Reviews for கானகன்

29 reviews total

user_12481

★ 4/5 Feb 02, 2026

புலி வேட்டையில் தொடங்கும் கதை, புலி வேட்டையில் முடிகிறது. நாவல் நெடுக நிரம்பிக் கிடக்கும் மலையிலும் காட்டிலும் அதற்கே உரிய இயற்கையின் அமானுஷ்யம் ஊடாடுகிறது. பல தருணங்களில் இந்த நாவலை அமானுஷ்ய உணர்வோடே அணுக நேர்ந்தது.

மனிதர்களின் பேராசையும் வெற்றுச் சீற்றமும் ஒரு காட்டைத் துண்டுகளாக்க முயல, காடே திரண்டு மூர்க்கம் கொண்டு மீள முயல்கிறது.

user_12480

★ 5/5 Feb 02, 2026

லக்ஷ்மி சரவணகுமாரின் சிறந்த படைப்பு கானகன்தான். முதல் காட்சியும் இறுதி காட்சியும் சராசரியாக ஒரே நிகழ்வுதான், ஆனால் இரண்டுக்குமான உளவியல் வேறு. அதை விவரிப்பதுதான் இந்த நாவல் - மிக அற்புதமாக அதைச் செய்திருப்பார்.

user_12479

★ 4/5 Feb 02, 2026

அற்புதமான கதை. இந்தக் கதையை வாசிக்கும்போது காட்டில் பயணம் செய்வது போல உணர்ந்தேன். தங்கப்பன் மற்றும் வாசி ஆகிய கதாபாத்திரங்கள் காட்டில் பயணிக்கையில் விலங்குகளின் நடத்தை பற்றிய ஆழமான நுண்ணறிவுகளைத் தருகின்றனர். கானகன் - அருமையான தலைப்பு.

user_12478

★ 5/5 Feb 02, 2026

மிகவும் அற்புதமான நாவல். நேரடியாக காட்டில் பயணம் செய்த மாதிரி அனுபவம் கிடைத்தது. எதார்த்தமான வகையிலும் உண்மைக்கும் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

காடு எப்படி இருக்கும், அதனுள் வாழும் மனிதர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் எனப் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. கதையைப் பற்றி எதுவும் தெரியாமல் படிப்பது சுவாரசியமாக இருக்கும்.

user_12477

★ 2/5 Feb 02, 2026

காட்டின் ஒரு விலங்கோ தாவரமோ அழிந்தாலும் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுமாயின், மாட்டை வேட்டையாடும் புலியைக் கொல்வது தர்மம்தானா என்ற கேள்வி எழுந்தது.

மாட்டின் எண்ணிக்கையும் புலியின் எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது கதையில். புலியை வேட்டையாடிய தங்கப்பன் கடைசியில் புலியால் வேட்டையாடப்படுகிறான். மனிதனின் சாவைவிட மகத்தானதும் கொண்டாடப்பட வேண்டியதும் வேறெதுவுமில்லை.

user_12476

★ 4/5 Feb 02, 2026

தமிழில் நான் வாசித்த முதல் காடு சார்ந்த நாவல். காடும் அங்கு வாழும் பளியர்களின் வாழ்க்கையும், அவர்களுக்கு இருக்கும் காட்டின் மீதான பயம் கலந்த மரியாதையும் நீள்கிறது நாவல்.

பாட்டா என்ற சொல்லும் பளிச்சி என்ற சொல்லும் வருமிடம் அனைத்தும் ஒரு பூரிப்பையும் சிலிர்ப்பையும் தருகிறது. முடிவில் நியாயம் இருந்தாலும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. மொத்தத்தில் ஒரு வருட காலம் காட்டில் வாழ்ந்த அனுபவம்.

user_12475

★ 4/5 Feb 02, 2026

காடே சாமி, விலங்குகள் காட்டின் பிள்ளைகள், மரங்கள் இவ்விலங்குகளையும் மனிதர்களையும் இணைக்கும் பாலம். காட்டை மனிதர்கள் பாதுகாக்கிறார்கள், மனிதர்களை காடு பாதுகாக்கிறது.

அக்காட்டைச் சுற்றித் திரியும் பேராசை பிடித்த மனிதர்கள் காட்டை அழித்து வனங்களை அபகரித்து அதன் பிள்ளைகளை வதைக்கும் பட்சத்தில், அக்காடே அந்த அந்நியர்களுக்குத் தக்க பதிலடி தருகிறது.

இந்நாவலில் மனிதர்களுக்காக வருத்தப்படுவதை விட மிருகங்களுக்காகத்தான் வருத்தப்படுவோம் - குறிப்பாக வாசி வளர்த்த மானுக்காக, யானைக்காக, புலிக்காக, அந்த காட்டிற்காகவும்தான். புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இக்கதையில் புலி கொண்டது வன்மம் அல்ல, நீதி. காட்டிலே வாழ்ந்தேன், படுத்தேன், உறங்கினேன், அக்காட்டின் குடும்பமானேன்.

user_12474

★ 5/5 Feb 02, 2026

ஒரு ஆகச் சிறந்த திரைப்படம் பார்த்த அனுபவம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அகமலைக் காடுகளில் வாழும் பளியர் இனத்தவரைச் சுற்றி புனையப்பட்ட கதை. புலிவேட்டையில் துவங்கி புலி வேட்டையில் முடியும் இப்புத்தகத்தில், தங்கப்பன் வாசிமலையான் என இரு முக்கிய கதாபாத்திரங்கள். தங்கப்பன் நெஞ்சில் ஈரமின்றி ரத்த வெறி கொண்ட வேட்டைக்காரன். வாசியோ காட்டையும் அதன் ஆன்மாவையும் உணர்ந்து காக்கும் கானகன்.

கட்டற்ற காட்டைக் கட்டியாள நினைக்கும், காட்டைப் பற்றியே அறியாத மனிதரின் ஆடுகளமாக மாறிப்போகும் காடும், அதைத் தடுக்க காட்டின் பிள்ளைகள் தொடுக்கும் போராட்டமும் சொல்லப்பட்ட விதம் அற்புதம்.

வனங்கள் சூறையாடப்பட்டு, பழங்குடியினர் துரத்தப்பட்டும் அழிக்கப்படும் அநீதியை நேர்த்தியாகப் புனைந்துள்ளார் லக்ஷ்மி சரவணகுமார். புலியையும் யானையையும் வேட்டையாடும் காட்சிகள் பதைபதைப்பையும் கலக்கத்தையும் தரும். அனைவரும் படிக்க வேண்டிய ஆகச் சிறந்த புத்தகம்!

user_12473

★ 4/5 Feb 02, 2026

எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாசிக்கத் துவங்கிய நாவல். கதைக்களம் காடு, காட்டில் வாழும் பழங்குடியின மக்கள், இயற்கையுடன் இயைந்த அவர்களின் வாழ்வியல், விலங்கினங்களைப் பற்றியது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்கிறது.

காட்டின் உட்பகுதிக்கு இழுத்துச் செல்வது போன்ற உணர்வையும், மிருக வேட்டை, குடிகளின் தெய்வ வழிபாடு பற்றிய புரிதல்களையும் அளிக்கிறது.

இயற்கைவளங்களைச் சூறையாடி பொருளீட்ட முனையும் முதலாளிகளும் தொண்டு நிறுவனங்களும் அந்நில மக்களைப் பயன்படுத்தி அழித்திருக்க முடியும் என்பது நிதர்சனம். அதற்குப் பின் இருக்கும் அரசியலையும் புரிய வைப்பதால் இதை வெறும் புனைநாவலாக மட்டும் கொள்ளலாகாது.

பேராசையின் பிடியிலிருக்கும் மனிதன் மிருகமாக மாறும் போது, அந்த மிருகங்களை விடவும் கொடியவனாகவே மாறிவிடுகிறான். நவீன தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத பழங்குடியின மக்களின் வாழ்வியலை சுவாரசியமான நடையில் படைத்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் பல. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல்.

user_12472

★ 5/5 Feb 02, 2026

"இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்" - வேள் பாரி. அதற்குப் பறை சாற்றுகிறான் கானகன்!

காடும் இயற்கையும் நிறைந்த இப்புதினம் வேள் பாரியையே நினைவுபடுத்துகிறது. ஆனால் பறம்பு போல் அல்லாமல், காட்டின் மரத்தையோ வளத்தையோ மிருகங்களையோ காக்க முடியாமல் அவை வெட்டப்படுவதையும் கொல்லப்படுவதையும் பார்த்துப் பரிதவிக்கும் பளியர்கள் மனதைக் கனக்கச் செய்கின்றனர்.

யானை செல்லும் வழியையும் நீர் அருந்தும் சுனையையும் ஆக்கிரமித்துக்கொண்டு, ஏதோ அவை மனிதர்களுக்குத் துன்பம் தருவது போல் வெடி வைத்து விரட்டுவது வேதனையாக இருக்கிறது.

தங்கப்பன் யானையைச் சுட்டு வீழ்த்திய காட்சி இதுவரை கண்டிராத வலியை உணர்த்தியது. வேட்டையோடு பளியர்களின் வாழ்வியலை விவரிக்கும் கானகன், இப்பிரச்சனையின் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த பயணம் நோக்கி வாசகனைக் கண்டிப்பாக நகர்த்துகிறான். முடிவு கவித்துவ நீதி!