Reviews for கிடை
30 reviews total
user_7738
★ 5/5 Feb 02, 2026இவ்வளவு அடுக்குகளை ஒரே நேரத்தில் எப்படி யாரோ ஒருவரால் சிந்திக்க முடியும்? இவ்வளவு குறுகிய வாசிப்பில் இவ்வளவு உள்ளடக்கத்தை எப்படி பொருத்த முடியும்? ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் பற்றி இவ்வளவு ஆழமான அறிவை எப்படி கொண்டிருக்க முடியும்?
இந்தக் குறுநாவல் கிடையில் ஒரு நாள் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியது. கிடை என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை இரவு நேரத்தில் வயல் போன்ற திறந்தவெளிகளில் தங்கவைக்கும் இடமாகும்.
பல மயிர்கூச்செறியும் தருணங்கள் இந்த சிறிய படைப்பில் உள்ளன. தமிழ் வாசிப்பை தொடங்கியவர்களுக்கு ஒரு சிறந்த, குறுகிய, தரமான வாசிப்பு அனுபவம் இது. கட்டாயம் பரிந்துரைக்கிறேன்.
user_7737
★ 5/5 Feb 02, 2026பொதுவாய் நாவலில் குறு, சிறு, நெடு எல்லாம் பக்கங்களில் வைத்து அளப்பார்கள். அது குறுவோ, சிறுவோ, நெடுவோ எல்லா புத்தகமும் பெரிய இலக்கையே நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது. கிடையும் அவ்வாறே.
கட்டமைப்பான சமூகத்தில் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் எளியவர்க்கு பாம்பாகவும் மற்றவருக்கு ஏணியாகவும் உள்ளது. கிடையில் எத்தனை எத்தனை ஆடுகள் - தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் நமக்கு அவை மொத்தமாய் ஆடுகள். வெள்ளாடு, தாலி, கிடா, மொச்சை இன்னும் இன்னும். எத்தனை மனிதர்கள் - நாயக்கர், கோனார் இன்னும் இன்னும்.
பள்ளி செவனி என்றாலும், பருவ மணப்பெண்ணோ, பருவமெய்தா மணப்பெண்ணோ - எல்லா சாதியிலும் பெண்கள் எல்லப்பன்களுக்கு சேவை செய்யவே பிறவி எடுத்திருக்கின்றனர். கட்டமைப்பின் கட்டுப்பாடுகள் கோடாங்கியின் கையில் எருக்கம் விளாறாய் மாறி செவனிகளை அடிக்கின்றன. ஆகச்சிறந்த படைப்பாளி கி.ரா.
user_7736
Feb 02, 2026நூற்றாண்டு விழா காணும் ஆசிரியர் கி.ரா அவர்கள் எழுதிய புத்தகங்களில் நான் வாசிக்கும் முதல் புத்தகம். இத்தனை காலம் கழித்தும் அவர் கொண்டாடப்படுவதன் காரணம் அவர் புத்தகத்தின் மூலம் தெரிகிறது.
வெறும் 60 பக்கங்களில் சமூகத்தில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வு மற்றும் மனிதர்களின் குணங்களை மிக எதார்த்தமாக எளிய நடையில் எழுதியுள்ளார்.
ஏதோ கிடையில் நடக்கும் பிரச்சனையை தீர்க்கும் கதையாக இருக்கும் என்று நினைத்து வாசிக்க, அதுவோ எல்லப்பன் செவனியின் காதலை பிரிக்கும் சதியாக இருக்கிறது.
ஆடுகளுக்கு பெயரிடும் வழக்கம் எங்கள் ஊரிலும் உண்டு. பேச்சு வழக்கில் எங்கள் ஊர் வாசமும் வீசியது வாசிக்கும் போது மகிழ்ச்சியைத் தந்தது.
அவர் எழுதியிருக்கும் கதாபாத்திரங்களை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம். அத்தனை உயிரோட்டமான, உண்மையான மனிதர்களாக இருக்கிறார்கள் அவரின் கதைமாந்தர்கள். திம்மநாயக்கரின் சாமர்த்தியம், செய்த குற்றங்களிலிருந்து தப்பித்து செய்யாத தவறுக்காக சிக்கிக் கொள்ளும் பொன்னுசாமி நாயக்கர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அத்தனை எதார்த்தம். ஒரு கிடையை வைத்து சாதிய சமூகங்களின் எதார்த்தத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார்.
user_7735
★ 5/5 Feb 02, 2026கரிசல் காட்டில் ஒரு சம்சாரி - அடுத்த கதை:
ஒரு ஊரில் துரைசாமி நாயக்கர் என்னும் சம்சாரி இருந்தார். அவருக்கு 4 ஏக்கர் நிலம் உண்டு. ஒன்றுவிட்ட சகோதரிகள் 4 பேர், அவர்களுக்கும் 4 ஏக்கர் நிலம் உண்டு. வாரிசு இல்லாமல் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டார்கள். மொத்தம் 8 ஏக்கர் கரிசல் நிலம் - புல் பூண்டு முளைக்காத இடம்.
அந்தக் காலத்திலேயே நல்ல நீதிபதி போல் புத்திக்கூர்மை உள்ளவர். நிலத்தையும் மக்களையும் எப்படி கையாள வேண்டுமென்று தெரிந்து வைத்திருந்தார். ஜோதிடம், உறவுக்காரர்களை வாழ்க்கையிலிருந்து அறவே தள்ளி வைத்தார். ஊரார் வீட்டின் விசேஷங்களுக்கு செல்வார் ஆனால் எந்த வீட்டினுள்ளும் மொய் வைக்க மாட்டார்.
ஆடம்பரத்திற்கு ஏதும் ஆசைப்படாமல், காரை வீடு இருந்தும் குடியேறாமல் தகரவீட்டிலேயே இருந்து, அறுசுவை உணவும் உண்ணாமல் மன நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார். ஒரு ஏழை வேலைக்காரன் தன் உழைப்பை மட்டுமே நம்பி கரிசல் நிலத்தை வைத்துக்கொண்டு எப்படி சம்சாரி ஆனார் என்பதுதான் இந்தக் கதை.
user_7734
★ 4/5 Feb 02, 2026ராமசுப்பா நாயக்கர், கிட்ணக் கோனார், லவகுணக் கவுண்டர் என வேறுபாடில்லாமல் அனைவரும் கீதாரிகளாகச் சுற்றும் சமூகம். இதில் ராக்கம்மாவின் தோட்டத்தில் இருந்த பருத்தியை முழுவதும் ஆடுகள் தின்றுவிடுகிறது.
அந்த அழிமானத்துக்குக் காரணம் யாரெனக் கண்டறிய திம்மய நாயக்கருடன் மேலும் இருவர் என மூவராக பருத்திக் காட்டுக்குள் செல்கின்றனர். அங்கே ஒரு உடைந்த வளையலும் முள்வாங்கியும் கிடைக்கிறது. ஆனால் அவர் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்.
ரகசியம் என்னவென்றால் - பள்ளக்குடியில் இருக்கும் பதின்பருவத்தைச் சேர்ந்த செவனிக்கும் திம்மய நாயக்கரின் மாப்பிள்ளை எல்லப்பனுக்கும் நடந்த காதல் விளையாட்டின் காரணமாக மேய்க்க வந்த ஆட்டு மந்தையை இருவரும் மறக்க, அந்த ஆடுகள் ராக்கம்மாவின் பருத்தியை நாசம் செய்கின்றன.
ஊரில் பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. வேறு வேறு சாதியினராக இருந்தாலும் எல்லோரும் பங்காளிகளாகவே பழகுகிறார்கள். முருகா முருகா என்று நேர்மையாக வாழும் ராமக்கோனார் மதிக்கப்படுகிறார். திருட்டுத்தொழிலின் காரணமாக பொன்னுசாமி நாயக்கர் ஊராரின் ஏய்ப்புக்கு உள்ளாகிறார்.
கலெக்டர் நாயக்கர், ரெட்டைக்கதவு நாயக்கர் என கி.ராஜநாராயணனின் கதாபாத்திர படைப்பு ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. கீதாரிகளின் வாழ்வியலும் கலாச்சாரமும் ஆடுகள் குறித்த நம்பிக்கையும் ஒரு வறள்காட்டின் வாழ்க்கை முறையை நம் கண் முன் விரிக்கிறது. ஐம்பது பக்க குறுநாவல் என்றாலும் அதற்குள்ளும் ஒரு காதல் கதை, மனதை பாதிக்கும் சம்பவங்கள் என படிக்கப் படிக்க சுவாரசியமூட்டுகிறது கிடை.
user_7733
★ 4/5 Feb 02, 2026கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் வாசித்து முடித்த பின் நான் எடுத்த மூன்றாவது புத்தகம் இந்த குறுநாவல்.
கி.ராவின் கதை சொல்லும் பாணி, "மைய கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் வேண்டும் ஒரு கதைக்கு" என்ற எண்ணத்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இந்த குறுநாவல் கிராமப்புற சூழலையே ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கிறது. இது கி.ராவின் அழகியல்.
இவரின் படைப்புகளின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் மண்வாசனை கொண்ட பேச்சு. இதில் உள்ள பேச்சுவழக்கு உரையாடல், கி.ரா நம்மை அந்த கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறது. அந்த மொழியாடல் நாம் அந்த கிராமத்தில் வாழும் ஒருவர் என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது.
சின்னஞ்சிறிய ஒரு குழந்தை கிடை மறித்தாலும் அதனை மதித்து கிடை வெளியேறாது என்று சொல்லும் இடத்தில் கிராமப்புற வாழ்க்கையின் அழகியலை சிலாகிக்க வைக்கிறார்.
"அதிகார இயக்கவியல்" என்ற நுட்பமான கருத்தியலை, கிடை மறித்த ராக்கமாவின் பருத்தி காட்டை கண்டு வர செல்லும் திம்மய நாயக்கர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கி.ரா அழகாய் அழுத்தமாய் வெளிப்படுத்தியிருக்கும் விதம், இந்தப் படைப்பு ஏன் கிளாசிக் என்று கூறப்படுகிறது என்பதை உணர வைக்கிறது.
காதல் வயப்படும் இருவர் அவர்களின் சாதிய வேறுபாட்டால் பிரிக்கப்பட்டு, மேல் சாதியைச் சேர்ந்தவருக்கு திருமணம் என்னும் தண்டனை தந்து, கீழ் சாதியைச் சேர்ந்தவருக்கு பிடித்த பேயை ஓட்ட கிடைக்கும் சவுக்கடிகளே தண்டனை என்று கூறி முடிக்கிறார். மிக மேலோட்டமாக பார்த்தால் வர்க்க அரசியல் பேசுவதைப் போல் தோன்றும் இந்த குறுநாவல், வாசித்து முடித்த பிறகு பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. 67 பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறிய படைப்பு, ஆனால் கி.ரா சொல்லும் செய்தி மிகவும் முக்கியமானது.
user_7732
★ 4/5 Feb 02, 2026இந்தக் கதையில் உள்ள கூறுகள் சமூகத்தின் சாதி மற்றும் பொருளாதார பின்னணியை விமர்சிக்கின்றன. கதையின் வர்ணனை பகுதி முற்றிலும் வட்டார சூழலில் அமைந்துள்ளது. அருமை!
user_7731
★ 4/5 Feb 02, 2026கி.ராஜநாராயணனின் குறுநாவல்களில் கிடை முக்கியமான ஒன்று. ஆடுகளுடனான அழகிய உலகையும் அம்மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு கிடை மேய்கிறது. ஆடுகளுக்கு அவர்கள் வைக்கும் வண்ண அடிப்படையிலான பெயர்கள் ஒரு புறம், ஆட்டுப்பாலின் மகத்துவம், ஆடு மேய்ப்பவர்களின் வழக்கங்கள் என அனைத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆடுகளுடன் தொடங்கிய கதை சமூகத்தின் பக்கமும் திரும்புகிறது. சமூகத்தில் நிலவும் ஆதிக்க சமநிலையின்மையும், சாதி வேற்றுமைகளையும், மூடநம்பிக்கைகளையும் அங்கங்கே கதையுடன் இணைத்து 60 பக்கங்களில் சிறப்பாக படைத்திருக்கிறார்.
user_7730
★ 5/5 Feb 02, 2026கரிசல் காட்டுக் கதைகளை பதிவு செய்வதில் கி.ராவுக்கு நிகரில்லை என்றால் அது மிகையாகாது. அதற்கு முதல் காரணம் அவர் கரிசல் காட்டின் மைந்தன். வாழ்க்கையின் பின்னாளில் புதுச்சேரிக்குப் பயணப்பட்டிருந்தாலும் அவரின் ஆதி கோவில்பட்டி தான்.
இந்த குறுநாவல் மிகக் குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு இறுக அடர்த்தியாக பின்னப்பட்ட கதை. ஆடுகளையும் அதை மேய்ப்பவர்களைப் பற்றியும் அத்தனை துணுக்குகள்.
ஒரு சாதாரண கதையாய் தொடங்கி, துப்பறியும் கதைக்களமாய் மாற்றி விறுவிறுப்பைத் தந்து, ஒரு கனப்பொழுது காதல் கதை தானோ என்று நினைக்கும் மாத்திரத்தில் அடுத்த இரண்டு பக்கங்களில் சாதிய ஆதிக்கம், பொருளாதார அடிப்படையிலான ஏய்ப்பு, எளியவர்களுக்கெதிரான கூட்டுச் சதி, முறிக்கப்படும் காதல் என அத்தனையையும் முடித்து வைக்கிறார்.
பட்டினம் மாதிரி இல்லை, கிராமப்புறங்கள் வேறு. காதும் காதும் வைத்தாற்போல் காரியம் முடிப்பார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது தான் போலும் அது!
user_7729
★ 3/5 Feb 02, 2026"கிடை" கி.ரா அவர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளில் ஒன்று. இக்குறுநாவல் ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயணிக்கிறது.
ஆடுகளை காவல் காக்கும் முறையும், அதற்கு கிடையில் கடைபிடிக்கப்படும் ஒழுங்கும் விவரிக்கப்படுகின்றன. அந்த ஒழுங்கு சமூகத்திலும் கடைபிடிக்கப்படுவதற்கு கிராமிய அமைப்பு சாதிய அடிப்படையில் நிறுவும் விதிகளையும், அவற்றை காப்பதற்கு ஆதிக்க சாதியினர் நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனமும் தான் கதையின் கரு.
எல்லப்பன்-செவனி இருவரின் காதல், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வினால் அடையும் முடிவை சமகால கிராமிய பின்னணியில் காட்சிப்படுத்துகிறது இந்நாவல். அந்த ஏற்றத்தாழ்வு சில சமயம் சாதிய அடிப்படையிலும், சில சமயம் பொருளாதார அடிப்படையிலும் அமைகிறது. முடிவில் எல்லப்பனின் வீட்டில் நடக்கும் படலமும் செவனியின் வீட்டில் நடக்கும் படலமும் சமூக முரணை பிரதிபலிக்கின்றன.