Reviews for வெள்ளையானை

30 reviews total

user_9736

★ 5/5 Feb 02, 2026

வழக்கமான வரலாற்றுப் புனைகதை அல்ல இது. 1870களில் பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும் பஞ்சங்களை உருவாக்கிய அரசியல், பொருளாதாரம், சமூகக் காரணிகளை ஆராய்கிறது.

எய்டன் மற்றும் காத்தவராயன் என்ற வலுவான கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்திருந்தன. ஷெல்லியின் கவிதைகள் வழியாக வாழ்க்கையின் தத்துவ ஆய்வு சற்று நீளமாகவும் கடினமாகவும் இருந்தது. ஆனால் சாதி, சமத்துவம், மதம் பற்றிய ஜெயமோகனின் வாதங்கள் மிகவும் வலுவானவை. மதராஸை இனி முன்பு போல பார்க்க இயலாது.

ஒட்டுமொத்தமாக மிகவும் நல்ல வாசிப்பு. ஜெயமோகனின் முதல் நாவலாக இதைப் படித்தேன், ஏமாற்றவில்லை.

user_9735

★ 5/5 Feb 02, 2026

2025ஆம் ஆண்டின் நான்காவது புத்தகமாக இதைப் படித்தேன். சுருக்கமாகச் சொன்னால், சக்திவாய்ந்த வரலாற்றுப் புனைவு.

user_9734

★ 4/5 Feb 02, 2026

ஜெயமோகனின் முதல் புத்தகமாக இதைப் படித்தேன்.

1870களில் மதராஸில் நிகழ்ந்த பெரும் பஞ்சத்தைப் பற்றியும், இந்த பஞ்சத்தைப் பயன்படுத்தி எப்படி ஆங்கிலேயர்களும் இந்திய உயர்சாதியினரும் பட்டினி அகதிகளாய் தள்ளப்பட்ட தாழ்ந்த சாதி மக்களை கொஞ்சமும் மனிதாபிமானமின்றி தங்கள் தொழில் வளர்ச்சிக்காகவும் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்தி அவர்களின் உழைப்பை சுரண்டி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்த நிகழ்ச்சிகளையும் மெட்ராஸில் இயங்கிவந்த ஐஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும் மையப்படுத்தி இயற்றப்பட்ட புத்தகம்.

கங்காணி அடிமைமுறை, குறைந்த ஊதியம், ஒரு வேலை சோற்றுக்காக அதிக நேரம் வேலை செய்யச் சொல்லும் பணிச்சுமை, மோசமான பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த ஒரு அடிப்படை உரிமையோ மரியாதையோ இன்றி விலங்குகள் போல அடித்தட்டு மக்கள் நடத்தப்பட்ட விதம் போன்றவற்றையும் இப்புத்தகம் விவரிக்கிறது.

ஒரு பக்கம் லட்சக்கணக்கில் மக்கள் பஞ்சத்தால் பட்டினி கிடந்து நோய்வாய்பட்டு, பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் காய்ந்து வற்றிய முலைகொண்ட தாய், ஒரு துண்டு ரொட்டிக்காக வண்டியின் பின் ஓடுகிறாள். மற்றொரு பக்கம் பசி என்ற ஒன்றை அறியாத ராஜபோக வாழ்க்கை வாழும் வெள்ளை துரைமார்களும் உயர்சாதி இந்தியர்களும் — இதுதான் அன்றைய நிலைமை.

புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாய் வாசிக்கையில் ஒருத்தருக்கூடவா இந்த மக்கள் மேல் பரிதாபம் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழின் முக்கியமான வரலாற்றுப் புத்தகம்.

user_9733

★ 5/5 Feb 02, 2026

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது (தற்போதிருந்து 150 ஆண்டுகளுக்கு முந்தைய) மதராஸ் மாகாணத்தின் அடித்தட்டு மக்களின் நிலையை மிக அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல். தமிழர்கள் மிகச்சிறந்த பண்பாட்டோடு வாழ்ந்த மக்கள் என்று கூறப்பட்டாலும், அவர்களுக்குள்ளேயே உயர் சாதியினர் தாழ்ந்த சாதி என்று ஒரு பகுதியினரை ஒதுக்கி வைக்கின்றனர்.

இரத்தம் சுண்ட அவர்கள் உழைத்த போதும் வாழ்வின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. பஞ்சம் என்று வந்த போதும் அதை வைத்து செல்வம் சுரண்டும் அரசு ஒரு பக்கம், சக மனிதர்கள் சாவதை ஒரு துயரமாகவே காணாத உயர் சாதி குடிமக்கள் ஒரு பக்கம்.

இவர்களுக்கிடையில் பஞ்சத்தால் சாகும் மக்களைப் பற்றி கவலை கொண்ட ஒரு பிரிட்டிஷ் கேப்டனின் நிலையிலிருந்து காட்சிகளை விளக்கியுள்ளார் ஆசிரியர் ஜெயமோகன். சமீபத்தில் படித்ததில் மனத்தை பாதித்த ஒரு நூல்.

ஆசிரியர் முன்னுரையில் கூறுவது போல தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சுரண்டலுக்கும், கொடுமைகளுக்கும் நாமும் தார்மீக ரீதியில் பொறுப்பு எனும் போது நிச்சயம் மனம் குற்ற உணர்ச்சியடைகிறது. சக மனிதனை சமவுரிமையோடு நடத்துவோம். நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.

user_9732

★ 4/5 Feb 02, 2026

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அன்றைய மதராசப்பட்டினத்தில் பஞ்சத்தால் அடிபட்டு ஒரு வேளை சோற்றுக்காக ஆங்கிலேயரிடம் கொத்தடிமைகளாக இருந்த காலகட்டத்தை விவரிக்கும் கருப்பு சரித்திரம்!

user_9731

★ 4/5 Feb 02, 2026

வெள்ளையானை மிக முக்கியமான தமிழ் நாவல்.

இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட முதல் தொழிற்சங்கப் போராட்டம் தலித் மக்களால் முன்னெடுக்கப்பட்டதையும், 1876-1878 வரை மதராஸ் மாகாணத்தில் நிலவிய உணவுப் பஞ்சத்தையும் மையமாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் புனைவு.

ஆங்கிலேய அடக்குமுறையையும் சுரண்டலையும் விட நம் சமூகத்தில் நிலவிய கடுமையான சாதியக் கட்டமைப்பும் தீண்டாமையும் எப்படி தலித் மக்களைப் பாதித்தது என்கிற உண்மையை உணர்த்தும் நாவல்.

அறத்தையும் மனிதத்தையும் தாண்டி நம் சமூகம் சாதியத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை இந்த நாவல் மூலமாகத் தெரிந்துகொள்ளும் போது அதே சமூகத்தின் அங்கமான நம்மை அவமானப்படவும் வெட்கப்படவும் வைக்கிறது.

இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் சாதிகளைக் கடந்த முன்னேறிய சமூகமாக நாம் இருக்கிறோமா என்கிற முக்கியமான கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.

user_9730

★ 4/5 Feb 02, 2026

வேற்றுமைகளுக்கு இடையிலும் ஒன்றிணைந்தவர்கள் ஆட்சி செய்தார்கள். பிரிந்து நின்றவர்கள் ஆளப்பட்டார்கள்.

"நாம் இந்த நாட்டில் உருவாக்கி வைத்திருக்கும் அதிகாரம் நம்முடைய விசுவாசிகளான இந்தக் கருப்பர்கள் மீது கட்டப்பட்டது. இவர்களின் பயத்தையும் சுயநலத்தையும் அற்பத்தனத்தையும் கொண்டு அதை நாம் இணைத்துக் கட்டியிருக்கிறோம்."

user_9729

★ 4/5 Feb 02, 2026

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஒரு ஐஸ் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டது.

படிக்கப் படிக்க அந்தக் கால மெட்ராஸுக்குக் கூட்டிப் போகும் அளவுக்கான நேர்த்தியான எழுத்து நடை.

மதராஸ் பஞ்சம், உரிமைக்கான எளிய மக்களின் போராட்டம், காத்தவராயன் முன்னெடுப்பு, அதற்கு ஆங்கில அதிகாரியின் ஆதரவு. இன்று போல அன்றும் பார்ப்பனியத்தின் சாதி தீண்டாமையால் உரிமைகள் தடுக்கப்படும் போது நிகழும் கலவரம்.

இந்தியாவின் சனாதன சாதி அமைப்பு எப்படி ஏழை மக்களைத் தீண்டாமைக் கொடுமை செய்தது, அதை மாட்சிமை பொருந்திய மகாராணியின் அரசு எப்படி சுரண்டலுக்குப் பயன்படுத்தியது என்பதைச் சுற்றியே கதை நகரும்.

சாதிக் கொடுமையை விட வெள்ளையர்கள் பரவாயில்லை. அவர்கள் கொஞ்சம் கல்வியாவது கொடுத்து நவீன உலகுக்கு வழிகாட்டினார்கள். பல நல்ல ஆங்கில அதிகாரிகளும் இருக்கத்தான் செய்தார்கள் — கதாநாயகன் ஏய்டனைப் போல. இதுவே ஜெயமோகன் சொல்ல விழைவது. அது உண்மையும் கூட.

"இங்கே எல்லாருமே யாருக்காவது உயர்சாதிதான். எல்லாருமே யாருக்காவது தீண்டப்படாத சாதியும்கூட."

user_9728

★ 5/5 Feb 02, 2026

ஒரு பஞ்சம் எங்கிருந்து தொடங்குகிறது? வறண்ட நிலத்தில் இருந்து? பொய்த்த வானத்தில் இருந்து? ஏமாற்றிய பருவநிலையில் இருந்து? இல்லை, உண்மையில் பஞ்சம் அன்பற்ற ஒரு நெஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த நாவல் தமிழின் மகத்தான நாவல்களுள் ஒன்று. தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட நீதியைப் பற்றி முகத்தில் அரைந்து சொல்கிறது.

இந்த நாவலில் ஒரு பகுதி வருகிறது — எய்டன் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டுக்கு ஆண்ட்ரு என்கிற ஒரு இளைஞனுடனும் ஜோசப் என்கிற உள்ளூர்காரனுடனும் போகிற பகுதி. அந்தப் பகுதியை கண்ணீர் இல்லாமல் கடக்க முடியாது. அதை படித்த இரவு உணவு உண்ணவும் உறங்கவும் முடிந்தது என்றால் நீங்கள் மிகப் பெரிய தைரியசாலிகள்.

யாரும் கேள்விப்பட்டிராத முதல் தொழிலாளர் போராட்டத்தை பதிவு செய்ததற்காகவே இந்த நாவல் வரலாற்றுச் சிறப்பு பெறுகிறது. இதில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் மிகவும் நெருக்கமானவை. ஒருவர் ஆண்ட்ரூவாக இருந்திருக்கலாம், காத்தவராயனாக முயற்சி செய்திருக்கலாம். மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில் ஏய்டனாக இருப்பது.

இதில் வரும் சாதியைப் பற்றிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. இந்தக் கருத்திற்கு வந்து சேர சாதி குறித்து நீண்ட வாசிப்பு தேவைப்படும். ஆனால் அதை ஒரு வரியில் சொல்லிச் செல்கிறார் ஜெ.மோ. அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

user_9727

★ 4/5 Feb 02, 2026

ஜெயமோகனின் இந்தப் படைப்பு தமிழில் முக்கிய மைல்கல். அம்பேத்கர் சாதியம் என்பது படிநிலை சமத்துவமின்மை என்றார். இங்கே ஜெயமோகன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மதராஸ் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு, சாதிப் படிநிலை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்கிச் செயல்படுகிறது என்பதையும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சுரண்டலுக்கு உதவுகிறது என்பதையும் வெளிச்சம் போடுகிறார்.

இங்கு வெள்ளையானை ஒரு குறியீடு மட்டும். மேலோட்டமாய்ப் பார்த்தால், உறைந்த பனிக்கட்டிகள். ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால், அது சற்றும் அசையாத சாதியம் தான். அது உண்மையில் வெள்ளை யானை போன்ற ஒரு இயல்புக்கு மாறான உயிரினம் — ஒருபோதும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாத, அசையாத, ஆனால் தன் எஜமானர்களுக்கு மக்களை ஒடுக்க உதவும் சக்தி. யானை போல அதை முழுமையாக அடக்கிவிட முடியாது, அழுத்தினால் எஜமானருக்கே எதிராகத் திரும்பும்.