Reviews for சாயாவனம்
24 reviews total
user_9436
★ 4/5 Feb 02, 2026சிதம்பரம் தனது மாமனான சிவனாண்டித் தேவருடன் சேர்ந்து சாம்பமூர்த்தி ஐயருடைய வனத்தின் மரங்களை அழித்து சாயாவனத்தில் கரும்பாலை நிறுவ முயற்சி செய்கிறான். இந்த ஒரு வரிக் கதைக்குள் காடுகள் அழிப்பு, சூழலியல், மரங்களின் தேவை, நிலத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகிய பலவற்றை அடுக்கடுக்காகக் கொடுத்துள்ளார் சா.கந்தசாமி.
கதை புளிய மரத்தில் புளி பறிப்பதிலிருந்து, அதை சமூகத்தின் பல தட்டுகளில் இருப்பவர்களுக்கும் பகிர்வதில் ஆரம்பித்து, இறுதியில் கடைப்புளியின் ருசியின்மையில் முடிகிறது.
தமிழர் வாழ்வியலில் மரங்களின் பங்கு — திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் தொடங்கி, பந்தக்கால் மூங்கில், விருந்தில் பட்டை, புளி, கட்டில் செய்ய, தொட்டில் செய்ய, இறுதியில் பாடை செய்யக்கூட அதே மரம்தான் வருகிறது. அதே இழப்பை நினைத்து அழவும் மரம்தான் தேவை.
சிதம்பரம் ஒருபுறம் மரத்தின் தாய்மைக்கொடைகளை அனுபவித்துக்கொண்டே எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இன்றி நாள்தோறும் வனத்தை அழிக்கிறான். இறுதியில் நெல் விளையும் பூமியில் கரும்பைத் தேடும் முட்டாள் ஆகிறான்.
வனம் என்றால் வெறும் மரம் மட்டும் அல்ல — அணில் இருக்கும், பாம்புகள் இருக்கும், நரிகள் இருக்கும், பறவைகள் வாழும். நிலத்தை வாங்கும் நாம் அவற்றையும் வாங்க முடியுமா? செத்த பறவையையும் சுட்டு எரித்து ரசிக்கும் சிதம்பரம் ஒட்டுமொத்த நவீனமயத்தின் பிம்பமாகவே தெரிகிறான்.
இயற்கையான ரோஜாவைப் பறித்து விற்றுவிட்டு அங்கே பிளாஸ்டிக் ரோஜாவை வைத்தால் பார்க்க அழகாய் இருக்கும். ஆனால் தேனீக்கள் சீண்டாது.
user_9435
★ 5/5 Feb 02, 2026சுற்றுச்சூழல் அழிவு குறித்த எந்தப் பயமும் இல்லாத காலகட்டத்தில், தொழிற்சாலை அமைக்கத் துவங்கப்பட்ட காலங்களில் நடக்கும் கதைதான் சாயாவனம். இந்நாவல் வெறுமே கதையாகிப் போகாமல், மனிதனின் பேராசையால் சூழல்கள் படும் பாதிப்பையும் மற்ற உயிரினங்களையும் பாதிக்கிறது என்பதையும் அக்காலத்திலேயே ஒரு சூழலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக அமைத்திருக்கிறார் சா.கந்தசாமி.
சிலோனிலிருந்து சொந்த ஊர் திரும்பித் தொழில் செய்ய முற்படும் ஒருவனின் ஆசையால், அந்த அழகிய மண்ணிலும் மனிதர்களிலும் அவர்களின் வாழ்க்கையிலும், ஏன் இலை தழை செடி கொடி மரங்களும் அடையும் மாற்றங்களை மையமாகக் கொண்டு அமைந்திருக்கிறது இந்நாவல்.
நூலின் பெரும்பகுதி அந்தத் தோட்டத்தை அழிப்பதைப் பற்றியே இருந்தாலும், கொஞ்சமும் சலிக்காமல் மரம் செடி கொடி பறவைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கூறி, ஒரு சூழலியல் சங்கிலியின் கண்ணிகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை சிதம்பரமும் உணரும் வகையாக அமைந்திருப்பது சிறப்பு.
"அறிவும் வல்லமையும் மிகுந்த மனிதன், வெல்வதற்கே இயலாது என்று எண்ணப்பட்ட மண்ணைத் தன்னுடைய சுவாதீனத்திற்கு மெல்ல மெல்லக் கொண்டுவந்துவிட்டான்" — இந்த வரிகள் நாவலின் சாரத்தை வெளிப்படுத்துகின்றன.
இயல்பான நடை, எதார்த்தமான கதை நகர்வு என்று அமைந்திருந்ததால் சாயாவனத்தை நாமும் சுற்றி வந்ததுபோல் இருந்தது. படித்து முடிக்கையில் வெட்டப்பட்ட மரங்கள், எரிந்த பறவைகள், வாழ்விடத்தை விட்டு ஓடிய வானரக் கூட்டம் — எல்லா இழப்புகளும் "மரமும் செடியும் கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம். ஒவ்வொரு அடியும் பலமான தோல்விதான்" என்ற வரிகள் வழியாக நம்மை உணரச் செய்கின்றன.
user_9434
★ 4/5 Feb 02, 2026மாற்றம் ஒன்றுதான் இவ்வுலகில் மாறாத ஒன்று. மாற்றத்தைப் பார்த்து ரசிப்பதும், அதனை வரவேற்பதும் நம் வாழ்வில் பழகிப்போன ஒன்று. மாற்றத்தை எதிர்த்துக் கேள்விகேட்பவர்கள் பழமைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். மாற்றத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு அதன் நன்மை தீமைகளை விருப்பு வெறுப்பின்றி வாழ்க்கையைத் தள்ளும் வெகுஜன மக்களைப் பற்றி இலக்கியத்தில் குறிப்புகள் குறைவாகவே உள்ளது. அப்படிப் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்தான் இந்தச் சாயாவனம்.
சாயாவனம் — தமிழகக் கிராமங்களின் சான்றாக இந்த உலகிற்கு முன்வைக்க அனைத்துத் தகுதிகளையும் கொண்ட எழில்மிகு மருதநிலம். சிறுவயதில் பிழைப்பிற்காகப் புலம்பெயர்ந்த சிதம்பரம் சொந்த ஊருக்குத் திரும்பி, அங்குள்ள மிகப் பெரிய வனத்தை சர்க்கரை ஆலை நிறுவ விலைக்கு வாங்குகிறான்.
சிவனாண்டி தேவரின் உதவியோடு அந்த வனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்குகிறான். இறுதியில் தீயிட்டுக் கொளுத்தும்போது, தீ ருத்ர தாண்டவம் ஆடுகிறது — காட்டை மட்டுமல்ல, சுற்றியுள்ள புளிய மரங்களையும் ஆல மரங்களையும் விழுங்கிக்கொள்கிறது. ஆலை நிறுவப்பட்டு கரும்பு சாகுபடி தொடங்கினாலும், ஊருக்கு ஒரு குறை ஏற்படுகிறது — புளி தட்டுப்பாடு.
இறுதியில் ஊர் ஆச்சியின் குரல்: "அதான் எல்லாத்தையும் கருக்கிட்டியே! இன்னமே எங்கேயிருந்து அனுப்பப் போறே?" — அந்த நொடி சிதம்பரத்தின் நினைவு முழுக்கப் புளிய மரங்கள் நிறைந்தன.
சுதந்திரத்திற்கு முன் இயற்கைக்கும் எந்திரத்திற்கும் இடையில் சிக்கித் தவித்த பல கிராமங்களின் கதை இது. 15 செடி வகைகளும் 8 மர வகைகளும் இருந்த தடம் தெரியாமல் பொசுக்கப்படுகிறது. இது வெறும் கதையல்ல — நாம் இன்று இருக்கும் நவீன உலகம் கடந்து வந்த கசப்பான வரலாறு.
user_9433
★ 4/5 Feb 02, 2026சா.கந்தசாமியின் "தொலைந்து போனவர்கள்" நாவலை வாசித்து பல மாதங்கள் கழிந்திருந்த நிலையிலும், அந்த நாவலின் மையக்கருத்தை எளிமையாக வாசிக்கும் நடையில் உருவாக்கியிருந்தார். அதே போலத்தான் இந்நாவலையும் அழகான மொழியிலும் எளிமையான நடையிலும் இயற்றியுள்ளார்.
கதையின் ஆரம்பம் ஓர் வழித்தடத்தில் துவங்கி, இடையில் விலகி வேறொரு பாதையாக மாறுகிறது என்று பலர் விமர்சித்ததுண்டு. ஆனால் நான் இதை சிதம்பரத்தின் வாழ்வியல் மாற்றங்களாகத்தான் பார்க்கிறேன்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக உறவுகளே இல்லாமல் வாழ்ந்த அவனுக்குத் திடீரென்று ஒரு ஊரே சொந்தபந்தமாக மாறுவதும், அதற்காக தன் வாழ்க்கையை மாற்றி அமைத்து வாழத் துவங்கியதும் வியப்புடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சாயாவனத்தில் இருந்த வனத்தை அழிக்கும் காட்சிகளும், அந்த அழிவில் சிக்கித் தவிக்கும் விலங்குகளும் பறவைகளும் அவர்களுக்கு ஏற்படும் இறப்புகளும் தவிப்புகளும் நெஞ்சை நொறுக்கி எடுத்துவிட்டன. என்னை அதிகம் வதைத்தது இந்த உயிரினங்களின் இழப்புகள்தான்.
அவனுடைய சொந்தங்களாக மாறும் ஊர் மக்களுக்கு இவனின் உதவிக் கரத்தைப் பார்த்து வாழ்த்தினார்கள்; மறுபுறம் புறம் பேசித் தள்ளினார்கள் — பொறாமை கொண்டவர்கள். இதுதானே மனிதனின் இயல்பு.
அவன் அவ்வூருக்கு வந்த லட்சியத்தை அடைந்து அதற்கான வாழ்க்கையைத் துவங்குவதாகவே நூலின் முடிவு இருந்தது. இன்று இருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் முன்பு ஒரு வனமாகவே இருந்திருக்கக்கூடும் என்ற நினைவு வந்ததில், இன்னும் தொழிற்சாலைகள் வனமாகச் செழித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் இருந்தது.
user_9432
★ 4/5 Feb 02, 2026இது வெறும் இருபதாம் நூற்றாண்டின் நடுவில் சர்க்கரை ஆலைக்கான வன அழிப்பு பற்றிய கதையாகத் தெரியவில்லை. இதற்குள் பல சொல்லப்படாத கதைகள் உள்ளன. சிதம்பரத்தின் நுண்உணர்வுகள் முதல் வதந்திகள் வரை, அவனுக்கும் சிவனாண்டித் தேவருக்கும் உள்ள அழகிய அன்புகலந்த அகங்காரம் என்று ஆசிரியரின் எழுத்து மிக நுட்பமானது.
கதையை ஆசிரியர் அவசரப்பட்டு முடித்ததாகவே தெரிகிறது. கடைசி அத்தியாயத்தில் பல கதைகளுக்கான கருக்கள் இருக்கின்றன.
user_9431
★ 3/5 Feb 02, 2026நகர்மயமாதலின்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பேசப்படும் அளவுக்கு, விவசாய நிலங்கள் உருவாக்க அழியும் காடுகள் பேசப்படுவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கடல் தாண்டி ஈட்டிய செல்வத்தைக் கொண்டு தன் தாயின் பூர்வீகத்திற்குத் திரும்பும் நாயகன், கரும்பு ஆலை அமைக்கும் திட்டத்தில் வாங்கிய அடர்வனம் போன்ற நிலத்தைப் பயிர்நிலமாக மாற்றப் படும் போராட்டமே கதை.
அக்காலத்திய கிராம வாழ்வு, சாதி நடைமுறைகள், சடங்குகள், புதுத்தொழில் தொடங்க ஏற்படும் தடங்கல்கள், பண்டமாற்று முறையிலிருந்து பணத்திற்கு மாறும்போது நிலவிய குழப்பங்கள் எனப் பல தகவல்கள் கதை முழுவதும் நிறைந்துள்ளன. மரபை உள்ளவாறே ஏற்காமல் அனைத்தையும் சிந்தித்து ஆராய்ந்து அறியும் நோக்கை உடையவனான நாயகன் சிதம்பரம் ஓர் வகையான உன்னதனாக வெளிப்படுகிறான்.
ஓர் திசையில் பயணித்த கதை இறுதிப் பக்கங்களில் ஒரு திருமணத்தைப் பற்றிய விரிவான விவரிப்பால் தடுமாறுகிறது. சொல்வதற்கு இன்னும் மீதம் இருக்கும் என்று படும் இடத்தில் சட்டென்று திருப்தியளிக்காமல் முடிந்துவிடுகிறது. அக்காலத்தில் வெளிவந்த பிற நாவல்களைக் காட்டிலும் அதிக தத்துவ முதிர்ச்சியும் முற்போக்கும் வெளிப்படுவதால் இப்போது வாசிக்கலாம். ஒரு நல்ல படைப்பு.
user_9430
★ 5/5 Feb 02, 2026ஒரு அழிவின் கதையை வாசிப்பது சற்று கஷ்டமான ஒன்று. எழுத்தாளர் இந்தக் கதையை சொல்லியிருக்கும் விதம் அந்த வாசிப்பை மேலும் கடினமாக்குகிறது. அழிவும் சேதாரங்களும் நம் மனதில் ஆழமான ஓர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிதம்பரம் தன் வழியில் எது வந்தாலும் அதை ஏறி மிதித்து முன்னேறி செல்லும் ஒருவன். லட்சியத்தை அடையத் துடிக்கும் அவன் மன உறுதி அபாரமானது. ஆனால் மறுபக்கத்திலோ அந்த வனமும் தன் முழு பலத்தை வெளிக்காட்டுகிறது. ஒரு கட்டத்தில் அவன் உறுதி வெல்வதைக் காண்பது வேதனையாக இருந்தது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரை மிக அழுத்தமாகக் காட்டியுள்ளார் சா.கந்தசாமி. சிதம்பரம் ஒரு வில்லனாகவே காட்சியளிக்கிறான். பல விதமான மரங்களும் சிறு விலங்குகளும் பறவைகளும் கொண்ட அந்தப் பூமி கடைசியில் வெறிச்சோடிக் கிடக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு நெருடல், ஒரு வலி. வனம் தோல்வியினுள் தள்ளப்பட என் வாசிப்பின் வேகமும் வெகுவாகக் குறைந்தது. எழுத்தாளரின் பலம் அதில் தென்படுகிறது — நம்முள் அந்த வலியை மிக ஆழமாகக் கொண்டு வருகிறார்.
மனித உறவுகளோடு கடந்து செல்லும் இக்கதையில் எங்குமே வனத்தின் அழிவுக்கு எதிராக ஒரு குரல் கூட கேட்கவில்லை. சிதம்பரத்தினுள் ஒரு சிறு குற்ற உணர்ச்சி ஆழ்மனதில் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. காலகட்டத்தை நுணுக்கமாகச் சொல்லியுள்ளார் — பண்டமாற்று முறை, காசு என்ற பொருளின் வருகை, கிராமத்து வாழ்க்கை என்று அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
வாசிப்பின்போது ஒவ்வொரு மரம், செடி, விலங்கு இவற்றின் பெயர்களைக் கோடிட்டுக்கொண்டே வாசித்தேன். போகப்போக கோடுகள் குறைந்து வெறுமை மட்டுமே மிஞ்சியது. ஒரு தருணத்தில் ஒரு கூடு உடைந்து விழுந்து சிறு குஞ்சு ஒன்று பரிதாபமாக இறக்கிறது — சிதம்பரம் கண்ணீர் விட்டான், கூடவே நானும். கண்டிப்பாக எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.
user_9429
★ 5/5 Feb 02, 2026சா.கந்தசாமியின் சாயாவனம் — சுற்றுச்சூழல் அழிவையும் மனித பேராசையையும் அழுத்தமாகப் பேசும் அற்புதமான நாவல். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய படைப்பு.
user_9428
★ 4/5 Feb 02, 2026மரங்களை வெட்டுவதைப் பற்றி படிப்பது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? ஆச்சரியமாக, மிகவும் பரபரப்பாக இருக்கிறது. 1969-ல் எழுதப்பட்டு 1920களில் நிகழும் இக்கதையில், ஒரு நிலப்பரப்பு சிறிது சிறிதாக மாற்றப்படுவதையும், பின் சில நாட்களில் திடீரென முழுமையாக அழிக்கப்படுவதையும் காண்கிறோம். இதைச் செய்வது யார், ஏன், எப்படி? மரங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள் யார்? அவர்கள் என்ன இழக்கிறார்கள், என்ன பெறுகிறார்கள்? இறுதியில், முட்புதர்களால் வெட்டப்பட்ட தோலை ஆற்றும் மூலிகைச் செடியின் சாறு — அதுவும் அதே வனத்தின் கொடை தான்.
user_9427
★ 3/5 Feb 02, 2026நன்றாகத் தொடங்கிய கதை சிறப்பாகக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இடையில் வழிமாறி, சற்று சப்பென்று முடிந்துவிட்டது. கதையின் ஆரம்பமும் நடுப்பகுதியும் மிகச் சிறப்பாக இருந்தாலும், முடிவு திருப்திகரமாக இல்லை.