Reviews for கன்னி மாடம்
24 reviews total
user_7668
★ 5/5 Feb 02, 2026சாண்டில்யன் வர்ணனைகள் உச்சஸ்தாயி! காதல் காட்சிகள் நிரம்பிய 37, 38-ஆம் அத்தியாயங்களை ஒரு நாள் காலையில் படிக்க நேர்ந்தது. அன்று முழுக்க வேலையே ஓடவில்லை!
தமிழ் முன்னோர்களின் போர்த்திறம், போர்த்தந்திரம் இரண்டையும் கண்டு வியந்தேன். ஒரு அத்தியாயத்தில் மார்க்கீயன் ஒரு சிறு குதிரைப்படையைச் சீராக, குதிரையின் குளம்படிகள் ஒருமித்த சப்தம் எழுப்பியவாறு நடத்திச்சென்றான் என்பதைப் படிக்கையில், இப்போதைய இராணுவ அணிவகுப்பு முறைகளில் தமிழர்கள் எத்தகைய முன்னோடி என்பதை அறிந்து பிரமித்துப்போனேன்!
மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய இப்புத்தகம், மேலும் மேலும் சரித்திர நாவல்கள் படிக்கத் தூண்டுகிறது!
user_7667
★ 5/5 Feb 02, 2026கன்னிமாடம், முதற்கூற்றிலிருந்து இறுதி வரையில் என்னை முழுவதுமாகப் பிணைத்திருந்தது.
அபராஜிதன் - பாண்டிய சேனாதிபதி, கார்குழலி - மழவரையர் மகள், அடிகளார் - குழலியின் குரு, மாதவி - இலங்கை சேனாதிபதியின் மருமகள் — இவர்களின் ஒவ்வொரு முடிவிலும் கதை நகர்ந்தது.
வரலாற்றை ஒற்றிய புதினமாக இருந்தாலும் மிக வேகமாக விறுவிறுப்பை ஊட்டிக்கொண்டே சென்றது. வர்ணனைகளுக்காகவே எத்தனை முறையேனும் படிக்கலாம். சாண்டில்யனின் எழுத்துஜாலம் ஓரிரு அத்தியாயங்களிலேயே நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் அளவில் பல உணர்வுகளைக் கலந்தாற்போல் இருந்தது.
user_7666
★ 5/5 Feb 02, 2026பாண்டியர்களின் தாயாதிச் சண்டை நடைபெற்ற 12-ம் நூற்றாண்டில் நிகழும் கதை இது. மதுரையைப் பராக்கிரம பாண்டியனும், நெல்லையைக் குலசேகர பாண்டியனும் ஆண்டு வருகின்றனர்.
தாயாதிச் சண்டை காரணமாகக் குலசேகர பாண்டியன் மதுரை மீது படையெடுக்கிறான். பராக்கிரம பாண்டியன் இலங்கை அரசனிடம் உதவி கேட்க, அவன் தண்ட நாயகனான இலங்காபுரனை அனுப்புகிறான். ஆனால் அதற்குள் குலசேகரன் மதுரையைக் கைப்பற்றி விடுகிறான். பின்னர் பெரும்படையுடன் வரும் இலங்காபுரன், குலசேகரனை விரட்டி வீரபாண்டியனைப் பாண்டிய மன்னனாக்குகிறான். ஆனால் உண்மையில் பாண்டிய நாட்டைச் சிங்களத்தின் ஒரு பகுதியாக்குவதே அவன் திட்டம்.
பாண்டிய சேனாதிபதியான அபராஜிதன், மழவராயன் மகள் கார்குழலி, இலங்காபுரனின் மருமகள் மாதவி - இவர்களின் முடிவுகளில் கதை நகர்கிறது. போர்த்திறம், ராஜதந்திரம், காதல் என அனைத்தும் கலந்த விறுவிறுப்பான நாவல்.
கன்னிமாடக் கோட்டையின் சம்பவங்கள், அபராஜிதன்-கார்குழலி காதல், ரகசிய வழிகள், போர் முற்றுகை எனக் கதையின் விறுவிறுப்பு உச்சத்தை எட்டுகிறது. சாண்டில்யனின் தனக்கே உரித்தான பாணியில் வாசகர்களை 12-ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்லும் அருமையான புதினம்!
user_7665
★ 5/5 Feb 02, 2026நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் சரித்திர நாவல். ஆரம்பித்தது முதல் இருந்த எதிர்பார்ப்பைச் சிறிதும் ஏமாற்றாமல், கையிலெடுத்தபோதெல்லாம் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படிக்க வைத்த புத்தகம்.
சிங்களரிடம் அடிமைப்பட்டிருந்தபோது தமிழகத்தின் நிலை எப்படி இருந்தது என்பதைத் தெள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்தப் புதினம்.
பெண்ணாசை-அதன் விளைவுகள், ராஜதந்திரம், போர்தந்திரம், நாட்டுப்பற்று, பேச்சுத்திறன், காதல், தனிமனித முடிவுகளின் விளைவுகள் போன்றவற்றைப் பண்டைய தமிழரின் வாழ்வியலுடன் இணைத்துக் கூறியுள்ளது இந்தக் கதை.
சாண்டில்யனின் மற்றுமொரு மறக்கமுடியாத புதினம்!