Reviews for பிறகு
21 reviews total
user_8109
★ 5/5 Feb 02, 2026பூமணி அவர்களைப் பற்றி அசுரன் படம் பார்த்து தெரிந்துகொண்டேன். நண்பன் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் எடுக்காமல் இருக்க முடியவில்லை. இதுதான் என்னுடைய முதல் பூமணி புத்தகம். சமீப வருடங்களில் நான் படித்த சிறந்த சமூகம் சார்ந்த புத்தகங்களில் ஒன்றாக இது அமைந்தது.
இந்தியா விடுதலையடைந்த காலகட்டத்தில் தெற்கே இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதைதான் இந்த பிறகு புத்தகம். அந்தக் காலத்தில் ஊர்காட்டில் எப்படி இருந்தது, அந்த மக்களின் வாழ்வியல் எப்படி இருந்தது என்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறது இந்தப் புத்தகம்.
சாதிய கட்டமைப்பை மிகவும் நுட்பமாக அனுகியிருக்கிறார். புனைவுக் கதையில் இதுபோன்ற தகவல்களைக் கதை தொய்வில்லாமல் சொல்வது தனிக்கலை. குருவி வேட்டை எப்படிப் பண்ணுவார்கள் என்ற பகுதி வித்தியாசமாக இருந்தது. தவறு செய்வது மேல்நிலை சாதிகளுக்கு எவ்வளவு சுலபமாக இருந்தது என்பதை அங்கங்கே தொட்டுவிட்டுப் போயிருக்கிறார்.
சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது, அது சாதியைப் பொறுத்து எப்படி மாறுபடுகிறது என்று காட்டியிருக்கிறார் பூமணி. மறுமணம், விரும்பியவரோடு நகர்வது போன்றவை மேல்நிலை சாதிப் பெண்களை விட கீழ்நிலை சாதிப் பெண்களுக்கு சுலபமாக இருந்திருக்கிறது. ஆனால் அந்தக் கீழ்நிலை சாதிகளிலும் பெண் ஒரு படி கீழ்தான் வைக்கப்பட்டிருக்கிறாள்.
தென் மாவட்ட வட்டார வழக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் போகப்போகப் பழகிவிடுகிறது. புத்தகத்தின் பின்பக்கம் தமிழ்-தமிழ் அகராதி இருக்கிறது, அது கதையைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.