Reviews for என் சரித்திரம்

23 reviews total

user_11349

★ 5/5 Feb 02, 2026

நமது சில தேடல்கள்தான் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது. நிம்மதி தேடல், செல்வத்தின் தேடல், அறிவு தேடல் எனப் பலருக்கு வெவ்வேறு வகையான தேடல்கள் உண்டு. சில சமயம் மனதில் உள்ள விடையறியா கேள்விகளே தேடலுக்கு விதையாக அமையும்.

ஆனால் நம் நாயகர் உ.வே.சாவின் தேடலோ உலகில் உள்ள உன்னதங்களின் தலையாய பொருளைப் பாருக்குக் காட்டியது. உத்தமதானபுரம் — பசுமையும் வியர்வையும் நிறைந்த ஊர். அவரின் சொந்த வரிகளில், இவ்வளவு ரூபா என்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அக்காலத்து உத்தமதானபுரவாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்துவிடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.

உத்தமதானபுரத்து மக்கள் நிம்மதியைத் தனிப் பொருளாகத் தேட வேண்டியது என்று எண்ணாமலே அதனை வாழ்வின் அங்கமாகக் கொண்டிருந்தனர். இவ்வளவு அழகான ஊரில் பிறந்த நாயகரோடு அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து பார்க்க முயலும் அனுபவம் தரும் நூல் இது.

user_11348

★ 5/5 Feb 02, 2026

அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது. தமிழ் தாத்தா உ.வே.சாவின் பிறப்பு முதல் மணிமேகலை பதிப்பிக்கும் வரையிலான வாழ்க்கையை விவரிக்கும் சுயசரிதை. அக்காலத் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலை அழகாகப் பிரதிபலிக்கிறது.

சமஸ்கிருதமும் இசையும் மதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தும், தமிழ் கற்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார். கடும் வறுமையிலும் நல்ல ஆசிரியரைத் தேடி ஊர் ஊராகக் குடிபெயர்ந்தது அவர் குடும்பம். புகழ்பெற்ற தமிழ் வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவரானார்.

பிள்ளையவர்கள் மறைவுக்குப் பின் திருவாவடுதுறை மடத்தின் துணையோடு கற்பித்தலையும் கற்றலையும் தொடர்ந்தார். கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியரானார். சேலம் இராமசாமி முதலியார் ஊக்கத்தால் சங்க இலக்கியங்களில் கவனம் செலுத்தினார்.

ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்த அனுபவங்கள் பிரமிக்க வைக்கின்றன. உ.வே.சாவின் உழைப்பு இல்லையென்றால் இந்தச் சங்கச் செல்வங்கள் என்றென்றும் அழிந்திருக்கும். தமிழ் மீதுள்ள காதல் சாதி, மதம், மொழி எல்லைகளைக் கடந்தது என்பதை இந்நூல் அழகாகக் காட்டுகிறது.

user_11347

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபின் ஒரு நண்பரை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. உ.வே.சாவின் உலகில் நம்மை முழுமையாக ஈர்த்துக்கொள்கிறது இந்நூல். சுயசரிதை படிப்பதைவிட அவரோடு நேரடியாக உரையாடுவது போன்ற அனுபவம் கிடைக்கிறது.

தன் பிறப்பிடம், குடும்பம், மூதாதையர் பற்றிய விவரணை நம்மை அவரின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. குருகுலவாசம், பல்வேறு நூல்கள், பயணங்கள், சவாலான சூழ்நிலைகள் என அனைத்தையும் தெளிவாகப் பகிர்கிறார். அக்காலத் தென்னிந்தியாவின் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கிறது.

சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பதிப்பிக்க அவர் எடுத்துக்கொண்ட பாடு அளவிடற்கரியது. அவரின் பொறுமையும் ஆராய்ச்சி உழைப்பும் இல்லையென்றால் இன்று அந்தத் தமிழ்ச் செல்வங்கள் நமக்குக் கிடைத்திருக்காது. தமிழ் தாத்தா என்ற பெயருக்கு முற்றிலும் தகுதியானவர்.

800 பக்கங்கள் கொண்ட சுயசரிதை கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும் என்பதற்கு இந்நூலே சிறந்த உதாரணம். கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!