Reviews for அபிதா
30 reviews total
user_7259
★ 4/5 Feb 02, 2026லா.ச.ரா அவர்களின் சௌந்தர்ய புத்தகத்தை சமீபத்தில் படித்திருந்தேன். 'அபிதா' நாவலின் தொடர்ச்சி என அறிந்து இந்த நாவலையும் படித்தேன். பெரும்பாலும் அக விவரணைகள் மட்டுமே கொண்ட சிறு நாவல். மூச்சடைக்க வைக்கும் காதலை நமக்கு கடத்தும் அற்புத நடை. புறக்காட்சிகள் அனைத்தும் கதைசொல்லியின் அக உணர்ச்சியின் வெளிப்பாடாக தோன்றுகிறது.
கதை பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், மொழியின் உத்தி இதனை அழகானதாக மாற்றுகிறது. லா.ச.ராவின் மொழி ஒரு கனவு நிலையை உருவாக்குகிறது. கதைசொல்லியின் ஏக்கம், தாபம், காதல், சுய இரக்கம் அனைத்தும் வெளிப்படும் கனவு வெளியைப் படைத்ததே இந்த நாவல் பிடிக்கக் காரணம். இந்த மொழி அனுபவத்திற்காகவே கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
user_7258
★ 4/5 Feb 02, 2026'அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால் அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ.' — அப்படி தீயாய் பற்றி எரிகிற ஆத்மார்த்தமான காதலின், குற்ற உணர்ச்சியின், அலைவுறும் மனதின் தொகுப்பு தான் அபிதா.
ஒரு சில நாவல்கள் தான் படிச்சு முடிச்சதும் நமக்குள் ஒரு விசாரணையாகவும், நம்மைத் துளைத்து எடுக்கிற கேள்வியாகவும் தொடர்ந்திட்டே இருக்கும் — அப்படியான நாவல் தான் அபிதா.
இப்படியான மீறல்களைச் செய்கிற மனிதர்களை படிக்கும்போது உள்ளுக்குள் ஒரு உணர்வு ஏற்படுகிறது — அது இப்படியான மீறல்களுக்கு எதிரான எனது மனநிலையா, இல்லை நான் அப்படியானவன் இல்லை என்ற அறிவிப்பா என்ற கேள்விகளை அபிதா எழுப்புகிறது.
என்னைப் பொறுத்தமட்டில் மனிதர்கள் மனதால் குற்றமற்றவர்கள் என்பது வெற்று வாதம். ஒவ்வொரு நாளும் மனம் நிகழ்த்திப் பார்க்கிற சலனங்களை அறிவின் துணை கொண்டு வடிகட்டியப் பிறகு தான் நாம் தூய்மை வாதம் பேசுகிறோம்.
user_7257
★ 5/5 Feb 02, 2026இந்த புத்தகத்தைப் புரிந்து ரசிக்க எனக்கு 60 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது.
இதை எளிய வார்த்தைகளில் விளக்க இயலாது. வேறுபட்ட, இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத உணர்வுகளின் அரிய கலவை — இதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இது ஒரு தலைசிறந்த படைப்பு, ஒரு சிந்தனை, உணர்வுகளின் பிரவாகம், பரவசம், இன்பம், அழுத்தம், எதிரொலி, காதல், மோகம், தற்செயல், முரண்பாடு, அனுபவம் மற்றும் தவம் — இவை அனைத்தும் இணைந்த ஒரு தனித்துவமான கலை.
விளக்க இயலாது; உணர வேண்டும்.
user_7256
★ 5/5 Feb 02, 2026மிகச் சாதாரணமான கதையை தன் மொழி அழகினால் ஒரு மிகு இலக்கிய படைப்பாக தந்திருக்கிறார் லா.ச.ரா. உள்ளுணர்வுகளை இதனை லயமாக வேறெங்கும் காணாத, படித்திராத வகையில் நாவலாக்கம் செய்திருக்கிறார். அவர் மனதிற்கும் இயல்பிற்கும் நடக்கும் நிதர்சனமான போராட்டத்தை அத்தனை லாவகமாக வடிவமைத்திருக்கிறார்.
user_7255
★ 4/5 Feb 02, 2026அபிதா!! சென்ற வருடம் அதிகமான பரிந்துரைகள் வந்த புத்தகம். லா.ச.ரா. என்ற எழுத்தாளரை அறிமுகமில்லாத நான், இந்த புத்தகத்தை புறக்கணித்து வந்தேன். இந்த வருடம் மின்வடிவம் கிடைக்க, வாசிக்க நேர்ந்தது.
கதாநாயகனின் பார்வையில் நகரும் கதை. ஊரை விட்டு ஓடி வந்த கதாநாயகன் ஒரு செல்வந்தனிடம் வேலைக்கு சேர்ந்து, நாளடைவில் அவரது மகளான சாவித்ரியை மணக்கிறார். அவர் காலத்தின் பிறகு சொத்துக்களை பார்த்துக்கொள்கிறார். ஆனால் மனதில் அமைதி இல்லை. சொந்த ஊரான கரடிமலைக்கு திரும்பும்போது, காதலித்த பெண்ணைத் தேடி, அவளின் மகளான அபிதாவை — அதே வடிவில் — பார்க்கிறார். கடந்த காலத்தின் சில ஏடுகளும் நிகழ்கால எண்ணங்களும் இணைந்த பிரயாணம் தான் இந்த அபிதா.
லா.ச.ரா.வின் முழு பெயர் லா.ச.ராமாமிருதம். 'சிந்தா நதி' என்ற படைப்புக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இப்புத்தகத்தை வாசிக்கையில் நம்மை ஈர்க்கும் முதல் விஷயம் தமிழ். தமிழ் என்ற அழகிய மொழியை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார். ஏராளமான உவமைகளை அள்ளி தெளித்திருக்கிறார், அத்தனையும் முத்துக்கள். கதை Non-linear ஆக நகர்கிறது — அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இது ஒரு நல்ல முயற்சி. ஆனால் முதல் வாசிப்பு கொஞ்சம் கடினமாகவே பட்டது. 100-120 பக்கங்களே இருந்தாலும் பல வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து ரசித்தேன்.
தமிழ் மொழியை நேசிக்கும் யாவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த அபிதா.
user_7254
★ 5/5 Feb 02, 2026அபிதா!! இந்நாவலை படிக்கும் ஒவ்வொரு கணமும் ஒருவித பரவசத்தினோடேயே படித்து முடித்தேன். அதற்கு காரணம் கதை நகர்த்தப்பட்ட பாங்கும் உபயோகிக்கப்பட்ட மொழியும் அது கவர்ந்த விதமும் தான்.
'எந்த இருட்டினின்று இந்தப் பிறவியுள் வழி தப்பி மிதந்து வந்து விட்ட உயிர்க்கீறல்?'
'இனி உன்னைக் கவனிப்பதன்றி எனக்கு வேறு ஜோலியில்லை. நீ காத்த மலையாகிவிட்டாய். உன்னைக் கவனிக்கக் கவனிக்க உன் செயல், அசைவுகளின் நுணுக்கம் ஒவ்வொன்றும் நீ அபிதாவோ சக்குவோ, நீயெனும் கவிதையின் தனித்தனி அங்கமாய், ஒவ்வொரு தனிமையும் அதனதன் முழுமை பெற்று, அதன் இரக்கமற்ற கொக்கி என்மேல் விழுந்து கவ்வி, கழுவில் நான் நெளிகிறேன்.'
'நினைத்ததை நினைந்ததும் தொண்டை உலர்ந்தது என்று உணர்ந்ததும் தொண்டை உலர்ந்தது'
'மூச்சை மூச்சென்று உணர்ந்து மூச்சை மூச்சாக ஒரு கணம் சிந்தித்தாலே மூச்சு திணறுகிறது.'
user_7253
★ 1/5 Feb 02, 2026அம்பி வீட்டை விட்டு ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்தான். அவனுடைய நடத்தையை கண்டு மகிழ்ந்த முதலாளி தனது மகள் சாவித்திரியை திருமணம் செய்து வைத்தார். தன் சொத்துக்களையும் அம்பியின் பெயரில் எழுதி வைத்தார். அம்பிக்கும் சாவித்ரிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
அம்பி தன் பிறந்த ஊரான கரடி மலைக்கு சென்றபோது, சக்கு (சகுந்தலா) உயிர் இழந்ததும், அவளுக்கு அபிதா என்ற ஒரு மகள் இருப்பதும் தெரிய வந்தது.
சக்குவின் மகள் அவள் சாயலைக் கொண்டுள்ளார் என்பதற்காகவே அவள் மகள் மீது காதல் வருவதை, எந்தவொரு கவித்துவமான வார்த்தைகளால் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்கம் பக்கமாக வர்ணனை செய்தாலும் அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
லா.ச.ரா அவர்களின் எழுத்துகளில் இதை ஏன் முதலாவதாக வாசித்தேன் என்ற ஆதங்கம் இருக்கிறது.
user_7252
★ 5/5 Feb 02, 2026வாங்கி நெடுநாள் ஆனது, படித்தபாடில்லை. முதல் இரண்டு பக்கங்களை தாண்டவே சிரமமாக இருந்தது. வேறுவழியின்றி சிரமங்களினூடே வாசிக்க ஆரம்பித்தேன். அதீத சுவை கொண்ட கொய்யாக்காயை கடிக்க, பல்லின் இடுக்கில் கசிந்து நா மேல் நகர்ந்து போகும் துளிச்சாறின் அற்புதம், இந்த புத்தகத்தை வாசிக்கையிலும் நிகழத்தொடங்கியது; ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு வரியிலும் மதுரம்.
முதல் மூன்று அத்தியாயம் மென் காற்று வீச, சாரல் தான்; நான்காம் அத்தியாயம் தொட்டு அடித்து பெய்ததெல்லாம் உன்மத்தத்தின் பெருமழை. இக்கதையின் வரிக்கு வரிக்கு வீழ்ந்து, புத்தகம் முடித்த கடைசியில் தான் பார்க்கிறேன், மனசெல்லாம் அத்தனை சிராய்ப்புகள். 'எல்லாம் தெரிஞ்ச வரைக்கும்'…'எல்லாம் துணிஞ்ச வரைக்கும்'...'எல்லாம் முடிஞ்ச வரைக்கும்'; எவ்வளவு எளிதில் வாழ்வின் சாரம் சொல்ல வருகிறது.
பெரும்பாலும் இதை வாசித்தவர்கள் காதலைக் கொண்டாடும் கதை என்கிறார்கள். ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நாவலின் ராஸ்கோல்நிகோவ் நினைவு தான் வருகிறது. இருவர் மீதும் இறங்கி இம்சித்தது ஒரே விஷயம் தான் — குற்றவுணர்ச்சி. 'வாழ்க்கையின் ஏடுகளைத் திருப்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப்பத்திரிக்கையாகவே படிக்கின்றன'.
சகுந்தலை! அபிதா! தரிசினி!
user_7251
★ 4/5 Feb 02, 2026என்ன ஒரு மொழி நடை - வர்ணனை! மூன்று அல்லது நான்கு முறை படித்தால் மட்டுமே லா.ச.ரா.வின் எழுத்து ஜாலம் கொஞ்சமேனும் புரியும்.
user_7250
★ 4/5 Feb 02, 2026லா.ச.ராமாமிர்தம் அவர்களின் Classic நாவலான 'அபிதா' பற்றியும், அபிதாவை வாசிக்கத் தூண்டுதலாக இருந்த அவரின் இன்னொரு புத்தகமான 'சௌந்தர்ய' பற்றியும் சொல்ல வேண்டும்.
நாம் விரும்பும் ஒரு நபரை எவ்வளவு தூரம் நம்மால் கொண்டாடித் தீர்த்திடமுடியும்? கொண்டாடித்தான் தீர்த்துவிடமுடியுமா என்ன? அப்படியான ஒரு கொண்டாட்டம், ஒரு அஞ்சலி தான் அபிதா.