Reviews for செல்லாத பணம்
30 reviews total
user_9516
★ 4/5 Feb 02, 2026சில புத்தக மதிப்புரைகளில் அந்தப் படைப்பு வாங்கிய வெற்றிகளையும் விருதுகளையும் மேற்கோள் காட்டியிருப்பார்கள். அதைப் பார்த்தே நிறையப் பேர் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பார்கள். அப்படி வாங்கும் புத்தகங்களில் சிலவற்றைப் படித்து முடிக்கும்போது இந்த விருதையும் வெற்றிகளையும் இந்தப் புத்தகம் எப்படி வாங்கியது என்கிற கேள்வி எழும். ஆனால் வெகு சில புத்தகங்களைப் படிக்கும்போதுதான் இந்தப் படைப்பு விருதுகளுக்கும் வெற்றிகளுக்கும் முழுத்தகுதியான படைப்பு என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் இந்தச் செல்லாத பணம்.
user_9515
★ 4/5 Feb 02, 2026ஒரு மாதம் முன்பு நூலகத்தில் செல்லாத பணம் என்ற நாவல் என் கண்ணில் பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல் என்றதும் ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது.
இமையம் எனும் எழுத்தாளர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரது படைப்பை வாசிப்பது இதுவே முதல்முறை. இந்த நாவல் படித்ததன் மூலம் என்னை மிகவும் தாக்கிய, அதே சமயம் நம்மை மாற்றிக்கொள்ளப் பல விஷயங்கள் ஏராளம் இதில் உள்ளது என்று அறிந்துகொண்டேன்.
ஆணாதிக்க மனப்பான்மை, பெற்றோர்களின் அகங்காரம் மற்றும் வன்முறை — இவையே கதையின் மையக் கருத்துகள்.
user_9514
★ 4/5 Feb 02, 2026அழுது அழுது என்னுள் உள்ள கண்ணீரெல்லாம் வற்றிப் போய்விட்டது. மனம் வலிக்கிறது. இத்தனைக்கும் எந்தக் கதாபாத்திரங்கள் மீதும் தனிப்பட்ட ஈர்ப்பு இல்லை. எல்லோரும் ஒருவகையில் பைத்தியங்கள் என்றுதான் தோன்றியது. ஆனாலும், புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை.
user_9513
★ 5/5 Feb 02, 2026உறவை விடக் கௌரவம்தான் முக்கியம் என்று நினைத்து காதலித்தவனுக்குக் கட்டிக் கொடுத்த பின் ரேவதியிடமிருந்து முருகனும் நடேசனும் விலகியிருக்கின்றனர். பின்பு ரேவதி சாவக் கிடக்கும்போது எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கூறி அழுகின்றனர். அந்த இடத்தில் பணம் செல்லாமல் போகிறது. கண்ணீரின்றி நாவலைக் கடப்பது கடினம். கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.
user_9512
★ 5/5 Feb 02, 2026எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பித்த வாசிப்பு. ஆனால் போகப் போக மீண்டு வரமுடியாத ஒரு அனுபவத்திற்கு உள்ளாக்கியது இந்தப் புதினம். எழுத்தாளர் யதார்த்தத்தைத் தத்ரூபமாகச் சொல்லியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மிடம் வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. ரேவதி முக்கால்வாசி கதையிலும் மற்றவர்கள் பேச்சிலும் நினைப்பிலுமே சஞ்சரிக்கிறாள். இந்தப் புதினத்தை வாசிக்கிறவர்கள் கண்டிப்பாக ரேவதியின் வாழ்க்கையையும் வழியையும் கஷ்டங்களையும் எளிதாகக் கடந்து போக மாட்டார்கள்.
user_9511
★ 4/5 Feb 02, 2026ரேவதி உடம்பில் நெருப்பு வைத்துக்கொண்டாள். அவள் புருஷன் ரவி அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு போனில் அவள் அம்மா, அப்பா அமராவதிக்கும் நடேசனுக்கும் தகவல் சொல்கிறான். இவர்கள் பதறித் துடித்து அழுதுக்கொண்டு மகன் முருகனுக்குப் போன் போட்டு தகவல் சொல்ல, அவன் அடித்துப் பிடித்து அரக்கப் பரக்க மருத்துவமனைக்கு வருகிறான். பின்னாலேயே முருகன் பொண்டாட்டி அருண்மொழி கண்ணீருடன் மருத்துவமனை நோக்கி வருகிறாள். 83% நெருப்பில் வெந்த ரேவதியின் உயிரைக் காப்பாற்றுங்கள் எனப் பையில் பணத்துடன் மருத்துவமனையில் அலையும் உறவுகள் — இந்தப் பணம் இங்கு இப்போது செல்லாது.
user_9510
★ 4/5 Feb 02, 2026உண்மையைச் சொல்லணும் என்றால் விமர்சிக்கத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இந்தக் கதைக்குத் தீர்வைத் தேடினேன். ஒரு தீர்வும் சொல்லாமல் கதையை முடித்துவிட்டாரே என்று இருந்தது.
ஆனால் தங்க. ஜெயராமன் எழுதிய பின்னுரை படித்தபோது, இந்தக் கதையை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று பாதி புரிந்தது, பாதி புரியவில்லை. மறுவாசிப்பு அவசியம்.
user_9509
★ 4/5 Feb 02, 2026இந்த நாவலின் பலமே இந்த நாவலுக்கான அவலம்தான். உண்மையான மனித அனுபவத்தின் முழுமை உண்டு.
user_9508
★ 5/5 Feb 02, 2026சமைக்கும்போது, பாத்திரத்தில் சுட்டுக்கொண்டாலோ, அல்லது கடுகு மேலே தெறித்துவிட்டாலோ, சில நேரம் இருக்கும் அந்த வலியைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. சிறு தீப்பொறியை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடம்பு முழுவதும் தீ பற்றி எரிந்தால் அந்த வேதனையை என்னவென்று சொல்வது. அதுதான் ரேவதிக்கும் நடந்தது.
ரேவதி, அம்மா, அப்பா, அண்ணன் என அழகான குடும்பத்தில் பிறந்து செல்ல மகளாக வளர்ந்த பெண்.
user_9507
★ 5/5 Feb 02, 2026எங்கே வாசிக்கத் தொடங்கி எங்கே முற்றுப்பெற்றது என்று பிரக்ஞை அற்றுப் போனேன்.
ஒரு யுத்தகாலம் போன்ற ஜிப்மர் மருத்துவமனை வளாகம், இன்னும் கண் முன் ஓடுகிறது. ரேவதி, அமராவதி, ரவி, முருகன் உயிர்களாக எண்ணில் பயணப்படுகிறார்கள்.
எங்காவது இந்தக் காதல் ஒரு புனிதம் பெறாதா என்ற ஏக்கம் என்னுள் தோன்றியது. ஆனால் இதுதானே உண்மை என்ற எண்ணம் கொள்ளும்போது மனது கொஞ்சம் ஆசுவாசம் அடைகிறது.
தான் செய்த தவறு என்று எண்ணி மனம் வருந்தும்போது, அந்த உயிர் நம்மை விட்டு விலகப் போகிறது என்ற சுழல் மனிதனை எவ்வளவு வேதனைப்படுத்துகிறது.