Reviews for முதற்கனல்
29 reviews total
user_9620
★ 4/5 Feb 02, 2026தெரிந்த கதையை முற்றிலும் புது கோணத்தில் தருவதென்பது எளிதான காரியமல்ல, அதுவும் மகாபாரதம் போன்ற ஒரு இதிகாசத்தை. இந்த முதல் பாகம் ஆஸ்திகன் என்ற நாகமுனியிலிருந்து ஆரம்பித்தாலும் பீஷ்மரைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. அதற்குள் எண்ணற்ற கிளைக்கதைகள்.
ஆரம்பத்தில் நேர்கோட்டுக் கதைசொல்லலைக் குழப்பியிருந்தாலும் நிதானமான வாசிப்பு அக்கதைகளின் முக்கியத்தை உணரச் செய்யும். பீஷ்மர் தன்னை யயாதியின் ஆடி விம்பமாகக் கருதுகிறார். பால்கிகன் என்னும் சாந்தனுவின் சகோதரன் பீஷ்மரைத் தன் ஆடி விம்பமாகக் கருதுகிறான். சிகண்டி பீஷ்மரின் நிழல் என உணர்கிறான். ஒருவர் வாழ்வில் செய்ததையே மற்றவரும் செய்கிறார் - இன்னொருவரின் சுமையைத் தோளில் தூக்கிச் சுமக்கின்றனர்.
ஒருவர் தனது உண்மையான முகத்தை நோக்கிப் பயணப்பட்டுத் தன்னை அறிந்து கொள்ளலே இந்த நாவலின் சாரம். அம்பை, சத்தியவதி, விசித்திரவீரியன், வியாசர் என அனைத்து கதாபாத்திரங்கள் ஊடே இதை உணர முடியும்.
மகாபாரதத்தின் கிளைக்கதைகளுடனும் கர்ணபரம்பரைக் கதைகளுடனும் இணைத்து புதிய கண்ணோட்டத்தில் தருவதென்பது சாதாரணமான விடயமல்ல. ஆழமாகவும் பொறுமையுடனும் வாசிக்க வேண்டிய நாவல். மீள்வாசிப்பிலும் புதிய அனுபவத்தைத் தரக்கூடியது.
user_9619
★ 5/5 Feb 02, 2026முதற்கனல் என்பது வெண்முரசு தொடரின் மூல ஒளிக்கீற்றைப் பிரதிபலிக்கும் ஒரு நாவல். இது மகாபாரதக் கதையின் வழக்கமான தொடக்கங்களைப் போல அல்ல. கிருஷ்ணனோ, பாண்டவர்களோ, கௌரவர்களோ இல்லாமல், மௌனம், இருள், மற்றும் உணர்வுகளின் ஆழம் மூலம் கதை ஆரம்பிக்கிறது.
ஜெயமோகன் இங்கு புராண ரியலிசம் என்ற புது இலக்கிய அணுகுமுறையைப் பயன்படுத்துகிறார். தர்மம் என்பது ஒரு சட்டம் அல்ல, நிகழ்வுகளால் உருவாகும் உணர்வு. நினைவுகள் புராணமாக மாறுகின்றன. காலம் நேரியல் அல்ல; சூதர்கள் மூலம் பல அடுக்குகளில் கதை விரிகிறது.
பீஷ்மர் ஒரு தத்துவவாதி, தர்மத்தின் காவலர், பழைய உலகத்தின் பிரதிநிதி. அம்பை காசி நாட்டின் இளவரசி - திருமண மறுப்பு, பழிவாங்கும் எண்ணம், மாற்றம் தேடும் பெண் என பல பரிமாணங்களில் சித்தரிக்கப்படுகிறார். சிகண்டி அம்பையின் மறுபிறவி - பாலின அடையாளம், சமூக மாற்றம், உணர்வுப் போராட்டம் ஆகியவற்றின் பிரதிநிதி.
சாந்தனு, சத்யவதி, விசித்திரவீரியன், வியாசர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் பழமையான உலகத்தின் சிதைவு, புதிய தர்மத்தின் பிறப்பு, மனித உணர்வுகளின் ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
ஜெயமோகனின் தமிழ் பாரம்பரியமிக்கது, சுத்தமானது. கவிதைபோல் ஓடும் உரை, ஒவ்வொரு வரியும் தத்துவ சிந்தனையைத் தூண்டுகிறது. மெதுவாக நகரும் கதை, ஆனால் ஒவ்வொரு பக்கமும் ஒரு உணர்வுப் பயணம்.
user_9618
★ 3/5 Feb 02, 2026நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை தானே என்ற நினைப்புடன் இந்தப் புத்தகத்தை எடுத்தேன். ஆனால் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
மகாபாரதம் என்றாலே குருசேத்திரப் போர், கண்ணனின் உதவிகள், கர்ணனின் கொடை என இருக்கும். கதையில் பெரிதும் பேசப்படாத இருவரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒன்று - விசித்ரவீரியன். இவரைப் பற்றி கதையில் ஒன்று இரண்டு வரிகள் தான் தெரியும். இந்தக் கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நோயில் இருந்து அவனைக் காப்பாற்ற சத்யவதி எடுத்த முயற்சிகள், அவனுக்கும் அம்பிகைக்கும் இடையே இருந்த உரையாடல்கள் மிக அற்புதம்.
இரண்டு - சிகண்டி. கடைசிப் போரில் அவன் பீஷ்மரைக் கொன்றான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்காக அவன் எடுத்துக் கொண்ட பயிற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வெண்முரசு பயணத்தில் இன்னும் 25 புத்தகங்கள் உள்ளன. தொடர்ந்து பயணிப்போம்!
user_9617
Feb 02, 2026மறுவாசிப்பு செய்ய வேண்டும், பல்வேறு தத்துவங்கள், யோகங்கள், படிமங்கள் என என் வாசிப்பிற்கு சவால் விடுகிறது. தொடர்ச்சி விட்டு விடக்கூடாது என்பதற்காக அடுத்து மழைப்பாடல் வாசிக்கப் போகிறேன்.
user_9616
★ 5/5 Feb 02, 2026இந்நூலைப் படித்து முடித்து விட்டு வியப்புடன் அமர்ந்திருக்கிறேன். எத்துணை கதை மாந்தர்கள் - சத்தியவதி, சந்தனு, பீஷ்மர், அம்பை, விசித்திர வீரியன், அம்பிகை, வியாசன், சிகண்டி; எத்துணை இடங்கள்; எத்துணை உரையாடல்கள்; இயற்கைக் காட்சி விவரிப்புகள், தத்துவ விளக்கங்கள். படித்து முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன. இதனை எழுத இவருக்கு எவ்வளவு நேரமானதோ!
இயற்கை, தத்துவ விளக்கங்களை விட கதை மாந்தர்களுக்கு இடையான உரையாடல்களே என்னை அதிகம் ஈர்த்தன. பீஷ்மர்-அம்பை, பீஷ்மர்-சத்தியவதி, பீஷ்மர்-சிகண்டி என்று பல உரையாடல்களும் பீஷ்மரை சுற்றியே இருந்தாலும், என் மனதுக்குப் பிடித்தமாக இருந்தது விசித்திரவீரியன்-அம்பிகை உரையாடல்களே.
சிறுவர்களுக்கான மகாபாரதம் இரண்டு மூன்று தொகுப்புகள் படித்திருக்கிறேன். இராமாயணத்தை விட மகாபாரதத்தையே அதிகம் விரும்பியிருக்கிறேன். நூறு முறை கேட்ட, பார்த்த, படித்த கதையாக இருந்தாலும், சலிப்பு தட்டாமல் 600+ பக்கங்களையும் படிக்க முடிந்தது. எடுத்தால் வைக்கவே மனமில்லை.
நிறைய அழகிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். நானே ஒரு திரட்டு தயாரித்தேன். ஆனால் நூலின் முடிவில் அவரே பொருள் கொடுத்திருக்கிறார்.
இந்நூலில் சாதி மற்றும் வர்ண எதிர்ப்பு கருத்துகள் கிண்டலாக, நகைச்சுவையாக, கோபமாக என்று பல உணர்வுகளுடன் வருகின்றன. தமிழ் இலக்கியத்தின் தனிச்சிறப்பான படைப்பு இது.
விலை கொடுத்து வாங்கியதற்கு மிக நிறைவான நூல். அடுத்த பாகத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.
user_9615
Feb 02, 2026எப்படித் தொடங்குவது? என்ன எழுதுவது என்று அறியாத ஒரு மனநிலை வெண்முரசு என்ற இந்த நெடுங்காவியத்தின் முதல் புத்தகமான முதற்கனல் வாசித்து முடித்த பின்.
கதைகள் வாசித்திருக்கிறேன். கவிதைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இத்தனை கவிதை நடையில் கற்பனை சொட்டச் சொட்ட உவமைகள் நிறைய கொண்டு எழுதப்பட்ட கதையை வாசிப்பது இதுவே முதல் முறை.
சில நேரங்களில் இத்தனை வர்ணனை தேவை தானா என்ற எண்ணம் எழும்போது, அதை எழுதிய ஆசிரியரின் முயற்சி மனதில் தோன்றி சிலிர்க்க வைப்பதோடு, மகாபாரதக் கதையின் மீதுள்ள ஆர்வமும் கலந்து கொண்டு பக்கங்களை வேகமாக கடக்கச் செய்கிறது.
ஒரு புத்தகத்திலே இத்தனை கதைகள், கதைக்குள் கதை என முடிவிலியாக நீண்டு கொண்டு இருக்க, இன்னும் 25 புத்தகங்கள் இந்தத் தொடரில் உள்ளது என்று எண்ணும் போது மனம் திகைத்து மீள்கிறது.
நாகர் குலத்தலைவியான மானசாதேவியிடம் தொடங்கும் கதையில் கால் இல்லாத நாகங்களின் கால்தடங்கள் புத்தகம் நெடுக! கதை முடிவதும் அவரிடமே!
நாம் அறிந்த மகாபாரதக் கதையின் பின்னால் தொடங்கி, முன்னோக்கி நகர்கிறது கதைக்களம். முதற்கனல் அம்பையிலிருந்து தொடங்குகிறது. அவளின் சினத்தில் வளர்கிறது காவியம்.
திரௌபதியின் சிரிப்புதான் பாரதப்போரின் காரணம் என்று கதைகளில் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் உண்மையில் அதன் மூலம் அம்பையின் சினம்! நிராகரிப்பு தந்த ஏமாற்றம், பழிவாங்கும் உணர்வாக மாறிய பீஷ்மர் மீதுள்ள காதல்தான் என்று இப்போது தோன்றுகிறது.
இதுவரை மகாபாரதக் கதையில் பெயர் மட்டுமே கேள்விப்பட்ட சிறுசிறு கதாப்பாத்திரங்களின் முழுக்கதையும், கேள்விப்படாத பல கிளைக்கதைகளையும் வாசிக்க கிடைக்கும் என்று நான் இதற்கு முன் நினைத்ததில்லை. அதை சாத்தியப்படுத்திய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
ஆசிரியரின் வார்த்தைகளே கண்முன் உயிரோவியமாக விரிந்திருக்க, ஓவியர் ஷண்முகவேலின் ஓவியங்கள் கதைக்கும் நம் கற்பனைக்கும் வண்ணமூட்டுகின்றன.
முதற்கனலின் வெம்மை நீங்கி மழைப்பாடலில் நனையப் போகிறேன்.
user_9614
★ 4/5 Feb 02, 2026மகாபாரதம் போன்ற ஒரு இதிகாசத்தை முற்றிலும் புதிய கோணத்தில் மறுபடைப்பு செய்வது எளிதான காரியமல்ல. இது வியாசரின் இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டாலும், ஆசிரியர் தனது கற்பனையையும் பார்வையையும் கலந்து வேறுபட்ட பரிமாணத்தைக் காட்டுகிறார்.
ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்தின் மீதும் ஆசிரியர் வீசும் ஒளி பாராட்டத்தக்கது. அவர்களின் நடவடிக்கைகளும் உரையாடல்களும் அந்தச் சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன.
பண்டைய இந்தியாவின் புவியியல் அம்சங்களையும், பல்வேறு பழங்குடியினரின் பண்பாடு மற்றும் சமூக வழக்கங்களையும் அகழ்ந்தெடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு. உண்மையான இதிகாசத்தை வாசித்தவர்களும் இந்தப் படைப்பை முயற்சிக்கத் தயங்க வேண்டாம்.
user_9613
★ 4/5 Feb 02, 2026இணையத்தில் வாசித்தேன். ஜெயமோகனின் எழுத்து நடை அருமையாக இருந்தது. வெண்முரசு தொடரின் சிறப்பான தொடக்கம்.
user_9612
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தபின் ஆசிரியரைப் பற்றி புகழாமல் இருக்க முடியவில்லை. ஜெயமோகன் நம் காலத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவர்! வெண்முரசு போன்ற ஒரு பெரும் படைப்பை மேற்கொள்வது எளிதான காரியமல்ல, ஆனால் அவர் இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார்.
முதற்கனல் வாசிக்க மகாபாரதத்தில் நல்ல புரிதல் இருப்பது உதவியாக இருக்கும். இது சாதாரண வாசகர்களுக்கானது அல்ல, தீவிர ஈடுபாடு தேவை.
மொழி அழகாகவும் கவிதை நடையிலும் இருக்கிறது. கதைசொல்லலும் கற்பனையும் அபாரம். நாகங்கள் முட்டையிடும் காட்சி, தாழைமலர் அன்னையாக மாறும் உவமை போன்ற பகுதிகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றன.
பல சுவாரஸ்யமான அவதானிப்புகள் கிடைத்தன - நாகர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருப்பது, நீர்வழிப் பயணங்கள், சிகண்டியின் வேறுபட்ட உறவு நிலை, அகஸ்தியர் மற்றும் பாண்டிய நாடு பற்றிய குறிப்புகள் என்று பல புதிய கோணங்கள் இருந்தன. மகாபாரதத்தில் உண்மையிலேயே பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது - புராணத்திற்கும் வரலாற்றுக்கும் இடையிலான எல்லைகள் மங்குகின்றன.
அடுத்த புத்தகத்தைத் தொடங்க ஆவலாக இருக்கிறேன்!