Reviews for யாமம் [Yamam]

30 reviews total

user_7348

★ 4/5 Feb 02, 2026

ஆங்கிலேயர் காலத்தை பின்னணியாகக் கொண்ட இந்த நாவலில், யாமம் என்ற நறுமணப் பொருள் மையக் கருவாக அமைகிறது. இதன் வழியாக ஒரு முஸ்லிம் குடும்பத்தின் வாழ்க்கை, ஒரு ஆங்கிலேயப் பெண், எவரெஸ்ட் சிகரத்தை உலகின் உயரமான சிகரமாக அங்கீகரிக்க வழிவகுத்த சர்வே பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞன் என அனைத்தும் சென்னையை மையமாகக் கொண்டு அழகாகப் பின்னப்பட்டுள்ளது. பண்டாரமும் அவரது நீலகண்டனும் இங்கே உண்டு. காதல், காமம், துரோகம் அனைத்தும் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

பத்ரகிரியும் எலிசபெத்தும் பற்றிய பின்னோக்குக் காட்சி, ஒரே அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் நெஞ்சைப் பிழிகிறது — உதவியற்றவர்கள் தொடர்ந்து சுரண்டப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

user_7347

★ 4/5 Feb 02, 2026

ஏனோ இது படிக்கக் கடினமான புத்தகமாக இருந்தது. யாமம் என்ற அத்தர் எல்லாக் கதைகளிலும் இடம்பெறும் என நினைத்தேன், ஆனால் இரவும் சோகமும்தான் எல்லாக் கதைகளையும் இணைக்கிறது. புத்தகத்தை முடித்த பிறகும் ஒரு சோகமான இழப்பு உணர்வு என்னை விட்டு நீங்கவில்லை. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கொண்டேயிருந்தது.

user_7346

★ 4/5 Feb 02, 2026

கிழக்கிந்திய கம்பனி வணிக உரிமம் பெற்றது முதல், மீனவக் கிராமமாக இருந்த சென்னை ஆங்கிலேயர்களால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை சுவாரசியமாக விவரிக்கும் நாவல் இது.

ஆங்கிலேயர்களில் ஒரு சாரார் தொலைநோக்குப் பார்வையுடன் அறிவுக்கூர்மை கொண்ட இந்தியர்களைக் கௌரவப்படுத்தியும், புரட்சி செய்தவர்களைச் சிறைப்படுத்தியும் ஒரு இலக்கை நோக்கியே பயணித்தனர். தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களின் வாழ்க்கை மேம்படுவதும், அல்லாதவர்கள் சுரண்டப்படுவதும் வாசிக்கையில் புரிகிறது.

இந்திய நிலவியல் வரைபடம் உருவாக்கிய சர்வே குழுவின் கதை, தேயிலைத் தோட்டம் உருவான கதை, நாயின் பின்னால் அலையும் பண்டாரத்தின் கதை, சூதாட்டத்தாலும் காலராவாலும் சிதைந்த குடும்பத்தின் கதை என நான்கு கதைகளைக் கொண்டு மதராபட்டிணத்தைச் சுற்றிச் செல்கிறது இந்த நாவல்.

இருளின் நறுமணத்தையும் அழகையும் எழுத்தின் மூலம் கடத்தியிருக்கிறார் ஆசிரியர். அருமையான புத்தகம், கண்டிப்பாக வாசியுங்கள்.

user_7345

★ 5/5 Feb 02, 2026

எஸ். ராமகிருஷ்ணனின் தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்த நாவல், இலையொன்று மரத்திலிருந்து உதிர்ந்து எந்தக் கட்டுப்பாடுமின்றி மெல்லிய சோகத்துடன் பூமியை வந்து சேர்வது போன்ற உணர்வைத் தருகிறது.

1800களின் மத்தியில் ஆங்கிலேய ஆட்சிக்கிடையே மதராபட்டணம் என்னும் சென்னை, அதனை ஒட்டிய பகுதிகள், லண்டன் என்று கதைக்களம் அமைந்திருக்கிறது. யாமம் எனப்படும் அத்தர், கதைமாந்தர்களின் வாழ்வில் ஒரு மௌனசாட்சியாக நாவல் நெடுகிலும் வருகிறது.

அப்துல் கரீம், பத்ரகிரி, திருச்சிற்றம்பலம், சதாசிவ பண்டாரம், கிருஷ்ணப்பா என ஒவ்வொரு கதையும் தனித்தனியாகவும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்த்தால் சுவாரசியமாகவும் இருக்கிறது. சென்னையில் காலரா தாக்கம், நீலகிரி மலைகளில் தேயிலைத் தோட்டங்கள் உருவானது, லண்டனில் தொழிலாளர் புரட்சிகள் என உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டிருக்கிறது.

எஸ். ராவின் இப்புத்தகம் நிச்சயம் பலரின் மனதிலும் அடர்ந்த வாசத்தை ஏற்படுத்தத் தவறாது.

user_7344

★ 5/5 Feb 02, 2026

எஸ். ராமகிருஷ்ணனின் சிறந்த படைப்புகளில் ஒன்று இந்த நாவல். திருச்சிற்றம்பலம் ராமானுஜனை ஞாபகப்படுத்தினார். பத்ரகிரி, தையல், பண்டாரம் மற்றும் நாய், கரீம், வகீதா, சுரையா, சந்தீபா, மேல்மலை என அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் பல நாட்கள் நிற்கக்கூடியவை.

வரலாற்றுப் புனைகதை என்று எடுத்துக்கொண்டாலும் நிறைய விஷயங்களில் காலவரிசை முரண் உள்ளது. எல்லா இந்தியக் கதாபாத்திரங்களும் கற்பனைப் பெயர்கள்தான், ஆனால் ஆங்கிலப் பெயர்களில் பெரும்பாலும் நிஜ பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனாலும் கதையின் ஓட்டத்தில் இது ஒன்றும் குறையாகத் தெரியவில்லை.

user_7343

★ 4/5 Feb 02, 2026

கதாபாத்திரங்களையும் அவர்களுக்கு நடந்தவற்றையும் பற்றி யோசிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. ஆசிரியரிடம் ஏன் இப்படி நடந்தது என்று கேட்க வேண்டும் போலத் தோன்றியது. நல்ல வாசிப்பு அனுபவம்.

user_7342

★ 5/5 Feb 02, 2026

அவ்வளவு எளிதாக இந்தப் புத்தகத்தைக் கடந்து செல்ல முடியாது. எஸ். ராவின் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல கதைகள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல — நினைவுகளும் கற்பனையும் ரகசியமும் நிராசைகளும் வலியும் சந்தோசமும் ஒன்று சேர்ந்ததான் உருகொள்கின்றன. அதுதான் இந்தப் புத்தகம்.

இதில் நான்கு கதைகள் உண்டு, அவை வெவ்வேறு தோற்றம் கொண்டவை, அவற்றுக்கு வெவ்வேறு வலிகள் இருக்கின்றன. எந்த ஒரு வகைமைக்குள்ளும் அடங்காத இந்தப் புத்தகம், இரவைப் போல ரகசியமாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தின் மூலம் மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

user_7341

★ 4/5 Feb 02, 2026

யாமம் இரவின் வாசம்... ரகசியம், இன்பம், சுகம், திகில், ஆச்சர்யம், அதிசயம் என இரவின் அத்தனை குணங்களையும் தன் நறுமணமாய் கொண்டது யாமம் எனும் அத்தர்.

மனிதர்களுக்குள் இருக்கும் அந்தரங்கங்களை ரகசியமாகத் தீண்டி நறுமணங்களைப் பரவ செய்கிறது கதை. இயற்கையான நிலமும் அம்மக்களும் அடைந்த வணிக மாற்றம், மேற்குலக மக்கள் மேல் இன்று வரை நமக்கிருக்கும் பிரமிப்பிற்கும் ஈர்ப்பிற்கும் அடித்தளம் இட்ட காலம் — ஆங்கிலேயர்களோடு நமக்கிருந்த உறவை இயல்பான நடையோடு எதார்த்தமாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

அப்துல் கரீம் கனவில் வரும் மூதாதையர் பக்கீரின் வழிகாட்டுதல் மூலம் யாமம் என்கிற அத்தர் தயாரித்துப் பெரும் செல்வந்தர் ஆகிறார். தலைமுறை தலைமுறையாக ஆண் சந்ததியினருக்கு கைமாறும் அத்தர் ரகசியம், கரீமுக்கு ஆண் குழந்தை இல்லாததால் அவரோடு அழிந்து போகிறது. மனச்சோர்வில் குதிரை பந்தயத்தில் சூதாடி எல்லா செல்வங்களையும் இழந்து காணாமல் போகிறார்.

கரீமின் குடும்பத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், பெண்களின் போராட்டங்களையும், வெற்றியின் பரவசத்தையும் சொல்லிச் செல்கிறது கதை. காலரா தடுப்பூசியைக் கண்டு மக்கள் பீதி அடைவது இன்றைய சூழலிலும் பொருத்தமாக விரிகிறது.

பத்ரகிரியின் மனைவி விசாலத்திற்கும் தையல்நாயகிக்கும் இடையே இருக்கும் உறவை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். சமூகம் கட்டுப்பாடு என்பதிலிருந்து முரண்பட்டு நிற்பவர்களே பெரும்பாலும் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

வாழ்க்கை எது, யார் இருந்தாலும் இல்லையென்றாலும் அதன் போக்கில் புதுப் புது ரகசியத் திறப்புகளோடு போய்க்கொண்டுதான் இருக்கிறது. இதைத்தான் யாமமும் சொல்கிறது.

user_7340

★ 4/5 Feb 02, 2026

அத்தர் என்னும் மாய நறுமணத்தை மையமாக கொண்டு மனிதர்களைப் பற்றிய புதினம் தான் இந்த யாமம். ஒவ்வொரு பக்கத்திலும் இலக்கியம் வழிந்து ஓடிக்கொண்டிருக்க, அதில் நம்மை ஒரு பயணியாய் தன் உரைநடை என்னும் படகில் வைத்து சொகுசாக அழைத்துச் செல்கிறார் எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.

தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்த நாவல், எந்த வகையிலும் குறைந்து போயிருக்காது. விருது வாங்க உரித்தான நாவல் இதுவென்று படித்தவர் பெருமையுடன் சொல்லும் நாவலிது.

இலக்கிய உலகில், தமிழின் சிலப்பதிகாரம் தான் உலக இலக்கியத்துக்கே ஒரு சாமானியனைக் கதை நாயகனாக்கி வெற்றிகொண்ட மாபெரும் படைப்பு. அந்தப் பாரம்பரியத்தை யாமம் போன்ற நாவல்கள் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதில் மிகையில்லை. யாமம் வீட்டு இட்லி போல் ஒரு மொழிக்குள் அடைந்துவிடாமல், உலகமெங்கும் சென்றடைய வேண்டிய நாவல்.

user_7339

★ 5/5 Feb 02, 2026

எவ்வளவு நேரம் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேனென்று தெரியவில்லை. மேக மூட்டங்கள் காற்று அழைக்கும் திசையில் தன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது.

யாமம் நாவல் வாசிக்கலாம் என்று ஆரம்பித்தது தான். இரவு எத்தனையைக் கடந்துவிட்டது என்று தெரியவில்லை. முழுவதுமாக வாசித்து முடித்தேன் என்பதை விட, அதற்குள்ளாக வாழ்ந்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன். எவ்வளவு புரண்டும் தூக்கம் வருவதாக இல்லை, யாமம் அத்தர் வாடை அடித்துக்கொண்டேயிருந்தது.

எஸ். ராவின் எழுத்தின் வீரியம், ஆழமும் கதைக்களத்திற்குள்ளாக நம்மை நகர்த்தி அதற்குள்ளாக நாம் வாழ்ந்துவிட்டதான ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது. வாழ்க்கை பற்றிய நம்பிக்கை எப்படியெல்லாம் நாம் எதிர்பார்க்காமல் சிதறடிக்கப்படுகிறது. நம்மைச் சுற்றி எத்தனையோ விதமான கதைகள் வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றன. நாம் தான் அவைகளைக் கண்டுகொள்வதேயில்லை. யாமமும் அப்படித்தான் — வாழ்ந்து மடிந்த கதையது. வரலாற்றுச் சமூக நாவலாக மாறியிருக்கிறது.