கி. ராஜநாராயணன் Books
About கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (1923 - 2021) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஏழாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தியவர். எனினும், நாட்டுப்புறவியல் மற்றும் வட்டார இலக்கியத்தில் இவருடைய பங்களிப்பிற்காக 1980களில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், விவசாயிகள் போராட்டங்களில் பங்கேற்றதற்காக இருமுறை சிறைவாசம் சென்றுள்ளார்.
இவரது முதல் சிறுகதையான 'மாயமான்' 1958ஆம் ஆண்டு சரஸ்வதி இதழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், தனித்துவமான வாழ்க்கைப்பாடுகளையும் எளிய பேச்சுவழக்கில் பதிவு செய்வதில் இவர் வல்லவர். வட்டார வழக்கிற்கென 'கரிசல் வட்டார அகராதி' என்னும் மக்கள் தமிழ் அகராதியை உருவாக்கிய முன்னோடியும் இவரே.
இவரது புகழ்பெற்ற நாவல்களான 'கோபல்ல கிராமம்', 'கோபல்லபுரத்து மக்கள்' ஆகியவை தமிழ் இலக்கியத்தின் மைல்கற்கள். இதில் 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக 1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார். மேலும், சாகித்ய அகாடமியின் பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1998-2002) பணியாற்றினார். இவரது 'கிடை' என்னும் குறுநாவல் 'ஒருத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
கரிசல் காட்டின் வாய்மொழிக் கதைகளைச் சேகரிப்பதில் தசாப்தங்களைச் செலவழித்த கி.ரா, அவற்றை 2007இல் 944 பக்கங்கள் கொண்ட 'நாட்டுப்புறக் கதை களஞ்சியம்' என்ற பிரம்மாண்ட நூலாக அன்னம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது (2016) மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.