்கப்படும் நிலையில், காட்டையும் உயிர்களையும் காப்பவர்களையே அழிப்பவர்களாகச் சித்தரித்து எப்படி சுரண்டப்படுகிறது என்பதை உச்சந்தலை ஆணி அறைதல் போல் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர். 256 பக்கங்களை முடித்து புத்தகத்தை மூடிவைத்து, அந்த அகமலைக் காட்டைத் தாண்டி வர சில மணி நேரங்கள் எடுத்துக்கொண்டேன்.

user_12456

★ 4/5 Feb 02, 2026

நாம் காணாத கதைக்களங்கள் பல நூறு ஒளிந்திருக்கின்றன நமது பரப்பில். குரலற்றவர்களின், முகமற்றவர்களின் குரல் வழியே பல நூறு சுவாரசியமான கதைகள் கொடுக்க முடியும் என்று லட்சுமி சரவணகுமார் இங்கு உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு வேட்டையின் நூலிழையின் வழியே, ஒரு காட்டின் உள்ளே நம்மை உள்ளிழுத்து ஒரு வனத்தை நம் மனதினுள் விதைத்து, நீரூற்றி, உயிர்பெற வைத்திருக்கிறார்.

கதை நடக்கும் காலம் 1980களின் ஆரம்பகாலம். அவரின் காடு காலம் கடந்த ஒன்றாகவே இருக்கிறது. அதன் மனிதர்கள் மிகவும் எளிமையானவர்கள், மனதாலும் வாழ்வியலாலும். அவர்களின் கோபங்கள், தாபங்கள், கவலைகள் எல்லாமே எளிமையாக, வெளிப்படையாக வெளிப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் காட்டுக்கு ஏற்பட்ட மாற்றங்கள், அதன் விளைவுகளை பின்புலமாகக் கொண்டு, பளியர்கள், கருமாண்டி, ஜமீன்தார் என ஒவ்வொருவரின் சிந்தனைகளும் வாழ்வோட்டமும் ஒரு நவீன பாணி ஓவியம் போல ஒன்றின் மீது ஒன்று எனப் பின்னிப் பிணைந்து நம்மையும் அதனுள் இழுத்துக்கொள்கிறது.

ஒரு கதை என்ற தளத்தில் இருந்து, குறியீடுகளின் வழியே வேறு ஒரு சரித்திர நிகழ்வை குறிப்பிடுகிறாரோ என்ற எண்ணம் வலுவாக எழுகிறது. கதையைத் தாண்டிய வேறு ஒரு அனுபவத்தை கதை மூலமாகவே நமக்குள் விதைத்துச் செல்கிறது. அதுவே இதன் வெற்றி.

user_12455

★ 5/5 Feb 02, 2026

சுவாரசியமும் விறுவிறுப்பும் குறையாமல் நாவல் நெடுகிலும் தொடர்கிறது. ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் தருகிறது. நாவலை வாசிக்க வாசிக்க வாசிப்பு மட்டுமின்றி காடுகளையும் மலைகளையும் நேசிக்க வைத்தது. சில தினங்களுக்கு மலை கிராம மகனாகவே உணர்ந்தேன்.

user_12454

★ 4/5 Feb 02, 2026

"எந்தவொன்றையும் முற்றாக இந்த மனிதர்களால் அழித்துவிடமுடியாது, எல்லா முடிவுகளும் சில எச்சங்களை விட்டுச் செல்கிறதென்பதை இவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்தக் காட்டின் ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம்தான்."

சாயாவனம் மற்றும் கானகன் இரண்டும் காடு மற்றும் இயற்கை சார்ந்த ஆழமான படைப்புகள். கானகன் நாவலின் இந்த வரிகள் காட்டின் ஆன்மாவை அப்படியே பிடித்துக் காட்டுகின்றன.

user_12453

★ 4/5 Feb 02, 2026

மனிதன் ஒரு சமூக விலங்கு. நமக்குள் இருக்கும் பேராசை என்னும் மிருகத்தனம் மேலோங்கும் போதெல்லாம் இயற்கையை சூறையாடுகிறோம். இந்த உலகத்தில் மனிதனுக்குள்ள உரிமை எல்லா சக உயிரினங்களுக்கும் உள்ளது. மிருகத்தனத்தை விட்டொழித்து மனிதத்தை போற்றுவோம்! பிற உயிரினங்களை நேசிப்போம்!

இந்த நாவலில் வரும் தங்கப்பனின் கதாபாத்திரம் யானையைக் கொல்லும் பகுதி மிகுந்த பதைப்பை உண்டுபண்ணியது. புலியை வேட்டையாடும் பகுதியும் புலி வேட்டையாடும் பகுதியும் பரபரப்பாக இருந்தது. ஜமீன்தாரின் கதாபாத்திரம் நகரத்தில் வாழும் நம்மைப் போன்ற காட்டைப்பற்றி அறியாதவர்களின் பிரதிநிதி.

நாவலின் முடிவு கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஒரு தேர்ந்த வேட்டைக்காரனுக்கு புலி செத்துவிட்டது தெரியாமல் நெருங்கிச் சென்று பலியாவது சினிமாத்தனம் போல இருந்தது. மற்றபடி காட்டையும் காட்டில் வாழும் பழங்குடியினரையும் அவர்களின் பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றி விரிவாகப் பதிவுசெய்துள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.