Reviews for இலக்கற்ற பயணி
22 reviews total
user_11503
★ 4/5 Feb 02, 2026ஆசிரியரின் எழுத்து பல முறை கடல் கடந்து அவர் குறிப்பிட்ட இடத்திற்கே நேரில் சென்று பார்த்த அனுபவத்தைக் கொடுத்தது. மனதிற்கு இதமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
இப்புத்தகத்தை வாசித்த பிறகு பயணப் பட்டியலில் பல இடங்கள் சேர்ந்தன — கோனார்க் சூரியன் கோவில், கழுகு மலை, ஹரித்துவார், கொடும்பாளூர், கொற்கை, ஒரிசாவில் உள்ள தௌலி, ஸ்ரீரங்கத்தில் உள்ள விஜய கோபாலசுவாமி கோவில், நயாகரா மற்றும் சிங்கப்பூர்.
கூட்ஸ் வண்டிப் பயணமும் ரயில் பயணமும் மிகவும் பிடித்தது. நவகண்டம் என்னும் புதிய சொல்லைக் கற்றுக்கொண்டேன் — முந்தைய நாட்களில் தன் தலையைத் தானே அறுத்து பலியிடும் முறை. இதைச் செய்வதற்கு எந்த அளவிற்கு துணிவு வேண்டும் என்றே தோன்றியது. முற்றிலுமாக ரசித்து வாசித்த புத்தகம்.
user_11502
★ 5/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணனுடனான மூன்றாவது பயணம். புத்தகங்களின் பக்கங்களினூடே பயணிப்பதும், பயணப் புத்தகங்கள் வாசிப்பதும் மிகவும் பிடித்தமானவை. 27 தலைப்புகளில் 27 இடங்களுக்கு எளிமையான கவிக்கண்ணோட்டத்துடன் பயணிக்கிறோம்.
எஸ்.ராவின் வார்த்தைகள் புகைப்படங்களின் தேவையின்றி இடங்களை மனக்கண் முன் நிறுத்தும். ரயில் பயணங்களை விவரிக்க மனமே தண்டவாளத்தில் ஓடும் ரயிலாகும், நயாகராவை விவரிக்க அதன் சாரல் பக்கங்களினூடே நம்மீது தெறிக்கும்.
வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் சின்ன சின்ன விஷயங்களையும் நின்று, கூர்ந்து கவனித்து, ரசித்து, வியந்து உணர்ந்து வாழ வேண்டும் என இவரது எழுத்துநடை தூண்டுகிறது.
user_11501
★ 5/5 Feb 02, 2026இலக்கற்ற பயணி ஒரு இனிய வாசிப்பு அனுபவம். எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து பயணித்தது போன்ற உணர்வை அளிக்கும் அருமையான நூல்.
user_11500
★ 3/5 Feb 02, 2026பயணம் தனக்கு அளித்த அனுபவங்களை ஆசிரியர் நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். ஒரு குறிக்கோளுடன் பயணிப்பதை வலியுறுத்தும் இப்புத்தகம், புவியியல் தகவல்களை பிற கலைஞர்களின் படைப்புகளுடன் ஒப்பிட்டு விவரிக்கிறது. படிக்கத்தக்க நூல்.
user_11499
★ 4/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணனின் பயணக் கட்டுரைகளை வாசிக்கும்போது உடனடியாக எங்காவது பயணம் செல்ல வேண்டும் போல் தோன்றுகிறது.
கனடா ஏரிகளின் அழகு முதல் ஹம்பியின் நிழல்கள் வரை எத்தனை பயணங்கள். கபிலர் முதல் போர்ஹே வரை அவர் வாசித்த எழுத்துலகம் மிகப் பெரியது. நவகண்டம் போன்ற கட்டுரைகளில் நம் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கத் தவறுவதை எடுத்துரைக்கிறார்.
கண்ணகி சென்ற வழித்தடங்கள், நெட் கெல்லி, சிங்கப்பூர், கூட்ஸ் ரயில் பயணம் என நிறைய புதிய விஷயங்களை இந்தப் புத்தகம் வழியாக தெரிந்துகொண்டேன். அன்றாட தேவைகளுக்கான தண்ணீருக்கே போராடும் கிராமங்களையும் நயாகரா அருவியையும் ஒப்பிட்டு ஆசிரியர் எழுதியிருக்கும் கட்டுரையின் ஆழம் மனதைத் தொடுகிறது.
user_11498
★ 5/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணனின் வார்த்தைகளுடன் இணைந்து கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹம்பி என பல இடங்களுக்கு அற்புதமான பயணம் மேற்கொண்டேன். எளிமையான எழுத்து நடையில் பலரால் எட்ட முடியாத ஒரு அழகு வெளிப்படுகிறது.
பயணம் என்பது வெறும் உடல் ரீதியான இடமாற்றம் அல்ல — ஒரு இடத்தின் வரலாற்றிலும் பின்னணியிலும் மூழ்குவதே உண்மையான பயணம் என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது.
அனுபவமிக்க முனிவரைப் போல் நுட்பமாக தன் அனுபவங்களை பின்னி, ஒவ்வொரு இடத்தையும் இணைத்து, கலாசாரங்களுக்கும் நிலப்பரப்புகளுக்கும் இடையிலான மறைந்த தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
user_11497
★ 5/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளை படிப்பதே ஒரு அலாதி இன்பம். வாழ்வை அணுஅணுவாக ரசிப்பது எப்படி என்பது அவரது எழுத்தின் மூலம் புரியும்.
புத்தகத்தை படித்து முடித்தபின் இதனுள் இருக்கும் எழுத்துக்கள் நம்மை இருந்த இடத்திலிருந்தே கனடா, டொராண்டோ, சிங்கப்பூர், ஹம்பி, லூதியானா, விழுப்புரம், மதுரை, பறம்பு மலை என உலகையே சுற்றிக்காட்டுகின்றன. சுற்றுலா, இலக்கியம், ஓவியம், சிற்பம், நாடகம் என கலைகளையும் தழுவி வருகிறது. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் அழகையும் எடுத்துரைக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
user_11496
★ 5/5 Feb 02, 2026எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு மனதை கிறங்கடிக்கும் ஆற்றல் உண்டு. அவை வெறும் எழுத்துக்களின் குவியல் அல்ல — தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் கோர்க்கப்பட்ட அழகான சரடுகள்.
பயணம் குறித்து எல்லோருக்கும் கனவுகள் உண்டு, திட்டங்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் பயணங்களே அல்ல என்கிறார் எஸ்.ரா. பயணம் என்பதில் திட்டமிடல் இருக்காது, சாப்பாட்டு பொட்டலங்கள் இருக்காது. வானில் பறக்கும் பறவையின் நிழல் தண்ணீரில் பட்டுச்செல்வதைப் போல தன்னிருப்பை உலகின் மீது படியவிட்டுப் பறந்து போகிறவனே பயணி.
ஏரிகள், கடல், ஓவியம், நூலகம், சிற்பங்கள், கல்வெட்டுகள், பனிப்பிரதேசம், ரயில் பயணம் என இப்புத்தகம் பல தளங்களில் நம்மை அழைத்துச் செல்கிறது. தண்ணீர் குறித்த எஸ்.ராவின் பார்வை அற்புதமானது. கனடாவின் ஏரிகள் குறித்த அவரது எழுத்து வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
கடலைப் பற்றி தனுஷ்கொடி, கொற்கை என இரண்டு இடங்களில் எழுதுகிறார். பின்னிரவுகளைப் பற்றிய நுட்பமான எழுத்து, கூட்ஸ் ரயில் பயணம் பற்றிய கட்டுரை, பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்த கவலை — எல்லாமே மனதில் நிற்கும் எழுத்துக்கள். எஸ்.ரா சமகால எழுத்துலகின் சிற்பி என்றால் அது மிகையல்ல.
user_11495
★ 4/5 Feb 02, 2026பயணத்தின் அருமையையும் அவசியத்தையும் ரசனையோடு விவரிக்கும் நூல். இயற்கையில் உள்ள கல், மண், மலை, கடல், ஏரி, நீர்வீழ்ச்சி என பயணத்தில் கண்டவற்றின் அழகை தத்ரூபமாக ரசித்து வர்ணித்துள்ளார்.
படிக்கும்போதே நாமும் இவ்விடங்களுக்குப் போக வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. இயற்கை மட்டுமின்றி, இலக்கிய ஆளுமைகளின் நினைவிடங்கள் மற்றும் இலக்கியத்தில் இடம்பெற்ற இடங்களையும் மிகச்சிறப்பாக விவரித்துள்ளார்.
user_11494
★ 4/5 Feb 02, 2026எழுத்தும் வாசிப்பும் வழிப்பயணத்தின் ஒரே பாதை. அப்பாதையில் தான் சென்ற இலக்கற்ற பயணங்களுக்கு எம்மையும் அழைத்துக்கொண்டு செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒவ்வொரு பயணமும் இயற்கை, இலக்கியம், கலை, வரலாறு, மனிதம் என ஒவ்வொரு தளத்திற்கு அழைத்துச்செல்கின்றன.
கவிநயம் மிகு எழுத்து காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, தேன் உண்ட வண்டின் கிறக்கத்தைப்போல் பயணிக்கும் வேட்கையை மனதில் தள்ளாடவைக்கிறது.