Reviews for உறுபசி-1

29 reviews total

user_7058

★ 4/5 Feb 02, 2026

கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்த சம்பத் மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்கிறார். சமூகம் பயணிக்கும் திசைக்கு எதிராகத் தொடர்ந்து பயணிக்க, அவரது இரண்டு நண்பர்கள் அவரை விட்டு விலக நினைக்கிறார்கள். ஒரு நண்பர் ராமதுரை மட்டும் சம்பத்துடனான எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கேற்கிறார்.

சம்பத் நடுத்தர வயதில் இறந்தபிறகு, அவருடன் படித்த அந்த மூன்று நண்பர்கள் அவருடனான தங்கள் நினைவுகளை நினைவுபடுத்திக்கொண்டும், அவற்றிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும் கதைதான் இந்த உறுபசி.

ஒருவன் வாழும்போது எவரும் கண்டுகொள்வதில்லை. கடுஞ்சொற்கள் சொல்லிப் பிரிகிறோம். அவன் இறந்தபிறகு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அழுகிறோம்.

இந்நாவல் வாசித்தபிறகு நாம் பிரிந்த அல்லது விலக நினைக்கும் நண்பரை அழைத்துப் பேசத் தோன்றும். அதேபோல நாம் இழந்த நண்பனைப் பற்றிய ஆழமான நினைவுகளை நினைவூட்டிவிடும்.

user_7057

★ 3/5 Feb 02, 2026

எஸ்.ராவின் புத்தகங்களை பல நாட்களாக வாசிக்க வேண்டும் என்று மூன்று புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். உறுபசியிலிருந்து தொடங்கலாம் என இந்நூலை வாசிக்கத் துவங்கினேன்.

சம்பத்தின் இழப்பைக் கொண்டே இந்நாவல் துவங்குகிறது. சம்பத் என்பவன் யார், அவனைச் சுற்றி வாழ்ந்தவர்களைப் பற்றியே இந்நூல் நம்முடன் உரையாடுகிறது. ஒரு சுயநலமானவன் சுயநலத்தின் எண்ணத்திலேயே வாழும்போது அது அவனை மட்டும் பாதிக்காமல் அவனின் குடும்பத்தாரை, மனைவியை, நண்பர்களின் வாழ்வையும் பாதிக்கிறது.

நாம் வெளியே நின்று சம்பத்தின் செயல்களைப் பார்க்கும்போது இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எண்ணமும் எழும், ஆனாலும் அவன் செய்வது தவறு போலவே தெரியாது. அவனின் எண்ணங்களைப் புரிந்து சரி என்று உணர்ந்தாலும் கூட அவர்கள் அவனை வெறுத்துக் கைவிடுகிறார்கள்.

கதை சம்பத் தவிர மற்ற கதாபாத்திரங்களின் வழியாகத்தான் நம்முடன் உரையாடும். ஆனால் நாம் சம்பத்தின் வழியாகக் கதையைப் பார்த்தால், அவன் தன் எண்ணம் போல வாழ ஆசைப்பட்டவன், நாம்தான் பிறரின் ஆசைக்கிணங்க வாழ்கிறோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி நம்முள் எழும். நேர்கோட்டில் அல்லாத கதைசொல்லல் இருந்தாலும் குழம்பாது. என்னைப் பெரும் அளவில் கவரவில்லை என்றாலும் எஸ்.ராவின் அடுத்த நாவலில் பார்க்கலாம்.

user_7056

★ 4/5 Feb 02, 2026

சம்பத் மற்றும் அவன் எப்படி வாழ்ந்தான், எப்படி இறந்தான் என்ற கதை. அவனது நண்பர்களும் மனைவியும் அவனை எப்படிப் பார்த்தார்கள் என்பதை விவரிக்கும் சுவாரசியமான நாவல். சம்பத்தை அவனது நண்பர்களோ மனைவியோ உண்மையிலேயே புரிந்துகொண்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதாரண வாழ்க்கையின் விதிகளுக்குள் அடங்காத ஒரு சுதந்திரப் பறவை போன்ற மனிதனின் கதை. அவனது நண்பர்கள் ராமதுரை, அழகர், மாரியப்பன் ஆகியோர் அவனது வாழ்க்கை முறையில் கோபமும் வருத்தமும் கொண்டாலும், அதே நேரத்தில் அவன் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாமல் வாழ்வதைக் கண்டு பொறாமையும் கொள்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைப் படிக்க நிறைய பொறுமை தேவை. சிலருக்கு ஆசிரியர் மரணத்தைப் பற்றியும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியும் அதிகமாகப் பேசுகிறார் என்று தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் மொழியின் அழகையும் ருசிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு அற்புதமான அனுபவம்.

இது போன்ற மனிதர்களுக்கு அங்கீகாரமும் சரியான நேரத்தில் ஆதரவும் தேவை — சமூக விதிகளின் பயத்தை அவர்கள் மனதில் விதைப்பதல்ல. சுதந்திரமாக வாழ்வது தவறல்ல, ஆனால் அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி, அவர்களுக்கும் ஆதரவு தேவை. மனித நடத்தையைப் புரிந்துகொள்ளவும் பரிவுடன் அணுகவும் கற்றுத்தரும் நாவல்.

user_7055

★ 4/5 Feb 02, 2026

எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி மானுட வாழ்வின் அவலத்தைப் பேசுகிறது. நாவல் சம்பத்தின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. அந்த மரணத்தினால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் நினைவுகளில் இருந்தே நாம் சம்பத்தை அறிந்துகொள்கிறோம்.

சம்பத்தைப் பற்றி முதலில் நாம் தெரிந்துகொள்வது அவனுக்குத் தீப்பெட்டியின் மீதான விருப்பம். தீக்குச்சி தன்னையே எரித்துக்கொள்வது போலத் தன்னையே எரித்துக்கொள்ளும் ஒரு அம்சத்தை நாவலில் அவனிடம் பார்க்கிறோம். எதிலும் நிறைவு கொள்ளாதவனாக ஏதோ ஒன்றை ஓயாமல் தேடிக்கொண்டிருப்பவனின் தவிப்பை அவனிடம் காண்கிறோம். இந்த இயல்பை அந்த வத்திக்குச்சி சரியாகச் சூட்டுகிறது.

சம்பத்தைப் பற்றிய முதல் சம்பவமாக நாம் அறிவது, அவன் எப்படி ஒரு முறை தன்னுடன் அழைத்து வந்திருந்த ஒரு பெண்ணைத் தன் நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் எந்தத் தயக்கமும் இல்லாமல் அறிமுகம் செய்து வைக்கிறான் என்னும் இடம். இந்தக் கட்டற்ற தன்மை, காமம் சார்ந்த மூர்க்கத்தனம் அவனுடைய இயல்பின் அம்சமாக இருக்கிறது.

நாவலில் சம்பத்தின் வாழ்க்கை முன்னும் பின்னும் பயணிக்கிறது. அவனுடைய இயல்புகளின் சிக்கல் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் காமத்தில் இருந்தே எழுகிறது. அவன் தங்கையின் இறப்புக்குப் பிறகு காட்டும் பயம், யாழினியை நெருங்கும் விதம், மூர்க்கத்தனமான நாத்திகனாகத் தன்னை முன்வைக்கும் விதம் — அனைத்துமே ஒரு அடிநாதத்தைக் கொண்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அவன் வாழ்வு எதிலும் ஆழ்ந்து செல்ல முடியாதவனாக, எதிலும் எளிதில் சலிப்பு கொண்டவனாக மாற்றிவிடுகிறது. நவீன வாழ்க்கையில் வாழ்வைத் தாண்டி எதையோ தேடுபவர்கள் சில நேரங்கள் ஒரு வெற்றிடத்தைச் சென்று அடைகிறார்கள். அவர்களுக்கு இவ்வாழ்வு எவ்வகையிலும் பொருள்படாத ஒன்றாக மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒருவனின் மரணம் சம்பத்தினுடையது. அதை எதார்த்தமாக நினைவுகளின் வழியே திறன்பட இந்நாவல் நமக்கு அளிக்கிறது.

user_7054

★ 2/5 Feb 02, 2026

எஸ். ராமகிருஷ்ணனின் புனைவு அல்லாத எழுத்துக்களில் இருக்கும் ஈர்ப்பு அவரது புனைவு இலக்கிய எழுத்தில் இருப்பதில்லை. இந்நாவலிலும் அந்தக் குறை தென்படுகிறது.

user_7053

★ 5/5 Feb 02, 2026

சம்பத்... சில நேரங்களில் நானும் அவனுடைய நண்பர்களில் ஒருவனாக உணர்ந்தேன். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுமையாக ரசித்தேன். கதையோடு ஒன்றிப்போக வைக்கும் நாவல்.

user_7052

★ 5/5 Feb 02, 2026

சிறப்பான நாவல். மற்றவர்களின் வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியாத ஒரு பக்கம் உண்டு என்பதை உணர்த்தும் புத்தகம்.

user_7051

★ 5/5 Feb 02, 2026

மிகவும் யதார்த்தமான நாவல். கதையோடு சேர்ந்து நடக்க வைக்கும் கதைசொல்லல் பாணி அருமை. பெரும்பாலான சூழ்நிலைகளில் இடம்பெறும் தத்துவப் பார்வை மிகச் சிறப்பு.

user_7050

★ 4/5 Feb 02, 2026

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விசித்திரமானது. அதன் நெளிவு சுழிவுகளை யாராலும் முன்கூட்டியே அறிய முடியாது — இந்நாவல் அந்த யதார்த்தத்தை அழகாகச் சித்தரிக்கிறது.

user_7049

★ 5/5 Feb 02, 2026

தமிழ் இலக்கியம் படித்து மேடைப்பேச்சாளர் ஆகி, பிறகு கிடைத்த வேலை செய்து, சாகக்கூடாத வயதில் மரணத்தைத் தழுவும் சம்பத் உறுபசியின் கதாநாயகன். அவனது மரணத்தை எதிர்கொள்ளும் மூன்று நண்பர்களின் மனநிலையும், அவர்கள் நினைவுகூரும் கடந்தகால வாழ்க்கையுமே கதைக்களம். புதினம் உரையாடல் வடிவில் இல்லை — பெரும்பாலும் கதைமாந்தர்களே கதையைச் சொல்லிச் செல்கிறார்கள்.

ஒரு கதாபாத்திரமோ, ஒரு வசனமோ, ஒரு வரியோ நாம் வாசிக்கும்போது நம்மைக் கவரும். இப்புதினத்தில் வரும் வெறும் இரண்டு சொற்கள் கடந்த இரண்டு நாட்களாய் நெஞ்சில் தைத்தது போல ஒட்டியிருக்கிறது. "சிந்தனா அவஸ்தை" — படித்தவுடன் மூளையில் உள்ள எல்லா செல்களும் எனக்கான வார்த்தை என்று சொல்லிக்கொண்டது போல இருந்தது. இவை சாகும்வரை மறக்க முடியாத சொற்கள்.

உணர்வுகளை முதன்மைப்படுத்திப் பயணிப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் உள்காய்ச்சல் போல மனதில் நிகழும் உள் போராட்டங்களோடு போராடிக்கொண்டே இருக்கிறார்கள். 24 மணி நேரமும் தீராத யோசனை உண்மையில் இவர்களுக்குக் கிடைத்த சாபம். காற்றில் மிதக்கும் இறகைப் போல இவர்களது மனம் எங்கும் நிலை கொள்வதில்லை. இயல்பான வாழ்க்கை இவர்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்று. உலகத்தின் பார்வையில் இவர்கள் வித்தியாசமானவர்கள் அல்லது பைத்தியக்காரர்கள்.

சம்பத் முரண்களால் நிறைந்த மனிதன். எவ்வளவுக்கு எவ்வளவு கோபத்தை வெளிக்காட்டுகிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அழுது தீர்க்கக் கண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறான். பேசக்கூடாத வசை மொழிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறான். பிரியமானவர்களின் ஒரு சொல்லில் உடைந்துபோகிறான். தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றுகிறான். அதிர்ஷ்டத்தை நம்பிப் பகுத்தறிவைத் தொலைத்து லாட்டரி சீட்டு வாங்கிக் குவிக்கிறான். தவறு செய்கிறான், பின்னால் வருந்தி மன்னிப்பு கேட்கிறான். செடிகளோடு வாஞ்சையுடன் பேசுகிறான், அதே வேளையில் யாரையோ கொலை செய்துவிடப் போகிறேன் என்று அஞ்சுகிறான்.

உலகத்தில் நடக்கும் அவலங்களை, சமூகத்தின் முன்முடிவுகளை, கட்டுப்பாடுகளை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம்மை நாமே மன்னித்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை — சம்பத்திற்கும் இது சாத்தியப்படவில்லை. மென் உணர்ச்சிகளிலிருந்து வெளிவர இந்த உலகம் கற்றுத் தரவில்லை. அவனும் கற்றுக்கொள்ளவில்லை. சம்பத் இந்தச் சமூகம் வரைந்த வட்டத்தில் வாழத் தெரியாமல் ஜெயித்தவன்.

சம்பத் போன்ற மனிதர்கள் இந்தச் சமுதாயத்தால் ஆரம்பத்திலிருந்தே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இல்லையேல் அவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளவோ, சரியான பாதையில் நடக்காமல் தடம்புரளவோ ஆயத்தமாகிவிடுவார்கள். நம் எல்லோருடைய நட்பு வட்டத்திலும் ஒரு சம்பத் இருக்கிறான் அல்லது வாழ்கிறான்.