Reviews for அறியப்படாத தமிழ்மொழி

26 reviews total

user_10543

★ 5/5 Feb 02, 2026

தமிழ் மொழியின் வளமையை, நெகிழ்வை இனிமையாய் எடுத்துரைக்கும் நூல். முனைவர் அவர்களின் மொழி ஆளுமையும் ஆய்வு தரவுகளும் சான்றுகளும் மிகவும் அருமை.

நூலின் இறுதிக்கு செல்ல செல்ல ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதாக இருந்தது. தமிழில் எவ்வளவு கற்பதற்கு இருக்கிறது என்பது வியப்பளிக்கிறது. இனி இயன்றவரை தமிழ் மொழி சிதையாமல் பேச எழுத முற்படுவேன். நல்ல நூலைப் படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

user_10542

★ 5/5 Feb 02, 2026

அறியப்படாத தமிழ்மொழி — பகுத்தறிவிற்கான புத்தகம்! ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை/நீர்மை என்று பொருள். நூலின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டியது. படித்ததும் ஏமாற்றமில்லை — அருமையான தகவல்கள் நிறைந்திருந்தது.

பகுத்தறிவு ஏன் முக்கியம், எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் — ஆராயாமல் எதையும் நம்பக்கூடாது.

தமிழ் எந்தவொரு மனித உணர்ச்சியையும் ஒதுக்காது, வகைப்படுத்த மட்டுமே செய்யும். பெரும்பான்மை உணர்வு மட்டும் தான் மனிதம் என்று சொல்லாது சங்கத்தமிழ். இத்துணை இயற்கை வாழ்வு கொண்டது தமிழ் அகத்திணை வாழ்வு.

தமிழ் இலக்கியம் என்பது நிலம், காலம், மக்கள், காதல், வாழ்க்கை, சமூகம் அனைத்தும் கலந்தது. இயற்கையை இயற்கையாகவே காண்போம், நேசிப்போம்.

தமிழ் விதைகள் விதைப்போம் விடியலை நோக்கி!

user_10541

★ 4/5 Feb 02, 2026

நையாண்டி நடையில் எழுதப்பட்ட நூல். நிறைய புதிய தகவல்கள் கிடைத்தன. படிக்கத் தகுந்த நூல், தவறாமல் வாசியுங்கள்.

user_10540

★ 5/5 Feb 02, 2026

தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு குறித்த சில சுவாரஸ்யமான தலைப்புகளில் கட்டுரைகளின் நல்ல தொகுப்பு.

குறிப்பாக என்னை கவர்ந்த தலைப்புகள்: தமிழ் உண்மையிலேயே மிகப் பழமையான மொழியா? இல்லையென்றால் ஏன் தமிழர்கள் கல்தோன்றி மண்தோன்றா என்று பெருமை கொள்கிறார்கள்? இளங்கோவும் சிலப்பதிகாரமும் கம்பனும் கம்பராமாயணமும் போல் கொண்டாடப்படாதது ஏன்? வேத பண்பாடு தமிழ் பண்பாட்டை, கடவுளரை, மொழியை எப்படி உள்வாங்கியது? சமண மரபு தமிழை புரிந்து ஏற்றுக்கொண்டது எப்படி வேறுபட்டது?

வலைப்பதிவு நடையில் எழுதப்பட்டிருப்பது சில இடங்களில் சற்று எரிச்சலூட்டுவதால் 4.5 மதிப்பெண் தருவேன். நல்ல தொழில்முறை பதிப்பாய்வு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழ் படிக்கத் தெரிந்து, இப்பகுதியின் மொழி, பண்பாடு, மக்கள் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_10539

★ 5/5 Feb 02, 2026

பல நூற்றாண்டுக்கு சொந்தமான தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொன்றும் உண்மை தரவுகளை அடிப்படையாக கொண்டிருக்கும். படிக்க படிக்க இன்ப தேன் வந்து பாய்ந்தது. நம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட எழுத்துக்கள் தான் தேவை.

மொழியில் இருந்து மதத்தை பிரித்து பார்ப்பதும், அதனை அறிவியல் பூர்வமாக அணுகுவதும், நவீன சூழலுக்கேற்ப மாறிக்கொள்வதும் எவ்வளவு அவசியம் என்பதை இந்நூல் அழுத்தமாக கூறிச்செல்கிறது. தமிழ் இலக்கியத்தில் இடைச்சொருகப்பட்ட கட்டுக்கதைகளை உடைத்தும் காட்டியுள்ளார்.

குறிப்பாக கல்தோன்றி மண்தோன்றா தமிழ்ப் பொய்யா?, தமிழ் மறைப்பு அதிகாரம், தொல்காப்பியத்திலே சாதி உண்டா?, எது முதல் தினை முல்லையா குறிஞ்சியா? ஆகிய பகுதிகள் மிகவும் கவர்ந்தன.

இது ஒரு பேசும் புத்தகம் என்றே நூலை தொடங்கியுள்ளார். இந்த உரையாடல் அறிவூட்டும், உணர்வூட்டும் உரையாடல். தமிழ் மீதுள்ள காதலை இன்னும் மெருகூட்டும் உரையாடல். தமிழ் மீது ஆர்வம் அற்றவர்கள் கூட இந்த நூலை வாசித்தால் தமிழை நேசிக்க தொடங்கிவிடுவார்கள்.

தமிழ் என்ற சொல்லின் அர்த்தம் இனிமை/நீர்மை, தொல்காப்பியம் தான் தமிழின் அடிப்படை. சங்கம் என்பது வடமொழி சொல் அல்ல, சங்கு முழங்கி தொடங்கும் நிகழ்வு தான் சங்கம்.

திராவிடம் என்பது ஒரு திசை சொல்லே. தமிழ் என்பது மூல மொழியில் வழங்கும் பெயர், திராவிடம் என்பது உலகம் வழங்கும் பெயர்.

கம்பரை கொண்டாடும் அளவுக்கு இளங்கோவடிகள் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு காரணம் மதம் பிடித்த சில பண்டிதர்கள் தான். சிலப்பதிகாரம் மக்களின் காப்பியம், கம்பர் எழுதியது அரச காப்பியம்.

பகுத்தறிவு பார்வையில் தமிழை அணுகினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பது இந்நூல் மூலம் புலப்பட்டது. இந்நூல் ஒரு பொக்கிஷம், தகவல் களஞ்சியம். அள்ள அள்ள கிடைக்கும் அறிவு கடல்.

வாழ்க தமிழ்! வளர்க பகுத்தறிவு!

user_10538

★ 5/5 Feb 02, 2026

திராவிட கண்ணோட்டத்தில் தமிழின் மீதும், இலக்கியங்கள் மற்றும் இலக்கணங்கள் மீதான சமஸ்கிருதத்தின் திணிப்பு மற்றும் சிதைப்பைத் தோலுரித்துக் காட்டும் ஆய்வு நூலே முனைவர் கண்ணபிரான் இரவிசங்கரின் அறியப்படாத தமிழ்மொழி.

தமிழர்களான நாம் தமிழின் மீது கரைப்படிந்து இருக்கும் வெற்று மாயையில் பால் ஈர்ப்பு கொண்டு பற்பல பொய்ப்பெருமைகள் பேசி வருவதை இந்நூல் கண்டிப்பான திறவாக அமையும்.

கிரந்த மொழியின் மீதான வன்முறை வெறும் மொழியின் மீது மட்டும் அல்லாமல் நம் பண்பாடு, பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மீது காலம் காலமாக நடத்தப்படும் தாக்குதல்களை தரவுகளின் அடிப்படையில் சற்றும் சலிப்பு வராத வண்ணம் சுவையான மொழிநடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ் மக்கள் அனைவரும் அறிய வேண்டிய நூல்.

இந்நூலை சிறப்பாக எழுதிய முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!