Reviews for வேடிக்கைப் பார்ப்பவன்
30 reviews total
user_6797
★ 5/5 Feb 02, 2026ஆன்மா நிறைந்த ஒரு புத்தகம் இது. நா.முத்துக்குமார் நம் எதிரே அமர்ந்து பேசுவது போல் உணர வைக்கிறது. அவர் தன் எழுத்து வரிகளில் இன்றும் உயிரோடு இருக்கிறார்.
user_6796
★ 5/5 Feb 02, 2026தன் வாழ்க்கை நிகழ்வுகளை கவிஞர் நா.முத்துக்குமார் மூன்றாம் நபர் பார்வையில் வேடிக்கை பார்த்து, வாரவாரம் விகடனில் பிரசுரித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
அவரின் எளிமையான தோற்றம் போலவே அவர் பாடல்கள், கவிதைகள், புத்தகங்களிலும் எளிமை, எதார்த்தம், இனிமை!
அவர் ஒரு நல்ல மனிதனாக உருவானதில் அவர் தந்தையின் பங்கும், புத்தகங்களின் முக்கிய பங்கும் இந்தப் புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் கடந்து வந்த பாதைகள், மனிதர்கள், அவரின் பார்வையில் நாமும் பயணிக்கிறோம்.
விகடன் பிரசுரத்தின் புத்தகத் தாள்களின் வழுவழுப்பு நான் எப்பவும் ரசிப்பது. அதைவிடவும் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளை வண்ணங்களாக நம் கண்முன் நிறுத்தும் செந்தில் அவர்களின் வரைபடங்கள் மேலும் அழகூட்டுகின்றன.
user_6795
★ 5/5 Feb 02, 2026கவிஞர் நம் கைபிடித்து நம்மை நம் பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று நம்மையே வேடிக்கை பார்க்க வைக்கிறார்.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்கள் பால்ய காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே ஒரு ரோலர் கோஸ்டரில் சென்று வருவது போல் இருக்கும்.
இந்தப் புத்தகம் உங்களின் நினைவுகளோடு விளையாடி, உங்கள் நினைவுகளோடு உறவாடி, உங்கள் நினைவுகளோடு உரையாடி, உங்களை ஒரு மாயவளைக்குள் சிக்க வைக்கும். உங்கள் இனிமையான நினைவுகளோடு சென்று உங்களையும் உங்கள் உறவுகளையும் சந்தித்து வாருங்கள்.
user_6794
★ 5/5 Feb 02, 2026"கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்."
வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது? இருபது முப்பது ஆண்டுகள் கழித்து நம் வாழ்க்கையை நாமே வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்தப் புத்தகம்.
நா.முத்துக்குமார் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து நம்மையும் அழைத்துச் செல்லும் படைப்பு இது. பள்ளி நாட்கள், தாயின் மரணம், பால்யகால கனவுகள், ஆசைகள், கல்வி, வேலை, கலைத்துறை, சினிமாவுக்குள் நுழைந்தது, சினிமாவில் உயர்ந்தது என தன் வாழ்க்கையை அப்படியே பகிர்ந்திருக்கிறார்.
இந்த மாதிரியான புத்தகங்களை படிக்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் சலிப்படைவது வழக்கம். ஆனால் இவருடைய வாழ்க்கை கதையில் இழையோடும் எதார்த்தம்தான் இதன் அழகு. இந்தப் புத்தகம் நிறைய சிரிக்கவும், அழவும், ரசிக்கவும் வைக்கும்.
user_6793
★ 5/5 Feb 02, 2026"அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை. பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது."
கிழக்கும் மேற்கும் அழிந்த, முன்னும் பின்னும் இல்லாத மாபெரும் வெற்றிடத்துக்கு நம்மைக் கூட்டிப்போகிறார் நா.முத்துக்குமார்.
user_6792
★ 5/5 Feb 02, 2026அண்ணார்ந்து பார்க்க வைக்கும் வானவில்லைவிட, அருகில் பறக்கும் பட்டாம்பூச்சியில்தான் எத்தனை வண்ணங்கள்! வேடிக்கை பார்க்கக் கற்றுத் தந்தமைக்கு நன்றி.
user_6791
★ 5/5 Feb 02, 2026"இவன் எதிரே இன்பமும் இருக்கிறது துன்பமும் இருக்கிறது வாழ்ந்து பார்க்கத் தெரியவில்லை" எனும் உண்மை வரிகளில் தொடங்கி, "சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை" எனும் கடைசி வரி வரை அனைவருக்கும் வேடிக்கை பார்ப்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
புத்தகத்தின் பக்கங்கள் முடிவுற்றாலும் நாமும் நமது வாழ்க்கையை வேடிக்கை பார்க்கத் தொடங்குவோம்.
user_6790
★ 5/5 Feb 02, 2026காலையில் வாசிக்க ஆரம்பித்தேன். நா.முத்துக்குமாரின் வேடிக்கைகளை அவருடனே சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்து, நினைவலைகளில் வள்ளம் ஓட்டி கரை சேர்ந்த பிறகே என்னால் எழும்ப முடிந்தது.
சுவாரஸ்யமான தனது வாழ்க்கையை அதனிலும் சுவாரஸ்யமாக படைப்பாக்கி எங்களையும் அவரின் நினைவுகளூடே காலச்சக்கரத்தை சுற்றவைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்.
"பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்கு தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!"
user_6789
★ 4/5 Feb 02, 2026புத்தகம் முழுவதும் அழகான மேற்கோள்கள் நிறைந்திருக்கின்றன. ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோவின் "நான் இல்லாமல் போகிறேன், ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதான் இருக்கும்" என்ற வரிகள் மனதைத் தொடுகின்றன.
ஜென் தத்துவங்களும், சுந்தர ராமசாமியின் எழுத்து பற்றிய பகுதிகளும், நா.முத்துக்குமாரின் சொந்த கவிதை வரிகளும் இந்தப் புத்தகத்தை ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவமாக மாற்றுகின்றன.
"போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தால் பேருந்துகள், திருவிழாவுக்குத் திருவிழா வெளியே வந்தால் தேர்" — இது போன்ற வரிகள் நா.முத்துக்குமாரின் கவித்துவ நடையை அழகாகக் காட்டுகின்றன.
user_6788
★ 5/5 Feb 02, 2026"புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் எங்களிடமிருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்."
இது போன்ற எளிய வரிகளில் ஆழமான அர்த்தங்களை புதைத்து வைக்கும் திறன் நா.முத்துக்குமாருக்கு மட்டுமே உண்டு.