Reviews for இடக்கை

21 reviews total

user_10737

★ 3/5 Feb 02, 2026

நம் உடலில் ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டு கைகளுக்கும் ஒரே மதிப்பு கொடுப்பதில்லை. வலக்கைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இடக்கைக்கு கிடைப்பதில்லை. வலது கை யாருக்கும் தெரியாமல் எத்தனை தீமைகளை செய்கிறது — அதனை இடக்கை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்க்கிறது. இந்த மண்ணில் நீதி மறுக்கப்பட்டு நீதிக்காக காத்திருக்கும் மனிதர்களை பற்றிய கதையே இடக்கை.

ஒளரங்கசீப் இறக்கும் தருணத்துடன் கதை தொடங்குகிறது. அவரது அந்தரங்க மெய்காப்பாளரான அஜ்யா என்ற திருநங்கையும், சத்கர் நாட்டில் தூமகேது என்ற தொழிலாளியும் செய்யாத குற்றத்திற்காக சிறைபிடிக்கப்படுகிறார்கள். அஜ்யா சிறையிலேயே சித்திரவதை செய்து கொல்லப்படுகிறாள். தூமகேது தப்பித்து தன் குடும்பத்தைத் தேடி அலைகிறான்.

ஒவ்வொரு கதையும் வாசகனிடம் ஒரு கருத்தை விதைத்து செல்லும். இந்த உலகில் மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர் — உண்மை அறிய விரும்பாதவர், அறிந்தும் குழப்பத்தில் உள்ளவர், தான் அறிந்த உண்மைகளை உலகிற்கு உரக்க சொல்பவர்கள்.

user_10736

★ 4/5 Feb 02, 2026

ஆட்சியும் அதிகாரமும் தோன்றிய காலத்திலிருந்தே மறுக்கப்பட்ட நீதிக்கான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படி நீதி மறுக்கப்பட்டவர்களின் வேதனைக் குரலே இடக்கை.

மாபெரும் இந்துஸ்தானத்தின் மன்னர் ஔரங்கசீப் தன் மரணம் எப்படி நிகழும் என்று தெரிந்துகொள்ள பாலைவனத்தில் உள்ள சூஃபியைப் பார்க்க பயணப்படுவதாக கதை தொடங்குகிறது. வாழ்வின் சுகபோகங்களை அனுபவித்த மன்னருக்கு பாலைவன வெயிலும் வறட்சியும் ஒரு மனிதன் நிம்மதியாக வாழ ஒரு மரமும் அது தரும் நிழலும் மட்டும் போதாதா என்று யோசிக்க வைக்கிறது.

அதிகாரம் தரும் அகந்தையும் அறியாமையும் எவ்வளவு கொடூரம் என்பதை ஔரங்கசீப்பின் செயல்களும், முட்டாள் அரசன் பிஷாடன் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவிக்கும் இடமும் உணர்த்துகின்றன. அதிகாரத்திற்கு தெரிந்ததெல்லாம் அடக்குமுறை மட்டுமே.

அஜ்வா என்கிற திருநங்கையும் தூமகேதுவும் எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யப்படுகிறார்கள். இடக்கை பற்றியான குறிப்பு கதை நெடுக தொடர்கிறது — இடக்கை என்பது வெறும் உடலின் அங்கம் அல்ல, அது மறுக்கப்பட்ட நீதிக்கான அடையாளம்.

அஜ்வாவும் தர்சனும் சந்திக்கும் உரையாடல் மனித மனதின் உச்சம். சக மனிதனின் அதீத கோபத்தையோ வெறுப்பையோ ஏற்றுக்கொள்கிற மனம், அதீத அன்பை மட்டும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

தூமகேது தனிமனிதன் இல்லை — கடைசி வரை தனக்கான நீதியை பெறாமல் நிற்கிற மனிதர்களின் அவலக் குரல் தான் தூமகேது. இடக்கைகளாக ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கண்டும் காணாமல் கடந்து போகிற சாமானிய மனிதர்களின் போராட்டமே இடக்கை.

user_10735

★ 4/5 Feb 02, 2026

ஔரங்கசீப் காலத்தில் நடக்கும் இக்கதை நேரியல் அல்லாத பாணியில் எழுதப்பட்டுள்ளது. பல விசித்திர மனிதர்களை நேரில் சந்தித்தது போல ஒரு அனுபவம். ஆங்காங்கே கற்பனையின் சாயலும் தென்படுகிறது.

user_10734

★ 3/5 Feb 02, 2026

புத்தகத்தில் நிறைய சாத்தியங்கள் இருந்தன, ஆனால் அவசரமாக முடிக்கப்பட்ட உணர்வு இருந்தது. நாவல் சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பித்தது. ஆனால் கதை தனது முக்கிய கதாபாத்திரத்துடன் நோக்கமின்றி அலைந்தது. வரலாற்றுப் பின்னணி ஒரு சாமானியனின் கதையை சொல்ல வலிந்து பொருத்தப்பட்டது போல் தோன்றியது. கதாபாத்திரங்கள் குறுகிய ஆயுளுடனும், போதிய ஆழமின்றியும் வீணாக்கப்பட்டன.

user_10733

★ 4/5 Feb 02, 2026

இந்த நாவலைப் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே வாசிக்க ஆரம்பித்தேன். முதலில் வாசிப்பிற்கு பிடிகொடுக்காமல் இருந்த நாவல், நேரம் செல்ல செல்ல வசப்பட்டது.

இந்த நாவல் பலவாறு தன்னை விரித்துக்கொண்டு செல்கிறது. பல கதைகள் ஒரு மையத்தை நோக்கி நடக்கின்றன. அந்த மையம் நீதி. நீதி என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டதன்று. அது இடத்திற்கு தகுந்தவாறு வளைக்கப்படும். ஆளுக்கேற்றவாறு அதை வளைத்துக் கொண்டு வாழ்வதே அதிகாரத்தில் இருப்பவர்களின் வாடிக்கை.

நீதியினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களும், சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருப்பவர்களும், கீழ்சாதியினரும் தான். இதை சொல்வதே இடக்கை.

user_10732

★ 4/5 Feb 02, 2026

ஒரே ஒரு கதை கொண்ட நாவல் அல்ல இது — கதைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து, தொடர்பற்றவையாகவும், உங்கள் சொந்த விளக்கத்திற்கு விடப்பட்டவையாகவும் இருக்கின்றன. இருப்பினும் சாதாரண வாசகர்களுக்கு அருமையான வாசிப்பனுபவம்.

user_10731

★ 4/5 Feb 02, 2026

கை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. வலக்கைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இடக்கைக்கு எப்போதும் கிடைப்பதில்லை. "இடக்கை" என்ற தலைப்பே நாவலின் முக்கிய கருத்தாக்கத்தை ஆழமாய் பதித்துவிடுகிறது.

இந்நாவல் இல்லாதவர்களின் வாழ்வையும், அவர்களின் இயலாமையையும், நீதிகளின் மறுபக்கத்தையும் விரிவாயும் அழுத்தமாயும் பேசுகிறது. ஒளரங்கசீப்பின் அந்திமக் கால வரலாற்றுக்கதையை வேராய் பற்றி, சமகால பிரச்சினைகளின் கதாபாத்திரங்களை அக்காலப் பாத்திரங்களின் புனைவுகளாய் உட்புகுத்தி நம்மை ஈர்த்துக்கொள்கிறது.

கதை ஒரு தளத்தில் தொடங்கி நேர்கோட்டில் செல்லாமல் பல்வேறு கதாபாத்திரங்களை புகுத்திக் கதைக்குள் கதையாக விரிகிறது. தூமகேது சிறுபான்மை இனத்தில் பிறந்து, பொய்யான குற்றம் சாட்டப்பட்டு காலாச் சிறையில் தள்ளப்படுகிறான். அவனது ஏழ்மையும், பிறந்த சாதியும், அவனுக்கெதிராக அத்தனை சாட்சியங்களையும் வரவேற்கிறது.

சமகால நீதி எப்படி உள்ளவனுக்கு ஒரு விதமாகவும் இல்லாதவனுக்கு ஒரு விதமாகவும் கொடுக்கப்படுகிறது என்பதை புனைவோடு நகர்த்திச்செல்கிறார் ஆசிரியர். இந்நாவல் அரசியல், நீதி, சாதீயம், மொகலாய அரசின் வீழ்ச்சி என எல்லா நிலைகளையும் தொட்டிருப்பதும் தத்துவார்த்த கருத்தியல்களை கொண்டிருப்பதும் பெரும் பலம்.

user_10730

★ 2/5 Feb 02, 2026

எஸ்.ராவின் இடக்கையால் எழுதியது போல் ஒரு விசனத்தை தரும் இந்தப் படைப்பு எந்த வகையில் நாவல் வரிசையில் அடங்கும் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தூமகேது, ஆய்ஜா, பிசாடன், ஔரங்கசீப், சம்பு போன்ற கதாபாத்திரங்கள் சிறு குட்டிக்கதைகள் மூலமாக எங்கும் ஒட்டாமல் பயணிப்பது அலுப்பை தருகிறது. ஏதோ எழுதவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக எழுதியது போன்றும், இடக்கைக்கும் இக்கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போன்ற பிரமையைத் தருகிறது. மொத்தத்தில் எஸ்.ராவின் மிக மோசமான படைப்பு எது என்றால் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது.

user_10729

★ 3/5 Feb 02, 2026

இந்த நாவல் எஸ்.ராமகிருஷ்ணனின் முந்தைய படைப்புகளின் பல அம்சங்களை பிரதிபலிக்கும் ஒரு வழக்கமான படைப்பு. வறண்ட கதைசொல்லல், சீரற்ற விவரிப்பு, இலக்கியத் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் தளர்வான உரைநடை, கதை முன்னேறும்போது நோக்கமற்று போகும் கதாபாத்திரங்கள் — எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நாவலாக இல்லாமல் ஒரே பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக தோன்றுகிறது.

ஒளரங்கசீப்பின் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த நாவல், வரலாற்று நாவல் என நினைக்கும்போதே திசைமாறி கற்பனை உலகிற்கும், குழந்தைகளுக்கான கதை போன்ற புராணத்திற்கும், பின்னர் அரசியல் மற்றும் சாதிய விவாதங்களுக்கும் செல்கிறது. எந்த உறுதியான முடிவையும் நோக்கி செல்லாத பல இழைகளில் நம்மை அலைக்கழிக்கிறது.

ஆனாலும் பல ஈர்க்கும் அத்தியாயங்கள் இருக்கின்றன. ஒளரங்கசீப் பற்றிய அத்தியாயங்கள், சாமானிய மக்கள் பற்றியவை, சிறை பற்றியவை — இவை அனைத்தும் முடியாட்சி குறித்த அறிவார்ந்த விவாதங்களால் நிறைந்திருக்கின்றன, இன்றைய காலத்திற்கும் பொருத்தமானவை. அதற்காக மூன்று நட்சத்திரங்கள் தகும்.

user_10728

★ 5/5 Feb 02, 2026

முதன்முதலாக வாசித்த எஸ்.ராவின் படைப்பு. அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புதினம். சங்கிலித்தொடர் போல நிறைய கிளைக்கதைகள் வாசிப்பவருக்கு உற்சாகம் தருவதாக அமைகிறது. எஸ்.ரா சிறந்த கதைசொல்லியாக வாழ்கிறார் இப்புதினத்தில். விதி வலியது.