Reviews for சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை [Sivappu Kazhuthudan Oru Pachai Paravai]

30 reviews total

user_9021

★ 4/5 Feb 02, 2026

"அம்மா ஒரு கொலை செய்தாள்" மூலம் அம்பை அறிமுகமானார். நூலகத்தில் தற்செயலாகக் கையில் கிடைத்த இந்தச் சிறுகதைத் தொகுப்பை எந்த முன்னனுமானமும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். எப்போதும் போல அற்புதமான எழுத்து நடையில் அம்பை கதை வடித்திருந்தார்.

அம்பையின் ஜன்னல் வழியே பார்த்த உலகத்தை நானும் பார்க்க நேர்ந்தது ஒரு புது அனுபவப் பயணமாக இருந்தது. ஒரு சிறு புத்தகத்தில் எத்தனை கதைகள்!

பெண்மையின் தீராத துயர்கள், சலிப்பு மேலிடும் வாழ்வு மட்டுமல்ல — பெண்மைக்கேயுரிய வற்றாத ஈரமும், உன்னதத் தருணங்களும், அன்பினைச் செலுத்தி அடக்குமுறைகளுக்குள் திணித்துவிடும் போலிகளை எளிதாக அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்லும் சாதுரியமும் கதைகளுக்குள் அடங்கும். வரலாற்றுப் புனைவுகளையும் அம்பை மிகத் தத்ரூபமாகக் கையாண்டுள்ளார்.

user_9020

★ 4/5 Feb 02, 2026

2021இல் சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமையை உடையது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. கதைகளின் முக்கிய கதாபாத்திரங்களாகப் பெண்களே இருக்கிறார்கள், மும்பை நகரின் பின்னணியில் எழுதப்பட்டவை.

பெரும்பாலான கதைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சன்னல்களின் வழியாகப் பார்த்த முதல் காட்சியாகவே தொடங்குகின்றன. அறுபது வயதுக்கு மேலான பெண்களின் நிலைமையையும் குடும்ப உறவையும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒலியில்லாமல் மௌனமாய் வாழ்பவர்களைப் பற்றிய தேன்மொழியின் கட்டுரை அற்புதம் — ஒலி இல்லாமலும் மொழி இயங்க முடியும் என்பதை உணர்த்துகிறது. ஆண்டுகள் கடந்தும் சாந்தியின் மீது நந்து கொண்டிருந்த காதல் வியப்பூட்டியது.

"பொய்கை" — பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக ஏற்படும் கொடுமையை ஆணுக்கு ஒரே நாளில் உணர்த்திய கதை. பதினோராவது பரிமாணக் காதல் கற்பனையாகவே இருந்தது — உண்மையில் இப்படி நடந்தால் பயந்திருப்பேன்!

user_9019

★ 4/5 Feb 02, 2026

சாகித்திய அகாதமி விருது வாங்கிய சிறுகதைத் தொகுப்பு (2021). 1944ல் பிறந்த அம்பை (இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி) தற்போது 80 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். 70 முதல் 75 வயதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

அந்த வயதுப் பெண்களின் ஏக்கங்கள், கண்ணீர்கள், கவலைகளைப் பிரதிபலிக்கிறார். பெரும்பாலான கதைகளில் கணவர் இறந்தபிறகு தவிக்கும் பெண்களின் நிலையைக் கூறுகிறார்.

"சாம்பல் மேல் எழும் நகரம்" கதையில், கணவர் இல்லாமல் பல ஆண்டுகள் மாமியாரைப் பார்த்துக்கொண்ட மருமகள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு இறந்துபோகிறாள். அமெரிக்க மகனின் அலட்சியப் போக்கால் சிம்லா மலையிலிருந்து ஒரு தாய் இறந்துபோகிறாள்.

"பொய்கை" மற்றும் "1984" சிறுகதைகள் வித்தியாசமானவை. 1984ல் நடைபெற்ற சீக்கியப் படுகொலையில் ஒரு பெண் அனுபவித்த வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றியது.

"வில் முறியாத சுயம்வரங்கள்" — கணவரை இழந்து தவிக்கும் 60 வயதுப் பெண், தன்னைவிட 5 வயது சிறியவரிடம் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கும் அழகான கதை.

தலைப்புக் கதையில் கணவன் ஒரு துயர நிகழ்வில் பிரிந்து சென்றுவிட, அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுடைய வாழ்க்கையை வாழவிட்டுவிட்டு விலகும் பெண்ணின் கதை. அம்பையின் உலகம் துயரமானது, கவலையற்றது, மகிழ்ச்சியானது, கண்ணீரையும் கொண்டது.

user_9018

★ 3/5 Feb 02, 2026

அம்பையின் இந்தப் புத்தகம் 13 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் மூன்று கதைகளே பிடித்திருந்தது.

தொண்டை புடைத்த காகம்: முப்பதில் இருக்கும் கல்யாணி என்ற பெண், அடுப்பங்கரைச் சாளரம் வழியாக தொண்டை புடைத்த காகம் ஒன்றைப் பார்க்கிறாள். அது அவளுக்குத் தந்தையை நினைவூட்டுகிறது. ஏன், எதனால் என்பதே கதையாகும்.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை: வசந்தனும் மைதிலியும் தேன்மொழி என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். அவளுக்குக் காது கேளாது என்று உணர்ந்த வசந்தன், அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யலாம் என்கிறான். தேன்மொழி தரும் பதிலும் வசந்தன் ஏற்றுக்கொள்ளும் விதமும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. காது கேட்க இயலாதவர்களின் தனிப்பட்ட உலகத்தையும் அதில் நிலவும் அமைதியையும் ஆசிரியர் அழகாக எழுதியுள்ளார்.

வில் முறியாத சுயம்வரங்கள்: அறுபதுகளில் கணவனை இழந்த பெண், தனக்கு விருப்பமான துணையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கதை. சாந்தியின் கணவர் இறந்து 2 வருடங்கள் கழிந்தது. பிள்ளைகள் "சுயம்வர்" திட்டத்தில் கலந்துகொண்டு துணையைத் தேர்வு செய்யச் சொல்கிறார்கள். சாந்தி என்ன பதில் கூறுவார்?

எல்லாக் கதைகளமும் வித்தியாசமாக உள்ளன, ஆனால் சில கதைகளின் மையம் விளங்கவில்லை. பெண்களைச் சார்ந்த கதைகள், கருத்துக்கள் யோசிக்கும்படி இயற்றப்பட்டுள்ளன. இடையிடையே வேற்று மொழிகள் புகுத்தப்பட்டிருப்பதால் படிக்கக் கடினமாகவும், தொடர்ச்சியின்மை செறிவுக் குறைவை ஏற்படுத்தியதாகவும் உணர்ந்தேன்.

user_9017

★ 3/5 Feb 02, 2026

கதைகள் அடுக்கடுக்கான, அவசரமற்ற வாழ்க்கை நடையில் எழுதப்பட்டிருக்கின்றன — இது பிடித்த பாணி. ஆனால் ஒவ்வொரு கதையிலும் பல கதை சொல்லலின் குரல்கள் இருந்ததால் குழப்பமாக இருந்தது.

user_9016

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தைப் பற்றிய மதிப்பீடு கவிதை வடிவில்:

தொண்டை புடைத்த காகமாய்
விதவிதமாய் படித்து ருசித்து
உணர்வின் உச்சத்தைத் தொடும்
ஒவ்வொரு கதையையும் உண்ட பின்
அசை போடும் மலைப் பாம்பாய் மாறி
ஆரஞ்சு இலையுடன் பனிப்போர்த்திய மரமாய் மாறி
பொய்கையையும்
பெண்மையையும் கட்டித் தழுவி
தானே தொலைந்த என்னைத் தேடும் வேட்டைக்காரனாய் நானே மாறி
கதைகள் உருவாக்கிய
வெவ்வேறு பரிணாமத்திலும்
வீழ்தல் மட்டுமே சாத்தியம்
என்றும் முறியா முதுகெலும்புடன்

user_9015

★ 4/5 Feb 02, 2026

அம்பை இந்தச் சிறுகதைகளில் மனிதர்களுக்கிடையேயான உறவை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். வரிகளுக்கு இடையே சில செய்திகளைப் பெற்றுக்கொண்டேன்.

மிகவும் பிடித்த பகுதி:
"வாழ்க்கையில் உதித்து அஸ்தமிக்கும்
சூரிய ஒளியை
கட்டிப்போட்டவர் உண்டா?
வண்ணங்களுக்குக் காவலிட முடியுமா?
ஏன் இந்த வீண் முயற்சி
சேர்ந்த நாட்களெல்லாம் ஒரு கொடை நினை
வாழ்விலும் இருப்பது ஒரு கனவுதான்
துறந்துவிடு இந்தக் கனவை சாவு நேர்வது தனிமை."

user_9014

★ 5/5 Feb 02, 2026

அம்பையின் சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு. நான் வாசித்த அம்பையின் முதல் புத்தகம்.

பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்ட 13 சிறுகதைகள், மும்பை நகரின் பின்னணியில் அமைந்தவை. பெண்களின் தனிமையின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கதைகளமும் அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிடித்த கதை "பொய்கை" — பாலியல் ரீதியாக ஏற்படும் கொடுமையை விளக்கியுள்ளார். "பிணத்துக்கு சந்தன எண்ணெயைத் தடவினால் அதனால் என்ன பயன்?" — இவ்வரிகள் மிகவும் கவர்ந்தது.

அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_9013

★ 2/5 Feb 02, 2026

2021ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற புத்தகம். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண் எழுத்தாளர் இந்த விருதை வென்றார் என்று பத்திரிகைகளும் அம்பையைக் கொண்டாடின. மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன்.

ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தப் புத்தகத்திலுள்ள எந்தவொரு சிறுகதையும் ஈர்க்கவில்லை. கதைக்கரு நல்லதுதான், ஆனால் கதையோட்டமோ முடிவோ மகிழ்விக்கவில்லை. தலைப்புக் கதையில் நல்ல கதாபாத்திரங்கள் உண்டு, ஆனால் அவற்றை வடிவமைத்த விதத்தில் திருப்தியில்லை.

அதிக எதிர்பார்ப்புடன் வாசித்ததால் கதையின் தரத்தைக் குறைவாக மதிப்பிட்டேனோ என்று, சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படிக்கத் தொடங்கினேன். ஆனாலும் கதைகள் ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆங்காங்கே சில அழகிய வரிகள் உண்டு — எழுத்தாளரின் திறமைக்கு எடுத்துக்காட்டு. ஆனால் அந்தத் திறமை கதையோட்டத்தில் வெளிக்கொணரப்படவில்லை. விருது வெல்லுமளவிற்கு இந்தப் புத்தகத்தில் என்ன உள்ளது என்ற எண்ணம்தான் வந்தது புத்தகத்தை முடிக்கும்போது.

user_9012

★ 5/5 Feb 02, 2026

ஆசிரியர் ஜன்னல்கள் தன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்கிறார் — ஒவ்வொரு ஜன்னலும் வெளி உலகைப் பார்க்க ஒரு திறப்பு, ஒவ்வொன்றும் வெவ்வேறு காட்சியை வழங்குகிறது. ஒவ்வொரு கதையிலும் இசை ஒரு நிலையான அம்சம் — பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு உணர்ச்சிகளை எழுப்புகிறது. ஜன்னல்களும் இசையும் மனித உறவுகளுக்கான உருவகங்கள்.

வயதான பெண்ணுக்கு, தொண்டைப் புற்றுநோயால் இறந்த தந்தையை அடுக்களை ஜன்னலுக்கு வரும் காகம் நினைவூட்டுகிறது. மற்றொரு வயதான பெண் கணவனை இழந்து, அமெரிக்காவில் உள்ள மகனின் அலட்சியத்தால் தற்கொலையைப் பற்றி யோசிக்கிறாள். ஒரு மனிதன் ஒருநாள் குடும்பத்தை விட்டு, மனைவியையும் செவிப்புலன் குறைபாடுள்ள மகளையும் கவலைப்படாமல் துறவறம் பூண்கிறான். 1984 கலவரத்தில் நெருக்கமானவர்களை இழக்கும் பெண். மதமாற்றம் செய்ததற்காக கல்லெறி வாங்கும் பெண். 11வது பரிமாணத்தைச் சேர்ந்த சைபோர்க்குடன் காதலிக்கும் பெண் விஞ்ஞானி.

13 கதைகளும் ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் பல காலமாக அனுபவித்ததைப் பேசுகின்றன. ஆனால் இவை பலவீனமான பெண்கள் அல்ல — உண்மையில் பெண்தான் இருவரில் வலிமையானவள். கதைகள் எளிய மொழியில் சிக்கலான விஷயத்தைப் பேசுகின்றன — உறவுகள்.