Reviews for இடக்கை
21 reviews total
user_10727
★ 5/5 Feb 02, 2026இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த இடதுசாரிகளை கொண்ட பாராளுமன்றம் அமையும் இந்த நேரத்தில் இந்த நாவல் மிக முக்கியமான செய்திகளை எடுத்துக் கொண்டு வந்தது. அரசு இயந்திரம் எப்படி சாமானிய மக்களை சீரழிக்கிறது என்பதனை இந்த நாவல் பேசுகிறது.
ஒளரங்கசீப்பின் இறுதிநாளில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவர் ஒளரங்கசீப்பின் விசுவாசி, அரசியல் கைதி. கைதான உடனே விசாரணை என்கிற தண்டனை தொடங்குகிறது. இன்னொருவர் சாமானியன், தாழ்த்தப்பட்டவர். காத்திருப்பு என்கிற தண்டனை தொடர்கிறது. இந்த இழையில் இருந்து இந்தியாவின் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் நீதியை, நீதிமுறையை விசாரணை செய்கிறது இந்த நாவல்.
மரணம் பற்றிய பயம். அதிகாரத்தின் கருணையற்ற இரும்பு கை. முட்டாள்களின் அரசாட்சி. நீதிக்காக காத்திருத்தல். எந்த அரசாட்சியிலும் பெண்களின் நிலை. பசி. ஆட்சியாளர்களுடைய கவிதை பற்றிய பயங்கள். அரசியலில் வியாபாரம். வியாபாரிகளின் அரசியல். காதல். சாதியத்தின் கொடூரங்கள். அன்பிற்காக ஏங்கும் மனித மனங்கள் மற்றும் அதனுடைய இருள் என பல தளங்களில் இந்த நாவல் விரிந்து பரந்து செல்கிறது.
பொதுவாக எஸ்.ரா அவர்களுடைய எழுத்தில் திருடர்கள், பெண்கள், குழந்தைகளின் உலகங்கள் கவித்துவமாக வெளிப்படும். மாய யதார்த்த களம் என்பது அவருக்கு சொந்த மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போன்றது.
ஒளரங்கசீப் மனதில் நினைத்துக் கொள்வார்: "மரணத்தின் காலடி ஓசைகள் கேட்கிறது. ஆனாலும், அது என் அறைக்குள் வர என் அனுமதி கேட்டு காத்திருக்கிறது." இந்த ஒருவரி ஒளரங்கசீப் என்ற மனிதனின் மொத்த வாழ்க்கையை விவரிக்கிறது.
நாவலின் ஒரு அத்தியாயத்தில் ஒரு புழு நீதி கேட்டு செல்கிறது. ஒரு தேரோட்டிக்கு தண்டனை தரப்படுகிறது. புழு சொல்கிறது, குற்றம் செய்தவள் ராணி, அவளை தண்டிக்க வேண்டும். பின்னர் புழு கடவுளை நீதி கேட்க அழைத்து வருகிறது. ராணி குற்றவாளி என தீர்ப்பு வந்த பிறகு புழு அவளை மன்னித்து விடுகிறது. விசாரணைக் கைதிகள் தனக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற செய்தியை எடுத்துக் கொள்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமானால் இறைவனே நேரில் வர வேண்டும் என்கிற செய்தியை கதாநாயகன் எடுத்துக்கொள்கிறான். மன்னிப்பே பெரிய தண்டனை என்பதனை வாசகன் கொள்கிறான்.
இந்தக் கதையின் நாயகன் ஒளரங்கசீப் அல்ல. மொத்தக் கொடுமைகளையும் அனுபவித்த சாமானியன் தூமகேது தான் இந்தக் கதையின் நாயகன். அவன் இந்தப் பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் காணாமல் போய் விடுகிறான். திடீரென ஒரு கலவரத்தில் கையில் கத்தியுடன் நிற்கிறான். கொஞ்ச நேரம் கழித்து பல்லாயிரம் மைல் தூரம் கடந்த ஆற்றில் பிணமாக வருகிறான். இது ஒரு தூமகேதுவின் கதை அல்ல. இந்நாட்டில் உள்ள அனைத்து சாமானியனும் தூமகேது தான்.
அடையாளம் துறத்தல் எவ்வளவு ஆனந்தமானது என்பதற்கு ஒரு அருமையான காட்சி வருகிறது. ஒளரங்கசீப் மாறுவேடத்தில் நகர்வலம் வரும்போது ஒருவர் "சகோதரா!" என்று அழைக்கிறார். அவனது மதம், மொழி, சாதி தெரிந்தவுடனே தான் அவன் நண்பனாகவோ எதிரியாகவோ ஆள்பவனாகவோ அடிமையாகவோ மாறி விடுகிறான்.
இறுதியில் தூமகேது தூக்கு கயிற்றை விற்றுக் கொண்டு வருகிறான். மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறான்: "தப்பித்தல் என்பது வேறு, விடுதலை என்பது வேறு." கணவனுக்கு உடல் சுகம் தர முடியாத மண்ணாலான பெண் தன் உடலைக் கரைத்து மதுவாக மாற்றி கணவனுக்கு தருகிறாள். மதுவின் வெறி அதிகமாக அவளை மொத்தமாக கரைத்து குடித்து விடுகிறான். இப்போது அவனிடம் கிணறு நிறைய மது இருக்கிறது. ஆனால், மனைவி இல்லை.
"அள்ளிக் கொள்ளுங்கள்" என்று வாசகன் முன்பு ஒரு பெரும் கடலை விரித்து வைத்துள்ளார் ஆசிரியர்.