Reviews for மானசரோவர் [manasarovar]
25 reviews total
user_11970
★ 5/5 Feb 02, 2026அசோகமித்திரன் தன் ஆரம்ப காலங்களில் ஏறத்தாழ ஒரு தசாப்த காலத்துக்கு சினிமாவில் வேலை செய்தார். பின்னர் சினிமா தொடர்பாக வித்தியாசமான பரிமாணங்களில் தன் ஆகச்சிறந்த நாவல்களை எழுதினார். அவற்றில் முக்கியமானதும் முதன்மையானதுமானது இந்த மானசரோவர்.
மறைமுகமாக அல்லது துண்டு துண்டாக வெட்டிச் சொல்கின்ற தனது வழக்கமான பாணியில் இதிலும் நிறைய விடயங்களை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டிருப்பார் அ.மி. இந்த நாவல் வாசிப்பின் நிறைவில், அது வாசகர்களுக்கு ஏற்படுத்திய எண்ணங்கள் ஒவ்வொன்றையுமே தனித்தனி நாவல்களாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இன்னும் சில காலத்துக்குப் பிறகு இந்நாவலை மீள்வாசிப்புச் செய்தால், அது முதலில் ஏற்படுத்தியதிலிருந்து வித்தியாசமான வேறொரு உணர்வை நமக்குத் தரும் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை.
user_11969
★ 4/5 Feb 02, 2026அசோகமித்திரனின் முதல் புத்தகம் இது எனக்கு, படித்த பிறகு தகுந்த அளவு மனச்சோர்வு ஏற்பட்டது. மானசரோவர் சிறிய புத்தகம் போலத் தெரிகிறது, உண்மையிலேயே அப்படித்தான் உணர்கிறது — ஆனால் ஐந்து வாக்கியங்களுக்குள் நிலை மாறிவிடும். எழுத்தாளர் நாவல் முழுவதும் தக்கவைத்திருக்கும் மெதுவான, ஆழமான தீவிரம் அனுபவித்தால் மட்டுமே புரியும்.
கதை மிகவும் எளிமையானது, அசோகமித்திரனின் கதாபாத்திர வரைவுகளே கதையை நகர்த்துகின்றன. சத்யன் குமாரும் கோபாலும் இறுதியில் நெருங்கிய நண்பர்கள், அவர்களை உள்ளும் புறமும் அறிகிறோம். இருவரும் சிதைந்த, வேதனையுற்ற ஆன்மாக்கள், ஆறுதலும் அர்த்தமும் தேடும் தீவிர விருப்பத்தால் உந்தப்படுகிறார்கள் — எனவே புத்தகத்தின் தலைப்பு மானசரோவர், அந்த புராணக் கடலில் மனம் அமைதி காணும் இடம்.
ஆனால் புத்தகம் இன்னும் பல விஷயங்களைப் பேசுகிறது — இவ்வளவு சிறிய நாவலில் சென்னை, பிரிவினை, ஜவஹர்லால் நேரு, நட்சத்திரப் பிரகாசம், நம்பிக்கை, பைத்தியம், குழந்தைத் திருமணம் என்று பேசுகிறார் எழுத்தாளர்.
கடைசி அத்தியாயம் ஒரு அற்புதம் — வாசகனாக இந்த உச்சகட்டத்திற்காக தயார்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று தெரியும், நுண்ணறிவு இருக்கும், வெளிச்சம் தரும் சாட்சியங்கள் இருக்கும், கண்ணில் கண்ணீர் இருக்கும். ஆனாலும் கதையில் அவ்வளவு பின்னிப்பிணைந்திருப்போம்.
சாமி கோபாலிடம் "இதுதான் அவர் அடையக்கூடிய ஒரே மானசரோவர்" என்று சத்யனிடம் சொல்லச் சொல்லும்போது, தொடர்ந்து படிப்பதற்கு முன் ஒரு நொடி மூச்சை அடக்கினேன். இது ஒரு மாஸ்டர் தன் கலையில் — வாழ்வின் முடிவில்லாத மீட்பு தேடலையும் புரிதலையும், இரு வாழ்க்கைகளின் கதையாகவும் நட்பை விட ஆழமான பிணைப்பாகவும் சொல்கிறார். அசாதாரணமான படைப்பு.
user_11968
★ 5/5 Feb 02, 2026கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து வாசிக்கும் அசோகமித்திரனின் படைப்பு. மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்ட ஒரு நேரியல் அல்லாத வகைப் புதினம். கதையின் மாந்தர்கள் இருவரும் ஏதோ ஒரு இனம்புரியாத உளச்சிக்கலில் அவதிப்படுகின்றனர்.
இருவரும் ஏதோ ஒரு வகையில் நண்பர்கள் ஆகி இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் கதையின் போக்கு முடியும், மேலும் இருவரும் தங்கள் மனதில் அமைதியை அடைகிறார்கள். அசோகமித்திரனின் சிறந்த படைப்புகளில் ஒன்று.
user_11967
★ 3/5 Feb 02, 2026மானசரோவர் - அசோகமித்திரன் - மீள்வாசிப்பு
"வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி(மானசரோவர்), அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதுக்கு? மனம் சுத்தமானால் போதாதா?" - மானசரோவர்
அசோகமித்திரனை வாசிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வாசித்த நாவல். முதல் முறை வாசித்தபோது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத நாவல், அசோகமித்திரனை முதலில் படிக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்படும் அனுபவம். பிறகு அசோகமித்திரனின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்த பின்பு, அவர் எழுத்தின் சுவையை உணர முடிந்தது. ஒரே அமர்வில் வாசிக்கத் தூண்டும் சுவாரசியமான எழுத்தைக் கொண்டது இந்நாவல்.
குறிப்பாக இந்த நாவலின் அமைப்பு, புகழ்பெற்ற ஹிந்தி பட நடிகர் சத்யன்குமாருக்கும் சென்னை ஸ்டுடியோ ஒன்றில் மானேஜராகப் பணியாற்றும் கோபாலுக்கும் இடையேயான நட்பைச் சுற்றி நிகழும் கதை. கோபலின் கண்ணோட்டத்தில் ஒரு பகுதியும், தொடர்ந்து சத்யன்குமார் கண்ணோட்டத்தில் மற்றொரு பகுதி என முன்னும் பின்னுமாகக் கதை நகர்கிறது, இறுதியில் இருவரின் உரையாடலுடன் முடிகிறது.
தாய், தந்தை மற்றும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பெஷாவரிலிருந்து பம்பாய்க்கு வந்து பெரிய நடிகனான பின் தனக்கென்று ஒரு குடும்பமில்லை என்று வருந்தும், திருமணத்திலும் விருப்பமில்லாதவனுமான சத்யன்குமார் வாழ்வின் வெறுமையை உணர்கிறான். அளவற்ற புகழும் பணமும் இருந்தபோதிலும் குடும்பம் ஒன்றே தன்னுடைய பிரச்சினைக்கான காரணமாக நம்புகிறான். நேரெதிராக வசதியற்ற, பணிபுரியும் இடத்திலும் பெரிதாக மதிக்கப்படாத நபரான கோபால், தன்னுடைய பிரச்சனையின் ஊற்றாக மனைவி, மகள் மற்றும் தன்னுடைய இறந்துபோன மகன் என்று எண்ணுகிறான்.
தன்னுடைய குடும்பத்தைப் பேண முடியாத இயலாமையும் வாட்டுகிறது. இதனால் செய்வதறியாது சித்தர் ஒருவரிடம் தஞ்சமடைகிறான். இதற்கிடையில் இருவரின் நட்பின் ஊடாகக் கதை நகர்கிறது. இரண்டு இடங்களில் வெளிப்படும் ரகசியம், சற்றும் எதிர்பாராத திருப்பமாக உள்ளது. தொடர்கதையாக எழுதப்பட்டதால் இந்த சஸ்பென்ஸை வைத்தது போல் தோன்றுகிறது.
வழக்கமான அ.மி.யின் சிக்கனமான எழுத்து நடை, லேசான புன்னகையை வரவைக்கும் நகைச்சுவை, ஸ்டுடியோ நாட்கள், அமெரிக்க இலக்கிய மேற்கோள், எதிர்பாராத கடைசித் திருப்பம் என அ.மி.யின் சுவாரசியத் தருணங்கள் நிறைந்த நாவல்.
எனது முதல் 5 அ.மி. நாவல் வரிசை: 1. கரைந்த நிழல்கள் 2. தண்ணீர் 3. 18வது அட்சக்கோடு 4. மானசரோவர் 5. ஒற்றன்
user_11966
★ 4/5 Feb 02, 2026மானசரோவர் நாவல் குறித்து ஒரு காணொலி மதிப்புரையும் உள்ளது. அசோகமித்திரனின் இந்த நாவல் சினிமா உலகின் பின்னணியில் நடக்கும் இரண்டு மனிதர்களின் நட்பையும் அவர்களின் உள்ளக் குழப்பங்களையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது. வாசிக்கத் தூண்டும் படைப்பு.