Reviews for நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
30 reviews total
user_7079
★ 5/5 Feb 02, 2026பா.ரா-வின் கட்டுரைப் புத்தகங்கள் அனைத்தும் தமிழக மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. நாம் வாழும் தேசமும் சுதந்திரமும் ஒரு விளையாட்டல்ல என்பதை உணர இந்தப் புத்தகம் வழிவகுக்கும்.
4000 ஆண்டுகளாக வாழ ஒரு நாடில்லாமல் அலைந்த யூதர்கள் தங்கள் கடும் உழைப்பை மட்டுமே வைத்து இன்று ஒரு வல்லரசாக உயர்ந்திருக்கிறார்கள் என்றால், தமிழர்கள் அவர்களிடம் கற்க நிறைய உள்ளது. சரித்திரம் தங்களுக்கு இழைத்த துரோகத்தை எண்ணிக் கண்ணீர் விடும் யூதர்கள், அதே துரோகத்தைத் தங்கள் சகோதர இனத்துக்குச் செய்வதை உணராமல் இருப்பது ஒரு பேரவலம்.
user_7078
★ 5/5 Feb 02, 2026இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையை அ முதல் ஃ வரை விரிவாக விளக்கும் மாபெரும் புத்தகம். ஆழமான அறிவைத் தரக்கூடிய நூல்.
user_7077
★ 5/5 Feb 02, 2026இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவியது. பா.ராகவனுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.
user_7076
★ 4/5 Feb 02, 2026கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் (யூதர்களையும் சேர்த்து) தோற்றத்திலிருந்து இன்றைய மத்திய ஆசியாவின் நிலையைத் தெளிவாகவும் நடுநிலையாகவும் விளக்கும் புத்தகம்.
சிலுவைப்போர், உலகப்போர், இஸ்ரேலின் தோற்றம், அதனால் அரேபியர்களின் வாழ்வியல் மாற்றம், யாசிர் அராபத்தின் தேவை, அவரின் வளர்ச்சியும் எழுச்சியும் — இவற்றைப் பற்றிய தெரிந்த, தெரியாத செய்திகளைத் தெளிவாக விளக்கியுள்ளார் பா.ரா.
சுவாரசியமான தொடர்கதை போல சரித்திர நிகழ்வுகளை அவர் விளக்கிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது.
user_7075
★ 4/5 Feb 02, 2026ஒரு காலத்தில் தன் மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஒரு இனம், எங்கு அகதியாகச் சென்றாலும் கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட ஒரு இனம், பல நூற்றாண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்த ஒரு இனம் — இன்று அமெரிக்கா கூட வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கும் அளவுக்கு மாறியதன் பின்னணியை தெரிந்துகொள்ளக் கொஞ்ச நாட்களாக இஸ்ரேல் (யூதர்கள்) வரலாற்றைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப் புத்தகம் (குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்தது) கிடைத்தது. மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போல சரித்திர நிகழ்வுகளை நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
ஜெருசலேம் — மூன்று மதத்தினரையும் (கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள்) அடித்துக்கொள்ள வைத்துள்ளது. இதில் என்ன விசேசம் என்றால் கிறிஸ்தவர்கள் யூதர்களிடமிருந்து வந்தவர்கள். ஆனால் கிறிஸ்தவத்தைப் பரப்பக் கிறிஸ்தவர்கள் செய்தவற்றை எனக்குத் தெரிந்து வேறு எந்த மதமும் செய்ததில்லை.
யூதர்களுக்கு உதவிய நாடுகள், சொந்த மண்ணில் வாழமுடியாமல் பரிதவிக்கும் ஈழ மக்களுக்கு உதவ வரவில்லை.
இந்நூலின் ஆசிரியர், ஹிட்லர் செய்த கொடுமைகளை விவரிக்கும்போது, இதுபோல் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை என்று சொல்லியுள்ளார். ஏனெனில் அவர் இந்நூலை எழுதியது 2005-ல். 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு எழுதியிருந்தால் ஹிட்லருடன் ராஜபக்சேவையும் சேர்த்திருப்பார்.
user_7074
★ 5/5 Feb 02, 2026பா.ராகவனின் எழுத்துகள் மிக இலகுவாகவும் தெளிவாகவும் புரியக்கூடியவை. பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினை தொடர்பாக யூதர்கள் தோன்றிய காலத்திலிருந்து புத்தகம் எழுதப்பட்ட 2005 வரையான முழுமையான வரலாற்றை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடிய புத்தகம்.
ஓரிடத்தில் தீவிரவாதிகளுக்கு உதாரணமாக LTTE-ஐக் குறிப்பிடுவது ஏன் என்று தெரியவில்லை. யூதர்கள் எப்படித் தமக்கான நாட்டை உருவாக்கியிருக்கிறார்கள் எனப் பார்க்கும்போது, தமிழீழம் இன்னும் சாத்தியமாகப் படுகிறது — அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை இருக்கும் பட்சத்தில்.
user_7073
★ 5/5 Feb 02, 2026வரலாற்றில் சிறிதளவு ஆர்வம் இருந்தாலே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். பாலஸ்தீனத்தின் 2000 ஆண்டு வரலாற்றை வெறும் 600 பக்கங்களில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். மிகவும் பரிந்துரைக்கிறேன்.
user_7072
★ 3/5 Feb 02, 2026சுவடுகளாகிப் போன வரலாற்றின் மீது கட்டியெழுப்பப்படும் மாயக்கோட்டை. இதற்குச் சொந்தக்காரர் இதன் ஆசிரியரே. கொஞ்சம் பிசகினாலும் அவரது எண்ணம் வரலாற்றின் ஓரத்தில் ஒட்டுண்ணியாக நிலைபெற்று வரலாற்றின் இயல்பை அதன் அசாத்தியத்தோடு திரித்துவிடும் தன்மையைக் கொண்டது.
படிப்பதற்கு மிக எளிதாக வேகத்தில் செல்லக்கூடியதற்காய் ஆசிரியருக்குப் பாராட்டுகள். ஆசிரியரின் முன்னுரையிலேயே வரலாறு ஏதோ ஒரு தருணத்தில் ஏதோவொரு சார்புநிலையை எடுத்துவிடுகிறது என்று சொன்னது போலவே இந்தச் சம்பவங்களின் தொகுப்பும் சார்புநிலையை எடுத்துவிடுவது சங்கடம்.
இதன் களம் கடந்த மூவாயிரம் வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் கொலை கொள்ளைகளின் களமான பாலஸ்தீனம். இது யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூவருக்குமான புண்ணிய பூமி. இதன் மீதான பாசமும் வாஞ்சையும் பூர்வகுடிகளான யூதர்களுக்கும் அரபுப் பழங்குடிகளிலிருந்து மாறிய முஸ்லிம்களுக்கும் முக்கியமாகிப் போக, அவர்களின் ஆன்மா அதை அவரவர் வழியில் தனதாக்கிக் கொள்ள மோதிக்கொள்கிறது.
பூர்வத்திலிருந்து பார்க்கும்போது உறவுக்குள் வருவதும் அது மறந்து அவர்களுக்குள்ளேயே வளர்ந்துவிட்ட இன அழிப்புக் குரோதமும் இன்றும் அந்த நிலப்பகுதியை ஒரு உயிருள்ள சுடுகாடாய் வைத்துக்கொண்டிருக்கிறது. இங்கு மனிதநேயம் கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனித உயிர்கள் இங்கு முக்கியமே இல்லை. குழந்தைகள் இவர்களின் உயிர்காக்கும் கேடயப்பொருள் — முன்னே வைத்துப் பின்னே கொல்ல மேற்கொள்ளும் சூழ்ச்சி. இங்கு அமைதி என்பதை அவர்கள் வணங்கும் மார்க்கத்தை மிதித்தே நிலைநாட்டத் துடிக்கிறார்கள். இரு பக்கமுமே முடிவில்லாத அமைதி என்ற முடிவை எப்படி, எப்போது பெறப்போகிறார்கள் என்று சொல்லமுடியாத ஒரு கொலைக்களத்தின் இரத்த வரலாறு.
user_7071
★ 4/5 Feb 02, 2026நண்பரின் பரிந்துரையில் படிக்கத் தொடங்கினேன். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே தொடங்கும் வரலாறு இன்றைய இஸ்ரேல் போர் வரை வருகிறது. யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என யாரையும் சார்பாகச் சித்தரிக்காமல் நடுநிலையாக எழுதப்பட்ட நூல்.
user_7070
★ 5/5 Feb 02, 2026ஊடகங்களில் இன்றும் தனக்கென்று தனி இடம் கொண்டுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை, 1948 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கில் அவிழ்த்து விட இயலாத முடிச்சாக உள்ளது. ஆண்டுதோறும் பல நூறு உயிர்களை அது பலி வாங்கிக்கொண்டே உள்ளது.
யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய ஆபிரகாமிய மதங்களுக்கு ஒரு வகையில் ஜெருசலேம் புனித பூமியாக உள்ளது. ஆனால் அப்புனிதமானது வரலாற்றுக் காலந்தொட்டு செங்குருதியைக் குடிக்கும் மண்ணாகவும் உள்ளதென்பதை இந்நூலில் பா.ரா தெளிவாகக் கூறுகிறார்.
ரோமானிய ஆட்சியில் யூதர்களின் நிலை, அவர்களின் சுதந்திர வேட்கை, அதனால் ஏற்பட்ட படுகொலைகள் மற்றும் நாடு கடத்தல்கள் தொடங்கி கிறிஸ்தவ ஐரோப்பாவில் அவர்களின் துயரங்கள், இவற்றுக்கெல்லாம் கிரீடமாக நாஜிக்களின் இன அழிப்பு — யூதர்களைப் பண்நெடுங்காலமாக வதைத்த ஐரோப்பியர்களை இன்று நண்பர்களாகவும், அக்காலங்களில் யூதர்களை அரவணைத்த அரேபியர்களைப் பகையாளியாகவும் இன்று யூதர்கள் கருதுவது வரலாற்று விந்தையே.
பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பா.ரா இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.