Reviews for வட்டியும் முதலும்
30 reviews total
user_7614
★ 5/5 Feb 02, 2026ஒவ்வொரு முறையும் மனிதர்கள் மேல் கோபமோ வெறுப்போ ஏற்படும்போது, ராஜுமுருகனின் படங்களையோ ஜிப்ஸி புத்தகத்தையோ மறுவாசிப்பு செய்வது வழக்கம். அப்படிச் செய்யும்போதெல்லாம் மனிதர்களிடமிருந்து விலகி நடக்கும் நானும் என் கால்களும் மீண்டும் மனிதர்கள் பக்கமே போய் நிற்பது ஆச்சரியம்.
ஒரு நடிகையின் இறப்பையோ, சொந்த மனைவியின் இறப்பையோ வெறும் வேடிக்கையாகக் கடந்து போகும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன் பள்ளி ஆசிரியரின் மருத்துவக் கடனை ஏற்று இறுதிச் சடங்குகளை நடத்தி வைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
கொடுக்கப்படாத முத்தத்தை காலம் முழுவதும் சுமந்து கிடக்கும் நண்பனின் அம்மா, எல்லா எதிர்ப்புகளையும் மீறி அக்காவுக்கு மறுமணம் செய்து வைக்கும் இளைஞன், முட்டி கிழிந்த பேன்ட்டைப் பார்த்துப் பதறும் டெய்லர் அண்ணன், புத்தாண்டுகளைத் தொடக்கி வைக்கும் குப்பை தொட்டியில் மது பாட்டில் பொறுக்கும் சிறுமி — இப்படி எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ உணர்வுகள் புத்தகம் முழுவதும்.
பசி, வறுமை, அரசியல், காதல் தோல்வி எல்லாவற்றையும் தாண்டி இந்த மானுடமும் வாழ்வும் மனிதர்களாலும் மனிதத்தாலும் மட்டுமே தினம் தினம் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கிறது என ராஜுமுருகனை விட வேறு யாரால் இவ்வளவு அழகாகப் புரிய வைக்க முடியும்.
user_7613
★ 5/5 Feb 02, 2026வாழ்க்கையின் அழகை எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லும் புத்தகம். படித்து முடிக்கும்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற உணர்வு மனதில் நிறைகிறது.
user_7612
★ 5/5 Feb 02, 2026நம் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நாம் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை! அவர்கள் கண்ட இன்பம், துன்பம், மரணம், ஏழ்மை, துரோகம், நட்பு, காதல், பசி, அதிர்ச்சி, உறவு, அரசியல், பரவசம் — இன்னும் எத்தனை எத்தனை!
நமக்கு பலர் பாடமாகவும், நாம் பலருக்கு படமாகவும் அவர்களின் மனத்திரையில் பிரகாச வெளிச்சத்தோடு காட்டிக்கொண்டே இருப்போம்.
user_7611
★ 5/5 Feb 02, 2026ஒரு நல்ல புத்தகம் என்ன செய்ய வேண்டுமென்றால், புத்தக வாசிப்பின் மேல் பெருங்காதலை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
மொத்தம் எழுபது கட்டுரைகள் கொண்ட ராஜுமுருகனின் இந்தத் தொகுப்பு நாம் மறந்துபோன, மறக்க நினைக்கிற, மறக்கவே முடியாத வாழ்வின் அத்தனைத் தருணங்களையும் நினைவூட்டுகிறது. இத்தனை மனிதர்களைச் சந்தித்திருக்கிறாரா என்ற வியப்பு எழுகிறது.
போலியோவால் கை காலை இழந்தாலும் போக்கே ஷாப்பில் வேலை செய்யும் சிறுமி, ஜார்கண்டில் பெற்றோரை இழந்த சிறுவனை மகனாக வளர்க்கும் லாரி டிரைவர் சௌந்தர், பல வருடங்களுக்குப் பிறகும் பள்ளி நண்பர்களைத் தொடர்பில் வைத்திருக்க நினைக்கும் கல்யாணராமன் — என நம்பிக்கையைத் தரும் மனிதர்கள் புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்ற இப்புத்தகம் நிச்சயம் உங்களை ஆசுவாசப்படுத்தும்.
user_7610
★ 5/5 Feb 02, 2026ராஜுமுருகனின் வாழ்க்கை அனுபவங்களின் யதார்த்தமான பதிவு. அவர் சந்தித்த மனிதர்கள், அவர்கள் வாழ்க்கையை ஓவியமாக, எளிய மனிதரின் எழுதாக்காவியமாய் படைத்திருக்கிறார்.
ஒவ்வொரு வாழ்வும் நம் வாழ்வில் ஏதோ ஒன்றை நினைவில் இழுக்கும். இப்புத்தகத்தைப் படிக்கும்போது அழுதேன், சிரித்தேன், நெகிழ்ந்தேன்.
user_7609
★ 4/5 Feb 02, 2026வாழ்க்கையின் அழகை உணர்த்தும் அற்புதமான புத்தகம். படித்து முடிக்கும்போது மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் — லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!
user_7608
★ 4/5 Feb 02, 2026விகடனில் வெளிவந்த 70 அத்தியாயங்களின் தொகுப்பு இது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு மனிதர்களின் பயணங்களைச் சொல்கிறது. நிறைய தகவல்களும் அனுபவங்களும் நிறைந்த புத்தகம். சில அத்தியாயங்கள் படித்து முடித்த பின்னும் நம்மோடு நிற்கின்றன. கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
user_7607
★ 3/5 Feb 02, 2026அழகான கட்டுரைத் தொகுப்பு என்றாலும், எல்லாவற்றையும் அதிகமாக ரொமாண்டிசைஸ் செய்வது சற்று பாதிக்கிறது. சாதாரண மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்வதில் ஆசிரியரின் திறமை தெரிகிறது. கே.பாலசந்தரின் கூர்மையான வசனங்களும் விக்ரமனின் உணர்ச்சிகரமான உலகமும் கலந்த தமிழ்ப்படம் போன்ற புத்தகம் இது. ராஜுமுருகனின் திரைப்படப் பயணத்தில் விக்ரமன் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
user_7606
★ 5/5 Feb 02, 2026வட்டியும் முதலும் விகடனில் தொடராக வந்தபோது படிக்க தவறிவிட்டேன். பின்னர் புத்தக கண்காட்சியில் வாங்கி வைத்தேன். படித்து முடித்த உடன் ராஜுமுருகனைப் பார்த்துப் பேச வேண்டும் போல் இருந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பு என்று 70 வாரங்கள் தொடர்ந்து வந்ததின் தொகுப்பு இது. தான் சென்ற இடங்கள், சந்தித்த மக்கள், பழகிய உறவுகள் நண்பர்கள் என அனைவரது நினைவுகளையும் திரும்பிப் பார்க்கிறார் ராஜுமுருகன். படிக்கப் படிக்க எத்தனை மக்களைப் பார்த்திருக்கிறார், எத்தனை அனுபவங்கள் இந்த மனிதனுக்கு கிடைத்திருக்கிறது என்ற வியப்பு தோன்றுகிறது.
இதைப் படித்தால் நமக்கும் சிறு வயது முதல் சந்தித்த, பார்த்த, ரசித்த பல நபர்கள் நம் கண் முன் வந்து போவார்கள். அவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்தது.
இந்த அவசர உலகத்தில் நாம் கவனிக்கத் தவறிய பல மனிதர்கள், மறந்துபோன பல பழக்கங்கள் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். எழுத்து நடை மிகவும் கவர்ச்சியானது. சலிப்பே தராமல் 500 பக்கங்களைக் கடக்க செய்தார்.
ஒரு ரயில் பயணத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது புத்தாண்டு பிறந்தது, நேரம் சரியாக 12:02. கடைசி அத்தியாயம் லைஃப் இஸ் பியூட்டிஃபுல். தூங்க ஆரம்பித்தபோது அப்பர் பெர்த் வசதியாக இல்லையென்ற கவலையில் இருந்தேன், கைக்குழந்தையோடு இருப்பவர் தன் அப்பர் பெர்த்தை கொடுத்தார். நிம்மதியாகப் படுத்தேன் — லைஃப் இஸ் பியூட்டிஃபுல் தான்.
user_7605
★ 5/5 Feb 02, 2026ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ராஜுமுருகன் அவர்கள் எழுதிய வட்டியும் முதலும் தொடரின் தொகுப்பாக விகடனில் வெளிவந்த புத்தகமே இது.
கொஞ்சம் உணர்வுப்பூர்வமான, நாடகத்தன்மை கலந்த எழுத்து உட்பட எல்லாமே பகடிக்குள்ளாக்கப்படுகிற இந்த யுகத்திலும் இப்படி ஒரு எமோஷனல் தொடர் பெருவெற்றி பெற்றது சாதனை தான்.
தஞ்சை வட்டார வழக்கு தமிழை கண்குளிர எழுத்தில் படித்ததே பெரிய ஆனந்தம். திருவாரூர் தொடங்கி நீடாமங்கலம், அபிவிருத்தீஸ்வரம், வெட்டாத்துப்பாலம், கொரடாச்சேரி, குடவாசல் என ராஜுமுருகன் விவரிக்கிற எல்லா சிற்றூர்களும் திருவாரூர்காரனான எனக்கு ரொம்பவும் பரிச்சயம்.
நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையான ஃப்ளாஷ்பேக் இருக்கும். அந்தந்த சூழ்நிலைகளில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். பொருள் தேடும் பொருட்டு சிற்றூர்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்த ஒரு சராசரி முதல் தலைமுறை மத்தியவர்க்க இளைஞனின் நாஸ்டால்ஜியா நிறைந்த பதிவு தான் இந்த வட்டியும் முதலும்.
ஆறேழு வரிகளில் பத்து விதமான மனிதர்களையும் அவர்கள் வாழும் சூழலையும் காட்டிவிடக்கூடிய வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர் ராஜுமுருகன். 500 பக்கங்களானாலும் அலுக்காமல் விறுவிறுப்பாகப் படித்து முடிக்கலாம். ராஜுமுருகனின் எழுத்து பேசாதவைகளையெல்லாம் ஹாசிஃப்கானின் சித்திரங்கள் பேசிவிடுகின்றன.
மொத்தமாய்ப் படித்து முடித்த பின்னர், சொல்லாமல் விட்ட நன்றிகளையும், மறந்து போகவே முடியாத முகங்களையும், இழந்துவிட்ட உறவுகளையும் நினைவுகளில் மூழ்கடித்துவிட்டுப் போவதே ராஜுமுருகனின் எழுத்துக்குக் கிட்டிய ஆகச்சிறந்த வெற்றியாகக் கருதுகின்றேன்.