Reviews for கடல் புறா 3
29 reviews total
user_6928
★ 5/5 Feb 02, 2026கருணாகர பல்லவன், காஞ்சனா தேவி, மஞ்சளழகி, கருணாகரத் தொண்டைமான் — ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது.
user_6927
★ 2/5 Feb 02, 2026முதல் இரண்டு பாகங்களுக்கு நான் கொடுத்த மதிப்பீடு — பாகம் 1: 4/5, பாகம் 2: 3.8/5.
யவன ராணி போலவும் கடல் புறாவின் முதல் இரண்டு பாகங்கள் போலவும், சாண்டில்யன் புத்தகம் எப்போதும்போல் இழுவையாகவும் தத்ரூபமற்றும் இருப்பதால் இவ்வகையான புத்தகங்கள் எனக்கானது அல்ல என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.
மொத்த புத்தகமும் சினிமாத்தனமாக இருந்து எரிச்சல் கூட்டியது. சரித்திர நாவலில் இருந்து ஏதேனும் கற்றுக்கொள்ளலாம் என்ற என் எண்ணத்துக்கு மொத்தமாக மொட்டை போட்டுவிட்டது இந்த நாவல்.
நாவலில் காதல் கதைகள் அதிகம் — எல்லா இடத்திலும் ஹீரோ தன் காதலி இடுப்பில் கை வைத்துத் தான் பேசுவாராம். சாண்டில்யன் புத்தகத்திற்கு கோடி கும்பிடு.
user_6926
★ 5/5 Feb 02, 2026தமிழில் வெளிவந்த வரலாற்றுப் புதினங்களுள் மிகவும் முக்கியமான ஒரு நாவல். ராஜேந்திர சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் கடல் கடந்து செல்வதும் அந்நாட்டு வாணிபம் மற்றும் போர்களில் கலந்து கொள்வதும் மிகவும் சகஜமான ஒன்று. அதனை மையமாகக் கொண்டு சாண்டில்யன் எழுதிய கதை இது.
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, பரிசாகப் பெற்ற கப்பலை தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான் இளைய பல்லவன்.
கடல் புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களைக் காப்பாற்றி ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியைப் பறக்கவிடுகிறான் என்பதே கதை.
காதல், வீரம், சமயோசிதம், பிரிவு, குரோதம், பகை, தியாகம் என அனைத்து உணர்ச்சிகளையும் அழகாய் வடித்திருக்கிறார். காதல் காட்சிகளும் பேரழகிகளின் வர்ணனைகளும் அப்படியே காட்சியாய் நம் முன் நிற்கின்றன. சாண்டில்யனின் அசாத்திய எழுத்துத் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தமிழில் வரலாற்றுப் புதினம் படிக்க நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
பொன்னியின் செல்வனையும் கடல் புறாவையும் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது — இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் அமைக்கப்பட்டவை, வெவ்வேறு திறமையான எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. இரண்டுமே தனித்துவமானவை, அழகானவை.
user_6925
★ 4/5 Feb 02, 2026இளைய பல்லவன் — நிச்சயமாக மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று. அவனது அறிவுக்கூர்மை, உறுதியான நோக்கம், ஒவ்வொரு அடியையும் திட்டமிடும் திறன், சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தும் ஆற்றல், போர்க்களத் திறமை, பெண்களுடனான நகைச்சுவையான உரையாடல்கள் — அனைத்தும் அருமை.
அக்ஷய முனையிலிருந்து மலையூர் கோட்டைக்கு பயணத்தை மாற்றும் காட்சி, தலைவனுக்கும் குழுவினருக்கும் இடையிலான நம்பிக்கை, ஒழுங்கு, தலைமைத்துவத்தின் தெளிவு ஆகியவற்றை அழகாக விளக்குகிறது.
மஞ்சளழகியின் மாற்றம் அற்புதமானது — அப்பாவித்தனத்திலிருந்து புத்திசாலித்தனத்திற்கு. மலையூர் கோட்டைப் போரில் இளைய பல்லவனின் சொந்த தந்திரத்தையே அவனுக்கு எதிராகப் பயன்படுத்தும் தருணம் கதையின் முக்கிய திருப்புமுனை.
கூலவாணிகன் சேந்தன் — நகைச்சுவைக்கு உத்தரவாதம்! மதில்மேல் பூனை போன்ற குழப்பங்கள், தப்பிக்க நினைக்கும் எண்ணங்கள், அனைவரையும் கிண்டலடிக்கும் பாணி — முழு நாடகம்!
பெண்களை விமர்சிக்கும் சில பகுதிகள் இன்றைய பார்வையில் ஏற்றுக்கொள்ள இயலாதவை, ஆனால் அக்கால சமூகத்தின் சித்தரிப்பாகவே பார்க்க வேண்டும். மூன்று பாகங்களும் 3 > 2 > 1 என்று அட்ரினலினை அதிகரிக்கும் வகையில் — ஒரு தொடர் நாவல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்.
user_6924
★ 5/5 Feb 02, 2026தமிழ் வரலாற்றுப் புனைகதைகளில் சிறந்த படைப்புகளில் ஒன்று. இளைய பல்லவன் என்கிற கருணாகர பல்லவனின் சாகசங்கள் பற்றிய அற்புதமான கதை.
பொன்னியின் செல்வனுடன் கடல் புறாவை ஒப்பிடுவார்கள், ஆனால் இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை — ஒப்பிட தேவையில்லை. இரண்டுமே தனித்தன்மை வாய்ந்தவை.
சாண்டில்யன் அசாதாரணமான சொல்லாற்றல் கொண்ட எழுத்தாளர். தென்கிழக்கு ஆசிய கடல் சாம்ராஜ்யங்களில் தமிழ் மன்னர்களின் வரலாற்றை அறிய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
user_6923
★ 5/5 Feb 02, 2026கடைசிப் பகுதி வேகமாக நகர்ந்தது, போர் தந்திரங்கள் மிகச் சிறப்பாக இருந்தன. முதல் பாகத்தைப் படிக்கும்போது அநபாயன் குலோத்துங்க சோழனே கதையின் முக்கிய கதாபாத்திரம் என நினைத்தேன், இளைய பல்லவன் (கருணாகர பல்லவன்) சிவகாமியின் சபதத்தில் பரஞ்சோதி போன்ற முக்கிய பாத்திரம் வகிப்பான் என எதிர்பார்த்தேன். ஆனால் நிகழ்வுகள் வேறு திசையில் திரும்பி கருணாகர பல்லவனையே முதன்மைக் கதாபாத்திரமாக்கின.
அநபாயனின் கம்பீரம், கூர்மை, நிதானம் — ஒரு சிறந்த அரசனுக்கு வேண்டிய குணங்கள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அறிவாற்றலில் சிறந்த இளைய பல்லவனை அவன் அடக்கும் விதம் மிகவும் சுவாரசியமானது.
வரலாற்றுப் புதினங்கள் கவனமாக எழுதப்பட வேண்டும், ஆசிரியரின் கற்பனை வரலாற்று உண்மைகளின் எல்லைக்குள் இருக்க வேண்டும். சில இடங்களில் விலகினாலும், சாண்டில்யன் வரலாற்றுப் புதினங்களில் கலைநயமிக்க எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை.
user_6922
★ 5/5 Feb 02, 2026முதல் பாகத்தில் சோழ நாட்டிற்காக கலிங்கத்துக்கு தூது சென்ற இளைய பல்லவனது வாழ்க்கையில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களும், கலிங்கத்தை வீழ்த்த அவனது திட்டங்களும், அவன் படும் பாடுகளும், போற்றத்தக்க அறிவு கூர்மையும், வீரமும், நாட்டுப் பற்றும், அவன் சந்திக்கும் மனிதர்களும், பெறும் புது அனுபவங்களும், கடல் புறா புரியும் சாகசங்களும், அழகும் காதலும் என உருண்டு சுழன்று மூன்றாவது பாகத்தின் முடிவில் சோழ நாடு போற்றும் நாயகனாய் நிற்கும் இந்த இளைய பல்லவனும் அவனது கடல் புறாவும் நிச்சயம் நமது உள்ளங்களையும் சிறகடித்துப் பறக்க வைக்கும் திறம் பெற்றது.
போற்றுதலுக்குரிய ஒரு நாவல்.
user_6921
★ 5/5 Feb 02, 2026மூன்று பாகமும் விறுவிறுப்பாக சென்றது. இளைய பல்லவனுக்கும் மஞ்சளழகிக்கும் காஞ்சனாவுக்கும் இடையே நடக்கும் முக்கோண காதல், இளைய பல்லவனின் வீரம் பறைசாற்றப்பட்ட விதம் — இவையெல்லாம் ரசிக்கும்படி இருந்தது.
சோழர்கள் கடல் கடந்து போர் புரிந்த உண்மை வரலாற்றை கொண்டு எழுதப்பட்ட காவியம்.
user_6920
★ 5/5 Feb 02, 2026மிகவும் ஆர்வமூட்டும் நாவல்! முந்தைய இரண்டு பாகங்களை விட நீளமான கதையும் இன்னும் சிறந்த கதைக்களமும் கொண்டது.
கருணாகரன் தனது பேரிடர்களை பெரும் வெற்றிகளாக மாற்ற எல்லா தந்திரங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலை. தான் புகலிடம் என நினைத்த இடம் எதிரியின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியும் போது என்ன செய்வான்? தன் உற்ற நண்பனே தனக்கும் தன் கனவுகளுக்கும் இடையே தடையாக நிற்கும்போது? தன் கப்பலின் உண்மையான தலைவன் தான் இல்லை என்று உணரும்போது? தன் போர் தந்திரங்களை நன்கறிந்த காதலியையே போரில் எதிர்கொள்ள வேண்டும் என்றால்? ஸ்ரீவிஜயத்தை எவ்வாறு வென்றான் என்பதை அறிய கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்!