Reviews for வீரயுக நாயகன் வேள்பாரி
30 reviews total
user_6989
★ 5/5 Feb 02, 2026சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற புத்தகத்தைப் பாரதி பாஸ்கர் அவர்களுடைய உரை ஒன்றில் தெரிந்து கொண்டேன். இரண்டு புத்தகக் கண்காட்சிகளில் பார்த்தும் வாங்கவில்லை. ஊரடங்கின்போது ஒலிப்புத்தக வடிவத்தில் கேட்கத் தொடங்கினேன்.
"முல்லைக்கு தேர் ஈந்தான் பாரி" என்பதைத் தவிர எனக்குப் பாரி பற்றி வேறேதும் தெரியாது.
ஆரம்பத்தில் காம இச்சையைக் காதலாக மிகைப்படுத்தி இருப்பதாகத் தோன்றியது. இருந்தும் தொடர எனக்கு உந்துசக்தியாக அமைந்தது காட்டைப் பற்றிய அறிவு.
இயற்கை தாயே அரண் அமைத்துக் கொடுத்த பச்சைமலைத் தொடர்களில் வாழ்ந்த பதினான்கு வேளிர் குடிகளின் தலைவன்தான் வேள்பாரி.
மிகைப்படுத்தப்பட்ட வீரம் இல்லை இதில். ஒவ்வொரு வீரனுக்கும் தனித்தன்மைகள் இருக்கும். அதைக் கையாளத் தெரிந்து பறம்பை வழிநடத்தும் தலைவனே வேள்பாரி.
பொன்னியின் செல்வனில் குந்தவையை வர்ணித்த கல்கியின் பாணியிலிருந்து சு.வெங்கடேசன் முற்றிலும் வேறுபட்டவர். எதையும் மிகைப்படுத்தவில்லை, அலங்கார வார்த்தைகளும் இல்லை.
சிறுபடையுடன் மூவேந்தர்களின் பெரும்படையை எதிர்கொள்ளும் பாரியின் துணிவும், போர்த்தந்திரங்களும் மூச்சடைக்கச் செய்யும். "தோகை நாய்" என்ற விலங்கினம் மிக வியப்பூட்டியது.
எப்படியிருந்தாலும் பாராட்டுக்குரிய படைப்பு என்பதில் சிறிதும் ஐயமில்லை.
user_6988
★ 5/5 Feb 02, 2026பல்வேறு மூத்த குடிகளைப் பற்றியும் அவை காலப்போக்கில் மனிதனின் பேராசையால் எப்படி வஞ்சிக்கப்பட்டன என்பதை விவரிக்கிறது இந்நூலின் பெரும்பகுதி. அனைத்து குடிகளையும் அரவணைக்கும் பாரியின் தாயன்பு மூவேந்தர்களிலிருந்து எப்படி மாறுபட்டு வானளாவி நிற்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.
இயற்கை பற்றிய அறிவு எல்லோருக்கும் புரிய வேண்டும், அதைப் புறந்தள்ளி வாழ முடியாது என்பதை வலியுறுத்துகின்றன ஆச்சரியப்பட வைக்கும் காட்டுப் பக்கங்கள்.
வள்ளி-முருகன் காதல் கற்களையும் காதல் கொள்ளச் செய்வதாய் புனையப்பட்டுள்ளது. போர் யுக்திகள், தாக்குதல்கள் - கற்பனையில் பொருத்திப் பார்த்தால் Apocalypto போன்ற படங்களின் காட்சியமைப்புகளை எளிதாகப் பின்னுக்குத் தள்ளிவிடும்.
ஒரு எழுத்தாளனுடைய சாதனை வாசிப்பவனது கற்பனைத்திறனைத் தூண்டி அவனைப் பயணிக்கச் செய்வதுதான். அதில் பெருவெற்றி பெறுகிறார் சு.வெங்கடேசன்.
user_6987
★ 5/5 Feb 02, 2026வரலாற்றுப் புதினங்கள் ஏன் நம்மைக் கட்டிப் போடுகின்றன? வாசிக்க எடுத்தால் மூடி வைக்க விடாமல் நம்மைச் செய்வது எது?
குழப்பமற்ற பாத்திர வார்ப்பு, கதை நடை, வீரமூட்டும் வசனங்கள் - இவையெல்லாம் பிரமிக்கச் செய்யும் விஷயங்கள். ஆனால் வேள்பாரியில் கூடுதலாக ஒன்று உண்டு - இயற்கையைப் பற்றிய புதுப்புதுத் தகவல்கள். கதையின் மையக் கதாபாத்திரமாய் இயற்கையே இருக்கிறது.
பேரரசுகளுக்கும் பாரிக்கும் இடையில் நுட்பமான வேறுபாடுகள்: அதிகாரம் - "நான் பறம்பின் தலைவன், அரசனல்ல. இயற்கையை ஒருபோதும் ஆள முடியாது" என்கிறான் பாரி. காதல் - பறம்பில் காதலர்களுக்கு முன்னுரிமை தந்து கொண்டாடப்படுகிறது. நட்பு - கபிலரைத் தோளில் தூக்கிச் சுமக்கச் செய்கிறது பாரியின் நட்பு. துரோகம் செய்த ஈங்கையன் மீதும் பச்சாதாபம் துளிர்க்கிறது.
யாளியைப் பற்றிய கபிலரின் கேள்விக்கு பாரி சொல்கிறான்: "அழிவை மட்டுமே செய்துகொண்டிருக்கும் ஓர் உயிரினம் வாழ முடியாது. விதையை நடாதவன் கிளைகளை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது."
படித்துப் பாருங்கள். பாரி உங்கள் மனதையும் ஆள்வான்.
user_6986
★ 5/5 Feb 02, 2026நான் படித்த புத்தகங்களிலேயே இதுவே சிறந்தது. மிக அருமையான படைப்பு.
user_6985
★ 5/5 Feb 02, 2026அறுகநாடியிலிருந்து கபிலர் தன் பயணத்தை மாற்றிப் பறம்பு மலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கபிலர் வாயிலாக பறம்பு மலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
கபிலரின் கைகளைப் பிடித்துக்கொண்டு பறம்பு மலையையும், காடுகளையும், சுனைகளையும், இயற்கை வளங்களையும், அருவிகளையும், நதிகளையும் சுற்றித் திரிந்த பின்புதான் அறிந்தேன் - நாம் இயற்கையை விட்டு எவ்வளவு தொலைவில் வந்துவிட்டோம் என்று.
"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" என்ற ஒற்றை வரியை மட்டுமே தெரிந்திருந்த எனக்கு, இப்போது அவருடைய வீரம், கருணை, இயற்கையின் புரிதல், வானியலில் அறிவு என அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.
பாரி மட்டுமல்ல - பறம்பின் ஆசான் தேக்கன், நீலன், பறையர்கள், நாகர்கள், தேக்கர்கள் என பல குலங்களைப் பற்றிக் கூறியிருக்கும் அழகுக்கு சு.வெங்கடேசன் எவ்வளவு விருதுகள் பெற்றாலும் தகும்.
user_6984
★ 5/5 Feb 02, 2026சு.வெங்கடேசன் அவர்களின் காவல் கோட்டம் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது. வேள்பாரி அதையும் மிஞ்சும் படைப்பு.
அவசியம், அவசியம், அவசியம் இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.
முதல் நன்றி அறுக நாட்டு மன்னன் செம்பனுக்கு - அவன் தனது மாளிகையில் பாரியின் பெருமையைக் கூறாமல் இருந்திருந்தால், கபிலர் தனித்துப் பாரியைக் காணப் புறப்பட்டிருக்க மாட்டார்.
காதலுக்கும் பஞ்சமில்லை - முருகன்-வள்ளி, பாரி-ஆதினி, நீலன்-மயிலா, உதிரன்-அங்கவை. சமவெளி மக்களின் காதலைக் காட்டிலும் பறம்பின் மக்கள் உயர்ந்தவர்களே.
மூவேந்தர்கள் எத்தனை யானைகள், குதிரைகள் கொண்டு வந்தாலும் பாரியை வெல்ல முடியுமா? பறம்பில் இருக்கும் சிறு புல் முதல் அனைத்தும் பாரியின் நிழல் தானே.
இந்தப் புத்தகத்தைப் பாதி படிக்கும்போதே பாரியின் மேல் காதல் வந்துவிட்டது, ஆனால் இறுதியில் அது பற்றாக மாறியது. பறம்பின் ஒரு குடிமகளாக பாரியின் நிழலில் வாழ்ந்திருக்கக் கூடாதா என்று மனசு ஏங்குகிறது.
அவசியம் படியுங்கள், நான் சுவாசித்த பறம்பின் காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும்.
user_6983
★ 5/5 Feb 02, 2026வேள்பாரியும் கபிலரும் நம்மோடுதான் பேசுகிறார்கள்.
தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம், கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றைப் புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.
இந்த நூல் நம் முன்னோர்களின் வாழ்வியல் பழக்கங்களையும், அவர்கள் பேணிய பண்பாட்டையும், நாம் பண்டிகைகளிலும் விழாக்களிலும் பின்பற்றும் சடங்குகளின் காரணத்தையும் நிரூபிக்கிறது. 60:40 விகிதத்தில் புனைவும் உண்மையும் கலந்த இந்நூலில், காடு வாழ் மக்களின் வாழ்க்கை, தாவரங்கள், விலங்குகள், வானியல் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள் நிறைந்துள்ளன.
நான்கு விஷயங்கள் இந்நூலை என் வாழ்நாள் விருப்பமாக மாற்றின: வேள்பாரி-கபிலர் உரையாடல்கள், முருகன்-வள்ளி காதலின் லயம், சு.வெ-யின் கதை சொல்லும் திறன், மற்றும் பறம்பின் குடி ஆசான் தேக்கன் - பறம்புச் சிறுவர்களைக் காடறியப் பயிற்றுவிக்கும் இணையற்ற பெருவீரன்.
வேள்பாரி ஒரு புராணக் காவியம். தேக்கன் என்றென்றும் நம் இதயத்தில் வாழ்வான்.
user_6982
★ 5/5 Feb 02, 2026ஒரு புதினம் என்ன செய்துவிடப் போகிறது என ஒலிப்புதகமாகக் கேட்கத் தொடங்கினேன். ஆனால் இதைவிட ஒரு சிறந்த புதினம் இருக்குமா என்ற சந்தேகம் வருகிறது. சு. வெ அவர்களின் எழுத்து பிரமிப்பைத் தருகிறது. சில இடங்களில் அழுகை தந்தது.
வாழ்நாள் அனுபவம் வேள்பாரி. தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறந்த புதினம்.
user_6981
★ 5/5 Feb 02, 2026அறுகநாடிலிருந்து கபிலர் தனது பயணத்தை மாற்றிப் பாரியின் பறம்பு நாட்டிற்கு நம்மையும் அழைத்துச் செல்கிறார். விகடனில் தொடராக வந்தபொழுதிலிருந்து புத்தகமாகப் படிக்க வேண்டும் என்ற உறுதியில் காத்திருந்ததன் பயன், புத்தகம் வெளிவந்ததும் முழுமையடைந்தது.
வாலியாறு, வேட்டுவன் பாறை, புலிவால் குகை, காட்டாலம் என குறிஞ்சி நிலத்தின் வாசனையை கண்களின் வழியே நுகரவைத்திருக்கிறார் சு.வெ. கொற்றவை கூத்தைக் கொண்டு எத்தனையோ அழிந்த குலங்களின் கதைகளை எழுத்துக்களின் வழியே நினைவிற்கு ஏற்றி, வரலாறுகளைக் கரையச் செய்திருக்கிறார்.
எந்தப் பாகத்தைப் படிக்கத் தொடங்கினாலும், அதில் ஒரு வரலாறோ, காடுகளைப் பற்றிய அறிவோ அல்லது காதல் சுவையோ இருக்கும். காவல் கோட்டம் 600 ஆண்டு வரலாற்றைத் தாங்கி வருவதால் வேகம் அதிகம், ஆனால் வேள்பாரி மாறுபட்ட வரலாற்றுப் புனைவு. வரலாறுகளைப் புனையும்போது கல்கியாகவும், காதல் களங்களைக் கையாளும்போது வைரமுத்துவைப் போலவும் பல்வேறு பரிணாமங்களைப் பெற்றிருக்கிறார் சு.வெ.
user_6980
★ 5/5 Feb 02, 2026அணுவின் அளவு கிடைத்த செய்திகளைக் கொண்டு ஒரு நிகரற்ற மாபெரும் காவியத்தைப் படைத்துள்ளார் சு. வெங்கடேசன். சர்ச்சைக்கு இடம் தராமல் ஒரு தெளிந்த நீரோடை போல் எழுதியுள்ளார்.
மணியன் செல்வன் அவர்களின் ஓவியம் இந்தப் படைப்பை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. எழுத்தை ஓவியமாக நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.
பாரியின் கதை, பறம்பு நிலத்தின் கதை. படித்து மகிழுங்கள்.