Reviews for ரத்தம் ஒரே நிறம்-1
25 reviews total
user_9353
★ 3/5 Feb 02, 2026கலகம் ஏன், எப்படி தொடங்கியது என்பது பற்றி இன்னும் விரிவான தகவல்கள் இருந்திருக்கலாம். சரித்திரப் பின்னணி கொஞ்சம் மேலோட்டமாக உணர்ந்தேன்.
user_9352
★ 5/5 Feb 02, 2026எழுத்துலகில் எல்லா கோணங்களிலும் முத்திரை பதித்த சுஜாதாவின் நாவல். தமிழில் சரித்திர நாவல்கள் எல்லாம் சோழனையோ பாண்டிய பல்லவ சேரர்களையோ பற்றித்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை சுவையான முறையில் உடைத்தெறியும் வித்தியாசமான சரித்திரக் கதை.
முதல் சுதந்திரப் போர் என்று இந்திய சரித்திர ஆசிரியர்களால் குறிக்கப்படும் நிகழ்வுகளைப் பின்புலமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. வெள்ளையர் — இந்தியர் எவர் பக்கமும் சாயாமல் நடுநிலையில் சுஜாதாவைத் தவிர யாராலும் தைரியமாகவும் சுவையாகவும் எழுதியிருக்க முடியாது.
user_9351
★ 3/5 Feb 02, 2026இது சுஜாதாவின் வழக்கமான எழுத்து வகை அல்ல. குமுதம் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்ட சரித்திரப் புனைவு. முன்னுரையிலேயே சரித்திர நாவல்களை நக்கலடிக்கிறார் ஆசிரியர்.
இந்நாவலில் சுஜாதா சரித்திரப் புனைவை மேலோட்டமாகவே அணுகியிருக்கிறார் எனலாம். உதாரணமாக, சீக்கியர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்றதற்கு, பன்றி/மாட்டுக் கொழுப்பு விவகாரம் தங்களுக்குப் பொருந்தாது என்பதை மட்டுமே காரணமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் உண்மையில் சீக்கியர்களின் நிலைப்பாடு மிகவும் சிக்கலானது — முகலாய அரசர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்த்த பிரிவு, ஜாதி ஒடுக்குமுறையால் ஆங்கிலேயப் படையில் சேர்ந்த தலித் சீக்கியர்கள், கலகத்தில் பங்கேற்ற மற்றொரு பிரிவு என பல கோணங்கள் உள்ளன.
ஆரம்பத்தில் "கருப்பு, வெளுப்பு, சிவப்பு" என்ற பெயரில் வெளியான சில வாரங்கள் பெரும் எதிர்ப்பை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
user_9350
★ 3/5 Feb 02, 2026பண்முக எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து ஒரு சரித்திர நாவல். இந்தியாவில் நடந்த சிப்பாய் கலகத்தை மையமாகக் கொண்ட கதை. சரித்திர நாவல் என்றதும் அரசர்கள், அரண்மனைகள், வீரர்கள், அழகிய மாதர்கள், கவிதா கற்பனைகள் என்று அலட்டிக்கொள்ளாமல், மிகவும் எளிமையாகவும் அதே சமயத்தில் மிகவும் திறமையாகவும் கையாண்டுள்ளார்.
எந்த சண்டையிலும் இரண்டு தரப்புகள் உள்ளன. அதில் சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று காட்டியிருப்பார். ஒரு தரப்புக்கு சரி என்று படுவது மற்றொருவருக்கு தவறாகப் படும். அதே போல் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் நல்லதும் பொதிந்திருக்கும், எவ்வளவு நல்லவர்கள் என்று கருதினாலும் அவர்களுக்குள் கெட்டதும் இருக்கும் என்கிற அவரது பார்வை அற்புதம்.
user_9349
★ 5/5 Feb 02, 20261983களில் குமுதம் இதழில் "கருப்பு சிவப்பு வெள்ளை" என்ற பெயரில் தொடராக வெளிவரத் தொடங்கிய இந்நாவல், பல்வேறு எதிர்ப்புகளால் நிறுத்தப்பட்டு, பின்பு "ரத்தம் ஒரே நிறம்" என்ற பெயரில் முழு சரித்திரப் புனைவு நாவலாக வெளிவந்தது.
சிப்பாய் கலகம் என்பது கல்கத்தாவிலிருந்து மீரட் வரை இந்திய சிப்பாய்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளின் வரலாறு. என்ஃபீல்டு துப்பாக்கிகளின் குண்டுகளைச் சுற்றியுள்ள பசை பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பினால் ஆனது என்ற செய்தி சிப்பாய்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்பட்டு, 1857 பிப்ரவரியில் மங்கள் பாண்டே மூலம் கலகம் தொடங்கியது.
இந்த வரலாற்றுப் பின்னணியில், முத்துகுமரன், பூஞ்சோலை, பைராகி, சிவகாமி போன்ற புனைவுக் கதாபாத்திரங்களை, சென்னையிலிருந்து கொல்கத்தா நோக்கிப் புறப்பட்ட சிப்பாய்களுடன் பயணப்படவைத்திருக்கிறார் சுஜாதா. லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி, ஆஷ்லி ஃப்ரேஸர், எமிலி அட்கின்சன், நானா சாகேப் போன்ற சரித்திர ஆங்கிலேயர்களுடன் இணைந்து கதை நகர்கிறது.
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த முத்துகுமரனின் தந்தையை மக்கின்ஸி கொன்றுவிட, பழிவாங்க அவனைத் துரத்திக்கொண்டு சென்னையிலிருந்து கான்பூர் வரை செல்கிறான். காதல், வீரம், வன்முறை, ரத்தக்களரி என அனைத்தையும் உள்ளடக்கிய இந்நாவல், ஆங்கிலேயரை மட்டும் தவறாகச் சித்தரிக்காமல், இரு தரப்பின் கொடுமைகளையும் நடுநிலையுடன் சொல்கிறது — இந்திய மண்ணில் சிந்திய இரு இனத்தின் ரத்தமும் ஒரே நிறம் என்ற உணர்வோடு எழுதப்பட்ட அற்புதமான படைப்பு.