Reviews for செங்கிஸ்கான்
29 reviews total
user_10415
★ 4/5 Feb 02, 2026உலகின் எல்லா மிகப் பெரிய சாம்ராஜ்யத்துக்குப் பின்னும் நியாயம் கற்பிக்கும் கதை ஒன்று இருக்கும். அப்படியே இந்தப் புத்தகமும் பயணிக்கிறது. அலெக்சாண்டரின் பேரரசைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதுமான மங்கோலியப் பேரரசின் சர்வ வல்லமை படைத்த மன்னன் தான் செங்கிஸ்கான்.
போர்ஜிகின் இனக்குழுவின் தலைவன் யெசுகெய்க்கும் இன்னொரு இனக்குழுவின் தலைவன் சிலுடுவின் மனைவி ஹோலுனுக்கும் பிறந்த மகன் டெமுஜின். உள்ளங்கையில் ரத்தக்கட்டுடன் பிறந்த குழந்தை இந்த உலகை ஆளும் பேரரசனாய் பிற்காலத்தில் உருவெடுக்கும் என்ற சொற்களோடு பயணிக்கிறது புத்தகம்.
இன்னும் நிறையப் புத்தக வாசிப்பு வேண்டும் இவரைப் பற்றி என்று நினைக்கத் தோன்றியதில் வியப்பேதும் இல்லை. இது செங்கிஸ்கான் பற்றிய அறிமுகப் புத்தகம் என்பதால் அவரின் பால் சற்றே கூடுதல் பற்றோடு பக்கங்கள் நகர்வது தெரிகிறது.
user_10414
★ 4/5 Feb 02, 2026அருமையான வாழ்க்கைத் தொகுப்பு. பரவலான தகவல்கள். என்னதான் ஆசிரியர் செங்கிஸ்கானை நியாயவாதியாகக் காட்ட முயற்சி செய்தாலும் செங்கிஸ்கானின் குரூரம் பல இடங்களில் வெளிப்படுகிறது.
மொத்தத்தில் அருமையான புத்தகம்.
user_10413
★ 4/5 Feb 02, 2026நெட்ஃபிளிக்ஸில் Marco Polo தொடரைப் பார்த்த பிறகு மங்கோலியர்களின் வரலாறு மீது ஆர்வம் ஏற்பட்டது. செங்கிஸ்கான் மங்கோலியர்களை ஒன்றிணைத்து உருவாக்கியவர் என்பதால் அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன். இந்தப் புத்தகம் செங்கிஸ்கானின் முழு வாழ்க்கை வரலாற்றையும் சொல்கிறது. ஆசிரியர் வரலாற்றைக் கதை போலச் சொல்லியிருக்கும் விதம் பிடித்திருந்தது.
user_10412
★ 4/5 Feb 02, 2026உலகம் முழுவதும் மண்ணாசை கொண்ட பேரரசர்கள், சர்வாதிகாரிகள் எல்லா காலத்திலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். நல்லாட்சி புரிந்து போற்றுதலுக்குரிய அரசர்களை எப்படி வரலாறு தன் நினைவில் தக்க வைத்துள்ளதோ, அதே போல மண்ணாசையால் பல போர்கள் புரிந்து பல்லாயிரக் கணக்கான போர் வீரர்களைக் கொன்று பலி கொடுத்து பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று பேரரசுகளை நிறுவிய மன்னர்களையும் நினைவில் தக்க வைத்திருக்கிறது.
2000களில் ஒரு ஆய்வின் மூலம் தெரிந்த தகவல் — கிழக்கு ஐரோப்பா முதல் பசிபிக் கடல் வரை கிட்டத்தட்ட 1,60,00,000 ஆண்களின் மரபணு கூறு ஒன்றாக உள்ளது. அந்த மரபணுவிற்கு சொந்தக்காரர் செங்கிஸ்கான்.
கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன் மங்கோலிய நிலப்பரப்பில், ஒரு சாதாரண இனக்குழுவின் தலைவனுக்கு மகனாக பிறந்தார் டெமுஜின். அப்போது மங்கோலியா ஒரு தேசமாக இல்லாது பல நூற்றுக்கணக்கான இனக்குழுக்களின் நிலப்பரப்பாகவே இருந்தது. அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே மங்கோலிய தேசமாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே செங்கிஸ்கானின் வேட்கையாக இருந்தது.
மங்கோலிய தேசம் உருவான பின்னும் மண்ணாசை விடாதபடியால், வடக்கே ருசியா, தெற்கே சீனா, மேற்கே ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என எட்டிப் பிடிக்க ஆரம்பித்தார். சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டிருந்தாலும் சீன தேசம் முழுமையாக வீழ்ந்தது செங்கிஸ்கானின் வம்சத்தவரான குப்லா கானிடம். இமயமலையைக் கடக்க முடியாததால் பாரதப் பகுதி மங்கோலியர் வசப்படவில்லை.
மாவீரன் அலெக்சாண்டர் கைப்பற்றிய நிலப்பரப்பைவிட நான்கு மடங்கு அதிக நிலப்பரப்பைக் கொண்டது மங்கோலியப் பேரரசு. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம் செங்கிஸ்கானின் வம்சத்தவரால் ஆளப்பட்ட அப்பேரரசு 14ம் நூற்றாண்டு வாக்கில் சரியத் தொடங்கியது.
செங்கிஸ்கான் பற்றிய முதல் தமிழ்ப் புத்தகம் இது. இனக்குழுக்களின் பெயர்கள் சற்றே குழப்பம் தருபவையாக இருந்தாலும், வரலாற்றைச் சுவாரசியமாகக் கொண்டு சென்ற எழுத்து நடையால் படிப்பதில் தொய்வு ஏற்படவில்லை.
user_10411
★ 3/5 Feb 02, 2026உலகத்தை வெல்லப் பயணத்தைத் தொடங்கி பாதியில் நின்ற மனநலம் குன்றியவன் முன்கதையை விவரிக்கிறது இந்த நூல். "என் பின்னே வா, அல்லது பரலோகம் போ" என்பதே இவன் வாழ்வின் சாரம்.
மற்றவர்களின் நாடு பிடிக்கச் சென்று போரில் இறக்கிறான் மகளின் கணவன், இதுவரை கொன்று குவித்த உயிர்கள் போதவில்லை என்பதால் மகளிடம் அவளின் கண்ணீருக்குப் பழி தீர்த்துக் கொள்ள அனுமதியளிக்கிறான். கருணையே வடிவான மகளும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என்ற பாரபட்சம் ஏதுமின்றி அனைவரையும் இறந்து போன கணவனுடன் சேர்த்து வழியனுப்புகிறாள்.
இந்தக் கொடூர கொலைகாரக் கும்பலை மிருகங்கள் என்றால், மிருகங்கள் பாவம்!
ஒரு நல்ல வாசிப்பாக இந்த நூல் இருக்கும். முதல் சில அத்தியாயங்கள் மங்கோல் திரைப்படத்தின் திரைக்கதையின் நகல் போல இருப்பதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.
user_10410
★ 3/5 Feb 02, 2026செங்கிஸ்கான் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் படிக்கத் தொடங்கினேன். முகிலின் இந்தப் புத்தகம் செங்கிஸ்கான் பற்றிய முக்கிய விஷயங்களை மட்டுமே தந்துள்ளது. மாபெரும் பேரரசை உருவாக்க அவன் மேற்கொண்ட உத்திகள், போர் தந்திரங்கள் எதுவும் விவரமாகக் கூறப்படாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் புத்தகம் செங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாறு அல்ல, வாழ்க்கைக் குறிப்புகளின் தொகுப்பு மட்டுமே.
user_10409
★ 5/5 Feb 02, 2026மெர்கிட் என்ற மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சிலுடு தனது புது மனைவியான ஹோலுன் உடன் சிறிய ரதத்தில் சில பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது போர்ஜிகின் என்ற இன்னொரு எதிரி குழுவினர் அவர்களைத் தாக்குவதற்கு விரட்டுகிறார்கள். பெண்களையும் எதிரிகளின் கால்நடைகளையும் அபகரிப்பதே வெற்றியாகக் கருதுபவர்கள் மங்கோலியர்கள். அதனால் ஹோலூனை விட்டுவிட்டுத் தப்பித்துச் சென்று விடுகிறான் சிலுடு. யெசுகெய் என்ற அந்தக் குழுவின் தலைவன் ஹோலூனை அபகரித்து மனைவியாக்கிக் கொள்கிறான். அவனுக்கு ஹோலுன் ஒரு ஆண்மகனைப் பெற்றுத் தருகிறாள். அந்தக் குழந்தையின் உள்ளங்கையில் சிறிதாக ரத்தம் கட்டியிருக்கிறது. ஒரு வயதான மந்திரவாதி குழந்தையின் உள்ளங்கையைப் பார்த்துவிட்டு, "இது சாதாரண குழந்தை அல்ல. இந்த உலகையே தன் வீரத்தால் வெல்லப் பிறந்தவன். பேரரசன்" என்கிறார்.
இப்படித்தான் தொடங்குகிறது முகில் அவர்கள் எழுதியிருக்கும் செங்கிஸ்கான் புத்தகம்.
உணவில் விஷம் வைத்து வஞ்சகமாகத் தந்தை கொல்லப்பட்ட பிறகு வறுமையில் உழன்று, இன்னொரு இனக்குழுவிடம் அடிமையாகச் சிக்கி உயிர் பிழைத்து என்று இளமைக்காலம் முழுதும் இன்னல்களைக் கடந்து பல லட்சம் மக்களைக் கொண்டு ஒன்றுபட்ட மங்கோலிய சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறார் செங்கிஸ்கானாக மாறிய டெமுஜின்.
Netflix-ல் Marco Polo என்ற தொடரைப் பார்த்தேன். செங்கிஸ்கானின் பேரனான குபலாய் கானின் ஆட்சிக்காலத்தில் நடக்கும் சம்பவங்களே அந்தத் தொடரின் கதைக்களம். அதுவே மங்கோலியா குறித்தும் செங்கிஸ்கான் குறித்தும் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது. அந்தத் தொடரைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றிய பல கேள்விகளுக்கான பதில் இந்தப் புத்தகத்தில் கிடைத்தது.
புத்தகத்தைப் படித்து முடித்த போது ஒரு திரைப்படம் பார்த்து முடித்த உணர்வே எழுந்தது. ஒரே சிட்டிங்கில் வாசித்து முடித்துவிடலாம்.
user_10408
★ 5/5 Feb 02, 2026உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
user_10407
★ 5/5 Feb 02, 2026புது ஆண்டின் முதல் வாசிப்பு.
எத்தனை நாட்கள் தான் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என்று குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருப்பது. கொஞ்சம் எல்லை தாண்டுவோமே என்று முடிவு செய்தபோது வாங்கிய புத்தகம் செங்கிஸ்கான்.
நம்மில் 10ல் ஒருவர் செங்கிஸ்கான் வம்சாவளியை சேர்ந்தவர் என்ற தகவலோடு புத்தகத்தின் முன்னுரையே அமர்க்களம். சிதறுண்டு கிடக்கும் மங்கோலிய இனமக்கள். அத்துணை இனத்தவர்களையும் ஒன்று திரட்டி ஒரு குடையின் கீழ் அரசாண்ட டெமுஜின் என்னும் செங்கிஸ்கான் பற்றிய ஒரு சுருக்கமான விறுவிறுப்பான நூலாக அமைந்துள்ளது.
வழக்கமாக இது போன்ற புத்தகங்கள் எல்லாம் மிகவும் சலிப்பாக இருக்கும். படிக்க மிகவும் போர் அடிக்கும். நானும் அந்த எண்ணத்துடன் தான் இந்த புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். ஆனால் ஆரம்பமே வெகு சுவாரசியமாக இருக்கிறது. செங்கிஸ்கான் பிறந்தார், வளர்ந்தார், நாடுகளை வளைத்தார், சமூக அமைப்புகளை உருவாக்கினார் என்று பள்ளிப் புத்தகம் போல் இல்லாமல் தடதடக்கும் வேகத்தில் சாமான்யனுக்கும் புரியும் வகையில் ஆசிரியர் அமைத்திருக்கிறார். ஆங்காங்கே வரும் வித்தியாசமான இனப்பெயர்கள் சற்று குழப்பமாக இருக்கின்றன. வேறொரு நாட்டை, வேறொரு கலாச்சாரத்தைப் படிக்க முற்படும் பொழுது இது போன்ற சிறு சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் பொறுமையாகப் படிக்க ஆரம்பித்தால் இரண்டு நாள் போதும் முடிக்க.
ஐந்து நட்சத்திரங்கள்.