Reviews for கோவேறு கழுதைகள்

30 reviews total

user_9051

★ 4/5 Feb 02, 2026

சுதந்திர இந்தியாவில் ஒதுக்கப்பட்டவர்களுக்குள்ளும் ஒதுக்கப்பட்ட வண்ணான் குடி மக்களின் வாழ்வையும், இன்னல், இடர்பாடுகள் பற்றிய குறியேடு இந்த நாவல். ஆரோக்கியம் என்னும் கதாபாத்திரத்தினூடே கதை நகர்கிறது — ஊர் மக்களுக்காக உழைத்து அவர்களின் வசவுகளைப் பொருட்படுத்தாமல் தன் குடும்பத்துக்காக அயராது பாடுபடுகிறாள்.

கிராமத்தில் ஏற்படும் மாற்றங்கள் தங்கள் வரவை நசுக்குகின்றன, குடும்பத்தில் நிகழும் மாற்றங்கள் மனதை வருத்துகின்றன. உடல் வருத்தி உழைத்தும் சம்பளமாக வரும் நெல் மற்றும் பிற தானியங்களைக் கை ஏந்தியே அழுது போராடி வாங்கும் நிலைமை.

தேவைக்கேற்ப நிறம் மாறும் காலனி வாசிகள் — வண்ணானைத் தேடி நல்லது கெட்டது என எல்லாவற்றுக்கும் உதவி கேட்டுப் பிரியமாக வருபவர்கள், கொடுப்பதென்றால் முகம் சுளிக்கத் துவங்கினர்.

எல்லாம் மாறியும், அனைவரும் விலகியும், பண்புகள் மறைந்தாலும் ஆரோக்கியத்தின் மனதில் பற்று தீராமல் கிராமத்தில் வேரூன்றி நிற்கிறது.

user_9050

★ 5/5 Feb 02, 2026

நான் வாசித்த முதல் இமையத்தின் புத்தகம். ஆரம்பத்தில் சற்றுத் தயங்கினேன் இது சரியான தேர்வா என்று. பின் வாசிக்க வாசிக்க இமையம் என்னை அந்த காலணிக்குள் ஆரோக்கியமுடனும் சவுரியுடனும் மேரியுடனும் பீட்டருடனும் அழகாக, அழுத்தமாக, வலியுடன் பயணிக்கச் செய்தார்.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின், குடும்பத்தின் வலியை, பயணத்தை இருத்தலியல் ரகம் என்று சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் ஒரு இருத்தலியலாளனுக்கு பசி இருக்காது, போதுமான வசதிகள் இருக்கும் — அவற்றையும் தாண்டி பிரபஞ்சத்தை ஆராய்வதே இருத்தலியல். ஆரோக்கியத்தின் வாழ்வியலை அப்படிக் கருத முடியவில்லை.

இறுதியில் ஆரோக்கியம் பாடுகின்ற அந்த ஒப்பாரி "சாகும் வயதில்லை நீ சாய்ந்திருக்க நாளுமில்ல..." நெஞ்சைப் பிசைகிறது. அருமையான படைப்பு.

இமையம் சொன்னது போல இந்த நாவல் இலக்கியத்தை வளர்ப்பதை விட இந்த சமூகத்தை வளர்க்கும், மேம்படச் செய்யும்.

user_9049

★ 5/5 Feb 02, 2026

நவீன தமிழ் எழுத்துலகில் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுநாவல் இது.

"இந்தக் காலத்துல எல்லாத்துக்குமே கோவப்படுதுங்க. நாம்ப சின்ன சாதி. கோவம் படச்சி என்ன பண்றது?" — ஒவ்வொரு முறையும் ஆரோக்கியம் இப்படி நினைத்துக்கொள்வாள். உடனே அதை மறந்தும் விடுவாள். மறந்துதான் தீரவேண்டும் — மறக்கவில்லை என்றால் பைத்தியம். மறந்தால்தான் காலம் தள்ள முடியும்.

"யாரு வூட்டுல! வண்ணாத்தி வந்திருக்கன், துணி போடுங்க!" — நகரவாசிகளும் இன்றைய இளஞ்சமுதாயமும் இந்தக் குரலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு நுணுக்கமாக, யதார்த்தத்துடன் அருகில் நின்று பார்த்தது போன்ற உணர்வு எழுவது அரிது.

இமையம் அவர்களின் இப்புத்தகம் நம்மை ஆரோக்கியம், சவுரி குடும்பத்துடன் அவர்களது வீட்டில் சில நாட்கள் தங்கி வாழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திச் சென்றது. தொரப்பாட்டு, இராச்சோறு, விரிப்புத் துணி, கோயில் திருவிழா, தெரட்டி சுற்றுதல், இழவு வீட்டுச்சீர் — சமூகத்தில் நிலவிய பல்வேறு சடங்குகளைப் பற்றி அறியும்போது மனம் கனமாகிப் போனது.

கையில் அழுக்கும், மனதில் வலியும் நிறைந்து நிற்கும் இதுபோன்ற ஆரோக்கியங்கள் நம்முடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

user_9048

★ 4/5 Feb 02, 2026

பழமை கொடுமையாய் இருந்தால் நாகரிகத்தை நோக்கிப் பயணிக்கலாம். ஆனால் பழமையாலும் நசுக்கப்பட்டு நவீனத்தாலும் புறக்கணிக்கப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக் கதைதான் கோவேறு கழுதை.

வழக்கமான புரட்சி தலித் சினிமா வாழ்வியலிலிருந்து வெகுதூரம் வேறுபட்டு நிற்கிறது இக்கதை. ஊரின் வண்ணான் குடியான சவுரி, பீட்டர், ஆரோக்கியம், மேரி — கால மாற்றத்துக்கு எப்படித் தன்னை ஒப்புக்கொடுக்கிறார்கள் என்பது மிகவும் பாதிக்கச் செய்கிறது.

ஊரின் இழவில் தொடங்கி பிள்ளை பிறக்கவைப்பது வரை ஆரோக்கியத்தின் தேவை இருக்கிறது — அப்போது மட்டும் ஊர் அரவணைத்துக்கொள்கிறது. ஆனால் ஒரு படி அரிசிக்குக் கேட்கும்போது கூட இடித்துரைத்துத் துரத்துகிறது.

முந்தைய காலங்களில் தொழில் வேறுபாடுகள் மட்டுமே இருந்தபோது ஊரே வாரிக்கொடுத்து ஒவ்வொரு குடியையும் வாழ்த்தியிருக்கிறது. பின் பொருள் பேதம் நுழையும்போது சுரண்டல் தொடங்குகிறது. தேள் கொட்டின காரணத்துக்காக விரலை யாரும் வெட்டுவதில்லை — தடவிக்கொடுத்து மருந்து போடுவது போல, தன் உழைப்பு சுரண்டப்பட்டாலும் ஆரோக்கியம் பொறுத்துப் போகிறாள். எனினும் காலம் மாறினாலும் விடியல் வராதது போல, வாழ்நாள் இறுதிவரை ஆரோக்கியத்தின் வாழ்க்கை வறுமையிலேயே முடிகிறது.

இருக்கும் நிலையை அப்படியே காட்டுவதாகவும், சமூக-பொருளாதார படிநிலையின் நீட்சி விளிம்புநிலை மக்களை மிச்சமின்றி உறிஞ்சுவதில்தான் முடிகிறது என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது இக்கதை.

user_9047

★ 4/5 Feb 02, 2026

"மாணத்துலயிருந்து மழை பேஞ்சாலும் தண்ணி தரையில தான ஓடனும்" — இமையம் அவர்களின் நாவல்களில் முக்கியமானது கோவேறு கழுதைகள். அவர் எழுத்தின் பலம் என்னவென்றால், நீண்ட நாட்களுக்கு இந்தக் கதையை மறக்க முடியாது.

அனைத்து பிரதான கதாபாத்திரங்களும் முதல் இரண்டு பக்கங்களில் இடம்பெறுகிறார்கள், ஆனால் அவர்களுக்கிடையேயான உறவுகளைப் புரிந்துகொள்ள 30 பக்கங்கள் கடக்க வேண்டும் — கதைக்குள் இழுக்கும் சுவாரஸ்யமான உத்தி. சலவைத் தொழில் செய்யும் ஆரோக்கியம் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் காக்க எவ்வாறெல்லாம் பாடுபடுகிறார் என்பதை அன்றைய சமூகப் பின்னணியில் சொல்லியுள்ளார்.

கதையில் வரும் ஏரி, மரம், வயல் அனைத்தும் 90-களின் வடாற்காடு மாவட்டத்தைக் குறிப்பதாக உள்ளது. எந்த ஒரு முற்போக்குச் சிந்தனையும் இல்லாமல், சாதிரீதியான ஒடுக்குமுறை பற்றி கேள்வி எழுப்பாமல், விளிம்புநிலை மனிதர்கள் மீதான ஒடுக்குமுறை எப்படி இருந்தது என்பதை யதார்த்தமாகப் பேசுகிறது.

உணவிற்காகவும் தானியங்களுக்காகவும் ஒரு குடும்பமே தலைமுறை தலைமுறையாக விவசாயக் கூலியாக இருந்ததையும், பின்னாளில் தொழில்நுட்பத்தின் வருகை விவசாயக் கூலிகளை நகரம் நோக்கி நகர்த்தியதையும் புரிந்துகொள்ள முடிகிறது. உணவு என்பது ஒரு பிரதான கதாபாத்திரமாகவே நாவல் முழுக்க வருகிறது. கதையின் முடிவு மிகவும் சோகமாக முடித்திருக்க வேண்டுமா என்று தோன்றியது.

user_9046

★ 4/5 Feb 02, 2026

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் அவர்களின் முதலும் மிகச்சிறந்த நூல் கோவேறு கழுதைகள். இது கழுதைகளைப் பற்றிய கதை அல்ல — வண்ணான்களைப் பற்றிய யதார்த்தமான நாவல். அவர்களின் தொழில், வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் துயரம் பற்றி எழுதியுள்ளார் இமையம். இந்த நாவலை எழுதியபோது அவருக்கு வயது 19 என்பது வியப்பளிக்கிறது.

"இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி" — ஒவ்வொரு முறை கதையின் நாயகி ஆரோக்கியம் இதைச் சொல்லும்போது நெஞ்சில் ஒரு அழுத்தமும் பாரமும் அதிகரித்தது. கதை தொடங்கி மூன்று பக்கங்களுக்குள் நம்மையும் ஆரோக்கியம், சவுரி, சகாயம், மேரி, ஜோசப், பீட்டரோடு வாழவைத்துவிடுகிறார் எழுத்தாளர்.

பிள்ளைப்பேறு, காதுகுத்து, சடங்கு, இறப்பு என அனைத்திலும் வண்ணார்களின் பங்கை இந்தப் படைப்பின் வாயிலாக அறிய முடிகிறது. தன் உடம்பு சுருங்கியதைப் போலவே தன் குடும்பமும் சுருங்கியதைக் கண்டு நிலைகுலையும் ஆரோக்கியத்தின் வலியை வரிகளில் கொண்டுவந்த எழுத்தாளருக்கு பாராட்டுகள்.

வண்ணார்கள் மட்டும் இல்லாமல் பூம்பூம் மாட்டுக்காரர்கள், குறவர்கள், ஜோசியர்கள் போன்ற நாடோடி சமூகத்தினரைப் பற்றி நினைக்கவைக்கிறார் எழுத்தாளர். "Beasts of Burden" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், சாதியக் கட்டமைப்பின் கோர முகத்தையும் எளிய மனிதர்களின் வலிநிறைந்த வாழ்வையும் வெளிச்சமாக்குகிறது — கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

user_9045

★ 5/5 Feb 02, 2026

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் மனக்குமுறலை, தான் வாழ்ந்த ஊரையே வீடாகவும் உறவாகவும் பார்க்கும் தன்மை என அவர்களின் வாழ்வியலை மிக அழகாக நம் கண்முன்னே காட்டுகிறது.

ஆரோக்கியம் நம் முன்னே மிகச்சிறந்த மனுஷியாக மிளிர்கிறாள். ஒப்பாரி வைத்து அழும்போது மிகச் சாதாரணமாகத் தெரிந்தவள், தன் வீட்டிற்கும் ஊருக்கும் செய்யும்போது அவள் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்ற கடவுளின் நிலை அடைகிறாள்.

வண்ணாத்தி குடும்பத்தின் வாழ்க்கை மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் உலகில் ஒரு நாள் விடுப்பு பெறுவதே கடினம் — ஒரே ஒரு நபரின் அனுமதி போதும். ஆனால் ஆரோக்கியத்தின் குடும்பம் தங்கள் கோயிலுக்குப் போக நூறு குடும்பங்களின் அனுமதி பெற வேண்டும். திருவிழா மாதம் என்றால், எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான் ஊரை விட்டுப் போக முடியும்.

தொழில்நுட்ப வருகையால் இதுபோன்ற மக்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதையும் சித்தரிக்கிறது. கணவன் இறுதியாக வேறு ஊருக்குப் போகலாம் என்று சொல்லும்போதும், ஆரோக்கியம் தன் ஊரை விட்டுப் போக விரும்பவில்லை. "நமக்கு இங்கே வீடோ நிலமோ இல்லையே, எதற்காக இந்த இடத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்கணும்?" என்று கணவன் கேட்கும்போதுதான் ஆரோக்கியம் — மக்கள் தன்னை என்றென்றைக்கும் மறந்துவிட்டார்கள் என்று உணர்கிறாள்.

இதுபோன்ற புத்தகங்கள் வழியாகத்தான் வெவ்வேறு மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும்.

user_9044

★ 5/5 Feb 02, 2026

நம்ம ஊர்ல ஒரு நாற்பது அல்லது ஐம்பது வருசத்துக்கு முன்னாடி பண்டமாற்றுப் பொருளாதாரம் தான் அதிகம் — விளைந்த தானியத்தைத் தான் ஊழியம் செய்தவங்களுக்கு ஊதியமாகக் கொடுப்பான். ஊர்ல இருக்கற ஒரே வண்ணான் குடும்பம் சவுரி-ஆரோக்கியம், இவங்கதான் ஊராரின் துணியத் தோவிச்சுக் கொடுப்பாங்க. கண்ணால வீடு, சாவு வீடு, கோயில் திருவிழா என எல்லா சடங்கும் இவங்க இல்லாம நடக்காது.

இவங்க சாப்பாட்டுக்கு சோத்துக் குண்டானம் எடுத்துக்கிட்டு ஊர்ல எல்லா வீட்டுக்கும் போயி "சாமி வண்ணாத்தி வந்திருக்கன்" என்று சொன்னா, அவங்க வீட்டுல ஆக்குன சோத்தையும் கொழம்பையும் கொண்டுவந்து குண்டானுல போடுவாங்க — அதுதான் அவங்களுக்கு சாப்பாடு.

காலச் சக்கரத்தின் இடப்பெயர்வு ஊர்ல பல நவநாகரிக மாற்றத்தைக் கொண்டுவந்தது. பண்டமாற்றம் என இருந்த நிலை மாறி பணத்தைச் சுற்றிப் பொருளாதாரம் நடைபெற, ஆரோக்கியம் தன் வருங்காலத்தை எப்படி நகர்த்தினார் என்பதே கோவேறு கழுதைகள் புத்தகத்தின் மையக் கதை.

user_9043

★ 4/5 Feb 02, 2026

கண்முன்னே தெளிவாகத் தெரிந்தும் கவனிக்கப்படாத விஷயங்களை நினைவுபடுத்தும் நெஞ்சை உருக்கும் கதை. ஒரு வண்ணாத்தி பெண்ணும் அவள் குடும்பமும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட நிலையில், இறுதியில் பொருளாதார சுதந்திரமும் தனக்கு இல்லை என்பதை உணர்கிறாள். கடைசியில் சற்று திரும்பத் திரும்ப வருவது போல் இருந்தாலும், படிக்கத் தகுதியான நாவல்.

user_9042

★ 4/5 Feb 02, 2026

இந்தக் கதையில் வரும் கிராமம், அதில் வாழும் மனிதர்கள் அனைத்தும் மிகைப்படுத்தாமல் மிகவும் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே உள்ள சாதி அமைப்பு நான் நினைத்துக்கொண்டிருந்ததை விட வேறுபட்டிருந்தது. கிராமங்கள் நகரமயமாக ஆகும்போது சாமானியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்கிறது. இன்னும் பல ஆரோக்கியங்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.