Reviews for பண்பாட்டு அசைவுகள்

30 reviews total

user_8363

★ 5/5 Feb 02, 2026

கட்டுரைகளை எடுத்துக்கொண்டால், சில சாட்சியங்களை மட்டுமே மையமாகக்கொண்டு பெரும்பாலும் ஆசிரியர்களின் கருத்தை ஒத்தே அமையும். ஆனால் பண்பாட்டு அசைவுகள், நீண்ட நெடிய ஆராய்ச்சிகளைச் செய்து, அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆதாரங்களுடன் நிறுவப்பட்ட ஓர் சிறந்த படைப்பு.

தமிழர் பண்பாடு என்று நாம் பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் பண்பாடுகள் உண்மையில் நம்முடையதுதானா? அவை என்றும் நிலையானவை அன்று — கால ஓட்டத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, பொருளாதாரத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை என்பதே பண்பாட்டு அசைவுகள்.

பல மொழிகளின் படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகளையும் தாண்டி எதிர்த்து, போராடி இன்றும் அதன் இலக்கணம் குன்றாது ஒப்பற்ற தனித்துவத்துடன் தமிழ் மொழி விளங்கி வருகிறது.

நாம் யாரும் சற்றும் பொருட்படுத்தாத பொருட்களை, செய்திகளை எடுத்துக்கொண்டு அதன் வரலாறு, பண்பாட்டு அசைவுகளை அலசி ஆராய்ந்து அளித்துள்ளமை சிறப்பு. தமிழர்களின் வாழ்வியல், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், விழுமியங்கள், நெறிகள், சாதிய சமய கோட்பாடுகள் என அனைத்தையும் அலசி ஆராய்ந்துள்ளார். தமிழர்கள் அனைவரும் இப்புத்தகத்தை வாசித்துத் தெளிவு பெற வேண்டும்.

user_8362

★ 4/5 Feb 02, 2026

தொ.ப புத்தகங்களுக்குப் பொதுவான ஒரு விஷயம் — நாம் காலம் காலமாகச் செய்து வரும் சடங்குகள், பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றை, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் குறிப்புகள் கொண்டு, கள ஆய்வுகளில் கண்ட உண்மைகளைக் கொண்டு எளிமையாக விளக்குவது.

அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற இரு புத்தகங்களில் இடம்பெற்ற கட்டுரைகளோடு சில புதிய கட்டுரைகள் சேர்ந்து பதிக்கப்பட்டதே இந்தப் புத்தகம்.

தமிழ் மொழியின் அழகு, நீர்நிலைகளின் பெயர்கள், உணவுகள் மற்றும் நம்பிக்கைகள், உறவுகளின் பெயர் விளக்கங்கள், தாய்மாமன் முறைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், தைப்பூசம், தீபாவளி, விநாயகர் வழிபாடு, பௌத்த மத எச்சங்கள், சமணப் பள்ளிகள், சாதிய கோட்பாடுகள் என எத்தனையோ விஷயங்களைப் புதிதாக அறிந்துகொண்ட திருப்தியை இந்தப் புத்தகமும் தருகிறது.

user_8361

★ 4/5 Feb 02, 2026

தொ.ப உடைய கட்டுரைகள் படிக்கும்போது நம் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாகக் கடந்து போகும் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் வரலாறு கூறும்போது ஒரு வாசகனாக வியப்பாக இருக்கிறது. தமிழகத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பண்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் அசைவுகளை மிகத் துல்லியமாகவும் கல்வெட்டுகள் மேற்கோள்கள் பல காட்டியும் எழுதியிருக்கிறார்.

user_8360

★ 4/5 Feb 02, 2026

அறியப்படாத தமிழகம் என்னும் புத்தகத்தில் வெளிவந்த கட்டுரைகள் உட்பட, இன்னும் புதிய கட்டுரைகளைக் கொண்டது இந்தப் பண்பாட்டு அசைவுகள். நமது ஊரில் நாம் வழிபடும் தெய்வங்கள், எப்படி அந்தத் தெய்வங்கள் தோன்றியிருக்கும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் காணலாம். சிவன், விஷ்ணு, மீனாட்சி முதலிய தெய்வங்கள் முதலில் சிறு தெய்வங்களாக இருந்தவை தான். எப்படி முதலாளித்துவம் அவர்களைப் பெருந்தெய்வங்களாக மாற்றியது எனத் தெரிந்து கொள்ளலாம்.

சைவம் மற்றும் வைணவ சமய நிறுவனங்கள் என்னதான் ஆதிக்கம் செலுத்தினாலும் அடித்தள மக்களின் நம்பிக்கையை அவர்களால் அசைக்க முடியவில்லை. சங்க இலக்கியத்தில் பறையர்கள் மதிக்கத்தக்க வகையில் இருந்திருக்கிறார்கள்.

ஒரு சிறு தெய்வம் எந்த நிலத்தில் தோன்றுகிறதோ, அதற்கு உண்டான ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கும். இன்னும் பல தகவல்களைக் கொண்டுள்ளது இந்தப் புத்தகம். நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.

user_8359

★ 5/5 Feb 02, 2026

தமிழர் அனைவரும் தம் வரலாறு அறியக் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

user_8358

★ 4/5 Feb 02, 2026

தமிழ் மக்களிடையே காணப்படும் குறிப்பிட்ட பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிய கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தொ.ப அவர்கள் விரிவான ஆராய்ச்சியுடன் இந்தப் புத்தகத்தை வழங்கியுள்ளார், இது தமிழ்ச் சமூகத்தின் வேர்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

user_8357

★ 4/5 Feb 02, 2026

தொ.பரமசிவனின் மறைவிற்குப் பிரபலங்களின் இரங்கல் மூலம் அவர் யார் என்ற ஆர்வம் வந்தது. அவரின் நேர்காணல்களின் தொகுப்பை வாசித்த பின், பண்பாட்டு அசைவுகள் என்ற நூலின் சிறப்பைப் பற்றி அறிந்து அதைத் தேடிப் படித்தேன்.

நான் படித்த முதல் ஆய்வு நூல் இது. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்காமல் பரவலான தொன்மையான விஷயங்களைப் பற்றிய ஆழமான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

ஏர் பிடித்து வேளாண்மை செய்யத் தேக்கி வைத்திருக்கும் நீரே ஏரி, கண்ணுக்கு எட்டிய வரை நீரிருக்கும் இடம் கண்மாய், குளிக்கப் பயன்படும் நீருள்ள இடம் குளம், ஊர் மக்கள் நீர் தேவைக்குப் பயன்படும் கிணறு ஊரணி.

எள்ளிலிருந்து பெறப்படும் நெய் எள் நெய் — இதுவே நாளடைவில் மருவி எண்ணெய் என்றானது. செக்கிலிருந்து எண்ணெய் ஆட்டி விற்பவரைச் செக்கார் என்று அழைத்தனர், இதுவே பின்னர் செட்டியார் என்று மாறியது.

வேலைக்கு ஊதியமாகச் சம்பா நெல்லும் உப்பளத்திலிருந்து உப்பும் தரப்பட்டதால் சம்பளம் என்று பெயர் வந்தது. இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் பின்னுள்ள அர்த்தத்தை விவரிப்பதுடன் சிறு தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு, தமிழகத்தில் புத்த, சமண, வைணவ, சைவ மதங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி, சாதிகள் கடந்து வந்த பாதைகள் எனப் பலப்பல விஷயங்களை அறியத் தந்திருக்கிறார் தொ.ப.

அனைவரும் படிக்க வேண்டிய தகவல் களஞ்சியம் இந்த நூல்.

user_8356

★ 4/5 Feb 02, 2026

மின்னங்காடியின் இந்தப் பதிப்பு மிகவும் அதிகமான சொற்பிழைகளுடனும், பல இடங்களில் பொருட்பிழைகளுடனும் இருக்கிறது. ஒரு நல்ல நூலை வாசிக்கும் அனுபவத்தை எல்லா விதங்களிலும் இது தடுக்கிறது.

புத்தகத்தைப் பொறுத்தவரை இது ஒரு அரிய பொக்கிஷம். இதில் தொ.ப பேசும் பல விஷயங்களை நாம் ஆச்சரியத்துடன் வாசிக்கிறோம். அருமையான புத்தகம்.

user_8355

★ 5/5 Feb 02, 2026

குறைந்தது 300 வரிகளையாவது அடிக்கோடிட வைத்துப் பிரமிப்புக்குள்ளாக்கிய மற்றொரு தொ.ப நூல். அறியப்படாத, மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட சமூக மரபுகளைத் தோண்டி எடுத்து நமக்குத் தருகிறார்.

இன்று இந்து மதம் என்று அழைக்கும் ஒன்றின் அஸ்திவாரத்தையே தன் கள ஆய்வுகளின் மூலம் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களால் அசைத்துவிடுகிறார்.

பழந்தமிழரின் உணவுமுறை, உடை, உறவுகள், சடங்குகள், நம்பிக்கைகள் வியப்பளிக்கின்றன. இன்று இந்தியாவில் அனைவரையும் இந்துக்கள் என்ற பரந்த தூரிகையில் துலக்கும் முயற்சியில் இருப்போருக்கு இந்நூல் ஒரு சவாலாகவும், விடை கோரும் கேள்வித்தாளாகவும் கண்டிப்பாக அமையும்.

திணிக்கப்பட்ட மாற்றங்களாலும், மாற்றி எழுதப்பட்ட வரலாற்றினாலும் காலப்போக்கில் எப்படி உண்மை மனித பிரக்ஞையிலிருந்து மறைந்துவிடுகிறது என்ற ஆபத்தை இந்நூல் கண்டிப்பாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

user_8354

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அடிக்கோடிட ஆரம்பித்தால் 80% மேல் அடிக்கோடிட வேண்டும் என்றே கருதுகிறேன், அவ்வளவு தகவல்கள் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார் தொ.ப.

அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய குறிப்பாக சாதிகள், பெண்கள், சிறு தெய்வங்கள் பலவற்றின் வரலாறுகளைச் சங்க இலக்கியம் வாயிலாகவும் கள ஆய்வின் வாயிலாகவும் மிக எளிமையாக எடுத்துரைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.

நிச்சயம் ஒவ்வொரு தமிழரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.