Quotes from அபிதா
வானிலிருந்து இறங்கிக் கொண்டே வரும் இரவின் திரைக்குப் பின்னால், இருளின் பெரும் திரட்சியாய், கோபமான எச்சரிக்கையாய், எதற்கோ காவலாய், கரடிமலை சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது. என்னைச் சுற்றி வயல்களில், பயிர்களின் பச்சையில் இரவில் கறுப்பஞ்சாறு வழிகிறது. என்னெதிரே ஒற்றையடிப் பாதை வெறிச்சாய் ஓடுகிறது. நான் தனி. மலைமேல் ராப்பூரா திருவேலநாதரின் தனிமையை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது. ‘நானி’ன் மாறாத, மட்டற்ற, மௌனத்தின் தனிமை
லா. ச. ராமாமிருதம் (La. Sa. Ramamirtham) — 'அபிதா'
சோபனபடத்தின் பெரிய ஏணிபோல், இந்தப் படிக்கட்டு பரமபதத்துக்குத்தான் கொண்டு போய்விடுமோ, அல்ல பெரிய பாம்பின் வாயில் தான் முடிகிறதோ? இந்தப் படிக்கட்டே ஒரு பெரும் மண் உணிப் பாம்போ? சென்றுபோன காலத்துள் புதையும், தான் மென்று உமிழ்ந்த மண்ணில் புதைந்த மண் உணிப் பாம்பு. சென்று போனதற்கும் இனி வரப் போவதற்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே நடுநின்ற தருணத்தின் தூலச் சாயல்கள் தான்.
லா. ச. ராமாமிருதம் (La. Sa. Ramamirtham) — 'அபிதா'
உப்பும் புளியும் பக்குவமாய்க் கூடினதால் மட்டும் ருசி கிட்டிவிடுவதில்லை. அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த ரஸவாதம் தான் நெஞ்சு நிறைகிறது.
லா. ச. ராமாமிருதம் (La. Sa. Ramamirtham) — 'அபிதா'
வான் பாதியும் பூமியின் பாதியும் விளிம்பு சேர்ந்த முழு உருட்டு இப்பூமி. நித்யத்வம் உகுத்த கண்ணீர்த் துளி. அதன் நீரோட்டத்தில் ஆடும் நிழல்கள் நாம் - நம்மை நாம் என்று கொண்டதன் விளைவாய் நேர்ந்த நம் வாழ்வுகள் தாழ்வுகள், அஸ்திகள், அஸ்தியில் பூத்த நினைவுகள் - நாம் எல்லோருமே கண்ணீரின் நிழல்கள்.
லா. ச. ராமாமிருதம் (La. Sa. Ramamirtham) — 'அபிதா'