Reviews for எஸ்தர்

18 reviews total

user_11617

★ 5/5 Feb 02, 2026

ஒவ்வொரு கதையும் நியோ-நோயர் வகையை சேர்ந்தது. ஒரு கதை கூட ஏமாற்றம் தராது. சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று. எந்தக் கதையை பிடித்தது என்று தேர்ந்தெடுக்கவே முடியாத அளவு அனைத்தும் அற்புதம்.

user_11616

★ 5/5 Feb 02, 2026

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பானவை. எல்லாம் சிறிய கதைகளாகவே இருக்கின்றன, ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கம் மனதை விட்டு நெடுநேரத்திற்கு போக மறுக்கிறது.

எஸ்தர் கதையில் வரும் எஸ்தர் எல்லா வீடுகளிலும் இருப்பதாக எனக்குப் படுகிறது. பள்ளி நாட்களில் துணைப் பாடப் பகுதியில் படித்த கரையும் உருவங்களை மறுபடியும் படிக்கையிலும் கண்கள் கண்ணீர் விட மறுக்கவில்லை. ஆகமம் என்னும் கதை மிகவும் நுட்பமானது. வெளிச்சம், யுகதர்மம், விமோசனம், மனைவி போன்ற அனைத்து கதைகளும் ஏதோ ஒரு வகையில் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.

user_11615

★ 4/5 Feb 02, 2026

இவை எதுவுமே சிறுகதைகள் அல்ல — பெரும் கதைகள். வாழ்க்கையின் வறுமையை, வறுமை தரும் சோகங்களை, யதார்த்தத்தை, அதை மீறிய முடிவில்லா எதிர்பார்ப்புகளை, அந்த எதிர்பார்ப்புகளின் சந்தோஷங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு கதையிலும் எத்தனை கதைமாந்தர்கள், எத்தனை குடும்பங்கள், எத்தனை வாழ்க்கை முறைகள் — படிக்கப் படிக்க பெருகிக் கொண்டே வருகிறது, தோண்ட தோண்ட கிடைக்கின்ற தங்கம் போல். இந்தத் தங்கப் புதையலிலும் சில வைரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எஸ்தர், யுக தர்மம், அயோத்தி, அவனூர், கரையும் உருவங்கள் — இவையெல்லாம் நான் கண்ட வைரங்களே.

user_11614

★ 4/5 Feb 02, 2026

இது வண்ணநிலவன் அவர்களின் நான் வாசிக்கும் முதலாவது புத்தகம். 1976ல் வெளிவந்த 17 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. இந்த சிறுகதைகள் ஆங்கிலத்தில் Neo-noir என்று சொல்லக்கூடிய வகையைச் சேர்ந்ததாக உணர்கிறேன். மக்களின் வாழ்க்கையின் கருப்புப் பக்கங்களை எடுத்துக்காட்டுவதே Neo-noir.

அனைத்துக் கதைகளும் மிக உயிரோட்டமாக, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக தோன்றியது. ஒரு கதையின் முடிவு அடுத்தக் கதையின் தொடக்கமாக உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது. வெவ்வேறு குடும்பங்களின் வறுமையால் பின்னிப்பிணைந்த துன்பங்களை நேர்த்தியாகப் படைத்துள்ளார், குறிப்பாக எஸ்தர் சித்தியும் ஈசாக்கும். படைப்பாளியின் திறனை என்னவென்று பாராட்ட — ஒரு வித கனமான இதயத்துடன் அவரின் மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

user_11613

★ 5/5 Feb 02, 2026

இது ஒரு அற்புதமான படைப்பு. நான் மேலோட்டமாக கதைகளை படிக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. சிறுகதை தானே என்று இதை அணுகி விட முடியாது. அத்தனை ஆழம் கொண்டு மனதில் பாரம் ஏற்றுகிறது.

23 பக்கங்களில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மையும் உணர வைப்பது பாராட்டுக்குரியது. சில பகுதிகளை இரண்டாம் முறை படிக்க வேண்டியிருந்தது — அப்போதுதான் உண்மையான ஆழம் புரிந்தது. கனமான இதயத்தோடு முடிக்கும் அழகான சிறுகதை.

user_11612

★ 4/5 Feb 02, 2026

வண்ணநிலவனின் கடல்புரம் நாவல் மூலம் அவரை அறிந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிமுகப்படுத்திய புத்தகம் இது. 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

அதில் எஸ்தர் கதை என்னை மிகவும் பாதித்து விட்டது. எஸ்தர் சித்தி கதாபாத்திரம் சில நேரங்களில் என் தாயின் முகத்தை என் முன் கொண்டு வந்து நிறுத்தியது. எங்களை வளர்க்க அவள் பட்ட கஷ்டம் தான் காரணம்.

ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் பஞ்சம், வறட்சியின் காரணமாக பிழைக்க வழியில்லாமல் இடம்பெயர்கிறார்கள். அதில் ஒரு குடும்பம் மட்டும் இருக்கிறது. அவர்களின் கதை தான் எஸ்தர். ஒரு 12 பக்க சிறுகதை என்னை வாட்டி எடுத்து விட்டது.

user_11611

★ 4/5 Feb 02, 2026

மிகவும் அருமையான ஒரு சிறுகதை. வெறும் இருபது பக்கங்கள் கொண்டிருந்தாலும் அவ்வளவு வேகமாக முடித்து செல்ல முடியவில்லை. மனிதர்களின் இயலாமையை நேர்த்தியாக வெளிக்காட்டுகிறது.

நொறுங்கிக்கொண்டு இருக்கும் குடும்பத்தை தாங்கி நிற்கும் நெடுந்தூண் தான் எஸ்தர். எஸ்தர் என்ற பெண்மணியின் வலிமையை உணர்த்துகிறார் எழுத்தாளர். பாட்டி, எஸ்தர் சித்தி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறைகளின் விம்மல்களை இத்தனை பக்கங்களினுள் அடக்கியது அற்புதம். முதல் ஐந்து பக்கங்கள் வேகமாக சென்றன. பிறகு மனதிற்குள் ஏதோ ஒரு பாரம். நீர் இல்லாத ஒரு நிலத்தை பற்றி வாசிக்கையில் என்னவென்று தெரியாத ஒரு படபடப்பு. இவ்வுலகில் மனிதர்கள் எவ்வளவு சின்ன புள்ளிகள் என்று உணர்த்துகிறார் வண்ணநிலவன். அனைவராலும் கண்டிப்பாக வாசிக்கப்படவேண்டிய ஒரு சிறுகதை.

user_11610

★ 4/5 Feb 02, 2026

முதன்முதலில் இச்சிறுகதையைப் படித்தபோது சராசரிக்கும் குறைவான சிறுகதை என்றே எண்ணியிருந்தேன். இம்முறை உள்ளார்ந்த ஆர்வத்தோடு படிக்கும்போது, பஞ்சத்தைப் பற்றி இதைவிட வீரியமாக வேறு எப்படியும் விவரித்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

அடிக்கும் காற்றில், கொளுத்தும் வெயிலில், நிசப்தமான இரவில் என எங்கும் வறுமை வியாபித்திருக்கிறது. வீட்டில் இருந்த கடைசி தீக்குச்சியும் தீர்ந்து போக, சுள்ளிகளைப் போட்டு இரவு பகலாக நெருப்பை அணைய விடாமல் பாதுகாக்கும் அளவிற்கு வறுமை வாட்டும் வாழ்க்கை.