Reviews for உறுபசி-1

29 reviews total

user_7048

★ 4/5 Feb 02, 2026

தமிழ் இலக்கியம் படித்த ஒரு இளைஞனின் வாழ்க்கைக் கதை. ஒருவன் தன் வாழ்க்கையின் காரணத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் உணரவில்லை என்றால் அவன் வாழத் தாங்குதல் இல்லாதவன் ஆகிவிடுகிறான். அவனை இந்த உலகம் ஏற்க மறுக்கின்றது. இறுதிவரை அவனால் தன் வாழ்க்கையைத் தன் சுய எண்ணங்களோடு வாழ இந்தச் சமூகம் விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அவன் தன் ஆசைகளையே மறந்து மற்றவர்களுக்காக வாழக் கட்டாயப்படுத்தப்படுகிறான்.

சம்பத் எனும் இளைஞனின் நண்பர்களின் வழியாகப் பயணிக்கும் இந்தக் கதை மிகவும் ஆழமான உணர்வை நம்முள் கடத்திச் செல்கிறது. சம்பத்தைப் போல நம்மில் பலரை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை.

பள்ளியில் நன்றாகப் படிக்க வேண்டும், கல்லூரியில் சேர வேண்டும், படிப்பை முடித்தபின் வேலையில் சேர வேண்டும் — அந்த வேலை நமக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது இங்கே கேள்வி கிடையாது. நீ நல்லவனாக இருக்க வேண்டும். யாருக்கு நல்லவனாக இருக்க வேண்டும்? அது இன்றுவரை கேள்வியாகவே உள்ளது. இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு வாழும் இளைய சமுதாயத்தின் வலியை ஆசிரியர் இந்தக் கதையின் வழியாக ஆழமாக உணர்த்துகிறார்.

user_7047

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் மிகவும் பிடித்திருந்தது. எஸ். ராமகிருஷ்ணனின் இரண்டாவது புத்தகம் இது எனக்கு. நேர்கோட்டில் அல்லாத கதைசொல்லல் முறையை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். மனித வாழ்வின் ஆழங்களை அழகாக விவரிக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர்களுக்கேயான ஒரு கதை உள்ளது — எழுத்தாளர் அவற்றை நேர்த்தியாகப் புனைந்துள்ளார். தமிழ் நாவல் வாசகர்களுக்கு மிகவும் பரிந்துரைக்கிறேன்.

user_7046

★ 4/5 Feb 02, 2026

நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையுமே எஸ்.ரா ஒரு பூடகமாகவே சொல்வார் என்ற கருத்து பரவலாக உண்டு. இதுவும் அவ்வாறான ஒரு நாவலே. சம்பத்தின் மரணத்தில் ஒன்று கூடுகின்ற அவனது இறந்த காலத்தின் சில கூறுகள் — அவனோடு வாழ்ந்த நண்பர்கள் மூவரின் வாயிலாகவும் அவனது மனைவியின் வாயிலாகவும் சம்பத்தால் வாழ்ந்து முடிக்கப்பட்ட வாழ்க்கை நாவலாக நம் கண்முன் விரிக்கப்படுகிறது.

சம்பத்துக்கு லைட்டரின் நெருப்பைவிடத் தீக்குச்சியின் நெருப்பு அதிகம் பிடித்திருக்கிறது. "லைட்டரின் நெருப்பு தீக்குச்சி நெருப்பைப் போல அடர்த்தியாக இல்லை. உலகிலுள்ள தீக்குச்சிகள் எல்லாம் பதட்டமாகவே எரிகின்றன" என்று அதற்கு சம்பத்தின் மூலமாகவே விளக்கம் சொல்லப்படுகிறது. இதையே இந்நாவலின் அடிநாதமெனச் சொல்லலாம்.

user_7045

★ 5/5 Feb 02, 2026

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நம் சமுதாயம் ஒரு கோட்பாட்டினை வகுத்து வைத்துள்ளது. ஆனால் சிலர் அவற்றையெல்லாம் மீறித் தன் மனம் சொல்வது போல் வாழ முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியில் சிலர் வெற்றி காண்கிறார்கள். பலர் தோற்று வாழ வழியின்றி இந்தச் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதன்தான் உறுபசியின் கதாநாயகன் சம்பத்.

இந்நாவல் சம்பத்தின் இறப்பில் இருந்து தொடங்குகிறது. அதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. கதாநாயகனின் வாழ்க்கையை அவனின் மனைவி மற்றும் நண்பர்களின் நினைவில் இருந்தே வாசகர்களாகிய நமக்குத் தெரிந்துகொள்ள முடிகிறது.

சம்பத்தின் நண்பர்கள் அழகர், ராமதுரை, மாரியப்பன். இவர்கள் கல்லூரியில் ஒன்றாக இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும்போது நண்பர்களானவர்கள். இவர்களுக்கு சம்பத்தின் நடவடிக்கைகள் சரியாகப் படவில்லை என்றாலும் அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருந்தது. அவனைப் போல நம்மால் வாழ இயலவில்லையே என்ற பொறாமையும் கூட. அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தது ராமதுரைதான். ஆனால் கதை பெரும்பாலும் அழகரின் வாயிலாகவே சொல்லப்படுகிறது.

வெறித்தனமான காமம், சிறுவயது மன அதிர்ச்சி, குரூரம், பயம், அவமானம், குற்ற உணர்வு, காதல் தோல்வி, வேலையில் நிலையில்லாமை, வறுமை, குடிப்பழக்கம், உடல் உபாதைகள், மனநிலை பாதிப்பு, மரணம் என ஒரு மனிதனின் எல்லா இருண்ட பக்கத்தின் முழு உருவமாக சம்பத்தின் கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகிறது.

சம்பத்தின் மனைவி ஜெயந்தியைப் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். உறுபசியில் வரும் ஜெயந்திக்கு உதவியாக சம்பத்தின் நண்பர்களாவது இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் பல ஜெயந்திகள் எல்லோராலும் கைவிடப்பட்டு, வெறும் கேள்விக்குறியாகவே அவர்களின் வாழ்க்கை மண்ணோடு மண்ணாக மக்கி மடிந்துபோகிறது.

இது ஒரு வறண்ட கதைக்களம் என்றாலும் வாசகனை வாசிக்க வைக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. நம் கண்முன்னே நடக்கின்ற, நாம் மறக்கின்ற யதார்த்தத்தை நமக்கு உறுபசியின் வாயிலாக நினைவூட்டிய எஸ். ரா. அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

user_7044

★ 4/5 Feb 02, 2026

உறுபசி நாவலைப் படித்த சமயம் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் பலவாக என்னுள் எழும்பின. அழுத்தமான கதைக்கு அழுத்தமான சொற்களின் புனைவு நெஞ்சுக்கு மிகக் கனமாகவே இருக்கிறது. முன்னுரையில் உலர்ந்த சொற்கள் என ஆசிரியர் குறிப்பிடுவது போல நாவலைப் படிக்கும்போது நாமும் ஒன்றித்து வறண்டுபோகிறோம்.

உறுபசி எனும் சொல்லின் புரிதல் கலவையாக மண்டிக் கிடக்கிறது. உறுப்புகளின் பசி, உறுதல்களின் பசி, தீராத உறுதல்கள் எனக் கொள்ளலாமா? நாவலின் ஆரம்ப வரியே நம்மைக் கட்டி இழுத்து உள்ளே போடுகிறது. இதில் மென்மை குறைவு. கோபமும் தாபமும் குரூரமும் காமமும் எழும்பி நிற்கின்றன.

சமுதாயத்தைச் சார்ந்து முகமூடி அணிந்து வாழும் வாழ்க்கையைத் தவிர்த்த ஒருவனின் கதைதான் உறுபசி. சம்பத் எனும் கதைநாயகனின் இறப்பிற்குப் பின் கதைச்சொல்லிகளான அழகர், ராமதுரை, மாரியப்பன், ஜெயந்தி மற்றும் யாழினி வழி அவன் வாழ்வின் அத்தியாயங்களை அறிந்துகொள்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் காமமும் கோபமும் பேராசையும் வெறித்தன்மையும் இருக்கவே செய்கிறது. குடும்ப, சமூக நலனுக்காக நாம் அதை நம்முள் புதைத்து வைத்து வாழ்கிறோம். சம்பத் எனும் கதாபாத்திரம் சமுதாயத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சித்தரிக்கப்படுகிறது. இதனால் சமூகம் அவனிடம் வினோதப் பார்வை கொள்கிறது.

ஒருவகையில் சம்பத்தைப் போன்றுதான் நாமெல்லாமே. மனச்சிதைவை நமக்குள்ளாகவோ, அல்லது நம் எழுத்துக்கள், கோபங்கள், ஏன் சந்தோஷங்களின் வழியேவோ கரைத்துவிடுகிறோம். நமக்குள் நாமே உருகிப் புதியவனாய் மாறிக்கொள்கிறோம். சம்பத்தின் இச்சைகளைப் போன்றே நமக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. சம்பத் எந்தத் தவறும் செய்யவில்லை என்றேதான் நினைக்கிறேன்.

நாவலின் வழிநெடுகிலும் வன்மத்தின் வண்ணம் ஊறிக்கொண்டே செல்கிறது. அது அடர்த்தி மிகுந்து கழுத்தை இறுக்குவதாகவும் தெரிந்தது. நாவல் படிக்கப் படிக்க என்னோடு ராமதுரையும் மாரியப்பனும் அழகரும் அவர்கள் சென்ற மலையிடுக்குகளில் பயணித்துக்கொண்டே இருந்தார்கள். சம்பத்தோடு உண்டான நினைவுகளும் நிகழ்வுகளுமாக எழுத்துக்கள் சுற்றிக்கொண்டே இருந்தன.

சராசரி கமர்ஷியல் நாவலில் சொல்லப்படாத விஷயங்களை மட்டுமே நாம் ஒவ்வொரு பக்கங்களிலும் வாசிக்கிறோம். சமுதாயத்தின் மறுபக்கத்தை மிக நேர்த்தியாகவே ஆசிரியர் நமக்குத் திரையிட்டுக் காட்டுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வும் பிழியப்பட்டுள்ளது. படித்து முடிக்கும் வரையிலும் மரணம் எனும் பிம்பத்தின் ஊடே நாமும் பயணித்துத் திரும்புகிறோம்.

user_7043

★ 4/5 Feb 02, 2026

"மரணம்" என்ற சொல் நிச்சயம் அனைவருக்கும் ஒரு அச்சத்தையும் கலக்கத்தையும் தருவதாகத்தான் இருக்கிறது. நம் அன்பர்களின் மரணம் குறித்த எண்ணம் பல சமயங்களில் கண்களில் கண்ணீரையும் இதயத் துடிப்பின் வேகத்தையும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

மரணம் ஒரு நாள் நம்மையும் வந்து கவ்விக்கொள்ளத்தான் போகிறது. அதன் பிடியிலிருந்து எவராலும் தப்ப இயலாது என்பதை பல வேளைகளில் உணராமலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு நாள் இந்தப் பூமியில் வந்தவர்கள் இதைவிட்டுச் செல்லத்தானே வேண்டும்! இப்பூமி எவருக்கும் நிரந்தரம் கிடையாதுதானே! இறுதியில் அனைவரும் இயற்கையோடு கலக்கத்தான் வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளார் எஸ். ரா.

இந்நாவலில் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும், மரணம் குறித்த எண்ணம்தான் மிகவும் பாதித்ததாக உணர்ந்தேன். எப்பொழுதும் போல்தான் எஸ். ரா. சூப்பர்!

user_7042

★ 4/5 Feb 02, 2026

சம்பத் மீது கோபமும், வெறுப்பும், பரிதாபமும், அதையெல்லாம் விடவும் அளவுக்கு அதிகமான பொறாமையுடன் இந்நாவலை முடிக்கலானேன். அவனைப் போல் எல்லாவற்றையும் உதறிவிட்டு வாழும் தைரியம் நம்மிடம் இல்லையே என்ற உணர்வு மனதில் எஞ்சி நிற்கிறது.

user_7041

★ 4/5 Feb 02, 2026

தன் பயத்தை மறைப்பதற்கு ஒரு மனிதன் காட்டும் பல முகங்களைப் பிரதிபலிக்கும் புத்தகம். மிக மிக எதார்த்தமாக உண்மையைச் சொல்லும் கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் அச்சங்களை வெவ்வேறு விதமாக மறைத்துக்கொள்கின்றனர் — அந்த மனித இயல்பை இந்நாவல் அழகாகச் சித்தரிக்கிறது.

user_7040

★ 5/5 Feb 02, 2026

ஏதோ சில சம்பவங்களால் சிலரை நாம் வெறுக்கத் துவங்கியிருப்போம். ஒரு கசப்பான அனுபவம் தவிர்க்க இயலாதது. நம்மிடம் தவறாக நடந்திருக்கலாம். சுடுசொல் பேசியிருக்கலாம். ஆபத்து நேரத்தில் விட்டொழிந்து போயிருக்கலாம். நம்மால் ஏன் அவரைப் போல வாழ முடியவில்லை என்ற ஏக்கம் கூடக் காரணமாய் இருக்கலாம். அப்படிக் கசப்புப் பிம்பம் விழுந்த ஒருவர் இறந்துபோனால்?

ஒரு சில மனிதர்களின் மன ஆழத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது. வெளிப்படையாகச் சாதாரணமாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் அவர்கள் நிலையற்றவர்களாக இருப்பார்கள். சம்பத் அப்படிப்பட்ட ஒருவன். நம்மில் எத்தனை பேர் இறந்த மனிதனின், அதுவும் வாழும்போது "இவன் கசப்பானவன்" என்ற முத்திரை விழுந்த ஒருவனின் வாழ்வை அவன் சாவுக்குப் பின்னர் திரும்பிப் பார்த்திருக்கிறோம்? உறுபசி திரும்பிப் பார்க்க வைக்கிறது.

நம்முடன் இருந்தவன் நமக்காக அழுகிறானா அல்லது நாளை அவனுக்கும் அந்நிலை என்று அழுகிறானா என்று தெரியாதபட்சத்தில், நாளை நாம் செத்தபின் நம்முடன் இருந்தவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்ற சிதைந்த எண்ண அலைகளை ஏற்படுத்துகிறது. எல்லாரும் ஏதோ ஒரு காரணம் இருப்பதால் மட்டுமே நம்மோடு ஒட்டியுள்ளனர். நரமாமிசம் உண்பது போலக் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை உண்ணுகின்றனர். சம்பத்தின் வாழ்வும் சாவும் கனத்த இதயத்தோடு புத்தகத்தை மூட வைத்தது.