Reviews for அபிதா

30 reviews total

user_7269

★ 4/5 Feb 02, 2026

110 பக்கங்களை நொடிப்பொழுதில் முடித்துவிடலாம் என்ற எண்ணத்தை நொடியில் பொசுக்கி, மாதம் கடந்து வருடமும் கடந்து விடுமோ என்று எண்ணிய பொழுதில் முடித்தாகிவிட்டது. லா.ச.ரா.வின் நடை அப்படி.

முற்றிலும் வேறுபட்ட வர்ணனைகளின் விளையாட்டு. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டுகிறது. கதை ஒரு வரியில் சொல்லிவிடலாம் — பழைய காதலியைத் தேடி வந்து, அவள் இறந்த செய்தி கேட்டு, அவள் சாயலில் இருக்கும் மகளின் மேல் ஈர்ப்பு கொண்டு, முடிவற்ற முடிவு.

ஆனால் கதை அல்ல இந்த நாவலின் நாயகன். லா.ச.ரா.வின் எழுத்துக்காகவே படிக்க வேண்டும்.

user_7268

★ 4/5 Feb 02, 2026

கவித்துவமான சொற்களைக் கொண்டு சிற்பத்தை வடித்த சிற்பியைப் போல, தன் சொல்லாற்றலால் செதுக்கிய எழுத்தலங்காரம் மிக்க நாவல்.

user_7267

★ 5/5 Feb 02, 2026

அசாதாரணமான எழுத்து நடைக்கு ஐந்து நட்சத்திரங்கள். சாதாரணமான கதை. இது ஒரு மாயாஜாலம். இந்த எழுத்தாளர் மீது காதல் கொள்ளக்கூடும்.

user_7266

★ 3/5 Feb 02, 2026

உவமைகளும் உருவகங்களும் பக்கத்துக்கு பக்கம் மலைக்க வைக்கின்றன. நமக்குப் பிடித்த மனிதர்களை கொண்டாடுவது இவ்வளவு எளிதாய் எப்படி வரைய முடிந்தது!

குற்றவுணர்ச்சி பெருக்கெடுக்க அம்பி — சகுந்தலை, அபிதா, தர்சினி.

user_7265

★ 3/5 Feb 02, 2026

இது ஒரு தமிழ் இலக்கிய மேதைப் படைப்பு என்று சொல்லப்பட்டது. படிக்க ஆரம்பித்தேன், முடிக்க நீண்ட நேரம் ஆனது. தமிழ் இலக்கியத்தில் ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இது எளிதில் புரியக்கூடியது அல்ல. ஆனால் ஒரு நாள் இதன் நுட்பத்தை புரிந்து கொள்வேன் என நம்புகிறேன்.

user_7264

★ 4/5 Feb 02, 2026

மனித மனதின் அடியில் ஓயாமல் அலைமோதும் எண்ணவோட்டங்கள் எப்போதும் அழுக்கற்றவை அல்ல. அவற்றை வடிகட்டி நற்செயலாக மாற்றும் தருணங்களில் தான் மனிதர்கள் மகத்தானவர்களாகத் திகழ்கிறார்கள்.

நிராகரிப்புகள், இழப்புகள், உண்மையான அன்பின் ஏக்கம் நிலைத்திருக்கும்போது, இளமையில் இழந்த ஒன்று மீண்டும் அதே வடிவில் தோன்றினால், கலங்கலான மனவோட்டங்கள் பொங்குவதைத் தடுப்பது அரிது — அதுவும் மனித இயல்பே.

அப்படிப்பட்ட வடிகட்டாத உணர்வுகளின் தொகுப்புதான் லா.ச.ராவின் 'அபிதா'. அம்பியின் உணர்வு போராட்டங்களை சுவையான தமிழ்கொண்டு உரித்து படைத்திருக்கிறார் லா.ச.ராமாமிருதம்.

சக்குவே வடிவாக நிற்கும் அபிதாவை ரசிக்கும் அம்பி, குற்றவுணர்ச்சியும் ஏக்கமும் கலந்த மனநிலையில் ஊசலாடுகிறார். சாவித்திரியுடனான கசந்த மணவாழ்க்கையும், சகுந்தலையின் நினைவுகளும் அவரை இம்சிக்கின்றன.

வாசகர்களை ஆழமாக இழுக்கும் நடை — ஒவ்வொரு வாழ்க்கைக் கட்டத்திலும் வேறுவிதமாகப் புரியும் ஆற்றல் இருக்கிறது அபிதாவிடம். மொழி வளமையை லா.ச.ராவின் பாணியிலே சொல்ல வேண்டுமென்றால் 'சௌந்தர்ய கடாக்ஷம்'.

user_7263

★ 4/5 Feb 02, 2026

அபிதா — வர்ணனைகளின் விளையாட்டு.

user_7262

★ 4/5 Feb 02, 2026

அபிதா — வர்ணனைகளுக்காகவே படிக்கலாம். ஆனால் புதிதாக படிப்பவர்களுக்கு உள்வாங்கிக்கொள்வது சிரமம். இது நெறிமுறையில் சரியா என்று தெரியவில்லை. கொஞ்சம் நெருடலோடு படித்து முடித்தேன்.

user_7261

★ 1/5 Feb 02, 2026

லா.ச.ரா அவர்களின் வேறு புத்தகங்களைப் படிக்காமல் அபிதாவை ஏன் வாசித்தேன் என்ற உணர்வு மேலோங்கி உள்ளது.

கதாநாயகன் அம்பி வயதான காலத்தில் மனைவியுடன் சொந்த ஊருக்கு வருகிறான். பழைய காதலி இறந்த விஷயம் தெரிய வருகிறது. காதலியைப் போலவே தோற்றம் உள்ள அவள் மகள் மீது காதல் கொள்கிறான்.

நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள செய்தித்தாளே போதுமானதாக இருக்கும், கதை எதற்கு? முக்கியமான கதாபாத்திரத்தை வைத்து இம்மாதிரி கதை சொல்வது பொருத்தமற்றது.

தங்கக் கிண்ணத்தில் அருந்துவதால் விஷம் அமிர்தம் ஆகிவிடாது — கவித்துவமான எழுத்து நடையை மட்டும் கொண்டாடி மையக்கருத்தைப் பேச தவறியது வருத்தமளிக்கிறது.

user_7260

★ 4/5 Feb 02, 2026

லா.ச.ரா — இவரை அறிந்துக் கொண்ட பேருவகை! இவரின் படைப்பின் முதல் பக்கத்திலேயே பிரவாகமெடுத்த உணர்வை இப்போதும் நினைவுகொணர முடிகிறது. கற்பனை வளமும் சொல் வளமும் எழுத்துக்களினூடே சொரிந்து வழிவதை உணரமுடியும்.

கதையின் கரு பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் கதையின் போக்கில் மனம் ஒப்பவில்லை — உள்ளுணர்வுகளின் கருப்பு பக்கம் தெரிகிறது. அந்த தைரியம் எனக்கு உண்டா என்றால் இல்லை என்பதே பதில்.

கதை முழுதும் ரசித்தது அவர் காட்சி வர்ணனைகளையும் கையாண்ட சொற்களையும்தான். இந்த நாவலில் குறிப்பிட்டுள்ள சொற்களை வைத்து ஒரு மாதத்திற்கு சொல்லாடல் நடத்தலாம் — அழல், ஸ்புடம், தபோக்னி, டங்காரம், தொந்தம், காயகல்பம், குங்கிலியம்.

'நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்தது ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது.' இதுவரை வாசித்த புத்தகங்களை மறுபடியும் வாசிக்க தோன்றியதில்லை. ஆனால் இந்நாவலை இன்னும் சில வருடங்களில் மறுபடியும் வாசிப்பேன்.