Reviews for இலக்கற்ற பயணி

22 reviews total

user_11493

★ 5/5 Feb 02, 2026

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு பயணியும் கூட. பயண நூல்களை பல எழுதியிருக்கிறார், தேசாந்திரி என்ற பெயரில் பதிப்பகமே நடத்துகிறார். வாழ்நாள் முழுவதும் இந்தத் தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கு வரை அலைந்திருக்கிறார்.

வரலாற்று இடத்தில் நின்று கொண்டு அந்தக் காலத்தையும் அந்தக் காலத்து மனிதர்களையும் நினைவில் கொண்டுவந்து அவர்களின் மூச்சுக்காற்றை சுவாசிப்பது அலாதியான உணர்வு. கபிலகுன்றில் நின்று கபிலரை நினைப்பதும், பறம்பு மலையில் நின்று பாரியை நினைப்பதும் வரலாற்றை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

அதே நேரத்தில் ஒவ்வொரு வரலாற்று இடமும் சீரழிந்து கிடப்பதும், கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டிருப்பதும் வேதனையளிக்கிறது. பாரியின் மகள்கள் அங்கவை சங்கவையின் வாழ்வுக்காக கபிலர் பெரிதும் உழைத்ததும், இறுதியில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததும் மனதை உருக்கும் வரலாறு.

user_11492

★ 5/5 Feb 02, 2026

நம்மை ஒரு பயணியாக மாற்றுவது மட்டுமில்லாமல், எல்லாவற்றையும் ரசிக்கும் ரசிகனாக மாற்றும் வல்லமை கொண்ட வரிகள் எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள்.