Reviews for சாயாவனம்

24 reviews total

user_9426

★ 4/5 Feb 02, 2026

தோய்வில்லாத நேரடியான எழுத்து நடை கொண்ட நாவல். சா.கந்தசாமியின் வார்த்தைகள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் நேராக மனதைத் தொடுகின்றன. வனத்தின் அழிவை நேர்முகமாகச் சொல்லும் இந்த நடை கதையின் வலியை மேலும் ஆழமாக்குகிறது.

user_9425

★ 4/5 Feb 02, 2026

எந்தக் காலத்திலும் பொருந்திப் போகும் மிக யதார்த்தமான எழுத்து நடையில் அமைந்த நாவல். வன அழிப்பை நிறுத்தாவிட்டால் காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராட எந்த வழியும் இல்லை என்பதை உணர்த்தும் படைப்பு.

user_9424

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் பற்றியும் இதன் ஆசிரியர் சா.கந்தசாமி அவர்களைப் பற்றியும் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபஞ்சன் அவர்களின் புத்தகத்தை நான் படித்தது போலவே, இவரின் மறைவுக்கு பின்னரே சாயாவனம் படிக்கும்படி ஆயிற்று. எழுத்தாளர்களுக்கு எங்கே உள்ளது மரணம்? இதோ சாயாவனம் வழியே அவரின் மொழியைக் கேட்டேனே!

40 வருடங்களுக்கு முன்னரே, இன்று பெரிதாகப் பேசப்படும் சுற்றுச்சூழல் அழிவு என்ற கருப்பொருளை முன்வைக்கிறார் ஆசிரியர். ஒரு வனம் அழிக்கப்படுகிறது. அழிக்க எத்தனிப்பது சிதம்பரம், அவனுக்கு உதவுவது சிவனாண்டித் தேவர். இவர்களையும் அந்த வனம் போன்ற தொப்பையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதை.

சாயாவனம் என்ற ஊரில் பல தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் தோப்பை, இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் விலைக்கு வாங்குகிறான். அவனது கனவு — அந்த வனத்தினை அழித்து அதில் ஒரு கரும்பாலை நிர்மாணிப்பது. இயற்கைக்கு எதிரான மனிதனின் போர், உறவுகள், ஊரின் நட்புகள், தனி மனிதனின் போராட்டம், இரண்டு தலைமுறைக்கும் நிலவும் இறுக்கம், எத்தனை முறை தோற்பினும் தளராத வைராக்கியம் — ஏராளமான அடுக்குகள். மெல்ல சுவைக்கத் தோன்றும் கரும்பின் இனிப்பாய் இருக்கிறது ஒவ்வொரு எழுத்தின் அடுக்குகளும்.

இந்தப் புத்தகத்தின் வழியே முக்கியமான ஒரு சொல்லைக் கற்றுக் கொண்டேன் — அகச்சரிவு. எவ்வளவு முக்கியமான சொல். நம் வாழ்வின் ஒவ்வொரு செயலும் நம்மைப் பற்றியே இருக்கும் பொழுதில், நாம் அனைவருமே ஒரு விதமான அகச்சரிவையே சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.

இந்தக் கதையின் நரம்பாய்ப் பின்னிக் கிடப்பது அந்த தோப்பில் இருந்த மரங்களும், அதை நேசித்த மனிதர்களுமே. சாயாவனத்து வீடுகளின் தேவைகளை அந்த தோப்பு பல வருடங்களாய் நிரப்பி வந்திருந்தது. பொருளுக்கு பொருளை எடுத்தும் கொடுத்தும் மட்டுமே பழகியிருந்தனர் மக்கள்.

"அவர்கள் வார்த்தைகளை நம்பினார்கள். அவர்கள் வாழ்க்கை வாய்ச்சொற்களின் மீது ஆதரப்பட்டிருந்தது."

இப்படி இருந்த ஊரின் நாடியாய் நின்ற தோப்பை சிதம்பரம் அழித்து ஆலை அமைக்க எத்தனித்தான். இயற்கை முழு வீச்சில் நடத்திய நடனத்தின் சாட்சியான அந்தத் தோப்பை அழிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் விடாமல் போராடினான் சிதம்பரம்.

கதையில் இயற்கையை வெட்டி அழிப்பது போதாமல், தீயிட்டுக் கொளுத்த நினைக்கும் காட்சிகள் நெஞ்சை நெருடுகின்றன. "கனன்றெரிந்த கிளைகள் நெருப்புத் துண்டுகளாய்த் தகதகத்துக் கொண்டிருந்தன. ஒரு ஜொலிப்பு! ஜுவாலையின் கம்பீரம்! நெருங்க முடியாத அனல் வீச்சு!"

அகச்சரிவின் உச்சபட்ச வெளிப்பாடாக, சிதம்பரம் ஒரு குருட்டுக் காக்கையை தீயில் வீசியெறிந்து அதன் எரிவதைக் கண்டு ரசிக்கும் காட்சி திகைக்க வைக்கிறது.

கடைசி வரிகளில், ஆச்சியின் கேள்விக்கு விடையின்றி திணறி நிற்கும் சிதம்பரம் — அந்தக் கேள்விக்கான விடை யாரிடமும் இல்லாமல் போனது தான் இன்றைய சூழலியலின் சாபமாய் விஞ்சி நிற்கிறது. நேரம் இருப்பின் கண்டிப்பாகப் படித்துப்பாருங்கள்.

user_9423

★ 4/5 Feb 02, 2026

சாயாவனமும் கானகனும் இணைந்து இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டத்தை அழகாகச் சித்தரிக்கின்றன. "எந்தவொன்றையும் முற்றாக இந்த மனிதர்களால் அழித்துவிடமுடியாது, எல்லா முடிவுகளும் சில எச்சங்களை விட்டுச் செல்கிறதென்பதை இவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்தக் காட்டின் ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம்தான்" — இந்த வரிகள் நாவலின் முழு சாரத்தையும் வெளிப்படுத்துகின்றன.