Reviews for எனது இந்தியா [Enadhu India]
26 reviews total
user_8921
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் ஒரு நூல் அல்ல, பல நூல்களின் சாரம். ஒரு விமர்சனம் எழுத ஒரு புத்தகமே தேவைப்படும் அளவுக்கு ஆழமான படைப்பு. தமிழ் தெரிந்த, இந்தியாவைப் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
மெக்காலேயின் கல்வித் திட்டம் எப்படி இந்தியப் பள்ளிகளை சிறைகளாக மாற்றியது, காந்தியின் மரணத்தின்போது இந்தியாவில் என்ன நடந்தது, ஷாஜஹானின் கடைசி நாட்கள், நாளந்தா பல்கலைக்கழகம், டிப்பு சுல்தானின் மகன்களின் கதி, மருது சகோதரர்களின் தியாகம் — இப்படி எண்ணற்ற தலைப்புகள் ஆராய்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர்களின் கொடுமைகள், இந்தியப் பஞ்சங்கள், பிரிவினையின் வலி, பெண்கள் மீதான அடக்குமுறை, அகழ்வாய்வுகளின் முக்கியத்துவம், கோஹினூர் வைரம் என ஒவ்வொரு அத்தியாயமும் புதிய பரிமாணம் காட்டுகிறது. 97 தலைப்புகளில் இந்திய வரலாற்றின் அறியப்படாத முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புதமான தொகுப்பு.
user_8920
★ 5/5 Feb 02, 2026அற்புதமான புத்தகம். இந்தியாவின் சொல்லப்படாத வரலாற்றை வெளிக்கொணர்கிறது. செல்வம், அறிவு, கலாசாரம் என பல்வேறு அம்சங்களில் இந்தியா எவ்வளவு செழிப்பான நாடாக இருந்தது என்பதையும், எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறது.
ஆசிரியர் விரிவான ஆராய்ச்சி செய்து, நாட்டின் நீளம் அகலம் முழுவதும் பயணித்து தகவல்களைத் திரட்டியுள்ளார். முகலாயர்கள், குறிப்பாக ஆங்கிலேயர், போர்ச்சுகீசியர், டேனிஷ் படையெடுப்பாளர்களின் சுரண்டல்களை அம்பலப்படுத்துகிறது. கல்வி முறைகளை மாற்றி அடுத்த தலைமுறையிடமிருந்து இந்த உண்மைகள் மறைக்கப்பட்டன என்பது வேதனையளிக்கிறது.
மிகவும் அறிவூட்டும், கண்திறக்கும் படைப்பு.
user_8919
★ 5/5 Feb 02, 2026வரலாற்றுப் பக்கங்களில் போரைத் தவிர்த்துவிட்டு நம்மால் படிக்க முடியாது. போரின் வெற்றியை பறைசாற்றும் நாம், அந்தப் போரினால் ஏற்படும் உயிர் இழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் பற்றி பேசுவதில்லை. இவ்வகையாக சிந்திக்கவைக்கும் புத்தகமே "எனது இந்தியா".
இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் நடந்த முக்கிய நிகழ்வுகள் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. கல்வி முறை எவ்வாறு இருந்திருக்கிறது என்பதும், மன்னர்களின் வேட்டை எப்படி வீரத்தின் அடையாளமாகச் சொல்லப்பட்டது என்பதும், கோயில் கல்வெட்டுகளின் முக்கியத்துவமும் பேசப்படுகின்றன.
100 கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், ஒவ்வொரு கட்டுரைக்கும் இரு புத்தகங்கள் வீதம் 200 புத்தகங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
user_8918
★ 4/5 Feb 02, 2026சரித்திரம் என்பது ஆயிரம் முகங்களும் அவற்றுள் ஆயிரம் நாக்குகளும் கொண்டது. ஒவ்வொரு நாக்கு ஒரு மாதிரி பேசும். சில உண்மையும், சில பொய்யும், பல உண்மையும் பொய்யும் கலந்த கலவையும் பேசும். மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை சில நாக்குகள் ஏதோ ஓரத்தில் பேசிக்கொண்டிருக்கும். சரித்திரத்தைப் புரிந்துகொள்வதும் புரியவைப்பதும் சாதாரண காரியம் கிடையாது. இந்த நூலின் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அந்தக் கடினமான காரியத்தை மிகவும் எளிதாகக் கையாளுகிறார்.
புத்தகக்கடைக்கோ நூலகத்துக்கோ சென்றால் பல தடிதடியான சரித்திரப் புத்தகங்களைப் பார்க்கலாம். ஆனால் அவை எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. இந்தப் புத்தகமும் தடியான புத்தகம்தான். ஆனால் சரித்திரத்தை சுவைபடத் தெரிவிப்பதில் சரித்திரம் படைத்துள்ளார் இந்த ஆசிரியர்.
எவரெஸ்ட் ஒரு ஆங்கில அதிகாரியின் பெயர் என்பதும், அந்த சிகரத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டது அதிகார வர்கத்தின் செயல்பாடு என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆங்கிலர் ஆட்சியைப் புகழ்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், அவர்கள் சாதி, கல்வி, விவசாயம், பொருளாதாரம் எனப் பல்வேறு துறைகளிலும் எப்படியெல்லாம் திட்டமிட்டு நம்மைச் சுரண்டினார்கள் என்பது தெளிவாக விளங்கும்.
உப்பு சத்தியாகிரகம் மிகவும் பிரசித்தம். ஆனால் உப்பு வேலி? அது வரலாற்றில் மறைக்கப்பட்ட கொடுமை. இது அனைவரும் படித்து ஆதரிக்க வேண்டிய புத்தகம்.
user_8917
★ 4/5 Feb 02, 2026எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய "சஞ்சாரம்" என்னும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலை வாசித்த அனுபவம் இருக்கிறது. புத்தக வாசிப்புக்கு அறிமுகமான காலகட்டம் அது. மொழி நடை சற்று கடினமாகத்தான் இருந்தது. அதன் பின் சமீபத்தில் வாசித்த "எனது இந்தியா" என்னும் வரலாறு பற்றிய நூல் மிகவும் கவர்ந்தது. அளவிலும் கருத்திலும் ஆழம் அதிகமாகவே இருந்தது.
கடந்தகாலம் நிகழ்காலத்திற்கு கற்றுத்தரும் பாடத்திற்கு பெயர்தான் வரலாறு என்று தொடங்கும் இந்த நூலில் 152 கட்டுரைகள் உள்ளன. இந்திய வரலாற்றில் பெரிதும் அறியப்படாத தகவல்களையும் செய்திகளையும் சுருக்கமாக கூறியுள்ளார் ஆசிரியர்.
நூலின் சிறப்பாக நான் பார்ப்பது ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகப் பட்டியல்தான். 152 பகுதிகளுக்கு 2 புத்தகங்கள் என்று, கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
காந்தியை கொன்ற கோட்சேவின் கைத்துப்பாக்கியை பற்றிய பகுதி மிகவும் நுணுக்கமானது — அந்த துப்பாக்கி எங்கிருந்து வந்தது, அதில் இருந்த குண்டுகள் எத்தனை, எத்தனை முறை சுடப்பட்டது என்பதை விரிவாகப் பேசுகிறது. புத்தகம் முழுக்க இதுபோன்ற ஆழமான கருத்துக்கள் நிறைந்துள்ளன.
புத்தகத்தில் தேசியவாத வாடை அதிகமாகவே இருந்தது, சில பகுதிகள் நமது முன்முடிவுகளோடு முரண்படவும் வாய்ப்பிருக்கிறது. பஞ்சங்கள் பற்றிய பகுதி நம்மை உறையவைக்கிறது — சில பஞ்சங்கள் பதுக்கல் முறையினால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய வரலாற்றை கரைத்துக் குடிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தொடக்கப் புத்தகம்.
user_8916
★ 5/5 Feb 02, 2026எனது அபிமான எழுத்தாளர்கள் வரிசையில் ஜெயகாந்தனிற்கு பிறகு இரண்டாம் இடத்தில் இருப்பவர் எஸ் ராமகிருஷ்ணன். அவரது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மட்டும் அன்றி அவரது பேச்சுகளும் மிகவும் மனதை கவரும் வகையில் இருக்கும். மணிக்கணக்காக சுவையாகப் பேசும் இந்த இனிய மனிதரின் படைப்புகளில் "எனது இந்தியா" என்கின்ற இந்த வரலாற்று கட்டுரைத்தொகுப்பு ஒரு இமாலய சாதனை என்றே சொல்லவேண்டும்.
இது அவசியமாக சகல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்புத்தகம் ஆக்கவேண்டியது. இப்படி ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவரை தமிழில் வந்ததாக என் அறிவுக்கு எட்டவில்லை. ஒவ்வோர் அத்தியாயமும் மிகுந்த சிரத்தையுடன் ஆராய்ச்சி செய்து, படிப்பவர் மனதில் உறையும் வண்ணம் அழகிய நடையில் எழுதியிருப்பது ஒப்பற்ற சாதனை.
இந்த வரலாற்றுப் புதினத்தொகுப்பு சாதி, மதம், மொழி, தேசம் கடந்து எல்லார் மனதையும் கொள்ளை கொள்ளும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. நிச்சயம் ஒவ்வொரு தமிழனும் பெருமையுடன் கொண்டாட வேண்டிய அற்புத படைப்பு!