Reviews for வேடிக்கைப் பார்ப்பவன்

30 reviews total

user_6807

★ 5/5 Feb 02, 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் புத்தகம் வாசித்தேன், அது முற்றிலும் மதிப்புக்குரியதாக இருந்தது. புத்தகம் முழுவதும் நா.முத்துக்குமாரின் கவிதைகள் உயர்ந்த தரத்தில் இருக்கின்றன.

user_6806

★ 5/5 Feb 02, 2026

நா.முத்துக்குமார் தன்னுடைய வாழ்க்கை பற்றிய முப்பது சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் பேசுகிறார். இது கிட்டத்தட்ட சுயசரிதை போன்றது.

நா.முத்துக்குமாரின் மொழிநடை வாசிப்பை வேகப்படுத்துகிறது; அவருடைய வாழ்க்கை உத்வேகம் அளிக்கிறது; வாசிப்பின் முக்கியத்துவத்தை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

user_6805

★ 5/5 Feb 02, 2026

நல்ல படைப்பு! 1980களின் முன்பும் பின்பும் அந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் பால்ய காலங்களை வாஞ்சையோடு கிளறி, நம்முடைய வாழ்க்கையையும் வேடிக்கை பார்க்க வைக்கிறார் நா.முத்துக்குமார்.

user_6804

★ 5/5 Feb 02, 2026

இவ்வளவு கவித்துவம் வாய்ந்த ஒரு சுயசரிதையை நான் இதுவரை படித்ததில்லை. விவரித்திருந்த அனைத்து விஷயங்களும் கண் முன்னே விரிந்தன. நா.முத்துக்குமார் அவர்களின் இறப்பு, தமிழ் சினிமாவின் பேரிழப்பு.

user_6803

★ 5/5 Feb 02, 2026

கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் போல், சின்னஞ்சிறு கதைகளுக்குள் தன் வாழ்வை எதார்த்தமாகவும் எளிமையாகவும் கற்பனைத் திறனால் புகட்டியுள்ளது இந்த வேடிக்கை பார்ப்பவன்.

நாம் இழந்தது ஒரு மனிதனை அல்ல, ஒரு உலகை — இதன் ஒவ்வொரு வரிகளும் அதை உரைக்கும்.

user_6802

★ 3/5 Feb 02, 2026

நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகன் நான். இந்தப் புத்தகத்தை வாசிப்பது, இந்தக் கவிஞரின் ஆவியோடு உரையாடுவது போல் இருந்தது.

இந்தப் புத்தகம்தான் என்னை காஃப்கா, முரகாமி, கபிரியேல் கார்சியா மார்க்வேஸ் போன்ற எழுத்தாளர்களை வாசிக்கத் தூண்டியது. சினிமாத் துறையில் நுழைய விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_6801

★ 3/5 Feb 02, 2026

வேடிக்கை பார்ப்பவன் — 30 கட்டுரைகளின் தொகுப்பு. காலச் சக்கரத்தைப் பின்நோக்கி நகர்த்தி, நா.முத்துக்குமார் திரைப்படப் பாடல் ஆசிரியர் ஆன வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்.

"இவன், இவனான கதை!" என்ற கட்டுரையில் நா.முத்துக்குமார் எப்படி கவிஞராக உருமாறினார் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: "இவன் ஒன்றும் சுயம்பு இல்லை. இவனையும் தட்டித் தட்டி வனைந்தது பல எழுத்தாளர்களின் கைகளே. ஒரு சரளைக்கல்லாக தன் போக்கில் கிடந்த இவனை, இவன் படித்த புத்தகங்கள் எனும் மகாநதிகள்தான் லயமாகச் செதுக்கி, ஜென் தோட்ட கூழாங்கல்லாக மாற்றின."

கவிஞரின் வாழ்க்கை அனுபவங்களை வேடிக்கை பார்க்க விரும்புபவர்கள் வாசிக்கலாம்.

user_6800

★ 5/5 Feb 02, 2026

வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், புலமைப்பித்தன், அறிவுமதி என எனக்குப் பிடித்த பல திரைப்பாடலாசிரியர்கள் உள்ளனர். முத்துக்குமார் தேசிய விருது பெறவில்லையே என்று ஒரு முறை வருந்தினேன். இரண்டு முறை தொடர்ந்து வென்று காட்டினார்.

இப்படி மனத்துக்கு நெருங்கிய நா.முத்துக்குமாரின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் ரசித்த நூல். ஏன் ரசித்தேன் என்று விளக்கிச் சொல்ல சொற்கள் இல்லை. பொதுவாக தமிழ்த் திரையிசைப் பாடல்கள் பிடிக்கும் என்றாலே கூட இந்நூலும் பிடிக்கும்.

user_6799

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தில் முதல் தலைப்பான "ஒப்புதல் வாக்குமூலம்" வாசித்தவுடன் நான் இவரின் தீவிர காதலனாகி விட்டேன். இவரைப் போன்று எல்லா விஷயங்களையும் அணு அணுவாக காதலித்தவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எழுதுவதைக் கூட அவ்வளவு காதலித்துள்ளார்.

நான் இதுவரை வாசித்ததிலேயே தன் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு சுவாரஸ்யமாக யாரும் எழுதியதில்லை. எத்தனை முறை வாசித்தாலும் இவரது சொற்களும் எழுத்துநடையும் ரசிக்கக்கூடியவை. இவரது தந்தையின் வாசிப்பு மோகத்தைப் பற்றியும், அவரது புத்தகங்கள் பற்றியும் குறிப்பிடும்போது புத்தகங்களின் மீதான காதல் பல மடங்காகக் கூடுகிறது.

இவரது மகன் "நீங்களும் பல புத்தகங்களை கடன் வாங்கிக்கூட வாசியுங்கள், உங்கள் கடனை நான் அடைக்கிறேன்" என்று சொல்லும் காட்சி கண் கலங்க வைத்துவிட்டது.

ரயில் நிலையத்தில் நடக்கும் அபூர்வக் காட்சி, வீட்டிற்கே வரும் ஆசிரியர் காட்சி என எங்கேயும் சுவாரஸ்யம் குறையாமல் வாசிப்பவர்களை அவருடனே அழைத்துச் செல்கிறார். இந்தப் புத்தகம் பாதி வாசித்துவிட்டு சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து வாசித்தேன் — முதலில் கிடைத்த அதே இன்பமும் காதலும் மீண்டும் கிடைத்தது.

user_6798

★ 5/5 Feb 02, 2026

ஒரு மனிதன் தன் பூதவுடலை விட்டகன்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழியப்போகும் நிலையிலும், எங்கோ யாரோ என்ற ரீதியில் சற்றும் சம்பந்தமில்லாத என் மனதை சோகத்திலாழ்த்தி, நான் துக்கம் அனுஷ்டிப்பதை என் குடும்பமே கண்டுகொள்ளும் அளவு செய்திருக்கிறது என்றால், அந்த மனிதனின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!

அவரது எழுத்தின் மூலம் மட்டுமே நான் உணர்ந்து, இத்தகைய தாக்கத்தை அனுபவிக்க நேர்ந்ததெனில், அந்த எழுத்து எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்!