Reviews for உன்னைப் போல் ஒருவன்

23 reviews total

user_8176

★ 5/5 Feb 02, 2026

"இந்தப் பாரததேசத்தின் எதிர்காலமே எச்சில் துண்டு சிகரட் பொறுக்கித் திரிவதுபோல் அவர் இதயத்தில் உருவகமாயிற்று."

ஒரு தேசத்தின் லட்சணத்தை அளக்கவேண்டுமானால் அந்த தேசத்தின் பெண்களின் நிலையைப் பார்க்கவேண்டும். இந்த தேசத்தின் தாய்மார்களின் நிலை இதுவானால் இந்த தேசத்தின் எதிர்காலத்தின் நிலை எவ்வாறு இருக்கும்?

"யாருகிட்டே சண்டை போட்டாலும் தாய்கிட்டே சண்டை போடக் கூடாதப்பா; தாய்கிட்டேயே சண்டை போட்டாலும் ஒருத்தன் தன் கிட்டேயே சண்டை போட்டுக்கக் கூடாது… ஆமா! அது ரொம்பத் தப்ப தன்னைத் தானே வெறுக்க ஆரம்பிச்சுட்டா அந்த மனசு அப்பறம் யாரையுமே நேசிக்க முடியாமலே அழுகிப் போயிடும்."

உயிர் என்பது ஜடமன்று. ஜடம் உடைந்தால் ஒரு முழுமை இரண்டு மூளிகளாக மட்டும்தான் மாறும். உயிரின் முழுமை மாறுதல் கொண்டால் ஒன்றிலிருந்து பல மூளிகள் அல்ல - பல முழுமைகளே செழிக்கும்.

user_8175

★ 5/5 Feb 02, 2026

ஜெயகாந்தனின் பிறந்த தினத்தையொட்டி இதைப் படிக்க நேர்ந்தது. படித்தப் பின் ஏற்பட்ட தாக்கம் மிகப் பெரியது. தாக்கத்தை ஏற்படுத்தாத ஜெயகாந்தன் புத்தகம் தான் ஏது?!

"தங்கம்" என்கிற முப்பது வயது பெண் சித்தாள், அவளது 12 வயது மகன் "சிட்டி" - இவர்களைப் பற்றிய கதை தான் இது. 16 வயதிலே கள்ளத் தொடர்பால் தங்கம் கர்ப்பமாகிறாள் - அந்த குழந்தை தான் சிட்டி. அன்னம்மா ஆயாவின் உதவியோடு குழந்தையை வளர்க்கிறாள். "துரைக்கண்ணு" என்கிற மாமனிதனை சிட்டி ஒரு நாள் சந்திக்க நேர்கிறது. அதன் பின் தான் சிட்டி ஒரு பொறுப்புள்ள சிறுவனாக மாறுகிறான்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அந்தந்த நேரத்து நியாயத்தை ஜெயகாந்தன் தனது எல்லா படைப்புகளிலும் காட்டுவார். முழுமையாக யாரையுமே வெறுக்க முடியாது. கடைசி இருபது பக்கங்கள் படிக்கையில் கண்களில் வழிந்துக் கொண்டே இருந்த கண்ணீரை நினைக்கையில் அவர் எழுதிய இந்த வரி தான் நினைவுக்கு வருகிறது - "மனிதனின் சகல சோகங்களுக்கும் வித்தான பிறவியெனும் பெருஞ்சிலுவையைத் தோளில் சுமந்து நிற்பவன் போன்று..."

user_8174

★ 5/5 Feb 02, 2026

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "உன்னைப்போல் ஒருவன்" நாவல் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் இந்தப் பதிவில்.

மனித உறவுகளைப் பற்றி இந்தச் சமூகம் கொண்டிருக்கும் முன்முடிவுகளைப் பற்றிய தீர்க்கமான கேள்விகளை முன்வைக்கும், எளிமையான நாவல்.

30 வயதான தன் அம்மா அவர் மனத்துக்குப் பிடித்த இன்னொரு ஆணுடன் வாழத் தொடங்கையில், அந்தச் சராசரி ஏழைக் குழந்தைக்கு ஏற்படும் மனச் சிக்கல்களை, ஒரு சிறுவனின் மனவோட்டத்துடன் ஜெயகாந்தன் அவர்கள் அணுகியிருக்கிறார்.

1960-களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் விவாதிக்கும் விஷயங்கள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.